இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 15, 2020

கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது: ஆசிரியா்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு


கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்தி பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதியோா், குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினாா். இந்தநிலையில், திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

 இது தொடா்பாக முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையா் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி) தொடக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை) வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்தாா். இதனால், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கடந்த இரு நாள்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

ஆண்டு விழா, சிறப்பு வகுப்புகள் கூடாது: 

இந்தநிலையில், மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரையிலான விடுமுறை நாள்களில் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகள் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, சிறப்பு வகுப்புகள் ஆகியவை உள்பட எந்தவொரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது. இது தொடா்பாக முறையான அறிவுறுத்தல் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனா்.

ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும்:

 இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கிராமப் புறங்களில்தான் அதிகளவில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை குறித்த தகவல் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வெளியானாலும் மாணவா்களுக்கு எந்தளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, மாணவா்களுக்கு விடுமுறை குறித்து தெரியப்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்றனா்.

Friday, March 13, 2020

பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

#பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

பறை இசை முழக்கத்துடன் ஆண்டுவிழா இனிதே ஆரம்பித்தது

*பள்ளி ஆண்டுவிழா பெ.ஆ.தலைவர் திரு.பட்டுலிங்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா வரவேற்றார். திரு திருக்குமரன் முன்னிலை வகிக்க, வட்டார கல்வி அலுவலர் திரு விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

*இந்த ஆண்டு முதன்முயற்சியாக காலை 10மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு முடித்தோம்

*500 நாற்காலிகள் வாங்கியும் அரங்கம் பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது.
பலர் நின்று கொண்டே பார்த்தனர்.

*பள்ளியின் சார்பில் கடந்த ஆண்டே 100 அடி நீளத்துக்கு mat வாங்கப்பட்டது.இது நடனத்தில் இல்லாத 320 பேர் அமர உதவியாய் இருந்தது.

*இந்த ஆண்டு 17 கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் அமைந்திருந்ததால் சலிப்பு ஏற்படுத்தவில்லை

*1000 (ஆண்டு விழா) வண்ண நோட்டீஸ்களை பள்ளியின் இரவுக்காவலர் திரு செல்வராஜ் அவர்கள் பங்களிப்பில் வழங்கினார்

*வகுப்பிற்கு தர அடிப்படையில் மூன்று பரிசுகள் என  பரிசுகள்
(RS.8000) எஸ்.டி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

*Star of the year வகுப்பிற்கு ஒன்று வீதம் 16 சீல்டுகள் (Rs4000) திரு.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

*பெற்றோர்க்கான கயிறு இழுத்தல் போட்டியில் வென்ற 12 பெண்கள் மற்றும் 8 ஆண்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

*பிரமாண்ட மேடையாக ரூ17,000 செலவில் அமைக்கப்பட்டது.

*கலைநிகழ்ச்சியில் 300 மாணவ மாணவியர் பங்கெடுத்தனர். அனைவருக்கும் உண்டியல் பள்ளியின் சார்பில் பரிசாய் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு (300*50=15000)பாரதி சிமென்ட் நிறுவனத்தார் 50  உண்டியல் அன்பளிப்பாய் வழங்கினர்.
மீதமுள்ள 250 பள்ளியின் சார்பில் வழங்கினோம்.

*நடனங்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியைகளாலேயே கற்பிக்கப்பட்டது.

*ஒன்றாம் வகுப்பு மழலைகளின் வரவேற்பு நடனமும், இரண்டாம் வகுப்பினரின் விவசாயம் காப்போம் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.

*மூன்றாம் வகுப்பினரின் ஐவகை நிலங்கள் பாடலில் குறிஞ்சி. முல்லை என ஐந்துவகை மக்களின் நடனம் ஆடப்பட்டது.

*ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிங்கப்பெண்ணில் கர்ஜிக்க அரங்கிலிருந்த  அனைவருமே முணுமுணுத்தனர்.

*அதிக பட்சமாக ஒரு ஆசிரியை 94 மாணவ மாணவியருக்கு நடனம் கற்பித்தார். அடுத்த ஆண்டு சதமடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

*கும்மி,தேவராட்டம்,கோலாட்டம், கரகாட்டம் மற்றும்
சலங்கையாட்டம், சக்கை குச்சி ஆட்டம், உருமி என நாட்டுப்புற நடனங்கள் நடத்தப்பட்டன.

*ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நகைச்சுவை நடனம் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

*பிறமொழிப் பாடல்களாக குஜராத்தி பாடலும், மலையாள மிட்டாய் பாடலும் அதிக வரவேற்பு பெற்றன.

*பசுமைப்படை சீருடையுடன் மாணவியர் ஆடிய மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு பாடல் அனைவரையும் கவர்ந்தது.

*காலை 7மணிமுதல் மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு பரதநாட்டியத்தை
12 மாணவ மாணவியர்கள் அருமையாக ஆடினர்

*பெற்றோர் உதவியுடன் நடன ஆடைகள் மட்டும் 1,20,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.பேன்சி ஐட்டங்கள் தனி.
ஐந்தாம் வகுப்பு நடனத்துக்கு கோவை சென்று ஆசிரியை வாங்கிவந்தார்.

