தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
1.1.2017–ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 1.9.2016 அன்று வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 1.9.2016–ம் தேதியில் இருந்து 30.9.2016–ம் தேதி வரை பெறப்பட்டன. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது பெயர் சேர்த்தலுக்கு 15,85,603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 15,04,233 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீக்கல்கள் 3,84,369 ஆகும்.
5.92 கோடி வாக்காளர்கள்
திருத்தல்களுக்கு 10,50,192 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 10,46,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 2,51,257 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2,33,561 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
2017–ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 5.92 கோடி வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் – 2.93 கோடி, பெண் வாக்காளர்கள் – 2.99 கோடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 5,040) உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர் அதிகம் உள்ளனர்.
புதிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 10.2.2017 வாக்கில் வழங்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி ஆகும். இங்கு மொத்தம் 6,22,333 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 3,12,816, பெண்கள் – 3,09,443, மூன்றாம் பாலினத்தவர் 74). இத்தொகுதியில் 18–19 வயதுடைய 7,935 இளைய வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் – 4,278, பெண்கள் – 3657).
தொடர் திருத்த நடைமுறை
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,66,920 ஆவர். (ஆண்கள் – 82,515, பெண்கள் – 84,404, மூன்றாம் பாலினத்தவர் 1).
பணித்தொகுதி வாக்காளர் அதிகமுள்ள சட்டமன்ற தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஆகும். (2,806 பேர்).
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 624 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. தகுதியுள்ள எவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தின் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Wednesday, January 04, 2017
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வின் மறு பிரதி சான்றிதழ் பெறலாம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2012, 2013 மற்றும் 2014ல், ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது.
2012 தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்கள் வழியே, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், 2013, 2014 தேர்வுகளில் பங்கேற்றோருக்கு, டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. அவ்வாறு, பதிவிறக்கம் செய்யாதோருக்கு, சான்றிதழ் மறு பிரதி வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதி சான்றிதழின் மறு பிரதி தேவைப்படுவோர், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., பரிந்துரைப்படி, டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மறு பிரதி சான்றிதழ், பதிவு தபாலில் அனுப்பப்படும் என, டி.ஆர்.பி.,யின் உறுப்பினர் செயலர், உமா தெரிவித்துள்ளார்.
முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு : பள்ளி கல்வித்துறை மவுனம்
அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 2,700 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாததால், பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மேல்நிலை பள்ளிகளில், 2013 - 14, 2014 - 15ம் ஆண்டுகளில் உருவான, 1,807 காலியிடங்கள், 2016 மே மாதம் நிரப்பப்பட்டன. பின், 2015 - 16ல் உருவான, 2,125 காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறைக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதில், 50 சதவீதமான, 1,063 பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்ப முடிவானது. மீதமுள்ள, 1,062 பணியிடங்கள், போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு வெளியாகி, ஓர் ஆண்டு நெருங்கியும், இன்னும் பணி நியமன பணிகள் துவங்கவில்லை. அதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் பாடம் நடத்த, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: மேல்நிலை பள்ளிகளில், தற்போது வரை, 2,700 இடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், அனுபவமில்லாத புதிய பட்டதாரிகளை, தற்காலிக அடிப்படையில் நியமித்து, நிலைமையை சமாளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.
இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை.
நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
E.L leave details
*ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:*
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து ELகணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.
🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.
Tuesday, January 03, 2017
சிறுவயதில் ஆதார் எண் பதிவு செய்தவர்கள் 15 வயது பூர்த்தியானதும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு
சிறுவயதில் ஆதார் எண் பதிவு செய்தவர்கள் 15 வயது பூர்த்தியானதும் மீண்டும் பயோமெட்ரிக் தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மின் ஆளுமை முகமை இதுகுறித்து மின் ஆளுமை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாட்டு பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 545 நிரந்தர சேர்க்கை மையங்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) நிர்வகித்து வருகின்றன. 15 வயது முடிந்ததும் 1.10.2016 முதல் 31.12.2016 வரை 9 லட்சத்து 91 ஆயிரத்து 924 பேருக்கு ஆதார் எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12.9.2016 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று பதினைந்து வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை (பயோமெட்ரிக் இன்பர்மேஷன்) பதினைந்து வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு நேரில் சென்று அளிக்கவேண்டும்.
நிரந்தர சேர்க்கை மையங்களில்...
