இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 22, 2016

'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு


தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நிலையில் பத்தாண்டுகள் பணிபுரிந்தால் 'தேர்வு நிலை'யும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் 'சிறப்பு நிலை' தகுதிகளும் வழங்கப்பட்டது. ஆறு சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு உண்மை தன்மை சான்றிதழ் விபரங்கள் அனுப்பப்பட்டன.

தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த ஆசிரியர்களுக்கு 'உண்மை தன்மை சான்றிதழ்' இல்லாத காரணத்தால் விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பாமல் தலைமை ஆசிரியர்கள் தாமதப்படுத்தினர். இதனால் ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை.

இயக்குனரகம், விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த முகாம்கள் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 900 தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர், என்றார்.

Tuesday, June 21, 2016

ஜூன் 30க்குள் அறிக்கை தயாரிக்க முடியாத நிலையில் புதிய ஓய்வூதிய திட்டம் உடனடி ரத்து இல்லை


தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து மே 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு செயல்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குழு தலைமை பொறுப்பில் இருந்து சாந்தா ஷீலா நாயர் சமீபத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் தற்போது குழுவில் உறுப்பினர் செயலர் கிருஷ்ணன் மட்டுமே உள்ளார். இதனால் ஜூன் 30க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியுமா?: இதுதொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் அதை முதன் முதலாக செயல்படுத்தியது தமிழக அரசு தான். அதன்படி 2003ம் ஆண்டே தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2004ல் தான் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி பார்த்தால் இத்திட்டத்துக்கும் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தமிழக அரசு நினைத்தால் தன்னிச்சையாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியும்’’ என்றார்.

Monday, June 20, 2016

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு


மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளில் இது சாத்தியமில்லை. இதனால் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அடிப்படையிலும் பின்தங்கி உள்ளன. எனவே, மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கடந்த காலங்களில் சிறப்பு வழிகாட்டி கையேடுகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்பட்டன.

தேர்வுக்கு குறைந்த காலமே இருந்ததால் மாணவ, மாணவியர் இவற்றை முழுமையாக படிக்க முடியவில்லை. இதை தவிர்க்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக கையேடுகளை அச்சிடும் பணிகள் தற்போது துவங்கி உள்ளன. சிறப்பு வழிகாட்டி கையேட்டை முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், தேர்ச்சி விகிதம் கூட வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு 'டேட்டா கார்டு


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது. இது குறித்த அறிவிப்பு: இத்திட்டம், நேற்று அமலுக்கு வந்துள்ளது. 118 ரூபாயில், 30 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில், 1 ஜி.பி., 'டேட்டா கார்டு' வழங்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு பேசிக் கொள்ளலாம். இத்திட்டம், 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது


பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில், பலவித மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.கடந்த 2015 ஆண்டு, பச்சை நிறத்தில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ், இந்த ஆண்டு சிவப்பு நிற எழுத்துக்களுடன் இருந்தன. தேர்வுக்கான பதிவு எண், வரிசை எண் என, மாற்றப்பட்டு உள்ளது.

புதிதாக நிரந்தர பதிவு எண் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த எண், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும் இடம் பெறும். அதேபோல், சான்றிதழ்களில், இரண்டு வகை பார் கோடுகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, மாற்றுத்திறனாளிகள், சிறப்பு மாணவர்களுக்கு, பொதுப்பிரிவு மாணவர்கள் போல் அல்லாமல், பச்சை நிற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சான்றிதழ்களில், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு தேர்வில் வழங்கப்பட்ட சலுகைகளும், அதற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Sunday, June 19, 2016

டியூஷன் எடுத்தால் நல்லாசிரியர் விருது கிடையாது


ஆசிரியர் தினவிழா வரும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 2015 - 16ம் ஆண்டுக்கு மாநில அளவில் ‘நல்லாசிரியர் விருது’ பெற தகுதி வாய்ந்த தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்ட அளவில் குழு அமைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் விபரங்களை தேர்வு குழு தலைவர் மற்றும் உறுப்பினர் கையொப்பத்துடன் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பள்ளி கல்வி இணை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நல்லாசிரியர் விருதுக்கான விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வித புகாருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டவராக இருத்தல் கூடாது. டியூஷன் எடுக்கும் ஆசிரியர், கல்வியை வணிக ரீதியாக கருதி செயல்படுவர், தனியார் பள்ளியில் நிர்வாகியாக இருப்பவர்கள் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'


பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்

துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும், 18 லட்சம் மாணவர்கள், இப்படி படித்து வருகின்றனர். இவர்கள், 8ம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ.,யில் இரண்டு ஆண்டுகள் படித்தால், தங்களது உயர் படிப்பை தொடர விரும்பும்போது, 10ம் வகுப்பு முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டு, நேரடியாக, பிளஸ் 1ல் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

அதேபோல், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள், ஐ.டி.ஐ.,யில் படித்து விட்டு, உயர் படிப்பு படிக்க நினைக்கும்போது, அவர்கள், பிளஸ் 2 முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப் படுவர்.அவர்கள் நேரடியாக, இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை வரும் ஜூலை, 15ல், பிரதமர் மோடி அறிவிக்கிறார். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Friday, June 17, 2016

பிளஸ் 2: அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புப் பதிவுக்கு ஏற்பாடு


பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவுப் பணி மேற்கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அதனால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்ததற்கான அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வரவேண்டும்.

மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். வருகிற 20-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற இருக்கிறது. இதில், குறிப்பாக பதிவு தொடங்கிய 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக அளிக்கப்பட உள்ளது.

அதேபோல், https:tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பை பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

8th std assessment test model question paper

Click below

https://app.box.com/s/9alaakcoanpd7gp1ejiq9hriwuc7fjot

https://app.box.com/s/lo8lzucose8z5opo7uizetpvylaq2gar

https://app.box.com/s/ieb82qbvendrojbc70gtzcrsokkkzyue

7th std tamil..English, maths question paper

Click below

https://app.box.com/s/hh4ti5zbgpirk6xp7ujnqqpzuqmma1te

https://app.box.com/s/lchp87zl38q7n0t2b7akzcj799q057xm

https://app.box.com/s/ieb82qbvendrojbc70gtzcrsokkkzyue

6th English question paper

6th tamil&maths question paper

https://app.box.com/s/bwb07rfn8xabty0h9rlw1yop16jqz5ec

https://app.box.com/s/dxri8zyv9eiiqqvar3hi8ml8sy9ybtgk

Assessment form

Thursday, June 16, 2016

பிளஸ் 2:ஜீன் 20 முதல் அசல் சான்றிதழ்


பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வருகிற 20-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை, தாங்களே தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

23ல் பிளஸ் 1 துவக்கம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்புகளை துவக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.அதேநாளில், பிளஸ் 1 பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவும், பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது

தமிழக நோபல் விஞ்ஞானிகள் பிறந்த ஊர்களில் இலவச 'வை-- - பை'


தமிழகத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, சர் சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் சொந்த கிராமங்களில், இலவச இணையதள வசதி பெற உதவும், 'வை - பை' இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உலகெங்கும், 'வை - பை' வசதியை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களுக்கான தலைமை அமைப்பு, 'வயர்லெஸ் பிராட்பேண்ட் அலையன்ஸ்.' அது, தங்கள் உறுப்பினரான, சென்னையைச் சேர்ந்த, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைவர் கைலாசநாதனிடம், 'இந்த ஆண்டு முதல், ஜூன், 20ம் தேதியை உலக, 'வை - பை' தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்யுங்கள்' என, கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் உதயமானது. இதுகுறித்து, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜித் சிங் கூறியதாவது: நோபல் பரிசு பெற்றதின் மூலம், சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நாட்டுக்கு புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன.

அதனால், அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில், இலவச, 'வை - பை' வசதி ஏற்படுத்தி உள்ளோம். அங்கு, அதற்கான அடிப்படை வசதி இல்லை. இருந்தாலும், யூ.பி.எஸ்., போன்றவற்றின் உதவியுடன் அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம மக்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்துள்ளனர். அதனால், 'வை - பை' வசதியை பயன்படுத்தி, இணைய வசதியை அவர்கள் பெறலாம். மாங்குடியில் உள்ள பள்ளிக்கு, கணினி தர உள்ளோம். இதனால், மாணவர்கள் பயன் அடைவர். இதன் மூலம், இந்த, இரு கிராமங்களுக்கும், காலாகாலத்திற்கு 'வை - பை' வசதி அளிப்பது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, June 15, 2016

மொபைல் போன் பயன்படுத்த தடை


தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:

* மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது.

இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
* மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
* வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை:
*l வகுப்பறையில், ஆசிரியர்கள் எக்காரணம்
கொண்டும் மொபைல் போன்களைபயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில், மொபைல் போனில் பேசினால், அந்த ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மொபைல் போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மீறி கொண்டு வந்தால், அவர்களின் மொபைல் போனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்க வேண்டும்.

மிக சரியான முடிவு!: பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடைவிதித்தது, மிகச் சரியான முடிவு. தற்போது, 'ஸ்மார்ட் போன்' வந்துள்ளதால், அதில் பல வசதிகள் உள்ளன. 'கேம்ஸ்' ஆடுதல், 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ, படம் அனுப்புதல், 'பேஸ்புக்' பார்த்தல் என ,வகுப்பறையில், மாணவர்கள் தேவையில்லாத வேலையில் ஈடுபடுகின்றனர்.
* மேலும், மொபைல் போன் காணாமல் போவதும், அதை விசாரிப்பதும், பள்ளி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்கள், வகுப்பறை தவிர, மற்ற நேரத்தில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'


பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது. பள்ளித் திறப்பையொட்டி ஏற்கனவே கழிவறைகளை சுத்தம் - சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டது.

தற்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 'கழிவறைகளை சுகாதாரமாக வைப்பதுடன், பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என, அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சுற்றறிக்கையில், 'மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் திட்டமிட வேண்டும்.

பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும். கழிவறைகளை மாணவர்கள் சுகாதாரமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இவற்றை வலியுறுத்த வேண்டும். இதுபற்றிய விபரத்தை மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிகள் அருகே ஆபத்தான நிலையில் கிணறுகள் இருந்தால் அவற்றை ஒருவார காலத்தில் அகற்றி அதுபற்றிய விபரத்தை அறிக்கையாக தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

அரசு பஸ்சில் அரை டிக்கெட் வயது சான்றிதழ் கட்டாயம்


'அரசு பஸ்களில், அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர், பயணத்தின் போது, குழந்தைகளின் வயது சான்று எடுத்துச் செல்வது அவசியம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பஸ்களில், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பயணக் கட்டணம் கிடையாது; 3 முதல், 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு, அரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், ஒவ்வொரு முறையும், அரசு பஸ்சில் குழந்தைகளுடன் பயணிப்போர், அரை டிக்கெட் கேட்பதும், 'முழு கட்டண டிக்கெட் வாங்க வேண்டும்' என்று நடத்துனர் கூறுவதும் வழக்கமாக உள்ளது. குழந்தைகளின் வயதில், நடத்துனருக்கு சந்தேகம் ஏற்படும் போது, உயரத்தை கணக்கிடுவர். இதற்கு பஸ்சில் வசதி உள்ளது. அப்போது, 130 செ.மீ.,க்கு மேல் உயரம் இருப்பின், முழு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல நேரங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உயரமாக இருப்பதால், முழு கட்டணம் செலுத்த நேரிடுகிறது.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றை, பயணத்தின் போது எடுத்துச் சென்றால், எந்த சிக்கலும் வராது. ஆகையால், இனி அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தை யின் வயது சான்று எடுத்துச் செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, June 14, 2016

சத்துணவு மைய சமையல் கூடங்களிலேயே உணவு தயார் செய்ய வேண்டும்:தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தல்


பள்ளிகளில் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவைத் தயார் செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை தூய்மையாகப் பராமரித்தல் தொடர்பாக ஏற்கெனவே ஆய்வுக் கூடங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சத்துணவு மைய சமையல் கூடங்களில் மட்டுமே மதிய உணவை தயார் செய்ய வேண்டும். புகை போன்றவற்றைக் காரணம் காட்டி திறந்தவெளியில் சத்துணவு தயாரிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சத்துணவு மையத்தில் பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை இருப்பின் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள்கள் சமையல் கூடத்தில் இருப்பு வைத்தல் கூடாது. சமையல் செய்பவர்கள், உதவியாளர்கள் தன்னையும், சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்குத் தக்க அறிவுரைகளை உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் வாயிலாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.