இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 09, 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்.24 வரை நீட்டிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: செப். 20-ஆம் தேதியும், அக். 4-ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. 11-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெறும். அன்றோடு நிறைவு பெற இருந்த, திருத்தப் பணிகள் இந்த மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14 லட்சத்து 45 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பெயர் சேர்த்தலுக்காக 11 லட்சத்து 34 ஆயிரத்து 859 மனுக்களும், நீக்கலுக்காக 60 ஆயிரத்து 922 விண்ணப்பங்களும், திருத்தங்கள் செய்ய ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 285 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் விவரங்கள் இணைப்பு: 32 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் விவரங்கள் அனைத்தும் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனால், கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் திருப்பூருக்கு மாற்றலாகி வரும்போது, பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தால் ஏற்கெனவே இருக்கும் அவரது பெயர் தானாகவே நீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 16 முதல் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்படும்: முற்றிலும் தவறுகள் இல்லாமல் பட்டியலைத் தயாரிக்கவும், இரட்டைப் பதிவு-இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கவும் தொழில்நுட்ப அடிப்படையிலான நான்கு புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு செயலி, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளம் (www.elections.tn.gov.ineasy), செல்லிடப்பேசி குறுஞ்செய்தி (9444123456), குரல் அடிப்படையிலான தொலைபேசி (044-66498949) ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்களது அடிப்படை விவரங்களை உறுதி செய்யலாம்.

இவ்வாறாகப் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்படும். தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அறிய முடியும். ஒவ்வொரு நடவடிக்கையும் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். அதிகாரிகளுக்குள் இணையவழித் தொடர்பு: பெயர் சேர்ப்புக்கு வாக்குச் சாவடி அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமே பொறுப்பாவர். எனவே, அவர்களுக்குள் ஒரு தொடர்பு இணையவழியில் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, அனைத்து மனுக்களும் ஸ்கேன் செய்யப்படும். போன் செய்தால் விண்ணப்பம் தயார்: குரல் வழி தொலைபேசியைப் பயன்படுத்தும் போது, பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய விவரங்களை வரிசையாகத் தெரிவித்தால் போதும்.

இறுதியில் அந்த குரல் வழி தொலைபேசி அமைப்பே விண்ணப்பத்தை தயாரித்துக் கொள்ளும். பின்னர், செல்லிடப்பேசிக்கு வரும் இணையதள இணைப்பைக் கொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு அளிக்கலாம். பெயர் சேர்க்க வரும் மனுவை வாக்குச் சாவடி அலுவலர் கள ஆய்வு மேற்கொள்வார். அதற்கு முன்பாக விண்ணப்பதாரர் குறித்த பழைய விவரங்கள் அடங்கிய பட்டியலை அவர் தன்னுடன் கொண்டு செல்வார். விசாரணைக்கு பின் மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என ஆய்வில் இருந்தே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். இதனால், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும். 15 நாள்களில் தீர்க்கப்படும்: திருத்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மனுக்கள் 15 நாள்களுக்குள் தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைபாடுகள் அடங்கிய உத்தேசப் பட்டியல் தேர்தல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அந்தக் குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

வாக்காளர் விண்ணப்பம் விவரம் அறியதேர்தல் கமிஷன் 'ஈசி' திட்டம் அறிமுகம்


வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன், 'ஈசி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் உள்ள விவரம் தொடர்பாக, வாக்காளர்கள் பல சேவைகளை பெறுவதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில், 'ஈசி' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டம் மூலம், தமிழக மக்கள், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சேவைகளை, இணையதளம் உட்பட பல அணுகுமுறைகளில் பெறலாம். இதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, ஆண்ட்ராய்டு 'ஆப்ஸ்' மூலம், https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.easy -ல் பெறலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணையதளம் www.elections.tn.gov.in/easy மூலமாகவும் பெறலாம். எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய, 94441 23456 என்ற எண்ணுக்கு, 'EPIC epic number டைப் செய்து அனுப்ப வேண்டும்.ஈசி திட்டம் மூலம், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றல், விவரங்களை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்களையும், பொதுமக்கள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்ப எண்ணை பதிவு செய்தால், விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா; வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா, இல்லையா போன்ற விவரங்களை அறிய முடியும். வாக்குச்சாவடி அலுவலர், கள ஆய்வுக்கு வந்து சென்ற விவரம், வாக்காளருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்தப்படும். எனவே, வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு செல்லாமல், ஏமாற்ற முடியாது.இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

