இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 15, 2015

புதிய பென்ஷன் திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.இதனால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் ஓய்வு பெற்றோர், இறந்தோரின் குடும்பத்தினர் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி ஆனைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி காவ லாளியாக இருந்த குருசாமி 2012 ல் ஓய்வு பெற்றார். பலமுறை போராடியும் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெறமுடியாமல் 2013 ல் இறந்தார்.

அதன்பின் அவரது மனைவி மாரியம்மாள் போராடியும் பணப்பலன் கிடைக்காமல் சமீபத்தில் இறந்தார். அவர்களது மகன் குமார் பணப்பலன் கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தார். அந்த மனுவிற்கான பதிலில், 'புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத்தொகை வழங்குவது குறித்து அரசாணை, தெளிவுரை எதுவும் இல்லை. இதுகுறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தில் பணத்தை மட்டும் பிடிக்கின்றனர். ஆனால் பணப்பலன் வழங்குவதில்லை. இதனால் இதுவரை ஓய்வு பெற்ற 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற 6 பேருக்கு மட்டும் பிடித்த பணம் வழங்கப்பட்டு உள்ளது, என்றனர்

பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'


நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்:

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவை, தினசரி, ஒரு ஆசிரியர் சுவைத்து, சோதித்துப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, ஒன்று அல்லது இரண்டு பெற்றோர், உணவை, தினசரி சுவைத்து பார்ப்பதை கட்டாயமாக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுழற்சி முறையில், மாணவர்களின் பெற்றோர், மதிய உணவின் தரத்தை சோதித்து பார்க்கலாம்.

மதிய உணவின் தரத்தை பரிசோதிக்கும் சமயம், இத்திட்டத்தின் கீழ், எத்தனை மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்பதையும், பெற்றோர் அறிந்து, சான்று அளிக்க முடியும். இவ்வாறு, மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 12 கோடி மாணவர்கள் :

* நாடு முழுவதும், 12.6 லட்சம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது * இந்த உணவை, 12 கோடி மாணவர்கள் சாப்பிடுகின்றனர்

* மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது

* உலகளவில், இந்தியாவில் மட்டுமே, இத்திட்டம் பெரியளவில் நடக்கிறது * இத்திட்டத்தை, 60ம் ஆண்டுகளில், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் துவக்கி வைத்தார்.

Monday, December 14, 2015

அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை


வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் செயல்பட துவங்கின.இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது. எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். ஐகோர்ட்டில் முறையீடு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுநஸ்ருல்லா, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று ஆஜராகி, மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் கூறியுள்ளதாவது:மழை காரணமாக, பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதை கருதி, எல்.கே.ஜி., முதல், ௮ம் வகுப்பு வரை, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றம், தாமாக விசாரணைக்கு எடுத்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை படித்த நீதிபதிகள், இது பற்றி, பிறகு முடிவெடுப்பதாக கூறினர்.

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்தது என்பது தெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இரு படிப்புகளை படித்துள்ளார்.

அந்த கல்வி தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பணியில் இருந்துகொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை.

மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார். எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

G.O.117 Dt:13.12.15 Voluntary contribution to CM Public Relief Fund for Relief & Rehabilitation measures - Contribution of one days salary by the Govt Employees

Click below

https://app.box.com/s/767ug2h9yncchyoqnh5otrrt0iohqbtw

Sunday, December 13, 2015

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'


'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகள், யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகின்றன.

இத்தேர்வுகள், முதல்நிலை, பிரதானம், நேர்முகம் என, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். நாடு முழுவதும், இந்தாண்டு, 4.63 லட்சம் பேர், ஆக., 23ல் முதல்நிலை தேர்வு எழுதினர். இவர்களில், 15 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக, அக்., 12ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வர்கள், பிரதானத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு விவரம்: பிரதானத் தேர்வுகள், நாடு முழுவதும், 23 மையங்களில், டிச., 18ல் துவங்கி, 23ம் தேதி வரை நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்போருக்கு, காகிதத்திலான அனுமதி அட்டை வழங்கப்படாது.

அனைவரின் அனுமதி அட்டைகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்போர், தங்களுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி அட்டையை, தேர்வின்போது காண்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்படும் அனுமதி அட்டையில் புகைப்படம் தெளிவாக இல்லாவிடில், தகுந்த அடையாள அட்டையும், புகைப்படமும், உடன் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, December 12, 2015

வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவது எப்படி?


வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு, காப்பீட்டு தொகை பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன மோட்டார் இன்சூரன்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஜய்குமார் கூறியதாவது:

தண்ணீரில் கார் மூழ்கி விட்டாலோ, டயர் அளவுக்கு நீரில் சிக்கி விட்டாலோ, அப்படியே நிறுத்தி விட வேண்டும். காரை, 'ஸ்டார்ட்' செய்யக் கூடாது; 'பேட்டரி' இணைப்பை துண்டிக்க வேண்டும். இன்ஜின் மற்றும் இதர பகுதிகளில் தண்ணீர் புகுந்திருந்தால், அங்கீகாரம் பெற்ற, 'டெக்னீஷியனை' வைத்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இது, இருசக்கர வாகனத்துக்கும் பொருந்தும். வாகன பாதிப்பு பற்றி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்; புகைப்படம் எடுத்து வைப்பது கூடுதல் பாதுகாப்பு. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து பார்த்து பின், காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல உதவுவர்.

