இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 26, 2015

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏப் 6ல் தான் ஊதியம்

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதத்தின் இறுதி நாளான 31-ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது எனவும், அதற்குப் பதிலாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் கருவூல கணக்குத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன காரணம்? நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, நிதியாண்டு தொடங்கும் தினமான ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையாகும். இந்த விடுமுறையைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அரசு விடுமுறைகள் வருகின்றன. ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியும், ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளியும் வருகின்றன. இரண்டு தினங்களும் அரசு விடுமுறையாகும். இந்த இரு தினங்களிலும் வங்கிகள் செயல்படாது. சனிக்கிழமை (ஏப்ரல் 4) வங்கிகள் செயல்படும் என்றாலும், ஊதியப் பட்டியலை வங்கிகளுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடும் மாநில அரசின் கருவூலத் துறையானது செயல்படாது.

இதனால், அன்றைய தினமும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரவு வைப்பது சிரமம். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வழக்கம் போல், அரசு விடுமுறை என்பதால், ஏப்ரல் 6- ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வான, என்.டி.எஸ்.இ., தேர்வு, கடந்த நவம்பரில் நடந்தது. இதன் முடிவுகளை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், நேற்று வெளியிட்டது. முடிவு விவரம், dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளதாக, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

SMS மூலம் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம்

வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க, 'எஸ்.எம்.எஸ்.,' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.இதுகுறித்த அவரது அறிக்கை:தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வாக்காளரின் 'ஆதார் எண்', மொபைல் எண், இ - மெயில் முகவரி, போன்றவற்றை சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் இணையதளம் www. elections.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். இது தவிர எஸ்.எம்.எஸ்., மூலமாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு, ECILINK என டைப் செய்து, 'ஸ்பேஸ்' விட்டு, ஆதார் எண்ணை 'டைப்' செய்து, '51969' என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். இது தவிர, tnvoteraadhaar@gnail.com' என்ற இ - மெயில் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 1950 அல்லது 1077 கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 25, 2015

ரூ30 க்கு காசோலை

தொடக்கப் பள்ளிகளில் படிப்போரில் 1 முதல் 3ம் வகுப்பு வரையும், 4, 5ம் வகுப்புகளுக்கும் அடிக்கடி சிறிய அளவில் போட்டிகள் வைப்பார்கள். இந்த போட்டிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க ரூ. 300 ஒரு பள்ளிக்கு ஒதுக்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.70, இரண்டாம் பரிசு ரூ.50, மூன்றாம் பரிசு ரூ.30 என அந்த பணத்தை பிரித்து பரிசாக வழங்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால் அந்த பரிசுத் தொகையை காசோலையாக கொடுத்து கையெழுத்தும் வாங்குகின்றனர். ரூ.30க்கு காசோலை பெற்றுக் கொள்ளும் ஒரு குழந்தை அதை மாற்றிக் கொள்ள அருகில் உள்ள வங்கிக்கு செல்ல வேண்டும். இதற்கு ரூ.100 செலவு செய்தால் தான் ரூ.30 பெற முடியும். இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

TNPTF மாநில பொதுச்செயலாளர் அறிக்கை

நிதியுதவி பெறும் பள்ளிகளில் முறைகேடுகளின் உச்சம்..

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது: நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியிடங்களை  நிர்ணயிப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் தான் அதிகம் விளையாடுகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பணியிடம் உபரியாக  இருக்கும். அதை மாற்றி அதிக எண்ணிக்கை என்று காட்டி முறைகேடாக பணியிடத்தை உருவாக்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும். இதுபோல்  கன்னியாகுமரியில் பணியிடம் நிர்ணயிப்பதில் அதிகம் முறைகேடுகளில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர்  இதய நோயால் இறந்தார் என்று கூறுகின்றனர்.