Thursday, October 08, 2015

1,862 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு 12ம் தேதி அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் “2ஏ”(நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் அடங்கிய சிவில் சப்ளை, தொழில், வணிகம், சிறைத்துறை, போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட 32 துறைகளில் அடங்கிய உதவி அலுவலர் பதவிகளில் அடங்கிய 1,862 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வருகிற 12ம் தேதி வெளியிடப்படும். ேதர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். ஏற்கனவே, அவர்கள் வகுப்பிலிருந்து வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் ேதர்வு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல்(12ம் தேதி முதல்) விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு கிடையாது. சான்றிதழ் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும். சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி குரூப் 2ஏ தேர்வு குறித்த சந்தேகங்களை 044- 25332833, 044-25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி 1800 425 1002ல் தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி ெகாள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்ஜினியர் காலிபணியிடம் 27ம் தேதி நேர்காணல் ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் அடங்கிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கு ஜூலை 27ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 31,653 பேர் பங்கேற்றனர். தேர்வில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக 219 விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேர்காணல் தேர்வு வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

'கட்' அடிக்கும் மாணவரை பிடிக்க பாடவாரியாக வருகை பதிவேடு


அரசு பள்ளிகளில், பாட இடைவேளையில், 'கட்' அடிக்கும் மாணவர்களைக் கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளை நேரத்திலோ, மதிய உணவு இடைவேளையிலோ வகுப்பை, 'கட்' அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர்;

ஆனால், மாணவர்கள் வெளியில் ஊர் சுற்றும் நிலை உள்ளது. இதைத் தடுக்க, ஒவ்வொரு பாடவாரியாக, வருகையை பதிவு செய்யும் முறை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மேல்நிலை பள்ளியில், இந்த திட்டம், முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் துவங்கும் போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்கின்றனர். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்லி விடுகின்றனர். மேலும், மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு, மாணவர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, 'இந்த திட்டம் ஊர்சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளுக்கும் இந்த நடைமுறையை விரிவுபடுத்த வேண்டும்' என்றனர்.

நீர்நிலைகள் மாசு தடுக்க பள்ளிகளில் ஓவியப்போட்டி


நீர்நிலைகளை மாசுபடுத்தல் தடுத்தல் குறித்து 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், புனித நதி, நதி மற்றும் நீர்நிலைகளின் மாசுபாட்டை தடுத்தல் ஆகிய தலைப்புகளில் பள்ளி வாரியாக அக்.,25க்குள் ஓவியப்போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 32 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 50 மாணவர்கள் சென்னையில் நவ.,15ல் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். நீர்நிலை மாசுபடுதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த இப்போட்டிகள் நடத்தப்படுகிறது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, October 07, 2015

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2வில் தோல்வியடைந்துமறுதேர்வு எழுதினாலும் இனி ஒரே மதிப்பெண் சான்று: பதிவு எண்ணும் மாறாது


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஒரே முறையில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்து தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால் 2க்கும் மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இந்தமுறையில் மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘‘இனி பொதுத் தேர்வுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட பருவங்களில் எழுதி தேர்ச்சி பெறும்போது, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

அதோடு, தேர்வர்கள் தங்களது இறுதி முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்தால், வெவ்வேறு பருவங்களில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை ஒன்றாகத் தொகுத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு நிரந்தர பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. தேர்வர் தேர்ச்சி பெறும் வரை இந்த எண்ணைப் பயன்படுத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, October 06, 2015