*அருகாமைப் பள்ளியிலிருந்து வந்த தலைமையாசிரியர்களுக்கு சால்வையும் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.

*TNPTF சார்பில் பொருளாளர் மரிய செல்வராஜன் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ1000 வழங்கினார்.

*சிலம்பம்,பறை இசை, கராத்தே முதலிய பாரம்பரிய தற்காப்பு கலைகள் மிகவும் சிறப்புற செய்தனர்

*கலப்பை, முளைப்பாரி, விதை நெல், போன்றவற்றை பெற்றோர்களே தத்ரூபமாக செய்து கொடுத்திருந்தனர்

#குறிப்பு:இது ஏதோ இந்த பள்ளிக்கு தன்னார்வலர் அனைவரும் ஒரு போன் காலிலோ, விழா என கேள்விப்பட்டோ பண உதவி செய்யவில்லை.வேகாத வெயில்ல கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு அலைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை சந்தித்து உதவி பெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

*கனவு பெரிதாய் இருக்கும்போது உழைப்பு அதைவிட பெரிதாய் இருக்க வேண்டும். கூட்டுமுயற்சிக்கும் குழு உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

#மாநகராட்சி துவக்கப்பள்ளி
பூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

Wednesday, March 11, 2020

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது - அரசாணை வெளியீடு


தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. அப்போது ஒவ்வொருவரும் 31 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக் கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண் டும் என்றும் கூறி இருந்தது.

இந்தநிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.

6 மற்றும் 7-ம் கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-ம் கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-ம் கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.

கணக்கெடுப்பின்போது, வீட்டு எண், வீட்டின் சுவர், தரை, மேற்கூரை போட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் உறுதி நிலை, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வீட்டில் தலைவர் ஆணா, பெண்ணா?, வீட்டு உரிமையாளர் யார்? வீட்டில் உள்ளவர்களின் சாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? ஆகிய கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், திருமணமானவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதியின் ஆதாரம் எது? எந்த வகை கழிவறை உள்ளது? குளியல் வசதி உள்ளதா? கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளதா? கியாஸ் வசதி, இணையதள வசதி, கம்ப்யூட்டர், மடிக்கணினி வசதி, ரேடியோ, டி.வி., தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தானியம், சமைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சார வசதி ஆதாரம் ஆகிய கேள்விகளும் கேட்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 04, 2020

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேசிய விருது: விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை


தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 03, 2020

ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்


குழந்தைகள் எண்ணிக்கை குறைந்த அரசு ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் வழி வகுப்பாகவே தொடரலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம், கல்வித்தரம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

முதலில் பரீட்சார்த்தமாக மாவட்டத்துக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஆங்கிலவழிப் பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தை தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக்கப்பட்டு அங்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதேநேரத்தில் தனியாக ஆசிரியர்கள், வகுப்பறைகள் உட்பட தனியான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.  இதனால் 70 % அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2 பிரிவு மாணவர்களும் ஒன்றாகவே அமர வைக்கப்பட்டு கல்வி கற்று வந்தனர்.

 தமிழ், ஆங்கிலம் என இரண்டு பிரிவுக்கும் ஒரே ஆசிரியர் தமிழிலேயே பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனால் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க ஆசைப்பட்டு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் மீண்டும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

இது பெரும் நடைமுறை சிக்கலை உருவாக்கியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல் அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளும் அரசுக்கு இதுதொடர்பாக தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து வந்தனர். இதையடுத்து மாணவர் எண்ணிக்கை குறைந்த ஆங்கிலவழிப்பிரிவு மாணவர்களை தமிழ்வழி பிரிவு மாணவர்களாகவே கருத வேண்டும் என்று அரசு வாய்மொழியாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘ஆங்கில வழிப்பிரிவு என்றால் அதற்காக தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நிரவல் என்ற பெயரில் பணியிட குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஆசிரியரே ஒரு பள்ளியில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ்வழி பிரிவு மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர் எண்ணிக்கை ஆங்கிலவழிப்பிரிவில் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லாத நிலையில், தமிழ்வழிப்பிரிவாகவே தொடரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

-மணிகண்ட பிரபு

நாடாளுமன்றம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிறுவயதில் குடிமையியல் பாடத்தில் படித்திருப்போம். எனினும் மாநிலங்களவை தேர்தல் வரும்போதெல்லாம் டக்வொர்த் லீவிஸ் விதியைப் போல அவ்வப்போது குழப்பம் வரும்.

ராஜ்ய சபா

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நடைமுறையைப் பின்பற்றி இரு அவைகள் அமைக்கப்பட்டன.

மாநிலங்களவை

``மாநிலங்கள் அவை"என்பதில் ``மாநில" என்ற ஒருமையைப் பயன்படுத்தாமல் ``பலவின்பால்"சொல்லான மாநிலங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். "மாநிலங்கள் அவை" என்பதே சரியான சொல். Council of state அல்ல council of states. நாடாளுமன்றத்தின் பகுதியான "மாநிலங்கள் அவையானது" அனைத்திந்தியப் பிரச்னைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதனுடன் மாநிலங்களின் தனித்தன்மை நலன்களையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது
உறுப்பினர்கள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1) மாநிலங்களில் உள்ள பிரதிநிதிகளால் தேர்ந்தெடுப்பவர்கள். அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முறையே 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி விலக வேண்டும்.

