இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 20, 2017

முதல்வரின் ஐந்து கையெழுத்து

முதலமைச்சர் ஆணை பிறப்பித்து கையொப்பமிட்ட  ஐந்து கோப்புகளின் விவரம்:

* மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவிகித மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 20ஆயிரம் வழங்கப்படும்.  மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த ஜெயலலிதா நினைவாக இந்தத் திட்டம், "அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்" என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

*  ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார். உலக நாடுகளின் நிலைக்கேற்ப, பேறு கால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறு கால தாய் சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதனை நிறைவேற்றும் வகையில்  12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு, அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார். இந்தத் திட்டத்தின்மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவர்.  ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

*   தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது.  இதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டு, அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.  85 கோடி ரூபாய் செலவினத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 100-லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 150-லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12-ம் வகுப்பு தேர்ச்சிபெறாத இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 200-லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 300-லிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்தியும் ஆணையிட்டு, அதற்குரிய கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.  இந்தத் திட்டத்தின்மூலம் தற்போது உதவித்தொகை பெற்றுவரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித்தொகையைப் பெற்று பயன் பெறுவர்.  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதனால், தமிழ் நாடு அரசுக்கு  ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதா, 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார்.  மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்துச்செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான ஆணையிட்டு, அதைச் செயல்படுத்தும் வகையில் அந்தக்கோப்பில் கையொப்பமிட்டார், முதல்வர் பழனிசாமி.

No comments:

Post a Comment