இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 16, 2019

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம்: என்.சி.இ.ஆர்.டி.,


புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 14 ஆண்டு கால பள்ளிபாடத் திட்டங்களை மாற்ற, என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்துள்ளது. தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 14 ஆண்டுஇந்நிலையில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், ருஷிகேஷ் சேனாபதி, டில்லியில் கூறியதாவது:

தேசிய அளவில், பள்ளி பாடத் திட்டங்களை, 1975, 1988, 2000, 2005 ஆகிய ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., மாற்றியமைத்துள்ளது.கடந்த, 14 ஆண்டுகளாக அமலில் உள்ள, பள்ளி பாடத் திட்டத்தை, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இம்மாத இறுதியில், ஆய்வு கமிட்டி அறிவிக்கப்படும். ஆய்வு கமிட்டிபுதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டவுடன். ஆய்வு கமிட்டி, தேசிய அளவில் பள்ளி பாடத் திட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி, ஆய்வு செய்து முடிவெடுக்கும்.

என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தங்களையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியை சுமையாக கருதாமல், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்கும் வகையில், பாடத் திட்டங்கள் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார். பள்ளிகளில் நீர் மேலாண்மை'பள்ளிகளில் நீர் மேலாண்மையை செயல்படுத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.டில்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட, நாட்டில், 21 நகரங்களில், நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம் உள்ளது என, 'நிடி ஆயோக்' எச்சரித்துள்ளது.

Tuesday, October 15, 2019

பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்


பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும். இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.

இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

Thursday, October 10, 2019

ஆசிரியர்கள் இடமாறுதல் கல்வி துறை நிபந்தனை


அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். ஓரிடத்தில், ஓராண்டு பணி முடித்தாலே, இடமாறுதல் கேட்கலாம் என, விதி இருந்தது.இதனால், பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தபட்சம்,மூன்றாண்டுகள் ஓர் இடத்தில் பணிபுரிவோர் மட்டுமே, இடமாறுதல் கேட்க முடியும் என, பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.

இதை எதிர்த்து, ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்ததால், கவுன்சிலிங் நடத்துவதற்கான, புதிய அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அனைத்து ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்த பட்சம், மூன்றாண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.

வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும், 2017 - 18 மற்றும், 2018 - 19ம் ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்காமல் இருந்தால், இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இந்த சலுகை, இந்த ஆண்டுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், மூன்றாண்டு பணிபுரிய வேண்டும் என்ற, நிபந்தனை கட்டாயம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 07, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது கட்டாயம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிர்வாகம், பாடம் கற்பித்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தளத்துக்கு மாற்றப்படுகின்றன.மின்னணு ஆளுமையில், பள்ளி கல்வித் துறை முன்னோடியாக செயல்பட, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு;

புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாக பயன்படுத்துதல் மற்றும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை பதிவிறக்கம் செய்வது போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன.அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க,மத்திய அரசின் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

Friday, October 04, 2019

ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது. அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள், ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிர்த்து, ஆசிரியர்கள் பலர், நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கவுன்சிலிங் நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்றத் தில், சட்டப்பூர்வ அனுமதியை, பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்ததும், இம்மாதம், 3வது வாரத்தில் கவுன்சிலிங் நடவடிக்கைகளை, பள்ளி கல்வித்துறை துவக்க உள்ளது. இந்த கவுன்சிலிங்கில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில், மாற்றம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, October 03, 2019

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு துவக்கம் மாதம் 5 நாள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


அரசு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மாதத்தில் 5 நாட்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் முடிந்து நேற்று காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பயோ மெட்ரிக் வருகை பதிவு அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று முதல் தங்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரத்திற்கும் மேலாக அரசு, நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. பயோமெட்ரிக் வருகைப்பதிவில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 9 மணிக்கு முன்னதாகவும், மாலை 4.10 மணிக்கு பிறகு பயோமெட்ரிக் கருவியில் தங்களின் வருகைப்பதிவை செய்ய வேண்டும். காலை 9.05 மணிக்கு வருகைப்பதிவு செய்தால் மஞ்சள் சோனும், 9.15 மணிக்கு வந்தால் சிவப்பு சோனும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு மாதத்தில் 3 நாட்கள் மஞ்சள் சோன் வந்தால், ஒரு சிவப்பு சோனாக எடுத்துக்கொள்ளப்படும். 3 சிவப்பு சோன் வந்தால் ஒருநாள் சாதாரண விடுப்பு(சிஎல்) அளிக்கப்படும். ஒரு மாதத்தில் 5 நாட்கள் சிவப்பு சோன் வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு மெமோ வழங்கப்படும்’ என்றனர்.

5மற்றும் 8ம் வகுப்பக்கு முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா?: செங்கோட்டையன் விளக்கம்


பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் முப்பருவ தோ்வு முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.இதுகுறித்து அவா், சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கிடையே இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. எனினும், மாணவா்கள் நலன் கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவாா்கள்.

இதுதவிர, பொதுத்தோ்வு எழுதும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக்கு அருகே தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடைமுறையில் தற்போதுள்ள முப்பருவ தோ்வு முறையை ரத்து செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் இந்த மாத இறுதிக்குள் கணினிமயமாக்கப்படும் என்றாா் அவா்.

Saturday, September 28, 2019

ஒன்றிய அளவில் 40 பள்ளிகள் தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் அக்.3 முதல் புற மதிப்பீட்டு குழு ஆய்வு : 39 வகையான பதிவேடுகளை பார்வையிடுகின்றனர்


தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு புற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும்,  புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் புற மதிப்பீடு செய்யப்படுகிறது. கடந்த 2016 - 2017 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிலும் இது நடத்தப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டிலும் தேசிய திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின்  வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் புறமதிப்பீடு செய்யப்பட உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்  உட்பட மூன்று பேர் கொண்ட குழு வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை பள்ளிகளில் ஆய்வு செய்ய உள்ளது.

ஒவ்வொரு ஒன்றிய அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அடங்கிய 40 பள்ளிகள் இந்த ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த புற மதிப்பீட்டு குழு பள்ளி முன்னேற்ற சுய மதிப்பீட்டு படிவத்தில் கடந்த 2016-17, 2018-19ம் ஆண்டு விபரங்களை ஒப்பீடு செய்து அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்ய உள்ளது. பள்ளியில் காணப்படும் குறைகளை விமர்சிக்க கூடாது, அதே வேளையில் ஆலோசனைகளை வழங்கி முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பதிவேடு மற்றும் சான்றுகளை மட்டும் பார்க்காமல் வகுப்பறைகளை நேரில் ஆய்வு செய்தும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடவும், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு சுய மதிப்பீடு படிவத்தில் உண்மைத்தன்மையை அறிய வேண்டும். பள்ளி இருப்பு பதிவேடு, நூலகம், ஆய்வகம், கணினிகள், துப்புரவு பணியாளர், மாணவர் சேர்க்கை, மெல்ல கற்கும் மாணவர்கள், இலவச பொருட்கள் வழங்கல் உட்பட 39 வகையான பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டெட்டில் தேர்ச்சி பெறுவோருக்கு தேர்வு அடுத்த வாரம் அறிவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான போட்டி தேர்வு தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் நேற்று கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வு முறையாக நடத்தப்பட்டுள்ளது. குளறுபடி தவறு நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டது.

குறை தவறு இருப்பதாக அறிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்காக நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பிலான இலவச 'நீட்' பயிற்சி வகுப்புகள் கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது.பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் செயல் படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 27, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு("டைரி') வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவாற்றலையும், நினைவாற்றலையும் வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் கல்வி கற்கும் சூழல் அமையும் வகையில் தற்போது தேர்வு முறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு நாள்குறிப்பேடு வழங்கப்படும். மாணவர்களின் அன்றாட வகுப்பறை நடவடிக்கை, கற்றல் குறித்த தகவல்கள், செயல்பாடு போன்றவை குறித்து பெற்றோருக்கு ஆசிரியர்கள் தெரியப்படுத்தும் விதமாக நாள்குறிப்பேடில் எழுதி அனுப்ப வேண்டும்.

, பெற்றோரும் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் நாள்குறிப்பேடில் எழுதி உள்ள தகவல்களை தினமும் பார்க்க அறிவுறுத்தப்படுவர். மாணவர் ஒருவர் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்தால் அதற்கான காரணத்தை பெற்றோர் நாள்குறிப்பேடில் எழுதி அனுப்ப வேண்டும். விலையில்லா நாள்குறிப்பேடு மூலம் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி பாலமாக அமைய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் 55 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுவர். இந்த நாள்குறிப்பேடில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். முதல் 2 பக்கங்கள் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்து எழுத கொடுக்கப்பட்டிருக்கும்.இதில், மாணவர்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை எழுத வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாள்குறிப்பேடு அச்சிடப்படும். இதை தினமும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுவர் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, September 24, 2019

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை உதவித் தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு வியாழக்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வரும் டிச.1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்.26-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் வரும் அக்.11-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்.16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியுடையோர்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளி) நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தேர்வர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ செலுத்தி அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு முறை: என்எம்எம்எஸ் தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி-1-இல் மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test-MAT) காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும். பகுதி 2-இல் படிப்பறிவுத் தேர்வு , (www.dge.tn.gov.in) காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

Monday, September 23, 2019

பள்ளிகளில் தள்ளி போனது காந்தி ஜெயந்தி விழா


காலாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டதால், அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் திறந்ததும், அக்., 3 முதல், காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Sunday, September 22, 2019

மாணவியருக்கு பேரீச்சம் பழம் அரசு பள்ளிகளில் வழங்க உத்தரவு


அரசு பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி பெறும் மாணவியருக்கு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட, சத்தான பொருட்கள் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற வாசகத்துடன், பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு, ஆரோக்கியமான, திடகாத்திரமான மாணவியரை தேர்வு செய்து, அவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், யோகா வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், பயிற்சிக்கு வரும் மாணவியருக்கு, வேர்க்கடலை, பேரீச்சம் பழம் உட்பட, விட்டமின் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் வழங்கவும், அதற்கு, அரசிடம் நிதி பெற்றுக் கொள்ளும்படியும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.