இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 01, 2017

தினமணி-கட்டுரை

மழைப்பருவ விடுமுறைதான் தீர்வு!

By முனைவர் ச.சுப்புரெத்தினம் 
-தினமணி

வழக்கமாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு மிகுதியான பயனைத் தரும் தென்மேற்குப் பருவமழை, அக்டோபரில் முடிந்தவுடனேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடுவது வழக்கமாகும். தமிழகத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தற்பொழுது தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில், மழை தொடர்பான அசம்பாவித நிகழ்வுகளில் கடந்த 8 நாள்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையினால் ஒரு பள்ளிக் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததால், விடுமுறை அறிவிப்புக் காரணமாக அப்பள்ளிக்கு வராததால், அங்கு படிக்கும் 29 சிறார்கள் உயிர் தப்பினர் என்று அண்மையில் வந்த ஊடகச் செய்தியால், பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை, கடலோர மாவட்டங்களில் அதிக மழையும், உள் மாவட்டங்களில் சற்றுக் குறைவான அளவில் மழையும் பெய்வது வழக்கமாகும். இவ்வாண்டும் அப்படித்தான் உள்ளது. தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணநடவடிக்கைகளைச் செய்து வருகிறது.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், விளை நிலங்களும், தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளும் பல இடங்களில் மோசமாகத் தொடங்கியுள்ளன.

பெற்றோருக்கு, மழைக் காலங்களில் சிறார்களைக் காலையிலேயே பள்ளிக்கு அனுப்பத் தயார்படுத்துவதில் உள்ள சிரமத்தைவிட, இன்று பள்ளி இயங்குமா? அல்லது பள்ளிக்கு விடுமுறையா? என்று அறிந்து கொள்வதில் உள்ள சிரமம்தான் மிகுதியாக உள்ளது. இதே சிரமம், பள்ளியை நிர்வகிப்பவர்களுக்கும் உண்டு.
பள்ளியின் கல்வியாண்டு என்பது பொதுவாக, ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலமாகும். இதில், விடுமுறை தொடங்குவதும் அல்லது விடுமுறை முடிவதும் தொடக்கக் கல்வி வகுப்புகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வகுப்புகள் என இவற்றைப் பொருத்துச் சில நாள்கள் வேறுபடுவதுண்டு.
ஓர் ஆண்டுக்கான, பள்ளிகளின் வேலை நாள்களும் 216 முதல் 230 நாள்கள் வரை இருக்கும். மீத நாள்கள், வார இறுதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை, பண்டிகை, தேசிய விடுமுறைகள் மற்றும் தேர்வு விடுமுறைகளுள் அடங்கும்.

பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு டிசம்பரில் நடந்து, அதன் பிறகு 7 முதல் 10 நாள்கள் வரை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்கள், டிசம்பர் மூன்றாவது வாரத்திற்குப் பின் ஏறத்தாழ இதே கால அளவு இருக்கும்.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழைக் காலம்தான், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் காலமாகும். இக்காலங்களில் சிறார்கள் பள்ளிக்குச் சென்று வருவதில் நிரம்பச் சிரமங்கள் உள்ளன. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளியை நடத்துவோர் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களோ, ஊடகங்களில் வெளியாகும் மழை பற்றிய செய்திகள், வானிலை ஆய்வு மைய அறிக்கைகள், ஆட்சியரின் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வானிலை மற்றும் மழைச் சூழல் ஆகிய இவற்றைக் கருத்தில் கொண்டே, மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிக்க வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படியே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இக்காலத்தில் வானிலை ஆய்வு என்பது, முற்காலத்தைவிடத் துல்லியமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சில வேளை இடத்திற்கு இடம் அல்லது நேரத்திற்கு நேரம் வானிலையில் மாற்றத்தைக் காண முடிகிறது.
முதல் நாள் மாலை அல்லது இரவில் பொழியும் மழையைக் கருத்தில் கொண்டு, அடுத்த நாளைக்குப் பள்ளி விடுமுறை என்று அறிவிக்கும் பொழுது, சில வேளை கணிப்புத் தவறி, அன்றைய தினம் முழுவதும் மழை பொழியாமல் இருப்பதுண்டு.
அவ்வாறே 'விடுமுறை' என்று அறிவிக்கப்படாத மறுநாள் காலையில் கனமழை பெய்யத் தொடங்குவதுண்டு. இதனால், விடுமுறை விடப்படாத அன்றைய தினத்தையும், விடுமுறை விடாத நிர்வாகத்தையும் எண்ணி பெற்றோரும் மாணவர்களும் வசைபாட வேண்டியிருக்கிறது.

