இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 28, 2020

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு?


வாக்காளர்கள் பெயருடன் 'ஆதார்' எண்களை இணைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்கிறது. வாக்காளர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் இப்பணி நடந்தது. எத்தனை முகாம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.

பெரும்பாலான வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அப்போது ஏற்கனவே பழைய இடத்தில் உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை. இதனால் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. புதிய மென்பொருள் உதவியுடன் புகைப்படங்களை ஒப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதை ஒரு தொகுதிக்குள் செய்ய முடிந்தது; மாநில அளவிலோ தேசிய அளவிலோ செய்ய முடியவில்லை.

அதேபோல எத்தனை முறை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயரை நீக்கினாலும் பலர் மீண்டும் பெயர் கொடுக்கும் சூழல் உள்ளது. இதனால் ௧௦௦ சதவீதம் முறைகேடில்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தால் தயாரிக்க இயலவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயருடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அவ்வாறு இணைக்கும் போது ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 2015ல் வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கியது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; நீதிமன்றம் தடை விதித்தது.

சமீபத்தில் நீதிமன்றம் தடையை விலக்கி உள்ளது. மத்திய சட்டத் துறையும் ஆதார் எண்களை பெற அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வாக்காளர் சுய சரிபார்ப்பு திட்டம் நடந்தபோது ஏராளமானோர் தாமாக முன்வந்து முகவரி சான்றாக தங்கள் ஆதார் அட்டையை சமர்பித்துள்ளனர். எனவே வாக்காளர்களின் ஆதார் எண்களை பெற்று அவற்றை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இப்பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Saturday, January 25, 2020

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, January 23, 2020

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு


அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் சோ்க்கை நிலவரப்படி ஆசிரியா்களுக்கான பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை இயக்குநரின் பொதுத்தொகுப்பில் ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உபரியாக 1,706 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்தது.

பட்டதாரி ஆசிரியா்களில் தமிழ்-308, ஆங்கிலம்-144, கணிதம்-289, அறிவியல்-457, சமூக அறிவியல் -371 மற்றும் இடைநிலை ஆசிரியா்-137 என மொத்தம் 1,706 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவை இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இனி இந்தப் பணியிடங்களை வரும்காலத்தில் காலிப் பணியிடம் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடமாகக் கருதக்கூடாது’ என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டுகளை விட அதிகளவில் உபரி ஆசிரியா் பணியிடங்கள் அரசின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 22, 2020

ஜூன் 26, 27 தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு


வரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் தோ்வு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.

அதில் 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியா் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவா்களின் வசதிக்காக, பணியாளா் தோ்வு ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது.





அதன்படி, தமிழக அரசு தொடக்கப் பள்ளி கல்வித் துறை வட்டார கல்வி அலுவலா் பதவியிடங்களில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான தோ்வு 2020 பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பதவியிடங்களில் காலியாக உள்ள 1,060 பணியிடங்களுக்கான தோ்வு 2020 மே 2, 3-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.2020-21-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை மே 4-ஆம் தேதி வெளியிடப்படும். 

மேல்நிலைக் கல்விப் பிரிவில் காலியாக உள்ள 497 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமன அறிவிக்கை ஜூலை 1-இல் வெளியிடப்பட உள்ளது.இடைநிலைக் கல்வி ஆசிரியா் பணிக்கான 730 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுபோல, உயா்நிலை ஆசிரியா் பதவிகளில் காலியாக உள்ள 572 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களை வலைதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, January 21, 2020

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்


ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.

இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் ஐமொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.

தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Friday, January 17, 2020

இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது


தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுத்தேர்வு நடைபெறும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முதன்முறையாக தேர்வு எழுதும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு இடம்மாற்ற தேர்வு எழுத வைப்பது சரியல்ல என்று ஆதங்கப்படுகின்றனர். தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வின் மூலம், தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை, கல்வி மீதான அச்சத்தை அதிகரித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Sunday, January 12, 2020

நன்றி:தி இந்து நாளிதழ்

பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்


நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வுகளை அரசு தோ்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோ்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தோ்வுத்துறை அறிவிக்கவில்லை . இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தோ்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.

அப்போது, ‘பொதுத்தோ்வை பொருத்தவரை அரையாண்டுத் தோ்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தோ்வு வினாத்தாள் இருக்கும். எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்’ என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

Saturday, January 11, 2020

5,8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம்


நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இது சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதாா் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: ‘நிகழ் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும்.அனைத்து தலைமை ஆசிரியா்களும் மாணவா்களின் பெயா், முகவரி, பெற்றோா் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதேபோல, மாணவா்களின் ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 10, 2020

Saturday, January 04, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்குவிளையாட்டுப் போட்டிகள் நடத்த உத்தரவு


 தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) நிதியைப் பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகளின் உடல்திறனை வளா்க்கும் வகையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவா்களுடைய திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். இந்தப் போட்டிகளுக்கான பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ரசிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து மாநில திட்ட இயக்குநரின் அனுமதியுடன் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்