இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 25, 2019

ஆசிரியர்கள் சிறப்புநிலை: கல்வித் துறை அறிவிப்பு


ஆசிரியர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெற தேவையில்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அதிகாரிகளிடமிருந்து தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இதுவரை சிறப்புநிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இனி தேர்வுநிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ஆம் வகுப்புகளுக்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 22, 2019

உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்கள்: கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை முதல், வரும் 28-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 9-ஆம் தேதியன்று காலை, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10-ஆம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் (எமிஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2, 279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17,147 பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களை வரும் ஜூலை 9-இல் தொடங்க உள்ள கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படவுள்ளது.

தமிழ்வழிக் கல்வியைப் பொருத்தவரையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 6 முதல் 8 வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலவழிக் கல்வியைப் பொருத்தவரையில்15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Friday, June 21, 2019

2020 மார்ச்சில் புதிய பாடத்திட்டபடி தேர்வு


''மார்ச் 2020ல் நடக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் புதிய பாடத்திட்டப்படி தான் நடக்கும்,'' என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள் நடந்தது. இக்கல்வி ஆண்டில் (2019-- 2020) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2விற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பத்து, பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் 2020 மார்ச்சில் நடக்கும் அரசு பொது தேர்வை புதிய பாடத்திட்டத்தின்படியே எழுத வேண்டும். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களும், அந்தந்த பாடத்தினை புதிய பாடத்திட்டப்படியே தேர்வுகள் எழுத வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 19, 2019

மழை வேண்டி பள்ளிகளில் பிரார்த்தனை


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக் காலம் முடிந்தும், வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், தண்ணீர் பஞ்சம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குடிநீரும், நிலத்தடி நீரும் இல்லாமல், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.சென்னை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் தட்டுப்பாட்டால், பொது மக்கள், வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மத அடிப்படையில் இல்லாமல், பொதுவான பிரார்த்தனை கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 11, 2019

மாணவர்களுக்கு நாளை, 'ஸ்மார்ட்' அட்டை


தமிழக பள்ளி கல்வியில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, நாளை, 'ஸ்மார்ட்' அட்டைகள் வழங்கப்பட உள்ளன.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என, 2011ல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு, ஸ்மார்ட் அட்டை திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்கும் விழாவில், நாளை, 70 லட்சம் மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதில், ஒவ்வொரு மாணவருக்கும், தனி அடையாள எண் தரப்படுகிறது. மாணவர்களின் பெயர், பெற்றோர் விபரம், முகவரி, வகுப்பு, அவர்கள் படிக்கும் பள்ளிகளின் விபரம், ஆதார் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில், 'க்யூ ஆர்' குறியீடு மற்றும் மின்னணு, 'சிப்' இணைக்கப்பட்டு, விபரங்களை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

Saturday, June 01, 2019

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு மதிப்பெண் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு


ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் நடத்தப்படும், பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அதற்காக அரசு மற்றும் தனியார் நடத்தும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இரண்டு ஆண்டு கால பட்டயப் படிப்பு (டி.டி.எட்) நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது, கவுன்சலிங் நடத்தி அதன் மூலம் இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த 2002-03ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பட்டயம் பெற்று வரும் மாணவர்கள் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள தகுதித் தேர்வு எழுத 2 லட்சம் பேர் விண்ணப்பித்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Thursday, May 30, 2019

கல்வித் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு: 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் காண ஏற்பாடு


தமிழகம் முழுவதும் அரசு கேபிளில் கல்வித் தொலைக்காட்சி சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரபூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புதிய கல்வித் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான முன்தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக் கட்டமாக நிகழ்ச்சிகளுக்கான படப்படிப்பு மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சேனலில் 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு நிகராக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசின் புதிய திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நுழைவுத்தேர்வு குறித்த விளக்கங்கள், புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நேர்காணல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

அரசு கேபிளில் 200-ஆவது சேனல்: இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும். நீட் உட்பட போட்டித் தேர்வுக்கான பயிற்சியும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட சூழலில், அரசு கேபிளில் 200-ஆவது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி சேனல் சோதனை ஒளிபரப்பு வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது. இதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் வாரம் சேனல் ஒளிபரப்பு செய்யப்படும். இதை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்க இருக்கிறார். இதுதவிர மாநிலம் முழுவதுள்ள 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் கல்வி சேனலை பார்க்க தொலைக்காட்சி வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஆய்வு: கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புத் தளம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து


மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி முதல், ஆண்டு இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.இந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும்.

முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும். பழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.

இந்த புதிய மாற்றம், ஜூன், 3ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

Tuesday, May 28, 2019

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ செலவை வழங்க மறுத்த உத்தரவு ரத்து


அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளை வழங்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல்வேறு மனுக்களில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்துக்காக ஒரு குறிப்பிட்டத் தொகை அரசு ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்தும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்தும் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் தங்களுக்கான அவசர சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவுத் தொகையை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம். ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலோ, திட்டத்தில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றாலோ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கும் செலவுத் தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுத் தொகையினை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், வரையறை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இல்லாத நோய்களுக்குச் சிகிச்சை பெற்றதாகவும் கூறி பலருக்கு மருத்துவச் செலவுகளை அரசு வழங்க மறுத்துள்ளது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமியத் தொகை இவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, மருத்துவச் செலவுத் தொகையை திரும்பி வழங்க முடியாது என அரசு கூற முடியாது.

இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்ப வழங்க மறுத்த அரசின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், மனுதாரர்களின் இந்தக் கோரிக்கையை மாவட்ட குழுக்களுக்கு அரசு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கையை 30 நாள்களுக்குள் பரிசீலித்து 6 சதவீத வட்டியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி இருந்தால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றிருப்பர்.

ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். எனவே அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, May 27, 2019

புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்


புதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பள்ளி சீருடையில் மாற்றம் செய்தது.தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ணங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இந்தாண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு, உதவி பெறும் மாணவ - மாணவியருக்கு, மாற்றம் செய்யப்பட்ட புதிய பள்ளி சீருடைகள் வழங்கப்படும் என, சில நாட்களுக்கு முன், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.

ஆனால், மிக குறைவான நாட்களே இருப்பதால், பள்ளி திறக்க உள்ள ஜூன், 3ல் சீருடைகள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து, பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது:

சத்துணவு சாப்பிடும் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, நான்கு செட் சீருடைகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, சீருடை வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 1.50 லட்சம் பேருக்கு, சீருடை வழங்க வேண்டும்.தற்போது தான், சீருடை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, ஜூன், 7க்கு பின் தான் பள்ளிகளுக்கே சீருடைகள் சென்றடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

Sunday, May 26, 2019

3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, May 23, 2019

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்: மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மழலையர் வகுப்புகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், அவற்றுக்கான மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில், "ப்ரீ.கே.ஜி. - எல்.கே.ஜி.- யு.கே.ஜி' எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளிலும், கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 2018 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 2018-ஆம் ஆண்டு புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை. இதையடுத்து 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்த்து மழலையர் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி. சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ள 32 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.