ஒருவேளை, முன்கூட்டியே காரை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டால், இன்சூரன்ஸ். 'சர்வேயர்' வந்து பார்வையிடாமல், 'ரிப்பேர்' செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆவணங்கள் வெள்ளத்தில் தொலைந்தால், சர்வேயர் தரும் அறிக்கை முக்கிய ஆவணமாக இருக்கும். சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள, 'மொபைல் ஆப்' வசதியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் இழப்பீடு கோரி பதிவு செய்யலாம். கார் மற்றும் இன்சூரன்ஸ் அசல் ஆவணங்களை, தவறாது கொண்டு செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் பழுது பார்த்தால், செலவை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கும். அப்படி இல்லையேல், செலவுக்கான ரசீதுகளை கொடுத்தால், பணம் திருப்பித் தரப்படும். முன்னதாக, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், 'கி.ௌய்ம் ரெபரன்ஸ் நம்பர்' அளிக்கப்படும்.

வெள்ளத்தில் வாகனம் சிக்கிய பின், இன்ஜினை, 'ஸ்டார்ட்' செய்ய முயற்சித்து, வாகனம் நின்று விட்டிருந்தால், மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியில் இழப்பீடு கிடையாது. ஆனால், 'இன்ஜின் புரொடெக்டர்' என்ற அம்சத்தை பெற்றிருந்தால், இழப்பீடு கோரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்


ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது. ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும்.

ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில் புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும் தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.

Friday, December 11, 2015

உதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு, 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Panel model form

Click below

https://app.box.com/s/01k0eh73o5t543puwf3hdcftl4hbnjdn

Thursday, December 10, 2015

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும். பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும். மேலும், dirsedu@nic.in, dsetamilnadu@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லுமா செல்லாதா?


இந்திய ரூபாய் தாள்களில் பெயர், கவிதை, தனிநபர் புகழ் என்று பலவகையில் எழுதப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். இவ்வாறு எழுதப்பட்ட ரூபாய் தாள்கள், வரும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி அறிவிக்கப்படுவதாக வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தென் மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது,” அவ்வாறு எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாது என்றோ, ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றோ ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. மாறாக ரூபாய் நோட்டுகளில் பெயர்கள், கவிதைகள், தனிநபர் புகழ் வார்த்தைகள், மதம் தொடர்புடைய வார்த்தைகள் என்று எந்த வகையில் எழுதப்பட்டிருந்தாலும் அந்த ரூபாய்த் தாள்கள் செல்லுமா செல்லாதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம், ரிசர்வ் வங்கியின் மண்டலங்களில் உள்ள தீர்வை ஆபிஸர்க்கு உள்ளது என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

இது போன்று எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் செல்லாது என்றும் செய்திகள் பரவுகின்றன. ஆனால் உண்மையில், மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்களுக்கு எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நவீன எந்திரம் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதன்படி ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், பொதுமக்களுக்காகப் புழக்கத்தில் விடும் ரூபாய்த் தாள்கள் தனியாகவும், கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய் தாள்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.

கிழிந்த, அழுக்கான, எழுதப்பட்ட ரூபாய்த் தாள்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் 100 தாள்களில் 90 தாள்கள் எழுதப்பட்ட ரூபாய்களாக உள்ளன. 2014-ம் ஆண்டு அச்சிடப்பட்ட ரூபாய் தாள்கள் கூட அழிக்கப்படுவதற்காக அனுப்பப்படுகின்றன என்பதால் ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ரூபாய் அச்சடிப்பதற்கு மத்திய அரசு அதிகம் செலவழிக்கிறது. ஆனால் இன்னும் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருக்க வேண்டிய ஆயிரம் ரூபாய், 500 ரூபாய்த் தாள்கள் கூட அழிப்பதற்காக அனுப்பப்படுவது அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனல் அரசுக்கு ஏற்படும் வீண் செலவைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ரூபாய் தாள்களில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

Wednesday, December 09, 2015

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு வாரியாகத் தொகுத்து, பட்டியலிட்டு, உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களின் கையெழுத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மாற்றுச் சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர். இந்தப் பணிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்கள் ஒருங்கிணைந்து தனி கவனம் செலுத்தி தொய்வின்றி செயல்படுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ், இதர சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அரையாண்டு பொதுத்தேர்வு ஜனவரி மாதத்தில் நடத்த வேண்டும்; பள்ளிக் கல்வி இயக்குனர்

Tuesday, December 08, 2015

பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:வெள்ளத்தால், அசையும், அசையா சொத்துகள் பாதிக்கப்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து, திரும்பிச் செலுத்தாத வகையில், 5,000 ரூபாய் அல்லது உறுப்பினரின் பங்குத்தொகையில், 50 சதவீதத்தில் எது குறைவோ, அதை முன்பணமாக பெறலாம். வெள்ளம் பாதித்த பகுதிகள் என, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள சந்தாதாரர்கள், உரிய அதிகாரிகளிடம் பாதிப்புக்கான சான்று பெற்று, நான்கு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை சந்தாதாரர்கள், இதற்கான படிவம், 31ஐ பெற்று, பாதிப்புக்கான ஆவணங்களுடன், சென்னை மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மீது முன்னுரிமை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.


அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை:

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள், மின் கட்டணத்தை, 2016 ஜனவரி, 31ம் தேதிக்குள் செலுத்தலாம்; அபராதம் கிடையாது

* டிச., 7ம் தேதி முதல் நடக்கவிருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இது, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.