Wednesday, March 08, 2017
தபால் துறை நடத்தும் வங்கி சேவை ஏப்ரல் 1ந் தேதி தொடங்குகிறது
தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனை பெறுவதற்கு வங்கிக் கணக்கு எண் அவசியமாகிவிட்டது. அதோடு பண மதிப்பு குறைப்பு நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்க்கையில் வங்கிகளின் அவசியம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்கு சில வங்கிகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகளில் டெபாசிட் தொகையில் குறைந்தபட்ச தொகை அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தபால்துறை
இந்த நிலையில், தபால் துறையும் வங்கி சேவையில் ஈடுபட இருக்கிறது. இதுகுறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வங்கி வர்த்தகத்தில் இணைவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஏற்கனவே தபால் துறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வங்கி கணக்குகள் பெறப்பட்டால்தான் வங்கி வர்த்தகத்தை தொடங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.
எனவே, மக்களிடம் இருந்து கணக்குகளைப் பெறுவதற்கு தபால்துறை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அரசு அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று, விண்ணப்பங்களைக் கொடுத்து கணக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல்
தபால் துறையின் வங்கி சேவைக்கு, “போஸ்டல் பேங்க்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையை வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சேர்வதற்கு ஆதார் அட்டை போன்ற ஏதாவது அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுத்தால் போதும். குறைந்தபட்ச அளவாக ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும். அதை விண்ணப்பத்துடன் தரவேண்டும்.
ஏ.டி.எம். அட்டை
இதில் சேர்பவர்களுக்கு ஏ.டி.எம். அட்டை, ரகசிய எண், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றை தபால்துறை வழங்கும். தபால்துறை வங்கி வழங்கும் ஏ.டி.எம். அட்டை மூலம் வேறு எந்த வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் பணம் எடுக்க முடியும். இதற்கு 4 ஆண்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது. அதோடு ‘நெட் பாங்கிங்’ வசதியும் செய்து தரப்படும்.
மற்ற வங்கியில் நடக்கும் பணப்பரிமாற்றம் போலவே இந்தியா முழுவதிலும் “போஸ்டல் பேங்க்” மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். தபால் அலுவலகத்தில் ‘போஸ்டல் பேங்க்’க்காக தனி இடம் அளிக்கப்பட்டு இருக்கும். தபால்துறையின் மற்ற சேவைகளும் தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1 ல் துவங்குகிறது.பிளஸ் தேர்வு மார்ச் 2ல் துவங்கி மார்ச் 31 வரை நடக்கிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கி மார்ச் 30 வரை நடக்கிறது. பிளஸ் தேர்வு முடிவு மே 12, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19 ல் வெளியாகிறது.இதனால் இரு வகுப்புகளுக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை ஒரே சமயத்தில் துவங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏப்.,1 ல் துவங்கி ஏப்., 15 க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், விடைத்தாள் அதிகமாக இருந்தால் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், தற்போது குறித்த நாட்களுக்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
1,111 ஆசிரியர் நியமனம் : நாளை டி.ஆர்.பி., பட்டியல்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே டெட் முடித்தவர்கள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என, கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நாளை வெளியாகிறது.
அதை, http:/www.trb.tn.nic.in/ என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' நாளை காலை, 10:00 மணி முதல், மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது; மறுவாய்ப்பு இனி தரப்படாது.
பங்களிப்பு ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி
தொடக்க கல்வித் துறையில் இன்று திடீர் கலந்தாய்வு
தொடக்க கல்வித்துறையில் இன்று (மார்ச் 9) அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2016 ஆகஸ்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பதவி உயர்வு, ஓய்வு போன்ற காரணங்களால் ஏற்படும் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
அரசியல் சூழ்நிலையால் கலந்தாய்வு நடத்தவில்லை. கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவசர, அவசரமாக கலந்தாய்வு நடத்த தொடக்க கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது. அதில், '2016 ஆகஸ்ட் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின் ஏற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை வெளிப்படை கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இதனால் ஏற்படும் காலியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனை 2016 ஜன., 1 க்கான ஒன்றிய சீனியாரிட்டியை கடை பிடிக்க வேண்டும். ஏற்கனவே நீதிமன்றத்தால் தடையாணை பெற்ற பணியிடங்களை நிரப்பக்கூடாது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர்களை கண்டிப்பாக மாறுதல் செய்யக்கூடாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் 2017 ஜன., ல் சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tuesday, March 07, 2017
பழைய ஓய்வூதியத் திட்டம்: ஆய்வு குழுவின் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
பிப். 27-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு
மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வின் போது தமிழ் மொழி பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு முன் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன் பின்னர், விண்ணப்பித்த மாணவர்களின் மனுக்கள் குறித்து அரசே உரிய முடிவு எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை, தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தால், மொழிச் சிறுபான்மைப் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழி மாணவர்களும் பொதுத் தேர்வுகளின் போது, கட்டாயம் தமிழ் மொழிப் பாடத்தேர்வை எழுத வேண்டிய சூழல் உருவாகியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து, கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இரண்டு பள்ளிகள் சார்பில் தங்களது பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பாடத் தேர்வு எழுத விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: புதன்கிழமை (மார்ச் 8) நடைபெறும் பொதுத் தேர்வில், தமிழ் மொழித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டுமே பிப்ரவரி 27-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு பொருந்தும்.