கீழ் மட்ட அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெற்றுத் தருதல், சேமநல நிதியை பெற்றுத் தருதல், கல்வி உதவித் தொகை பெற்றுத்  தருதல், போன்ற பணிகளுக்கான பணம் பெறுகின்றனர். இது குறித்து வாட்ஸ் அப்பில் பல முறை வெளிப்படையாக செய்திகள் வந்தும் கல்வி அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருவூல இயக்குநரிடம் தெரிவித்தோம். அரசு மூலம் இணைய தள வசதி  செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக யாரும் செலவிட வேண்டியதில்லை என்று கூறுகிறார். ஆனால் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மாதா மாதம்  ஆசிரியர்களிடம் பணம் வசூலிக்கின்றனர்.

இது குறித்தும் வாட்ஸ் அப்பில் ஆதாரத்துடன்  தகவல் வெளி வந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்பீஸ் வாங்குவது, ஸ்டாம்பு விற்பது,  பசுமைப்படை செயல்படுத்துவது உள்ளிட்ட செலவுக்கு தொடக்க கல்வித்துறை பணம் ஒதுக்கீடு செய்வதில்லை. அதை வாங்கிக் கொடுத்ததாக கணக்கு  எழுதிவிடுகின்றனர். அதற்கான செலவை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தான் செய்கின்றனர்.

துவக்க நடுநிலைப் பள்ளிகளில் ஏப் 20க்கு பின் தேர்வு

துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20 க்கு பின் பருவத்தேர்வு

     அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20க்கு பின் 3ம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. தொடக்க,நடுநிலைப் பள்ளிகள் 220 நாள் பணி நாட்கள் செயல்பட வேண்டியுள்ளதால் ஏப் 30 வரை கட்டாயம் பள்ளிகள் செயல்பட வேண்டும் என கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பள்ளி கல்வித்துறைக்கு 20936 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2015-16-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 20,936.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ. 2,090.09 கோடியும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ. 816.19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமாக, 2010-11-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் 29 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தது, 2014-15-ஆம் ஆண்டில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் குறைந்துள்ளது.

இதுபோல உயர்நிலைப் பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்தது. இப்போது 22 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

மேலும், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,11,12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 88.59 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,429.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 73 கோடியே 52 லட்சம் செலவில் மாணவ, மாணவிகளுக்கென தனித் தனியாக 11,698 கழிப்பறைகள் கட்டப்பட்டன.

மேலும், பயன்படுத்தாமல் இருந்த 10 ஆயிரத்து 776 கழிப்பறைகள் ரூ. 41 கோடியே 67 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனி கழிப்பறை வசதிகள் 100 சதவீதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோல 2015-16 நிதியாண்டில் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் ரூ. 450 கோடியே 96 லட்சம் செலவில் பள்ளி கட்டமைப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தலா 4 சீருடைகள், புத்தகப் பைகள், நோட்டு புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள், கிரயான்கள், கலர் பென்சில்கள், கம்பளி ஆடைகள் காலணிகள் உள்ளிட்டவை வழங்குவதற்காக 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,037 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா சைக்கிள்கள் வழங்க ரூ. 219 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக 2011-12-ஆம் ஆண்டில் 90.28 சதவீதமாக இருந்த உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 2013-14-ஆம் ஆண்டில் 91.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேல்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் 75.87 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2015-16-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ. 20,936.50 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 2,090.09 கோடியும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு ரூ. 816.19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 24, 2015

தமிழக பட்ஜெட்

பட்ஜெட் உரை முக்கிய அம்சங்கள்:

மாநிலத்தின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டுகளில் உயரவில்லை. இதற்கு பொருளாதார தேக்க நிலையே காரணம்.

மத்திய அரசின் உதவிகள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்துக்கும் பாதிப்பு.

14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது.

மாநிலங்கள் சொந்த நிதியில் இயங்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது.

2015-16 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.55,100 கோடி.

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில் ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.

கிராமப்புற வறுமையை ஒழிக்க தகுதியான குடும்பங்கள் கண்டறியும் பணி விரைவில் நிறைவு பெறும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காவல்துறை சிறப்பாக பேணி பாதுகாத்து வருகிறது.

காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி ஒதுக்கீடு.

காவல்துறைக்கு கட்டங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறைத்துறை கட்டமைப்பை மேம்படுத்து ரூ.227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.

வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை இல்லாத அளவு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5500 கோடி வழங்க இலக்கு. கடந்த நிதியாண்டைவிட பயிர்க்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முறையாக கடன் செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும்.

சாதாரண நெல் குவிண்டால் ரூ.50, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70 மானியம் வழங்கப்படும்.

கால்நடை பராமரிப்புக்கு முக்கியத்துவம். விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

புதிதாக 25 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்படும்.

கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.

மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு.

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.

பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

மின்சாரம்:

மின் துறை தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

24.6.2014 வரை அதிகபட்ச மின் தேவையான, 13,775 மெகாவாட் மின் தேவையை மாநிலம் நிறைவு செய்துள்ளது.

புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பித்தக்க மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்.

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி ஒதுக்கீடு.

வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு.

டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422 கோடி நிதி ஒதுக்கீடு.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926 கோடி நிதி ஒதுக்கீடு.

குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். அதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விடைத்தாள் திருத்த வராவிட்டால்

விடைத்தாள் திருத்த வராவிட்டால்...: ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. கணினி அறிவியல், புவியியல் மற்றும் வணிகவியலுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிய, முடிய, விடைத்தாள் திருத்தும் பணியும் நடந்து வருகின்றன. முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த 16, 17ம் தேதிகளில் துவங்கியது.

முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் கட்டுக் காப்பு மைய பொறுப்பாளர்கள், விடைத்தாள்களை சரிபார்த்தனர். பின், 18ம் தேதி முதல், தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. சென்னையில், நான்கு மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 73 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

இதில், மொழிப் பாடங்களுக்கு பல மையங்களில் திருத்தும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் முதற்கட்ட பணி, நேற்று முன்தினம் துவங்கியது. இன்று முதல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் புவியியல் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.

இந்தப் பணிகளுக்கு வரும் ஆசிரியர்களின் பட்டியலை, பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். ஊதியம் குறைவாக இருப்பதாகவும், தனியார் பள்ளிகளில், பிளஸ் 2வுக்கு பாடம் எடுத்து வரும் நிலையிலும், பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த முன்வரவில்லை.

விடைத்தாள் திருத்த வராதவர்கள் மீது, கல்வித்துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; மற்ற மாவட்டங்களுக்கு விடைத்தாள் திருத்தும் மைய உதவியாளராக செல்ல வேண்டிய நிலை வரும் என்று, தேர்வுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை

மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை: தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏபிஎல் என்ற செயல்முறை அடிப்படை கற்றல் முறை உள்ளது. பாடம் தொடர்பான அட்டைகளை வைத்துக்  கொண்டு பாடம் நடத்த வேண்டும். அத்துடன் புத்தகங்களையும் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இரண்டு முறைகளை ஆசிரியர்கள் மீது  கல்வித்துறை திணித்துள்ளது. இதனால், மாணவர்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். ஆசிரியர்கள் என்னதான் விரிவாகவும் புரியும்படியும் பாடங்களை  நடத்தினாலும், இந்த இரட்டை முறைகாரணமாக மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

தத்தளிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்:பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரை தொகுப்பூதியம் வழங்குகின்றனர்.  ஆனால் அதையும் மாதாமாதம் கொடுப்பதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை கொடுக்கின்றனர். இதனால் பகுதி நேர ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருதலைகொள்ளி எறும்பு: அரசு பள்ளிகளிகளில் பருவத் தேர்வு நடைபெறும் நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க கூட நேரம் கிடைப்பதில்லை. அவர்களை  மத்திய, மாநில திட்டங்களான தேர்தல் பணி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, ஆதார் அட்டை வழங்கும் பணிக்கு  ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், மாணவர்களிடையே படிப்பில் ஒருவித பிடிப்பின்மை ஏற்படுகிறது. இதற்கு வழங்கும் ஊதியமும் குறைவு. இந்த பட்டியல்  பணியின்போது சிறிய தவறுகள் ஏற்பட்டாலும் தண்டனை கிடைக்கிறது. இதனால் ஆசிரியர்கள் இருதலை கொள்ளி எறும்புகளாக திணறுகின்றனர்.

