இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 21, 2018

1மற்றும் 9ம் வகுப்பிற்கு சி.டி வெளியீடு


1, 9–ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் பாடபுத்தகத்துக்கான சி.டி.யை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:–

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும்.

முதல்கட்டமாக, 1 மற்றும் 9–ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு, அதை அச்சிடும் பணிக்காக சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த சி.டி. தற்போது வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனரிடம் அந்த சி.டி. ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. புதிய பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்ற கருத்தை மத்திய அரசு கூறியது. ஆனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு 6 மாதக் காலத்திற்குள் பாடத்திட்ட மாற்றும் பணியை மேற்கொண்டு வரலாற்றை படைத்துள்ளது.

பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட உள்ளது. பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாக பிரித்து வைத்துள்ளோம்.

12–ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும், 10, 11–ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி 30 நிமிடமும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11–ம் வகுப்பில் ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண் என்பதால், கேள்விகளின் எண்ணிக்கையும் அதற்கு ஏற்றார் போல் குறைக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பிரிவில் 26 பாடமும், தொழிற்கல்வியில் 12 பாடமும், 1,6,9 வகுப்பிற்கு 14 பாடம் என சிறுபான்மை மொழி உள்பட மொத்தம் 174 பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. தொழிற்கல்வியில் உள்ள 12 பாடங்கள் என்பது மாணவர்கள் கல்வியை கற்ற உடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, February 20, 2018

TNPTF 19-2-18 மாநில செயற்குழு முடிவுகள்


10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கேள்விகள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும் குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 312 இடங்களில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படஉள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளிகளில் வைபை வசதி கிடைக்கும். மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் விபத்திற்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் என 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சலிங் மேற்கொள்ள உள்ளோம்.

தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். 10 வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்விற்கு கேள்விகள் குறைக்கப்பட்டு, தேர்வு நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

புதிய குழு

தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் அரசு பணியிடங்களில்  தேவையற்ற பணியிடங்களை  கண்டறிய   முன்னாள் முதன்மை செயலர் ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு தரலாம் என குழு ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் அரசுக்கு  அளிக்கும்.  தமிழக அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thiru.M.A.Siddique I.A.S.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு... இந்த குழு 31.07.2018 அன்று அரசிடம் அறிக்கை தரும்...


Monday, February 19, 2018

தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு அரசு நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 37,201 அரசு பள்ளிகளும், 8402 அரசு நிதி உதவி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோருக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் திறன் குறைபாடு உள்ளதாக சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது. குறிப்பாக தமிழ் பாடத்தை படிக்கவும், எழுதவும் தெரியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

மொழி இலக்கணம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாமல் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் சூழல் மாணவர்களிடம் காணப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியை சந்திப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புதிய செயல்வடிவ திட்ட பாடங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான செயல் திறன் பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் அடிப்படையை விரிவாக எடுத்துக் கூறி அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 100 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் தேர்வு மூலமாகவும் 40 மதிப்பெண்கள் கற்றல் திறன், பொது அறிவு மற்றும் தனித்திறமைகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

அதன்படி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் அரசு, அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குநரக உயரதிகாரிகள் குழுவினர் இம்மாதம் 27ம் தேதி ஆய்வு செய்ய உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

318 அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இலவச இணைய வசதி


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 318 அரசுப் பள்ளிகளுக்கு இலவச இணைய வசதி வழங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளிக் கல்வித்துறை, ஏசிடி ("அட்ரியா கன்வெர்ஜன்ஸ்') தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 252 அரசுப் பள்ளிகள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 66 பள்ளிகள் என மொத்தம் 318 பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் திறன் கொண்ட இலவச இணைய வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. மாதந்தோறும் 300 ஜிபி அளவு கொண்ட இணையவசதி வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ரெ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன.அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன. உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும்.

சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, February 17, 2018

கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு புத்தகம்


குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன. அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில், தலா 45 மதிப்பெண்களுக்கு, இத்தேர்வுநடக்கும். இதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்கொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.கோவை மாவட்டத்தில், கடந்த அக்., 5ம் தேதி, குறைதீர் கற்றல் தேர்வு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தது. இதில், 14 ஆயிரத்து 393 மாணவர்கள் பங்கேற்றனர்.மூன்று பாடங்களிலும், குறைவான மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பிரிட்ஜ் கோர்ஸ் மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென, பிரத்யேக பயிற்சி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணிகள் நடக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்பதாம் வகுப்புக்கு நடந்த, கற்றல் குறைதீர் தேர்வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு பயிற்சி புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை பள்ளிகளுக்கு அனுப்பி, வரும் வாரத்தில் இருந்து பயிற்சிகள் அளிக்கப்படும்' என்றனர்

