இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 25, 2016

அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை


வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணபரிவர்த்தனை செய்து கொள்ளுமாறு வங்கி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு, 10ம் தேதி ஆயுதபூஜை, 11ம் தேதி விஜயதசமி, 12ம் தேதி முகரம் பண்டிகை என தொடர்ந்து ஐந்து நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கும் மேற்கண்ட ஐந்து நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.

spoken English material

Click below

https://app.box.com/s/4e7hou67h5h5pujc94bdyycjl3mj12t4

Saturday, September 24, 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்


``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.

ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது.

2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

டெங்கு, சிக் குன் குனியாவை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை


பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

l மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாணவர்கள், காய்ச்சி வடி கட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்


மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்ட கல்வித் துறை வழங்கவில்லை.

ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

மத்திய அரசு பள்ளிகளில் 2,000 ஆசிரியர் இடம் காலி : தமிழக பட்டதாரிகளுக்கு வாய்ப்பு


மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில், 2,072 காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சக நேரடி கட்டுப்பாட்டில், 591 இடங்களில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு, மாணவ, மாணவியர், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தங்கி படிக்கலாம். தமிழகத்தில், இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில், 2,072 ஆசிரியர் உள்ளிட்ட, பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் அறிவிப்பை, மத்திய அரசு அமைப்பான, நவோதயா சமிதி வெளியிட்டு உள்ளது. இப்பணியில் சேர, பட்டதாரி ஆசிரியர்கள், பட்டப்படிப்புடன், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஆங்கில மொழிப் புலமையுடன், ஹிந்தி அல்லது ஏதாவது ஒரு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினிகளை இயக்க, அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும். பணிக்கான எழுத்துத்தேர்வு, நவ., அல்லது டிசம்பரில் நடத்தப்படும்; தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, www.nvshq.org மற்றும் www.mecbsegov.in ஆகிய இணையதளங்களில், செப்., 10ல் துவங்கியது. அக்., 9, நள்ளிரவு, 11:59 வரை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், தகுதியுள்ள பட்டதாரிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். காலி இடங்கள் விபரம் : இரண்டு உதவி கமிஷனர்கள், 40 பள்ளி முதல்வர்கள், 880 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 660 பட்டதாரி ஆசிரியர்கள், கலை, உடற்பயிற்சி போன்ற மற்ற துறைகளில், 255 ஆசிரியர்கள், தமிழில் ஒரு ஆசிரியர் உட்பட, மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு, 235 ஆசிரியர்கள் என, 2,072 காலியிடங்கள் உள்ளன.

Friday, September 23, 2016

விழா முன்பணம் பெறுவதற்கான படிவம்

Click below

https://app.box.com/s/n24yh6msdzd2dw2mo62us13m75wvihhy

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்


மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் 3 வகை ஓட்டுப்பெட்டி


உள்ளாட்சி தேர்தலில், மூன்று வகையான ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஊரக பகுதிகளில் ஓட்டுப் பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் கோத்ரெஜ், டான்சி (நடுத்தரம்), டான்சி (சிறப்பு) ஆகிய, மூன்று வகையான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கொள்ளளவை அறிந்து ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப் பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரெஜ் பெட்டி, ஐந்து வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 500 வரையும்; 6 முதல், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 300 வரையும் கொள்ளும். டான்சி (நடுத்தரம்) பெட்டி, ஐந்து வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 1,200 வரையும்; 6 முதல், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 700 வரையும், 11 முதல், 15 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள் 400 வரையும் கொள்ளும். 

டான்சி (சிறப்பு) பெட்டியில், 10 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 1,600 வரையும்; 11 முதல், 20 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 900 வரையும்; 21 முதல், 25 வேட்பாளர்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், 650 வரையும் கொள்ளும். மேலும், ஒரே பெட்டிக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு, ஒன்றிய வார்டு, ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் என, நான்கு ஓட்டுச்சீட்டுகள் போடப்படும். அதன்படி ஓட்டுப் பெட்டிகளை கணக்கிட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


தமிழகத்தில் 50 இடங்களில் கம்பியில்லாத இணைய வசதி (வைஃபை) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அரசு சேவைகளை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பெறுவதற்கான புதிய திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் களில் வைஃபை எனப்படும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலின்போது, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம் ஏற்படுத்தி கட்டணமில்லாத இணைய வசதி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு இணைய வசதி: மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ரூ.10 கோடியில் நிறுவப்படும் என்றும் இந்தச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அம்மா இ-சேவை: தமிழக அரசின் சேவைகளை செல்லிடப்பேசி செயலியில் பெறும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 25 முக்கிய சேவைகள் அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எல்கோ-சிறப்பு மண்டலம்: சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிறுவியுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.16 ஆயிரத்து 536 கோடி ஆகும். இது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும்.

சிறு-குறு தொழில்முனைவோர் தகவல் தொழில் நுட்பவியல்-அது சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க வழி செய்யப்படும். அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.80 கோடியில் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Thursday, September 22, 2016

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு


உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர்.

சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட் அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்


உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு:

உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும். மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மழைக்காலம்: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மழைக் காலங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறைகளை யாரும் பயன்படுத்தாத வகையில் பூட்டி வைக்க வேண்டும். பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, கசிவு ஏதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கோளாறுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர் தேங்கக் கூடிய பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தால் அவற்றை முறையாக மூடி வைக்க வேண்டும்.

மாணவர்கள் விடுமுறை நாள்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஏரிகளில் உடைப்பு ஏற்படும் நேரங்களில் வேடிக்கை பார்க்கச் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்க வேண்டும். வெள்ளப்பெருக்கு சமயங்களில் ஆற்றைக் கடக்கக் கூடாது. பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்து, அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடக் கூடாது, இடி-மின்னல் நேரங்களில் மரத்தின் அடியில் ஒதுங்கக் கூடாது. சாலைகளில் மழைநீர் கால்வாய் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.

ஆசிரியர்கள் யாரும் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது, பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணி, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.