பணி பாதுகாப்பு அம்பேல்: ஒரு சினிமாவில் வரும் வசனம் இது. அதோ போறானே.. அவனை ஈசியா அடிக்கலாம். ஏண்டா அப்படிச் சொல்ற..ஏன்னா.. அவன் டீச்சரா இருக்கான். அவனை  அடிச்சா திருப்பி அடிக்க மாட்டான்’’ என்று அந்த கதாபாத்திரம் பதில் சொல்லும்.அந்த நிலைதான் இன்று தமிழகத்தில் இருக்கிறது. நன்றாக படிக்காத  மாணவனை கண்டித்தால், அவன் தந்தையுடன் ஒரு ரவுடி பட்டாளத்தையே அழைத்து வந்து ஆசிரியரை துவம்சம் செய்து விட்டு செல்கிறான். படிக்கச் சொல்லி  அடித்தால், மனித உரிமை கமிஷனுக்கு செல்கிறார்கள். பெண் ஆசிரியைகளை, மாணவர்களே கேலி செய்யும் நிலை உள்ளது. சமீபத்தில் கூட பூந்தமல்லியில்  ஒரு பெண் ஆசிரியையை பள்ளி மாணவன் ஒருவன் கம்ப்யூட்டர் வகுப்பில் அடித்துள்ளான். பிரச்னை பத்திரிகையில் வந்து பெரிதான பிறகு அவன் பள்ளியில்  இருந்து துரத்தப்பட்டான். அதுவரை அந்த பெண் ஆசிரியை பட்ட அவஸ்தைக்கு என்ன விலையை தரப்போகிறது அரசு. விடைக்கு உரிய மதிப்பெண் அளித்தால்  கூட, குறைவான மதிப்பெண் அளிக்கிறாயா என்று ஆசிரியரை அடிக்கும் நிலைதான் உள்ளது.

மற்ற பிரச்னைகள்: 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை உள்ளதால் மாணவர்களை படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கட்டாயப்படுத்த முடியாது. அதனால் மாணவர்கள் அடிப்படைக்  கல்வியை எப்படி பெற முடியும்.

கெஞ்சி கூத்தாடும் ஆசிரியர்கள்: ஓசோன் பாதுகாப்பு தினம், ஆசிரியர் தினம், சுதந்திர தினம், உலக சுற்றுச் சூழல் தினம் என்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போது அதையும் கடந்து  மின்சார சிக்கனம், டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும். அதற்காக துண்டு நோட்டீஸ், பேனர் மற்றும் பதாகைகள் தயாரிக்க வேண்டும். போலீஸ் பர்மிஷன் உள்ளிட்டவற்றிற்காக ஒரு கணிசமான பணத்தை  அரசு தரவேண்டும். ஆனால், பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்திலும், சிலர் வியாபாரிகளிடம் சென்று கெஞ்சி கூத்தாடி பணத்தை பெற்று விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

60000 ஆசிரியர்கள் பாதிப்பு

60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பென்ஷன் திட்டத்தில்  இடைநிலை ஆசிரியர்கள் 40,000 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வூதியத்தில் பாகுபாடு:மத்திய அரசின்  கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சர்வீஸ் இருந்தால் அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு தகுதியுள்ளவராக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால்  தமிழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால்தான் ஓய்வு ஊதியம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் முழு ஓய்வூதிய பலனை  பெறமுடியாமலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.

