இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 09, 2015

தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என, இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரையை உரிய அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு ரூ.5,000 வரை சன்மானம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசம் வாங்கிய ரசீதைக் காட்டிய பிறகே வாகனத்தின் ஆவணங்களும், உரிமமும் திருப்பித் தரப்படும் என, பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ் முத்திரை எதற்காக? பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய இந்திய தர நிர்ணய அமைவனத்தால் (பி.ஐ.எஸ்) முறையான பரிசோதனைகளுக்குப் பிறகு ஐ.எஸ்.ஐ முத்திரை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருள்களான சிமெண்ட், தலைக்கவசம், மின் கம்பங்கள், பால்புட்டி, பால்பவுடர் உள்ளிட்ட 92 பொருள்களுக்கு தர நிர்ணயச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போலி தலைக்கவசத்தை கண்டறிவது எப்படி? தலைக்கவசத்துக்கான ஐ.எஸ்.ஐ குறியீடு ஐந:4151 என்பதாகும். இது ஒவ்வொரு தலைக்கவசத்திலும் ஐ.எஸ்.ஐ முத்திரைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் CML-XXXXXXX (7 இலக்க லைசென்சு எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், நுகர்வோர் வாங்கும் தலைக்கவசம் உண்மையானதுதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில் Product Certification Online Information Application Licence Related என்பதை கிளிக் செய்து, நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அங்கீகாரம் பெற்ற 162 தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல், முகவரி, அங்கீகார உரிம எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் தெரிவித்தனர். ரசீது அவசியம்: உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, சிலர் தலைக்கவச விற்பனை நிலையங்களில் வாங்குவதை தவிர்த்து, சாலையோரக் கடைகளில் தலைக்கவசம் வாங்க முற்படுகின்றனர்.

ஆனால், அவை அனைத்தும் உண்மையானவையா என்பதைக் கூற இயலாது. இருப்பினும், சாலையோர கடைகளில் வாங்கினாலும் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய தலைக்கவசத்தை வாங்கியதற்கான ரசீது பெறுவது அவசியம். மேலும், தலைக்கவசத்தை வாங்கிய பிறகு, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை இந்திய தர நிர்ணய அமைவனத்துக்கு தெரிவிக்கவும் வேண்டும். இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) இயக்குநர் டி.பி.நாராயணன் கூறியதாவது: நுகர்வோர் கடைகளில் ஐ.எஸ்.ஐ., ஹால்மார்க் முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடுகள் இருப்பதாக அறிந்தால், அருகில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது www.bis.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அதன் பின்னர், நுகர்வோரின் குறைகளைக் களைய ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ. 50,000 வரை அபராதமும், ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது என்றார்.

தொலைபேசியில் புகார் புகார்தாரர்கள் தங்களது புகார் குறித்த முழு விவரங்களை sro@bis.org.in என் மின்னஞ்சல் மூலமாகவோ, 044-22541442, 22541220, 22542365 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார்தாரர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே நுகர்வோர்கள் போலி முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார்தாரர்கள் அளிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்ட பின்னர், அவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) இயக்குநர் டி.பி.நாராயணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment