இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 28, 2015

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அரசு-ஆசிரியர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, நிதித் துறைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவு: ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆறு சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம், அகவிலைப்படி உயர்வானது 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயரும். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். உடனடியாக அளிக்க வேண்டும்: அகவிலைப்படி உயர்வை அளிக்க முதன்மை மாநிலக் கணக்காய்வுத் தலைவரிடம் இருந்து முறைப்படியான அனுமதி பெறும் வரை காத்திருக்க வேண்டாம். சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம்.

யார் யாருக்கு பயன்? அகவிலைப்படி உயர்வானது பல்வேறு தரப்பினருக்கும் பொருந்தும். அதன்படி, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஏனைய ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ், சிறப்பு ஓய்வூதியம், கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் படிக்க விரும்பும் உயர் கல்வி, பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு கள், வேலைவாய்ப்புகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை, சிறந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மூலம், கோடை விடுமுறையில் வழங்க வேண்டும்.

உயர் கல்வி பாடங்களுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்குரிய கல்வித் தகுதிகள் குறித்த ஆலோசனைகளை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சாதனையாளர்களோடு இணைந்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்

தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கல்வித் துறை போல் இம்மூன்று மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொதுவான மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.

இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:கல்வித் துறையில் ஆண்டுதோறும் பொது மாறுதல் லந்தாய்வு நடக்கிறது. இத்துடன் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே உள்ள கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நான்கு ஆயிரத்திற்கும் மேல் உள்ள இம்மூன்று மாநகராட்சிகளுக்கும் ஒரு பொதுவான கலந்தாய்வு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகங்களில் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் ஆணையாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.மேலும் மாநகராட்சி ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கேட்டால் அதற்கான தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறுவதும் சவலாக உள்ளது. எனவே இந்தாண்டு முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த மூன்று மாநகராட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என்றார்.

Monday, April 27, 2015

7243 நர்ஸ் பணியிட அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான விவரங்களை   www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு,  11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் லிங்க்

Click below

http://electoralsearch.in/search.jsp

பேராசிரியர்,விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு

பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அதில், இடஒதுக்கீட்டுப்  பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்து அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வயது வரம்பு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். வயது வரம்பை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பை மீண்டும் 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்து.
இதற்கிடையே, 139 பொறியியல் உதவி பேராசிரியர் நியமன பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்தது. வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டதால் உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அளிக்கும் என்று 35 வயதைக் கடந்த முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், தொடர்ந்து பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய அறிவிப்பின்படி 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். 35 வயதை கடந்தவர்கள் வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே, அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Sunday, April 26, 2015

ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

* 10ம் வகுப்பு முடித்து, 2014, ஜூலை 1ம் தேதி, 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட பட்டியலினத்தவர் அதிகபட்ச வயது 35, மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் ஆகியோருக்கு 32, மற்ற வகுப்பினர் 30. ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட, அதிக கல்வித்தகுதி பெற்றிருந்தால், உச்ச வயது வரம்பு இல்லை.

* முன்னாள் ராணுவத்தினர் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், சீர் மரபினர் உச்ச வயது வரம்பு 53. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 48 வயது. = அதிகமாக அருந்ததியர் இருந்தால், மீதமுள்ளவர்கள் ஆதிதிராவிடர் பட்டியலில் நியமிக்கப்படுவர். குறைவாக இருந்தால், ஆதிதிராவிடர்கள் அதில் நிரப்பப்படுவர்.

* தமிழ் வழியில் படித்தோருக்கு, 20 சதவீத முன்னுரிமை உண்டு

* மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. மாற்றுத்திறனாளிகள் இல்லாவிட்டால், அந்த இடங்கள் நடைமுறை விதிகளின்படி நிரப்பப்படும்.

* தேர்வுக்குப் பின், 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆன் - லைனில் அழைக்கப்படுவர். மூலச்சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதன்மைக் கல்வி அலுவலர் குழு நேர்காணல் நடத்தி, மதிப்பெண் அடிப்படையில், இனவாரி சுழற்சி மற்றும் முன்னுரிமையில் நியமனம் நடக்கும்.

* மாவட்ட வாரியாக தேர்வுத்துறை சேவை மையங்களில், ஏப்ரல் 24 முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. மே 6ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பம் பெற சேவை மையங்களில், கணினிப் புகைப்படம் எடுக்கப்படும் என்பதால், தேர்வர்கள் நேரில் செல்ல வேண்டும்.

* பத்தாம் வகுப்பு, முன்னுரிமை, உயர்கல்வித் தகுதி சான்றிதழ்களை அசல் மற்றும் நகல்கள், வேலை வாய்ப்பு அட்டை கொண்டு செல்ல வேண்டும்.

* தேர்வு கட்டணம் ரூ.100, சேவை கட்டணம் ரூ.50 ரொக்கமாக, தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வின் விவரங்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு எப்போது?

Saturday, April 25, 2015

போலி வாக்காளரை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பேரணிகள்

வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

துறை அதிகாரிகள்: தமிழக வாக்காளர் பட்டியலை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம், சமீபத்தில் ஆய்வு செய்ததில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது; பெயர் குழப்பம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி அதிகாரிகளின் உதவியை, தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் மூலம், போலி வாக்காளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: எச்சரிக்கை: போலி பதிவால் ஏற்படும் சட்ட ரீதியான பின் விளைவுகள் குறித்து, வாக்காளரை எச்சரிக்கை செய்ய, கல்வி துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் வரை கல்லூரி மாணவ, மாணவியரும், பள்ளிகள் திறந்த பின், ஜூலை வரை பள்ளி மாணவ, மாணவியரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. மூத்த விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை, 2011ல் டி.ஆர்.பி., மேற்கொண்டது. ஆனால், இதில் பல குளறுபடிகள் இருந்ததாக, டி.ஆர்.பி.,க்கு எதிராக பலர் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையில், இரண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பின், தற்காலிகத் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் முடிவுகளைப் பொறுத்தது என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

ஜீன்ஸ், மொபைல் போனுக்கு தடை.ஆசிரிய ஆசிரியைகளுக்கு புது கட்டுப்பாடு.வரும் கல்வியாண்டு முதல் அமல்

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மாணவருடன் ஆசிரியை ஓட்டம் பிடித்தல், மாணவியரிடம் ஆசிரியர் தவறான நோக்கத்தில் நடந்து கொள்ளுதல் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் கல்வித் துறையில், ஒழுக்கக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. எனவே, சில கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி,

* ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

* இளம் வயது ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட், இறுக்கமான சட்டை போடக் கூடாது.

* பள்ளிகளில், ஆசிரியர், மாணவ, மாணவியர் மொ பைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.

* ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது அலுவலகத்தில் வைத்து விட்டு, வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.

* மாணவ, மாணவியருக்கு மொபைல் போனே வேண் டாம்; அவசரத் தேவைக்கு பள்ளி போனை பயன்படுத்தலாம். இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, பல்துறை நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு பின், முடிவு செய்யப்படும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணி வாய்ப்பு

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்து தேர்வு நடத்தி இந்த பணியிடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'. இளைஞர்கள் வங்கிப் பணியாற்றுவதை கவுரவமாக கருதுகிறார்கள். அதற்கேற்ப கணிசமான வேலைவாய்ப்புகளை அறிவிப்பதில் ஸ்டேட் வங்கி முன்னிலை பெறுகிறது. தற்போது இந்த வங்கியில் 2015-16-ம் ஆண்டுக்கான 'புரபெசனரி அதிகாரி' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வங்கி பொது எழுத்து தேர்வு மூலம் அல்லாமல், தனியே எழுத்து தேர்வு, நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதால் பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணி பெறலாம். 

பணியின் பெயர் : புரபெசனரி அதிகாரி

பணியிடங்கள் : 2,000 (பொது 812, ஓ.பி.சி.- 541, எஸ்.சி.- 308, எஸ்.டி.- 339) 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் இனி...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-4-15 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-4-1985 மற்றும் 1-4-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பின் இறுதி பருவத்தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. இவர்கள் 1-9-15 தேதிக்குள் அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை காண்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகிய தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் இணையதளம் வழியாக செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-5-15-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 

முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்க வேண்டும். இறுதியில் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டு சொல் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளவும். பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் கட்டணம் செலுத்தலாம். இறுதியாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 2-5-15
எழுத்து தேர்வு நடைபெறும் காலம் : உத்தேசமாக ஜூன்- 2015
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்,   www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

LAB technician விண்ணப்பிக்க எடுத்துச்செல்ல வேண்டியவை

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
( அசல் மற்றும் நகல்கள் )

(*கட்டாயம் தேவைப்படுவன)

1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்
5) உயர்கல்விக்கான சான்றிதழ்
6) பணி முன் அனுபவம் இருந்தால் அதற்கானச் சான்றிதழ்
வயது வரம்பு :
SC/ST & Destitute widows of all community. - 35 வயதுக்குள்
BC, MBC/DC & BC Muslim community. - 32வயதுக்குள்
Others - 30 வயதுக்குள்
குறைந்தப்பட்ச கல்வித்தகுதி SSLC
+2 , Degree அல்லது அதற்கு மேலும் கல்வித்தகுதியைப் பெற்றுள்ள BC, MBC, SC, ST & BC (Muslim) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.(57 வயது வரை)
கட்டணம் :
Rs.100 + Rs.50 service charge
SC, SC(A), ST , Destitute Widows & Physically Challenged persons க்கு தேர்வுக்கட்டணம் Rs. 100 செலுத்த தேவையில்லை.
(முக்கிய குறிப்பு-தேர்வுக்கு ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம் எந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கிறீா்களோ அந்த மாவட்ட காலிப்பணியிடத்திற்கு மட்டுமே போட்டியிட முடியும்)

முதுகலை கல்வி தமிழில் படிக்காதவருக்கு முன்னுரிமை கிடையாது

முதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை புதூரைச் சேர்ந்த ஜே.ஸ்டீபன்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு:

தமிழகத்தில் 2013-2014, 2014-15-ம் ஆண்டுகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் பிஏ (பொருளாதாரம்), பி.எட் படிப்புகளை தமிழ் வழியில் பயின்றேன். எம்.ஏ (பொருளாதாரம்) ஆங்கில வழியிலும் பயின்றேன். எனக்கு அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சொக்கலிங்கம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையில், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் யார் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முழு கல்வியையும் தமிழில் முடித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த அரசாணையின்படி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடியும்.

இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும். மனுதாரர் முதுநிலை கல்வியை ஆங்கிலத்தில் படித்துள்ளார். இதனால் மனுதாரருக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகை பெற முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. எனவே, மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இளங்கலை படிப்பையும், முதுகலை படிப்பையும், பிற படிப்புகளையும் தமிழ் வழியில் கற்றவருக்குதான் தமிழில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க முடியும்.