இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 25, 2019

ஆசிரியர்கள் சிறப்புநிலை: கல்வித் துறை அறிவிப்பு


ஆசிரியர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெற தேவையில்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அதிகாரிகளிடமிருந்து தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இதுவரை சிறப்புநிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இனி தேர்வுநிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ஆம் வகுப்புகளுக்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 22, 2019

உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்கள்: கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை முதல், வரும் 28-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 9-ஆம் தேதியன்று காலை, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10-ஆம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் (எமிஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2, 279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17,147 பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களை வரும் ஜூலை 9-இல் தொடங்க உள்ள கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படவுள்ளது.

தமிழ்வழிக் கல்வியைப் பொருத்தவரையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 6 முதல் 8 வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலவழிக் கல்வியைப் பொருத்தவரையில்15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Friday, June 21, 2019

2020 மார்ச்சில் புதிய பாடத்திட்டபடி தேர்வு


''மார்ச் 2020ல் நடக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் புதிய பாடத்திட்டப்படி தான் நடக்கும்,'' என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள் நடந்தது. இக்கல்வி ஆண்டில் (2019-- 2020) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2விற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பத்து, பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் 2020 மார்ச்சில் நடக்கும் அரசு பொது தேர்வை புதிய பாடத்திட்டத்தின்படியே எழுத வேண்டும். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களும், அந்தந்த பாடத்தினை புதிய பாடத்திட்டப்படியே தேர்வுகள் எழுத வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 19, 2019

மழை வேண்டி பள்ளிகளில் பிரார்த்தனை


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக் காலம் முடிந்தும், வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், தண்ணீர் பஞ்சம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குடிநீரும், நிலத்தடி நீரும் இல்லாமல், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.சென்னை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் தட்டுப்பாட்டால், பொது மக்கள், வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மத அடிப்படையில் இல்லாமல், பொதுவான பிரார்த்தனை கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 11, 2019

மாணவர்களுக்கு நாளை, 'ஸ்மார்ட்' அட்டை


தமிழக பள்ளி கல்வியில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, நாளை, 'ஸ்மார்ட்' அட்டைகள் வழங்கப்பட உள்ளன.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என, 2011ல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு, ஸ்மார்ட் அட்டை திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்கும் விழாவில், நாளை, 70 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதில், ஒவ்வொரு மாணவருக்கும், தனி அடையாள எண் தரப்படுகிறது. மாணவர்களின் பெயர், பெற்றோர் விபரம், முகவரி, வகுப்பு, அவர்கள் படிக்கும் பள்ளிகளின் விபரம், ஆதார் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில், 'க்யூ ஆர்' குறியீடு மற்றும் மின்னணு, 'சிப்' இணைக்கப்பட்டு, விபரங்களை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

Saturday, June 01, 2019

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு மதிப்பெண் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு


ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் நடத்தப்படும், பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதற்காக அரசு மற்றும் தனியார் நடத்தும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இரண்டு ஆண்டு கால பட்டயப் படிப்பு (டி.டி.எட்) நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது, கவுன்சலிங் நடத்தி அதன் மூலம் இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த 2002-03ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பட்டயம் பெற்று வரும் மாணவர்கள் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள தகுதித் தேர்வு எழுத 2 லட்சம் பேர் விண்ணப்பித்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.