தனியாகவோ அல்லது பள்ளிகள் மூலமாகவோ விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இந்த இடைக்கால உத்தரவு பொருந்தும். பிப்ரவரி 27-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பது அல்லது நிராகரிப்பது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் தகுதி பட்டியல் வரும் 10ம்தேதி இணையதளத்தில் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் வரும் 10ம்தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 2014ல் நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ளவர்களை கொண்டு, பள்ளி கல்வித் துறையில் 286 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 623 பின்னடைவு பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய இணையதளத்தில் வரும் 10ம்தேதி வெளியிடப்பட உள்ளது. பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரங்களை பதிந்து தெரிந்து கொள்ளலாம். பதிவெண் மறந்துவிட்டால் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து தெரிந்து கொள்ளலாம்.
தகுதியானவர்கள் தங்களின் ஒரு சில விவரங்களை திருத்தவும், மேம்படுத்தவும் வேண்டும் என்றால், ஆன்லைனில் மேற்கொள்ளலாம். தங்களின் அசல் ஆவணங்களை கொண்டு விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த விவரங்களை வரும் 10ம்தேதி காலை 10மணி முதல் 20ம்தேதி இரவு 10மணிக்குள் இணையதளத்தில் சரிபார்த்து திருத்தம் தேவை எனில், இணையதளம் மூலம் மட்டுமே திருத்தம் செய்து கொள்ள முடியும். நேரடியாகவோ, எழுத்து மூலமோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அரசு பள்ளிகளில் யோகா : அமைச்சர் ஆலோசனை
அரசு பள்ளிகளில், யோகா வகுப்பு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில், ஆணை பிறப்பிக்கப்படும்' என்றார். அதன்படி, பள்ளி மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த, அரசு சார்பில், அவர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதி : டிஎன்பிஎஸ்சி
ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக 3 தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணிக்கான தேர்வு மே 20ம் தேதிக்கு மாற்றியும், செயல் அலுவலர் நிலை - 3 தேர்வு ஜூன் 10ம் தேதிக்கும், செயல் அலுவலர் நிலை - 8க்கான தேர்வு ஜூன் 11ம் தேதிக்கும் மாற்றி டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Monday, March 06, 2017
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது. சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புசெல்வன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் - உதயசந்திரன்
வணிகவரித்துறை இணை ஆணையர் - மகேஸ்வரி
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் - சுனில் பலிவால்
தமிழக சிமென்ட் கழக எம்.டி - சபீதா
எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் - விக்ரம் கபூர்
சிறுபான்மையினர் நல முதன்மைச் செயலாளர் - வள்ளலார்
தொழில்துறை முதன்மை செயலாளர் - அதுல்ய மிஸ்ரா
சுற்றுலாத்துறை ஆணையர் - பழனிக்குமார்
போக்குவரத்துத்துறை ஆணையர் - தயானந்த் கட்டாரியா
சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலாளர் - முகமது நசிமுதீன்
கனிமத்துறை மேலாண்மை இயக்குநர் - வெங்கடேசன்
பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் - கஜலட்சுமி
உப்புக் கழக மேலாண்மை இயக்குநர் - சத்யபிரதா சாஹு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மேலாண்மை இயக்குநர் - காமராஜ்
மேலும், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஸ்ரீதர் ஐ.பி.எஸ், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த செந்தாமரைக்கண்ணனுக்கு பதவி ஏதும் ஒதுக்கப்படவில்லை. சாரங்கன் சென்னை (வடக்கு) கூடுதல் ஆணையராகியுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்ட கல்லூரி நுழைவுத் தேர்வு
சட்ட கல்லூரி நுழைவுத் தேர்வு
தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’ என, தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி உட்பட, பெரும்பாலான தேசிய சட்டப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, ’சி.எல்.ஏ.டி.,’ என்ற பொது சட்ட நுழைவுத் தேர்வு மூலம் நடக்கிறது. அதன்படி, 2017ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை, பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள சாணக்கியா தேசிய சட்டப் பல்கலை நடத்துகிறது.
சட்டப் பள்ளி, பல்கலையில் சேர விரும்புவோர், சி.எல்.ஏ.டி., 2017 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சேர்க்கை விதிகள், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, www.clat.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாள். நுழைவுத் தேர்வு, மே 14ல், இணையம் வழியாக, திருச்சி, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Sunday, March 05, 2017
டிஇடி விண்ணப்பம் இன்று வினியோகம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(டிஇடி) விண்ணப்பங்கள் இன்று முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கிடைக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடக்கும் என்று கடந்த வாரம் 22ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதையடுத்து, விண்ணப்பங்கள் வினியோகிக்கும் தேதி, குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, விண்ணப்பங்கள் இன்று முதல் 22ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23ம் தேதி மாலை 5.00 மணி வரை பெறப்படும். எழுத்து தேர்வுகள் தாள் ஒன்று ஏப்ரல் 29ம் தேதியும், தாள் 2, 30ம் தேதியும் நடக்கும். இது குறித்த கூடுதல் விவரம் வேண்டுவோர் www.trb.tn.nic.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் இன்று காலை 9 மணி முதல் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ள மேனிலைப் பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்கள் சிரமம் இன்றி பட்டதாரிகள் பெற்றுக் கொள்ள வசதியாக ஒரு மையத்தில் 6 கவுன்ட்டர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.
டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்
ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.
தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.