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி : நாளை ஆசிரியர்கள் ஸ்டிரைக்


ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் நேற்று பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஜேக்டோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று ஜேக்ேடா அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் மேனிலைப் பள்ளிகளில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 15 அம்ச கோரிக்கை: மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியம் தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியம் போன்று தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு அலட்சியம்:

ேகாரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம்  இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜேக்டோ அமைப்பை மீண்டும் தொடங்கினர். அந்த அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 கட்டமாக போராட்டம் நடத்தினர். ஆனால் அரசுத் தரப்பில் ஜேக்டோ அமைப்பை அழைத்து யாரும் பேச்சுவார்த்தை நடத்த இல்லை. பேச்சு வார்த்தை: போராட்டத்தை தடுக்கும் வகையில், ஜேக்டோ அமைப்பினர் 3 கட்டமாக கூடிப்பேசினர்.

அதன்பேரில் அக்டோபர் 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், அதே நாளில் அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் கடந்த மாதம் அறிவித்தனர். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் ஜேக்டோ அமைப்பிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு கடிதம் அனுப்பினர். இதன்பேரில் நேற்று மாலை 5 மணி அளவில் பள்ளிக் கல்வி

இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையின் போது ஜேக்டோ அமைப்பில் உள்ள 24 சங்கங்களின் சார்பில் ரெங்கராஜன்,பாலச்சந்தர் தியாகராஜன், தாஸ், இளங்கோவன், சுரேஷ், அண்ணாத்துரை, சாமிசத்தியமூர்த்தி, மணிவாசகம், எத்திராஜ் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அரசு பிடிவாதம்: சமாதான பேச்சுவார்த்தையில், இயக்குநர்கள் பேசியதாவது: ஆசிரியர்கள் கொடுத்துள்ள 15 அம்ச கோரிக்கைகளில் 9 கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை. 6 கோரிக்கைகள் பொதுவானவை. அதிலும் 4 கோரிக்கைகள் சர்வீஸ் சம்பந்தமானது. 2 கோரிக்கைதான் பொதுவானது. சிபிஎஸ் தொடர்பான கோரிக்கையில் இறந்த ஆசிரியர்களளின் குடும்பத்தினருக்கு பணப்பயன் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்கு 8.7 சதவீத வட்டியுடன் வழங்கப்படும். அதற்கான அரசாணை இம்மாத இறுதிக்குள் வெளியாகும்.

2004-2006ம் ஆண்டு தொகுப்பூதியம் தொடர்பான கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. அதற்கான பு்ள்ளி விவரம் எடுத்து வருகிறோம். இதற்கு ரூ. 170 கோடி தேவைப்படுகிறது. ஆசிரியர் தேர்வு என்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான தர ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது இப்போது சாத்தியம் இல்லை. அடுத்த பேகமிஷனில் பார்த்துக் கொள்ளலாம். இயக்குநர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பேச்சு வார்த்தை தோல்வி: அதிகாரிகளின் பதிலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் தர ஊதியம் அடுத்த பே கமிஷன் வரை காத்திருக்க முடியாது.

இன்றைய தேதியில் இருந்தாவது அதை வழங்க வேண்டும். அது தொடர்பாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். அரசு இன்னும் காலம் கடத்தினால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பாலசந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, இது குறித்து அரசுக்கு தெரிவித்து முதல்வரரின் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் என்று இயக்குநர்கள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடையாத ஆசிரியர்கள் பேச்சு வார்த்தியில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்து வெளியில் வந்தனர்.

போராட்ட குழு பேட்டி: ஜேக்டோ அமைப்பின் போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி துறை அதிகாரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பெரும்பாலான கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை
என்பதால் நிதித்துறையிடம் பேசித்தான் முடிவு எடுப்போம் என்கிறார்கள். தமிழக அளவிில் 3 கட்ட போராட்டம் நடத்திய பிறகும் இது குறித்து தெரியாததுபோல அதிகாரிகள் பேசுகின்றனர். இனிமேல் தான் அரசுக் தெரிவிக்கப் போகிறோம் என்கின்றனர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே ஜேக்டோ அறிவித்தபடி 8ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கும். அன்று 11 மணி முதல் 12 மணி வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடக்கும். இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் 3 லட்சம் இடைநிலை, இளநிலை பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.

