இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 31, 2018

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்


தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இரண்டு மாதங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்படும். மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும்.

சிறப்பு முகாம்கள்: தமிழகத்தில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாகும். அதில், ஆண் வாக்காளர்கள் 2.88 கோடி. பெண் வாக்காளர்கள் 2.94 கோடி. மூன்றாம் பாலித்தனவர் 5,184.

இரண்டு மாதம் கால அவகாசம்: வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் செப்டம்பர் 9, 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலேயே நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான படிவங்களை அங்கேயே பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களையும் அங்கேயே அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் நடைபெறாத நாள்களில், அலுவலக வேலை நேரத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் படிவத்தை அளித்திடலாம்.

சான்றுகளாக அளிக்க வேண்டியவை: பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ரேஷன் அட்டை, வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, தொலைபேசி, சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது, ஆதார் கடிதம் ஆகியவற்றை முகவரிச் சான்றாக அளிக்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளிச் சான்றிதழின் நகலை வழங்கலாம். 25 வயதுக்கு கீழுள்ள வாக்காளர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இணையதளத்திலும் வசதி: வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்திலும் (elections.tn.gov.in)  சனிக்கிழமை வெளியிடப்படும்.
வாக்காளர் பெயர் சேர்ப்புப் பணிகளை இணையதளத்திலும் மேற்கொள்ளலாம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சோழிங்கநல்லூரும் துறைமுகமும்...
காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்களும், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் குறைவான எண்ணிக்கையிலும் வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் செப்டம்பர் 8, 22 மற்றும் அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் கிராம சபை மற்றும் உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களில் படிக்கப்படும். பாகம் மற்றும் பிரிவு வாரியாக பெயர்கள் படிக்கப்படும் போது அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 6.07 லட்சம் வாக்காளர்களுடன் மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு ஆண்கள் 3.05 லட்சம், பெண்கள் 3.02 லட்சம், மூன்றாம் பாலினத்தவர் 73 ஆகியோர் உள்ளனர். இதே போன்று, சென்னை துறைமுகம் தொகுதியில் 1.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண்கள் 86 ஆயிரமும், பெண்கள் 78 ஆயிரமும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 ஆக உள்ளனர் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment