Click below
Tuesday, July 26, 2016
TNPTF news
சுற்றறிக்கை
தோழர்களே,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ள TR சுப்ரமணியம் குழுவின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடத்திட்டம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மக்களிடையே கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், மாணவர்அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளடக்கிய ஒரு கருத்தரங்கம் வரும் 30/07/2016 சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் மணி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கல்வி நலன் காப்பதில் அதிகமான பங்கு உள்ளதால் நடக்கவிருக்கும் சென்னை கருத்தரங்கத்தில் வட்டாரச்செயலாளர், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்றிட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்திட வேண்டும். கலந்து கொள்ள வரும் தோழர்கள் சென்னை மாநில அலுவலகத்தில் வருவதை கூடுமானவரை தவிர்த்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செ. பாலசந்தர், பொதுசெயலாளர். TNPTF.
Monday, July 25, 2016
மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் வாசிப்புத் திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் தர மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது. வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்தல், மாணவர்களின் எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகளை எழுதுதல் மற்றும் எளிய கணித முறைகளில் அடிப்படைத் திறன் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்: கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு
தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.
சென்னையில் அவர்திங்கள்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:- 23 ஆசிரியர், மாணவர்களின் சங்கங்கள் இணைந்து தொடங்கியுள்ள இந்த அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு அளித்துள்ள 200 பக்கப் பரிந்துரைகளில் பல அம்சங்கள் விவாதத்துக்குரியன.
எனவே, கல்வியாளர்களையும் உள்ளடக்கிய குழு அமைத்து வரைவு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் கருத்துக் கேட்டறிய 3 மாத கால அவகாசம் வேண்டும். இதற்காக புதிய வரைவு கொள்கை குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவறிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்தால், அதை எதிர்த்து பிரசாரம் செய்வோம்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-இல் திருச்சியில் 3,000 பேரைத் திரட்டி கோரிக்கை மாநாடும், 30-இல் சென்னை லயோலா கல்லூரியில் கருத்தரங்கமும் நடைபெறும் என்றார். பேட்டியின்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் மோசஸ் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
சொந்த ஊராட்சிகளில் பணி புரிபவர்கள், ஒரே உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்டகாலம் பணிபுரிபவர்கள் ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபடக் கூடாது என்பதை மாவட்ட, மாநில மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊழியர்கள் உறவினர்கள் போட்டியிடும் உள்ளாட்சிகள் மற்றும் அந்த ஊள்ளாட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும், என கூறியுள்ளார்
TNPTF NEWS
*TNPTF*
இன்று நமது TNPTF மாநில பொறுப்பாளர்களுடன் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து உபரி ஆசிரியர் பணி நிரவல் குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பினோம் ,அவர் அதற்கு பயனுள்ள வழிமுறை ஒன்றை சொன்னார் .எல்லா ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவில் இளையோரை கணக்கெடுத்து அதை மாவட்ட அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து , மாவட்ட காலிப்பணயிடம், தேவைப் பணியிடங்கள் நிரப்பிய பின்னும் இருக்கின்ற உபரி ஆசிரியர்களை ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலே தொடரலாம்.
61 க்கு மூன்று ஆசிரியர் என்ற விகிதத்தில் இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 55 ஆக குறைந்தாலும் மூன்றாவது பணியிடத்தை உபரியில் கணக்கிலெடுக்க மாட்டோம் என இயக்குநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்
கோ-ஆப்டெக்ஸ் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நிரப்பப்பட உள்ள 100 உதவி விற்பணையாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தினமாகும்.
பணி: உதவி விற்பணையாளர்
காலியிடங்கள்: 100
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.1983 தேதியின்படி 18 - 33-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் 'THE TAMILNADU HANDLOOM WEAVERS' CO-OPERATIVE SOCIETY LTD' என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.07.2016
மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.cooptex.gov.in/cooptexadmin/upload/%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Saturday, July 23, 2016
எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கலாம்
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு நிதியுதவி பெரும் கல்லூரிகள் மற்றும் சுய நிதி கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான 2016ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பங்களை பெற www.annauniv.edu என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை பதிவு செய்து தங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியது..பேரம்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,
மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும், உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.
* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.
* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறு மாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.
* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்
இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும். அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமை செயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிக்கு நாளை முதல் 2ம் கட்ட விண்ணப்பம்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்., படித்திருந்தால் போதும். தமிழகத்தில், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கட்டுப்பாட்டில், 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், 13 ஆயிரத்து, 800 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், 3,500 பேர் விண்ணப்பித்து, 1,000க்கும் குறைவானவர்களே இப்படிப்பில் சேர்ந்தனர். காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. பிளஸ் 2 சிறப்பு உடனடி துணைத் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியான நிலையில், டிப்ளமோ படிப்பில் சேர உள்ள மாணவர்கள், நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வரும், 8ம் தேதி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும். 'விண்ணப்பங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும்' என, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்
Friday, July 22, 2016
தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாக மாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு
அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நிகழ் கல்வியாண்டில் முதல் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், கடந்த ஆண்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. ஏற்கெனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி போன்ற விவரங்கள் விடுப்பட்டிருந்தால், அவற்றைப் பூர்த்தி செய்வதுடன் விவரங்களைச் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழிக் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்காகவும், ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்காகவும் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக ஒற்றைச்சாளர முறையில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக எட்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும் மின் ஆளுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தானியங்கி பட்டியல் ஏற்புமுறையையும், மின் ஓய்வூதியம் போன்ற திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திடவும், விலைமதிப்பு மிக்க முத்திரைத் தாள்கள் போன்ற பொருள்களைப் பாதுகாக்கவும் வாடகை கட்டடங்களில் இயங்கும் சார் கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் 25 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் 3,060 சதுர அடி பரப்பளவில், பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதேபோன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, ஆலங்குளம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்
பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 18 வயது நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கடந்த ஆண்டு முதல் ஆன்-லைன் முறையில் உதவித்தொகை வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., மாணவிகள் தேர்வு செய்யும் பணி தற்போது நடக்கிறது.
உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவிகள் 18 வயது நிறைவடையும் போதுதான் உதவித்தொகை அவர்களுக்கு கிடைக்கும் நிலையில், பல மாணவிகள் தங்களின் வங்கி கணக்கை மாற்றிவிடுவதால், உதவித்தொகை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டால், அவர்கள் வேறு வங்கி கணக்கு துவக்கினாலும் சிக்கல் இல்லை.
ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்த முடியும். எனவே, மாணவிகள் ஆக.,31க்குள் ஆதார் எண் பெற்று வழங்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் சிறப்பு குழு அமைத்து ஆதார் எண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., நர்சிங் படிப்பு 25 முதல் விண்ணப்பம்
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25ல் துவங்குகிறது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:
மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஜூலை, 24ல் வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.