கிராமப்புற மாணவர்களுக்கு சுற்றுலா திட்டம்


கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது. அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.மலைவாழ் மாணவர்கள்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையில், தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஆனாலும், தமிழக கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள், சுற்றுலா சார்ந்த விஷயங்களை அறியாதவர்களாக உள்ளனர். எனவே, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல, கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை திட்ட மிட்டுள்ளது.முக்கியத்துவம்இதற்காக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம், மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தால், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்திராத கிராமப்புற மாணவ - மாணவியர், அவற்றை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் அறிந்து கொள்வர். எனவே, 'சுற்றுலா துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும்வலியுறுத்தி உள்ளனர்

இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

இணையதளம் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம் செய்யும் வசதி, வரும் ஜூனில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத் கூறினார்.

அவசியம் இல்லை

தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:'ஓட்டர்ஸ் ஏரோநெட்' அப்ளிகேஷன் என்ற புதிய தொழில்நுட்ப வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த வசதி மூலம், இதுவரை, 22 மாநிலங்களின்வாக்காளர் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதன்பின், அந்த மாநிலங்களின்வாக்காளர் விபரங்கள் இணைக்கப்படும்.புதிதாக வாக்காளர்பட்டியலில், தங்கள் பெயரை இணைக்க விரும்புவோர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை, இணையதளம் வாயிலாக, இந்த அப்ளிகேஷனில் சென்று, மேற்கொள்ள முடியும்.
வேறு மாநிலங்களுக்கு செல்வோர், முகவரி மாற்றத்துக்காக தேர்தல்அலுவலகம் அல்லது ஓட்டுச் சாவடிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

'ஒன் டைம் பாஸ்வேர்டு'

இந்த அப்ளிகேஷனில் சென்று, வாக்காளர்கள், தங்கள் பெயர், முகவரி விபரங்களை அளித்து, மொபைல் போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' என்ற, ஓ.டி.பி., எண் வரும்.அதை, அப்ளிகேஷனில் டைப் செய்து சமர்ப்பித்தால், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும் அல்லது முகவரி மாற்றம் பதிவாகும்.
வரும் ஜூனில், நாடு முழுவதும் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கூறினார்.

Thursday, February 15, 2018

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி


வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.

Wednesday, February 14, 2018

சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு


காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் பொதுத்தேர்வும், அதை தொடர்ந்து, பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

வரும், 2018 - 19ம் கல்வியாண்டுக்கு நான்கு மாதங்களே உள்ளதால், கல்வித் துறை அதற்கேற்ப தயாராகி வருகிறது. தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக் குனர் (பணியாளர் தொகுதி) அலுவலகம், முன்னேற் பாடுகளை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே, 31 ம் தேதி ஓய்வு பெற உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டி யல் தயாரிப்பது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், (2016 மற்றும் 2017) ஆண்டுகளில் ஓய்வு பெற்றோர்; நடப்பு ஆண்டு ஓய்வு பெறுவோர், அதனால் பள்ளியில் ஏற்படும் காலி பணியிடம் குறித்த விபரங்களை, தனித்தனியே சேக ரித்து வருகின்றனர். இவ்விபரம், மாவட்ட அளவில் இருந்து, வரும், 16ம் தேதிக்குள் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள் ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 13, 2018

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விபத்து காப்பீடு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 37 ஆயிரத்து 201 அரசுப் பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவர்களும், 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவியர்களும் பயின்று வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகள் அனைவரும் விபத்து காப்பீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். எந்தெந்த சூழல்கள்: பள்ளி மாணவ-மாணவியர்கள் தங்களது பள்ளிக் கல்வி வாழ்க்கையில் பல்வேறு விபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது ஏற்படும் விபத்து, கல்விச் சுற்றுலா செல்லும் போது ஏற்படும் விபத்து, நாட்டு நலப் பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாரத சாரண-சாரணியர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் முகாம், பேரணிகளில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் விபத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்து, மின்கசிவு மற்றும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து, விஷ ஜந்துகளால் நிகழும் விபத்து, விடுமுறை நாள்களில் வெளியே செல்லும் போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து போன்றவற்றை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த விபத்துகளைச் சந்தித்து மரணமடையும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைவோருக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணத் தொகை அளிக்கப்படும். இந்தத் தொகையானது மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

10 வகுப்பு: நாளை முதல் 'ஹால் டிக்கெட்'


தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தத்கல் உட்பட, ஆன்லைனில் விண்ணப்பித்த, தனித்தேர்வர்களுக்கு, நாளை, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு குறித்த விபரத்தை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.