எனவே மேற்கூறிய ஆதார் வழிமுறைகளின்படி பொதுமக்கள் செயல்பட ஏதுவாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு 4.1.2017 முதல் நேரில் சென்று பதினைந்து வயது பூர்த்தியான நபர்கள் தங்களது உயிரியத் தகவல்களை அளிக்கவேண்டும். இந்த சேவை கட்டணமில்லா சேவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் தேர்வு எழுதியோருக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்
கடந்த அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அக்டோபரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியோர், நவ., 3 முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அவர்களே, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஜூனில் நடந்த தேர்வுகளில், தேர்ச்சி பெறாதோர், அக்டோபர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பர். அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், மற்றவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். சான்றிதழை, இன்று முதல் தேர்வு மையத்தில் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்லாஸ்' தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வகம், நுாலகம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப, மாணவர்களின் கல்வி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை, 'ஸ்லாஸ்' தேர்வின் மூலம், பள்ளி கல்வித்துறை முடிவு செய்கிறது. ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, இந்த ஆண்டுக்கான, 'ஸ்லாஸ்' தேர்வு, டிசம்பரில் முடிந்து விட்டது. தமிழகம் முழுவதும், 6,200 பள்ளிகளில், தலா, 30 மாணவர்கள் என, 3.72 லட்சம் பேரிடம் இத்தேர்வு நடத்தப்பட்டது. இன்னும் இரு வாரங்களில், இதன் முடிவுகள் வெளியாகின்றன.
இது குறித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: சாதனை கணக்கெடுப்பான, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவுகளின்படி, திறன் படைத்த மாணவர்கள் எந்த பள்ளியில் உள்ளனர்; அவர்களுக்கு, பிரச்னையாக உள்ள பாடப்பகுதி எது என்பதை, அறிய முடியும். அதற்கேற்ப, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
15 வயது நிறைவடைந்தோருக்கு இன்றுமுதல் மீண்டும் ஆதார் பதிவு!
ஆதார் எண் பெற்று 15 வயது நிறைவடைந்தவர்கள் மீண்டும் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை புதன்கிழமை முதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் 9,91,924 பேருக்கு ஆதார் எண்ணுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆதார் சேர்க்கை வழிமுறைகளின்படி, ஆதார் எண் கிடைக்கப் பெற்று 15 வயது பூர்த்தியான நபர்கள் தங்களது பயோ-மெட்ரிக் தகவல்களை, வயது பூர்த்தியான நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கட்டாயமாக நிரந்தர சேர்க்கை மையங்களுக்குச் சென்று விவரங்களை அளிக்க வேண்டும். இதற்காக புதன்கிழமை முதல் தகவல்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Monday, January 02, 2017
வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு
தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காக அளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. புதிதாக 15 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு
பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன.
இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசு சார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
Sunday, January 01, 2017
இன்று பள்ளிகள் திறப்பு
அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத் தேர்வு தொடங்கியது. கீழ் வகுப்புகளுக்கும் 7ம் தேதி மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கின. 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்குகின்றன.
முன்னதாக, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் போய்சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இலவசப் பாடப்புத்தகங்களை பெற்று, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நேற்றே அனுப்பி வைத்தனர். இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
6 சதவீத வட்டியில் வீட்டு கடன்
நடுத்தர வகுப்பினருக்கு, 6 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளதால், கட்டுமான துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், ரொக்க பண பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத பணத்தை பயன்படுத்த முடியாததால், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடு கட்டும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் முடங்கியுள்ளன. அத்துடன் கட்டப்பட்ட வீடுகள் விற்பனையும் மந்தமாக உள்ளது. இந்த பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வீடு கட்ட, ஒன்பது லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 4 சதவீதமும், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அதற்கான வட்டியில், 3 சதவீதமும் விலக்கு அளிக்கப்படும் என, தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, 20 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனுக்கு, பொதுத் துறை வங்கிகளில், 10 சதவீதம் வரை, வட்டி வசூலிக்கப் படுகிறது.
பிரதமர் அறிவிப்பின்படி, ஒன்பது லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு, 5 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படும்.அதேநேரத்தில், 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், 6 சதவீத வட்டி கணக்கிடப்படும். இந்த வட்டி விகிதங்கள் அடிப்படையில், அவர்களுக்கான மாத தவணை தொகையும் நிர்ணயிக்கப்படும். இது குறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:பிரதமர் அறிவிப்பால், நகரங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், சிறிய நகரங்கள், புறநகர், ஊரக பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களும் பயன் பெறலாம்.
அடிப்படை வசதிகளுடன் கூடிய, 600 சதுர அடி வீடு போதும் என, கருதும், சாதாரண மக்களுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். அதேநேரம், கொஞ்சம் நவீன வசதிகளுடன் கூடிய வீடு வாங்குவதானால், அவர்களுக்கு இந்த திட்டத்தின் வரம்புகள், தடை கல்லாக அமையும். சலுகை பெற, ஒன்பது லட்சம்; 12 லட்சம் ரூபாய் என்பதை, 12 லட்சம்; 15 லட்சம் ரூபாய் என, மாற்றினால் அதிகம் பேர் பயன்பெறுவர்