சொந்த பணத்தை செலவிடும் ஆசிரியர்கள்: அரசு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான நலத்திட்ட பொருட்களை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் மாவட்ட கல்வி  அதிகாரி அலுவலகத்துக்கு சென்று எடுத்து வர வேண்டும். அதற்கான செலவுத் தொகையை அரசு கொடுப்பதில்லை. இந்த செலவை தலைமை ஆசிரியரோ  அல்லது பள்ளி ஆசிரியரோ செலவிட வேண்டும். இந்த செலவுத் தொகையை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது.

பள்ளி பணியில் தொய்வு: அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்காக மாவட்ட தலைமையிடத்துக்கு ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செல்ல வேண்டும்.  இதனால் பள்ளியை மூடிவிட்டு செல்ல வேண்டும். இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களின்  குற்றச்சாட்டுக்கும் ஆசிரியர் ஆளாக வேண்டி உள்ளது.

ஆரோக்கியத்துக்கு ஆப்பு: பள்ளி ஆசிரியர்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல்நிலை இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், அதையெல்லாம் அரசு கருத்தில் கொள்வது  இல்லை. அவர்களை தேர்தல் வாக்குபதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துகிறது. அந்த பணிக்கும் பயிற்சிக்கும் வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்  உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் சாப்பாடு போன்ற ஏற்பாடுகளை அரசு இயந்திரம் சரியாக செய்து  கொடுப்பதில்லை. இதனால் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ள ஆசிரியர்கள் அயல்பணிக்கு செல்லும் இடத்தில் அவதிப்படுகின்றனர்.  அவர்களில் பலர் பணி முடிந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலைதான் உள்ளது.

ஆசிரியைகளின் சங்கடம்: ஆண்களை போல இத்துறையில் உள்ள பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ள கிராம பள்ளி, மலை கிராமங்களில்  உள்ள பள்ளிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தினந்தோறும் பஸ்சில் சென்று வருவதற்குள் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு  அவர்களிடம் இல்லை என்றே கூறலாம். மேலும் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பள்ளி விழாக்களை முடிப்பதற்குள் இரவு ஆகிவிடுகிறது. அந்த சூழலில்  பயந்த நிலையில்தான் உயிரை கையில் பிடித்தபடியே வீட்டுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில் அயல்பணிக்காக ஆசிரியைகள்  வீடுவீடாக செல்லும்போது குடிகாரர்கள், ரவுடிகள் மற்றும் ஜொல்லர்களின் தொந்தரவுகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இந்த அயல்பணிக்கு விருப்பம்  இல்லையென்றாலும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உள்ளது.

அமைச்சர் பெயரில் அட்டகாசம்: மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் விழாக்களுக்கு அமைச்சர் வருகிறாரோ இல்லையோ, அவரின் பெயரை சொல்லி நிதி வசூலிப்பது அரசியல்  கட்சிகளில் மட்டும் நடப்பது இல்லை.அமைச்சரின் பெயரைச் சொல்லி மாவட்ட அதிகாரிகள் ஒரு பள்ளிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். பள்ளிகளின்  சார்பில் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும். மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக ஒரு வாரமாக வியாபாரிகள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்து பணம் சேகரிக்கின்றனர். சில நேரங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து  பணத்தை தருகின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சருக்கு கேடயம், பட்டு சால்வை. சிக்கன், மட்டன் போன்ற உணவு வகைகள். அவர்களுடன் வரும்  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் என்று அனைத்து  செலவுகளும் ஆசிரியர்களின் தலையிலேயே விழுகிறது. அமைச்சர்களின்  பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைக்கும் அளவே கிடையாது.

பயிற்சி காலத்தில் சம்பளம் பிடிப்பு: வருவாய் துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பயிற்சிக்காக செல்வது வழக்கம். அந்த பயிற்சி காலமும்  பணிக்காலமாகவே கருதப்படும். ஆனால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நடத்தும் பயிற்சி, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்  நடத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி காலமாக கணக்கில் எடுத்து கொள்வது இல்லை