பள்ளிக்குப் புறப்படும் நேரங்களில் வெளியாகும், பள்ளி விடுமுறை பற்றிய அறிவிப்புகளால் பலருக்குப் பயன் ஏற்படுவதில்லை. குழந்தைகள் பள்ளிகளைச் சென்று சேர்ந்தபின் வெளியிடப்படும் அறிவிப்புகளும் அத்தகையனவே.
தனியார் வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்களும், தாமே பள்ளிகளுக்குக் கொண்டுவந்து விட்டுச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களின் பிள்ளைகளும் இத்தகைய சிரமங்களையே அடைகின்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் எனப் பலதரப்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றின், பள்ளி தொடங்கும் நேரமும் வேறுபடுகின்றன.
பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளின் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட்ட நிலையில், வகுப்புகளை நடத்துவதா? வகுப்புகளை நடத்தினால் ஒரு வேளை, பெற்றோரின் கண்டனத்திற்கும், மாவட்ட நிர்வாகம் விதிக்க நேரும் அபராத நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படுவோமா? என்ற அச்சமும் பள்ளியைநடத்துபவர்களை ஆட்டுவிக்கிறது.
மழைக் காலங்களில் அரசின் இலவசப் பேருந்து அட்டையைப் பயன்படுத்திப் பேருந்துகளில் பயணித்துப் பள்ளி வந்து சேரும் மாணவர்களின் இன்னல்கள் சொல்லி மாளாது.
மழையால் பேருந்து சேவை குறைப்பு, கையில் குடையுடன் அல்லது மழைக் கோட்டுடன் பேருந்தினுள் துன்புற்றுப் பயணித்தல், தரமான அரசு மிதிவண்டிகள் இருந்தாலும், தரமற்ற சாலைகளில் பயணிப்பது என்பன போன்றவை, மழைக் காலங்களில் பள்ளி மாணாக்கர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

இந்தச் சிரமங்களையெல்லாம் கவனத்திற் கொள்ளும் சில பள்ளி நிர்வாகங்கள், 'ஊடகங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதற்கொப்ப நீங்கள் நாளை பள்ளி வரவேண்டியதில்லை' என முதல் நாளே கூறி விடுகின்றன. ஆனால், வெவ்வேறு ஊடகங்களிலும், வெவ்வேறு மாதிரியாகச் சில வேளை வெளியிடப்படும் அறிவிப்புகளால், மாணவர்களும் பெற்றோரும் குழம்பிப் போய் விடுகின்றனர்.
இவை ஒருபுறமென்றால், இவ்வாறு மழைக் காலங்களில் அவ்வப்பொழுது விடப்படும் விடுமுறை நாள்களைப் பின்னாளில் பள்ளி வகுப்புகளை நடத்திச் சரிகட்ட வேண்டியுள்ளது இன்னொரு சவாலாக உள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பது தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரையே. இதில், தொடர்மழை அல்லது கன மழை என்பது 20 நாள்களுக்கு மட்டுமே. ஆதலால், இந்த 20 நாள்களைப் பள்ளிகளுக்கு மழைப்பருவத் தொடர் விடுமுறையாக அறிவித்து அமல்படுத்தினால், பெரும்பாலான இடர்ப்பாடுகளைத் தவிர்க்க முடியும்.
அக்டோபர் நான்காவது வாரம் தொடங்கி நவம்பர் இரண்டாவது வாரம் முடிய 21 நாள்களை மழைப்பருவ விடுமுறையாக மாற்றியமைக்கலாம். இந்நாள்களுக்கு முந்தய அல்லது பிந்தய சில நாள்களில் பெய்யும் மழையை விடுமுறை என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. 21 நாள்களைச் சரிகட்டுவது எளிதானது.
இந்த 21 நாள்களுள் 3 சனி, 3 ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆக 6 நாள்கள், தீபாவளி விடுமுறை நாள் 1 என 7 நாள்கள் போக, எஞ்சியுள்ளவை 14 நாள்கள். இந்த 14 நாள்களை, காலாண்டுத் தேர்வு விடுமுறையாகச் செப்டம்பரில் விடப்படும் நாள்களுள் 6 நாள்களையும், பின்னர் விடப்படும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் 6 நாள்களையும் குறைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். மீதமுள்ள 2 நாள்களைச் சனிக்கிழமைகளில் சரிகட்டிக் கொள்ளலாம்.
தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில், இருபருவ விடுமுறை நடைமுறையில் உள்ளது. பள்ளிகளைப் பொருத்தவரை முப்பருவக் கல்விமுறை இருந்தாலும், மழைப்பருவ மற்றும் கோடைப் பருவ விடுமுறை என இருபருவ விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பள்ளி மாணவர்கள் தற்பொழுது எதிர்கொள்ளும் பல இடர்ப்பாடுகள் தீர்ந்துவிடும்.
இத்தகைய இருபருவ விடுமுறை அமல்படுத்தப்பட்டால், மழைக்காலங்களில் பள்ளிச் சிறார்களுக்குத் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
போக்குவரத்துப் பிரச்னைகள் குறையும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், புயல் பாதுகாப்பு மையங்களும், பல்நோக்கு மையங்களும் உள்ளன. இவற்றிற்கப்பாலும் அரசுப் பள்ளிகளும் தேவைப்படுகின்றன.

பள்ளிகள் விடுமுறையில் இருந்தால் மாவட்ட நிர்வாகம் இந்நோக்கத்திற்காக இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் சிரமம் இருக்காது.
மழைப்பருவத் தொடர் விடுமுறை அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பயிலும் சுமார் ஒன்றரைக் கோடி பள்ளி மாணாக்கரின் மழைக்கால இன்னல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

நீட் 2018 நுழைவுத்தேர்வு ஓரிரு நாளில் அறிவிக்கை வெளியீடு


இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று சொல்லியிருந்த நிலையில், இந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு தமிழகத்திற்கு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நவம்பர் 13ம் தேதி காணொலி காட்சி மூலம் 25 மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அரசின் இந்த திட்டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எந்த அளவு பயன்பெற்றுள்ளனர் என்பது 2018 நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னரே தெரியவரும். இந்நிலையில், நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ள தமிழக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

50வது புயல்ச் சின்னம் சாகர்

50வது புயல் சின்னம் சாகர்

கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ள புயலுக்கு 'ஒக்கி' எனப் பெயரிடப்பட்ட நிலையில், இதற்கு அடுத்து உருவாக உள்ள புயல் சின்னத்துக்கு 'சாகர்' என பெயரிடப்பட்டுள்ளது. இது புயல்களின் பெயர் வரிசையில் இடம்பெறும் 50 - ஆவது பெயராகும்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலுக்கு 'ஒக்கி' என பெயரிடப்பட்டது. இந்த பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் 'கண்' என்று அர்த்தம். இந்த ஒக்கி புயல்களின் பெயர் வரிசையில் ஒக்கி 49 -ஆவது பெயராகும். இதையடுத்து உருவாகும் 50 -ஆவது புயலுக்கு 'சாகர்' என இந்தியா பெயர் வழங்கியுள்ளது. ஹிந்தி மொழியில் சாகர் என்றால் கடல் என்று அர்த்தம்.
பெயர் சூட்டப்படுவது எப்படி?: உலக அளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்களின் தொடர்பு வசதிக்காகவும், எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு உதவியாகவும் புயலுக்கு பெயர் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறையை முதன்முதலில் ஆஸ்திரேலிய நாட்டவர்தான் உருவாக்கினர். 1950 -ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் வைக்கத் தொடங்கியது.
கடலில் உருவாகும் புயல்களுக்கு, அந்தந்த கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் வைக்கின்றனர்.
அவ்வகையில், 2004 -இல் இந்த நாடுகள் இணைந்து 64 பெயர்களைத் தேர்வு செய்தன. இந்நாடுகளில் உருவாகும் புயல்களுக்கு பட்டியலின்படி, சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகின்றன

கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்த தடை ஐகோர்ட்டு உத்தரவு


திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் டிசம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் 45 நாட்களுக்கு, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக இந்த கல்லூரி மைதானத்தில் பொருட்காட்சி திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த கல்லூரி மைதானத்தில், பொருட்காட்சி நடத்துவதற்கு தடை கேட்டு, ஐகோர்ட்டில் அந்த கல்லூரியில் எம்.காம். படிக்கும் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி தொடர்பான விழா மட்டுமே அங்கு நடைபெறவேண்டும். கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அதனால், அரசு நடத்தும் இந்த பொருட்காட்சிக்கு தடை விதிக்க போகிறேன்’ என்று கருத்து தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி இந்த கல்லூரி மைதானத்தில் நடத்தினாலும், இதனால் மாணவர்களின் கல்விக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த பொருட்காட்சி நடைபெறும். பகல் நேரத்தில் எதுவும் நடைபெறாது. பெரும் தொகை செலவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார்’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால், இந்த ஒரு முறை மட்டும், கல்லூரி மைதானத்தில் பொருட் காட்சி நடத்த அரசுக்கு அனுமதி வழங்குகிறேன். அதேநேரம், கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு சாதனை விளக்க பொருட்காட்சியினால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. மாலை 6 மணிக்கு முன்பாக ஒலிபெருக்கி எதுவும் பயன்படுத்தக்கூடாது. பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தனி பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இனி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிலையங்களில் நடத்த தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

EMIS குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்


சிறப்பு தற்செயல் விடுப்பு


Monday, November 27, 2017

இன்றைய தினமணியில் என் வரிகள் நன்றி:தினமணி

வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை


வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது என்றும், முதற்கட்டமாக 2006-2007ம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் இது நடைமுறைக்கு வரும், 2007-2008ம் ஆண்டில் இரண்டாம் வகுப்புக்கும் அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் தமிழ் கட்டாயமாக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பகுதி ஒன்றில் தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும். பகுதி இரண்டில் ஆங்கிலம், பகுதி 3ல் மற்ற பாடங்கள் பகுதி நான்கில் விருப்ப மொழி படிக்கலாம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழை கட்டாய பாடமாக எழுத முடியாது என்றும் அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி காரணமாக வேறு மாநிங்களுக்கு சென்று பின்னர் திரும்ப தமிழகம் வரும்ேபாது அவர்களின் குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்தது.

இதை அடிப்படையாக கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசுக்கு கடிதம் எழுதினார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்றுக் கொண்ட அரசு, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்களுக்கு சென்று பின்னர் தமிழகத்துக்கு திரும்ப இடம் பெயர்ந்து வந்தால் அவர்களின் குழந்தைகள், தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் சேரும் போது தமிழை கட்டாய பாடமாக படிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு


தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்தி: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரி 29 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கால அட்டவணை: 29-1-2018 தமிழ், 30-1-2018 ஆங்கிலம், 31-1-2018 கணிதம், 1-2-2018 அறிவியல், 2-2-2018 சமூக அறிவியல்.

பள்ளிகளில் புகார் பெட்டி


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன.

அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை. உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்க வேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில் வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு


நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நவ., 20ல் வெளியிட்டார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், tnscert.org என்ற இணையதளத்தில், நவ., 21ல், பாடத்திட்ட வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், ஒரு வாரம் வரை கருத்து கூறலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை முடியும் நிலையில், கருத்து கூறுவதற்கு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி, நமது நாளிதழில், நேற்று வெளியானது.

இது தொடர்பாக, அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின், பாடத்திட்டத்துக்கான கருத்து கூற, இன்று முதல், ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்படும் என, அறிவித்தார். இதன்படி, டிச., 4 வரை, பாடத்திட்ட கருத்துக்களை பெற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு


2015-2016-ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளது. நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 195 பேருக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற 25kg,20kg குத்துச்சண்டை போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மாணவிகள் மிருதிபாஷினி,சரண்யா வுக்கு வாழ்த்துகள் -ஊ.ஒ.து.பள்ளி,பூலுவபட்டி, திருப்பூர் வடக்கு