இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 30, 2019

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு


தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

அரசு கேபிளில் 200-ஆவது சேனல்: இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதுள்ள 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஆய்வு: கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புத் தளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து


மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.இந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும்.

முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும். பழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.

இந்த புதிய மாற்றம், ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

Tuesday, May 28, 2019

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து


அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர்.

ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, May 27, 2019

புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்


புதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பள்ளி சீருடையில் மாற்றம் செய்தது.தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ணங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இந்தாண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு, உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு, மாற்றம் செய்யப்பட்ட புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்படும் என, சில நாட்களுக்கு முன், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.

ஆனால், மிக குறைவான நாட்களே இருப்பதால், பள்ளி திறக்க உள்ள ஜூன், 3ல் சீருடைகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து, பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது:

சத்துணவு சாப்பிடும் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, நான்கு செட் சீருடைகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, சீருடை வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1.50 லட்சம் பேருக்கு, சீருடை வழங்க வேண்டும்.தற்போது தான், சீருடை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ஜூன், 7க்கு பின் தான் பள்ளிகளுக்கே சீருடைகள் சென்றடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

Sunday, May 26, 2019

3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, May 23, 2019

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்: மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழலையர் வகுப்புகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில், "ப்ரீ.கே.ஜி. - எல்.கே.ஜி.- யு.கே.ஜி' எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலும், கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 2018 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 2018-ஆம் ஆண்டு புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை. இதையடுத்து 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்த்து மழலையர் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ள 32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, May 22, 2019

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்?


தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து கடும் வெயில் காரணமாக குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும் அவர்களது நலன் கருதி பள்ளித் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதேபோன்று சமூக வலைதளங்களிலும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தினர். இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே இறுதி வாரத்தில் வரவிருக்கும் பருவநிலையைப் பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன், 3 முதல், 'அட்மிஷன்'


தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசாணை அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது.இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, அரசு பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வி துறை சார்பில், 2018, டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகள் துவங்கவும், குறிப்பாக, அங்கன்வாடிகளை ஒட்டியுள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்காக, 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், 2018ல், புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை.

இந்த ஆண்டு முதல், மாணவர்களை சேர்த்து, எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அறிவுறுத்தல் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல்,பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி., சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளை அறிவுறுத்திஉள்ளது.அதேபோல், மாவட்ட வாரியாக துவங்கப்பட்ட, 32 மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்.கே.ஜி., வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ள

Tuesday, May 21, 2019

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு விடுமுறை நீட்டிப்பு இல்லை


'கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம்அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:வரும் கல்விஆண்டில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாட திட்டம் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பான, இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இதர இலவச பொருட்களை, வரும், 24ம் தேதி முதல், 30ம் தேதிக்குள், பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்.அவற்றை, பள்ளிகள் திறக்கப்படும், ஜூன், 3ம் தேதி அன்றே, மாணவ - மாணவியருக்கு வழங்கி விட வேண்டும். இதில், எந்த சுணக்கமும், இருக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கோடை வெயில் கொளுத்துவதால், பள்ளி விடுமுறையை, நீட்டிக்குமாறு, அரசுக்கு சில ஆசிரியர் அமைப்புகள், கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், திட்டமிட்ட தேதியில் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், 'புதியபாட திட்டம் அமலுக்கு வருவதால், நாட்களை வீணடிக்காமல், பாடம் நடத்தும் பணிகளைத் துவக்க வேண்டும்'என்றும், பள்ளி கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.

Monday, May 20, 2019

பள்ளிகள் திறக்கும் நாளில் புத்தக பைகள் வினியோகம்


அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகளை வினியோகம் செய்யும் உரிமத்தை, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

அந்நிறுவனம், மாவட்டம் தோறும் வினியோகம் செய்யும் வகையில், இரண்டு பேருக்கு, தயாரிப்பு பணியை வழங்கியுள்ளது.சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி உட்பட, 100க்கும் மேற்பட்ட இடங்களில், புத்தக பைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.ஜெ., முதல்வராக இருந்தபோது, பச்சை மற்றும் பிங்க் நிறங்களில், பைகள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டு, ஊதா நிறத்தில் வழங்கப்படும் பைகளில், ஜெ., மற்றும், முதல்வர், இ.பி.எஸ்., படங்களுடன், அரசு முத்திரையும் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன.பள்ளி திறக்க, 12 நாட்களே உள்ள நிலையில், சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு,புத்தக பைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன.இதில், 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதால், 26ம் தேதி முதல், பள்ளிகளுக்கு வினியோகம் செய்ய உள்ளதாக, தயாரிப்பாளர்கள் கூறினர்.பள்ளி திறக்கப்படும், ஜூன், 3ல், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகள் கிடைத்துவிடும்.

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடை அறிமுகம்


தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை வண்ணங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன.

அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கரும்பச்சை நிறத்தில் அரைக்கால் சட்டையும், இளம்பச்சை நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் என்றும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பழுப்பு நிறத்தாலான முழுக்கால் சட்டையும், அதே நிறத்தாலான கோடிட்ட மேல்சட்டையும் அணிய வேண்டும் என்றும், மாணவிகள் கூடுதலாக பழுப்பு நிறத்தாலான கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய சீருடைகளை மாணவ, மாணவிகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் புதிய சீருடைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ளது. சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன. 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.

Sunday, May 19, 2019

புதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிந்திக்க வைக்கும் கேள்விகள், கியூ.ஆர். குறியீடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பாடத் திட்டத்துக்கு பெற்றோர்- ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.

இதையடுத்து வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி


புதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டம், 14 ஆண்டு களுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018ல், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம்அமலுக்கு வந்தது.

வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், மற்ற வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் அடங்கும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுவதால், இந்த வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாடத்திட்ட பாடங்களை, விரைந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஜூனில், பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகம் தயாரித்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வாயிலாக, மாவட்ட வாரியாக, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளின் ஆசிரி யர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்ட பயிற்சியில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அடுத்த கட்டங்களில், தனியார் மெட்ரிக் பள்ளிஆசிரியர்களும் பயிற்சி பெற உள்ளனர்