2) யூனியன் பிரதேச பிரதிநிதிகள்

3) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும் மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.

மாநிலங்களவை
தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை ராஜ்யசபா உறுப்பினர்கள்?

ஆந்திரா 11, தெலங்கானா 7, அருணாசலப் பிரதேசம் 1, அஸ்ஸாம் 7, பீகார் 16, சத்தீஸ்கர் 5, கோவா 1, குஜராத் 11, அரியானா 5, இமாசலப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 4, ஜார்க்கண்ட் 6 கர்நாடகா 12, கேரளா 9, மத்தியப்பிரதேசம் 11, மகாராஷ்டிரா 19 மணிப்பூர் 1, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 10, பஞ்சாப் 7, ராஜஸ்தான் 10, சிக்கிம் 1, தமிழ்நாடு 18 , திரிபுரா 1, உத்தரகாண்ட் 3, உத்தரப்பிரதேசம் 31 மேற்குவங்கம் 16 ,டெல்லி 3 புதுச்சேரி 1 நியமன உறுப்பினர்கள் 12 என மொத்தம் 250 பேர் இருக்கலாம் ஆனால், தற்போது 245 பேர் இருக்கின்றனர். (229+4+12=245)

தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் குழு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 7 யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லை என்பதால், அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால், வாக்கு அளித்து சிக்கலைத் தீர்த்து வைப்பார். குடியரசுத் துணைத்தலைவர் தலைமை தாங்க முடியாதபோது அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் துணைத்தலைவர், கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஒருவேளை அவரை நீக்கவேண்டுமாயின் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்துவிட முடியும்.

பணிகள்

மாநிலங்களவையில் சாதாரணமான மசோதா, பண மசோதா என இருவகை உள்ளன. பண மசோதா தாக்கல் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் இதன் பின் மாநிலங்களவைக்கு 
ஒப்புதலுக்கு வரும். பண மசோதாவை 14 நாள்கள் நிறுத்தி வைக்கலாம். திருத்தங்கள் செய்யலாம். இதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இவ்வாறு திருத்தம் செய்தால் இரண்டாம் முறை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். மற்ற மசோதாக்கள் அதிகபட்சமாக மாநிலங்களவை ஆறுமாதங்களுக்கு ஒரு மசோதாவை காலதாமதம் செய்து நிறுத்தி வைக்க முடியும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது.

ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு வேளை ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இக்கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். கூட்டுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் மக்களவைக்குச் சாதகமாகப் பெரும்பாலும் முடிவுகள் அமையும்.
செயல்பாடுகள்

*அரசாங்கக் கொள்கைத் திட்டங்கள் மீது விளக்கம் கேட்கலாம் வினா எழுப்பலாம், விவாதிக்கலாம்.

*சட்டத் திருத்தம் செய்ய மாநிலங்கள் அவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. இவையன்றி இரு அவைகளின் ஒப்புதலோடு மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடி நிலை, சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 312ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 249ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்

*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு. இரு அவைகளின் ஒப்புதலுடன் நீக்க முடியும்.

*மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.

*ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை

நாடாளுமன்றம்
எதிர்காலம்

மாநிலங்களவை உறுப்பினர் என்பவர் மெத்த படித்தவராக, அரசியல் அனுபவ ஞானம் உள்ளவராக இருப்பார்கள். திறமையான வாதக் கருத்தின் அடிப்படையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவரும் இடதுசாரி எம்.பியுமான ஏ.கே.ஜி என அழைக்கப்படும் ஏ.கே.கோபாலன் அவர்கள் தம் நூலில்..’ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு ஒரு இல்லம் ஒதுக்கப்படும். அதில் மேனாள் உறுப்பினர் எவரேனும் அறையைக் காலி செய்யாமல் இருந்தால் புதிய உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். தினசரி பார்ட்டிகள், அயல் நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கல்கள், ஏராளமான சலுகைகள் எனப் புதிய உலகத்தில் திளைத்துப் போகவிடுவார்கள். இதையெல்லாம் அனுபவித்து மக்களைப் பற்றி மறக்கடிக்கப்படும் நிலையும் வந்துவிடும்’ எனக் கூறியிருப்பார்.

ஆகவே, இவையெல்லாவற்றையும் அனுபவித்தாலும்.. கடைக்கோடி மக்களின் வாழ்வியலையும் எண்ணிப் பணியாற்ற வேண்டும். அவைக்கு முழு வருகை சதவிகிதம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அவையில் குரல் எழுப்ப வேண்டும், தக்க கேள்வி எழுப்பி விவாதித்து முடிவு காணப்பட வேண்டும் என்பதே ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் விருப்பமுமாகும். அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோமாக.!

- மணிகண்ட பிரபு