ஜேக்டோ அமைப்பை உடைக்க முயற்சி

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக ஜேக்டோ அமைப்பினரை நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், போட்டி சங்கமான ஜாக்டா அமைப்பினர் நேற்று காலையில் தலைமைச் செயலகம் சென்று பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சந்தித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடமாட்ேடாம் என்று தெரிவித்தனர். ஆனால் மாலையில் ஜேக்டோ அமைப்பினரை பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்திருந்தது அரசு.  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜேக்டோ அ மைப்பை உடைத்து ஆதரவு சங்கங்களின் மூலம் பள்ளிகளை நடத்த அரசு முயற்சிக்கிறது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் அரசு முடிவு செய்திருக்கிறது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும்


சமூக விரோதிகள் மற்றும் குறும்புத்தனமான மாணவர்களின் கேலி, கிண்டல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு, மேலங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பருவ வயதை எட்டும் மாணவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. ஆலோசனைமேலும், 18 வயது பூர்த்தி அடையாத, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்களாலும், கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதையடுத்து, ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, ஏப்ரலில், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில், பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி, அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், ஆசிரியை களை, மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து, மதுரை மாவட்ட போலீசார் விசாரித்து, மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தினர். மேலும், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வர அறிவுறுத்தினர்.

இதன்படி, சில மாணவர்களின் தவறான செய்கை மற்றும் பார்வைகளில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு மட்டும், சேலையுடன், 'மேல் கோட்' என்ற மேலங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயசாமி உத்தரவுப்படி, மதுரை பேரையூர் தாலுகா வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். 'பள்ளிக்குள் இனி, கண்டிப்பாக மேல்கோட் அணிய வேண்டும்' என, ஆசிரியைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.'மற்ற மாவட்டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒப்புதல் பெற்றபின், இந்த உடை கட்டுப்பாட்டை அமல்படுத்தலாம்' என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு


அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை துவக்கி, போராட்டம் நடத்தி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர்.

தற்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.நாளை, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், ஒரு லட்சம் பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டு, வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதனால், ஜாக்டோ உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசு நேற்று பேச்சு நடத்தியது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி ஆகியோர், அரசு சார்பில் பேச்சு நடத்தினர்.

சங்க நிர்வாகிகளுக்கு, சூடான கட்லெட், காரச்சேவு, கேக் மற்றும் காபி வழங்கப்பட்டு பேச்சு துவங்கியது. இரண்டு மணிநேர பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும்' என, ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர். பேச்சு நடத்த போது உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின், ஆசிரியர்கள் போராட்டத்தின் போது, அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதப்படை மற்றும் சிறப்புப் படை போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த முடிவு செய்ததாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் இணை இயக்குனர் பேச்சு


அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது; அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் மாணவர் கற்றல் திறனின் இலக்கை எளிதில் அடைய முடியும்,'' என, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் முன்னிலை வகித்தார்.இணை இயக்குனர் செல்வராஜ் இதை துவக்கி வைத்து பேசுகையில்,

''தொடக்கக் கல்வியில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வாசித்தல், எழுதுதல் திறன் மற்றும் கணிதம், அறிவியலில் அடிப்படை அறிவை வளர்ப்பது கூட்டத்தின் நோக்கம். ஆசிரியர்கள் தங்களின் அர்ப்பணிப்பை அளித்தால் தான் மாணவர் அறிவுத் திறனை பெற முடியும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது. பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மாணவர் கற்றல் திறன் இலக்கை அடைய முடியும்,'' என்றார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி, ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப், எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன் (திண்டுக்கல்), ஜெயலட்சுமி (தேனி) மற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.