இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 12, 2016

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி


அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை : அரசாணை மட்டும் உண்டு


சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 42 ஆயிரத்து, 423 அமைப்பாளர்; 42 ஆயிரத்து , 855 சமையலர்; ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 130 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு அமைப்பாளர் இரண்டுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்கிறார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு அமைப்பாளர், ஏழு மையங்களை கவனிக்கிறார். பல மையங்களில், ஒரு சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே உள்ளனர்.

கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு தினமும் கூடுதல் படியாக, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதம் வழங்க வேண்டும். இதற்கான அரசாணை இருந்தும் பல ஒன்றியங்களில் வழங்கவில்லை. சிவகங்கை நகராட்சியில், பொங்கல் போனஸ் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ' எங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளும் பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் வேளை பளுவால் எங்கள் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. தனியாக துறை அதிகாரிகளை நியமித்தால் தான் எங்கள் பிரச்னை தீரும்' என்றார்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது.

14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்

ஊழியர்களின் பிஎஃப் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.6% ஆக குறைய வாய்ப்பு..!


நான்கு கோடி ஊழியர்களின் பிஎஃப் கணக்கை வைத்துள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை 8.6 சதவீதமாக இந்த ஆண்டு குறைக்க நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து முடிவு செய்துள்ளது.

   
2015-16 நிதி ஆண்டில் 8.8 சதவீதம்
ஊழியர்கள் வைப்பு நிதிக்கான வட்டியாக 8.7 சதவீதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும் ஓய்வூதியக் குழுவின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 2015-16 ஆண்டு வரையில் 8.8 சதவீதம் அளித்து வருகிறது.
   
நிதி அமைச்சகம் - தொழிலாளர் அமைச்சகம்
நிதி அமைச்சகம் தொழிலாளர் அமைச்சகத்திற்கு ஊழியர்கள் வைப்பு நிதிக்கான வட்டியைச் சிறு சேமிப்பு திட்டங்கள் போன்று குறைக்குமாறு அழுத்தம் தெரிவித்து வருகிறது. இது குறித்து இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை பெற்று நடப்பு நிதி ஆண்டு முதல் 8.6 சதவீதம் மட்டுமே அளிக்க இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

   
முடிவு இது வரை எடுக்கவில்லை
மேலும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நடப்பு ஆண்டிற்கான எந்த முடிவையும் இது வரை எடுக்கவில்லை என்றும், மத்திய அரசின் அறங்காவலர்கள் குழுவே இது பற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்த வட்டி விகிதம் வருமான திட்ட அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
   
நிதி அமைச்சகத்தின் சம்மதம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை அளிக்க நிதி அமைச்சகத்தின் சம்மதம் கண்டிப்பாகத் தேவை அதேசமயம் மத்திய அரசு அதன் வருமானத்தில் இருந்தது அதிகம் அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

   
தொழிற்சங்கங்கள்
தொழிற்சங்கங்கள் நிதி அமைச்சகம் நிச்சயமாக இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது, இது ஊழியர்களின் பணம், அவர்கள் பணத்தை முதலீடு செய்து லாபம் அளிக்கக்கூடியது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
   
கடந்த நிதி ஆண்டுகளில்
சென்ற நிதி ஆண்டின் போது முதலில் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை 8.8 சதவீதமாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்த போது 8.7 சதவீதத்திற்கே ஒப்புதல் அளித்தது. பின்னர் 8.8 சதவீதம் அளிக்க ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
2013-2014 மற்றும் 2014-2015 நிதி ஆண்டுகளில் 8.75 சதவீதமும், 2012 முதல் 2013 வரையிலான நிதி ஆண்டில் 8.5 சதவீதமும், 2011-2012 நிதி ஆண்டில் 8.25 சதவீதம் வட்டி விகிதமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 11, 2016

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு


ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள், http://mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை, nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம். புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது. இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது. 'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.-

தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ


தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை வெளியிடுகிறது.தமிழகத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளை விட, தனியார் தொடக்கப் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலும், ஆங்கில வழியிலேயே பாடம் கற்றுத் தரப்படுவதால், ஆங்கில வழி மாணவர்களுக்கு, தமிழில் பேசும் போதும், எழுதும் போதும், பிழை ஏற்படுகிறது.

அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், இதே போன்று உச்சரிப்பு பிழைகள் ஏற்படுகின்றன. தேர்வுகளில், சரியான விடை எழுதினாலும், எழுத்துப் பிழைகளால், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ் எழுத்து உச்சரிப்பு பாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போனடிக் முறையில், இந்த பாடல்களுக்கு, வீடியோ படங்கள் வெளியிடப்பட உள்ளன

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

'புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்தஷீலா நாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

வழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள் உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

புதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாக குறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று வித பணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, September 10, 2016

வாக்காளர் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இணைய தளத்திலும் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அதாவது 1.1.1998ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும்,  ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் ‘‘8ஏ’’ யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் வாக்காளர் பதிவு அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இன்று மற்றும் வருகிற 25ம் தேதி ஆகிய  (ஞாயிற்றுக்கிழமை)  நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பிக்கவும் செய்யலாம்.
மேலும், பொதுமக்கள் இணையதளம் (www.elections.tn.gov.in) மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டும், இன்று மற்றும் 25ம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சிறப்பு சுருக்க திருத்த  வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை


இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் பழத்தோட்டம்: தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு

ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.

பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க கோரிக்கை

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு,
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள்,
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக்
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும்.

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட,
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 09, 2016

காலாண்டு தேர்வு தேதி மாற்றம்


தமிழகம் முழுவதும், கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக, 14ம் தேதி, சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அதனால், காலாண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு, செப்., 12ல் நடக்கவிருந்த ஆங்கிலம் இரண்டாம் தாள், செப்., 20க்கும், 14ம் தேதி நடக்கவிருந்த வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள், 22ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்புக்கு, செப்., 15ல் ஆங்கிலம் முதல் தாள்; 16ல் ஆங்கிலம் இரண்டாம் தாள்; 19ல் கணிதம்; 21ல் அறிவியல்; 22ல் விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடத் தேர்வுகள், வழக்கமான தேதிகளில் நடத்தப்படுகின்றன.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்


'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.

பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது.

எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?


'வாட்ஸ் ஆப்' வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பயன்படுத்தப் போவதாக, அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும், 'பேஸ்புக்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதனால், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோர், தங்களது அந்தரங்க விஷயங்கள், பேஸ்புக்கில் பகிரப்படுமோ என கவலை அடைந்துள்ளனர்.

உலகில், 'வாட்ஸ் ஆப்' செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதை, சில ஆண்டுகளுக்கு முன், சமூக வலைத்தள நிறுவனமான, 'பேஸ்புக்' வாங்கியது; தற்போது, திடீரென ஒரு அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள், பேஸ்புக்கையும் பயன்படுத்துபவராக இருந்தால், அவர்களது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட விபரங்கள், பேஸ்புக்குடன் பகிரப்படும்' என்பதே அது.

அதனால், தாங்கள் அனுப்பும் தகவல்கள், படம், வீடியோக்கள் கசிந்து விடுமோ என, 'நெட்டிசன்'கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுபோன்றவர்கள், வாட்ஸ் ஆப்பில் உள்ள, 'செட்டிங்ஸ்' வழியாக, 'அக்கவுன்ட்' பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றதும், 'ஷேர் மை அக்கவுன்ட்' என்ற வாசகமும், அதற்கு நேர் எதிரெ சிறிய பெட்டியும் இருக்கும். அதில், 'டிக்' செய்யப்பட்டு இருக்கும்; அந்த, 'டிக்'ஐ நீக்கியதும், வேறோர் திரை தோன்றும்.

அதில், 'உங்கள் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமா' என கேட்கப்பட்டு இருக்கும்; அதற்கு, 'கேன்சல், டோன்ட் ஷேர்' என, இரு, 'சாய்ஸ்' தரப்பட்டுள்ளது. 'டோன்ட் ஷேர்' எனப்படும், 'பகிர வேண்டாம்' என்ற வார்த்தையை, 'செலக்ட்' செய்தால் போதும்; உங்கள் விபரங்கள், பேஸ்புக்குடன் பரிமாறப்படாது