இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 23, 2018

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வது அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி பதிவு செய்ய கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் முதல் வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. ஜூலை மாதம் முதல் வாரம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 16-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியாவது ஒருவாரம் வரை தள்ளிப்போனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்தும் நடைபெறும். 10 நாட்களுக்கு மேல் தள்ளிபோனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்படும். அதேபோன்று மருத்துவ கலந்தாய்வை பொறுத்தும் தேதியில் மாற்றம் செய்ய நேரிடலாம்.

மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்- லைன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியை பெற முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை பற்றி தனக்கு தெரியாது என்று கருதும் மாணவர்களுக்காகவும் தமிழகத்தில் 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்தை மாணவர்கள் அணுகலாம்.

அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ்களும் உதவி மையத்தில் தான் சரிபார்க்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இல்லை. அவரது பெற்றோரோ அல்லது உறவினரோ அசல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும்.

உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் அங்கு பதிவுக்கட்டணத்துக்கான பணத்தை செலுத்த வேண்டும். ஆன்-லைன் மற்றும் உதவி மையத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அசல் கல்வி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்தை சான்றிதழ் சரிபார்ப்பின் போது அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போதே தங்கள் விருப்பப்படி எந்த உதவி மையத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஆன்-லைன் முறையிலான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான செயல் முறைகள் பற்றி மாணவர்களுக்கு வீடியோ காட்சி மூலம் உதவி மையத்தில் விரிவாக எடுத்துக்கூறப்படும்.

இதன்பின்பு, தரவரிசை பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்படும். இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் செயல்படும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கை செயலாளரை அணுகி குறைகளை சரி செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண் அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவ்வாறு பிரிக்கப்பட்ட குழுக்கள் கலந்தாய்வு சுற்றுகளில் மதிப்பெண்களின்படி அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கான முன்வைப்பு தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்திய பின்பு தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்யலாம். எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் வரிசையாக பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்படும்.

இதன்பின்பு, தற்காலிக இட ஒதுக்கீடு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களது லாக்-இன் மூலமாக மறுநாள் பார்த்துக்கொள்ளலாம். இதை 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கலந்தாய்வு குறித்த தகவல் அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும். அதேபோன்று இ-மெயிலுக்கும் தகவல் அனுப்பப்படும். மேலும், தகவல் அறிய விரும்புபவர்கள் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். அதேபோன்று 044-22359901-ல் தொடங்கி 22359920 வரையிலான தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, தொழிற்துறை படிப்புக்கான கலந்தாய்வு, ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படாத பட்சத்தில் அந்த இடத்தை நிர

மே 3ல், 'ஆன் லைன்' இன்ஜி., கவுன்சிலிங் பதிவு


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 3ல் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' குறித்து, அமைச்சர் அன்பழகன் தலைமையில், சென்னையில், நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

சான்றிதழ் சரிபார்ப்பு : உயர் கல்வி துறை செயலர், சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன், மாணவர் சேர்க்கை கமிட்டியின் உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவகாசம் : கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில், 567 கல்லுாரிகள் உள்ளன; அவற்றில், முதலாம் ஆண்டில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறஉள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள், தங்கள் ஊர்களில் இருந்து, சென்னைக்கு வர வேண்டாம்; கணினி வாயிலாக, விரும்பும் கல்லுாரியை தேர்வு செய்யலாம்.

 ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கு கிறது; மே, 30 வரை பதிவு செய்யலாம் விண்ணப்ப பரிசீலனைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இதற்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி மையங்களுக்கு, சான்றிதழ்களுடன் மாணவர்கள் செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு, ஒரு வாரம் அவகாசம் தரப்படும் அதன்பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கை துவங்கும். அதாவது, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை, ஆன்லைனில் தேர்வு செய்யலாம்.  இதற்காக, மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், தாங்களே கல்லுாரிகளை முன்னுரிமைப்படுத்தலாம்; எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், விருப்ப பட்டியலில் சேர்க்கலாம்.

 ஆனால், தரவரிசை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் விரும்பும் கல்லுாரியில், அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்

ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கு உதவ, அனைத்து மாவட்டங்களிலும், 42 இடங்களில், உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்ப கட்டணமாக, தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் மாணவர்களுக்கு, 250 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு, 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இந்த தொகையை, விண்ணப்ப பதிவின்போது, ஆன்லைனில் செலுத்த வேண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவு வர தாமதமானாலும், மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு ஏற்ப, கவுன்சிலிங் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மதிப்பெண்ணை தவிர, மற்ற விபரங்களை, மாணவர்கள் முதலில் நிரப்பி கொள்ளலாம். தேர்வு முடிவு வந்த பின், மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்யலாம்.  மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில், அரசு தேர்வுத் துறையிடம், மதிப்பெண்களை பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.நேரடி கவுன்சிலிங்! விளையாட்டு பிரிவினர், மாற்று திறனாளிகள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, ஒற்றை சாளர முறையில், நேரடி கவுன்சிலிங் நடத்தப்படும். தலித் மற்றும் அருந்ததியர் பிரிவினருக்கான காலி இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங்; மீதம் உள்ள இடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆகியவையும், நேரடியாகவே நடக்கும்.

இந்த பிரிவினர், விண்ணப்பத்தை மட்டும், ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தேகம் தீர்க்க தனி தளம்! கவுன்சிலிங்கின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும், மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வழி தகவலும், இ - மெயில் வழி தகவலும் அனுப்பப்படும். கவுன்சிலிங் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை, www.annauniv.edu என்ற, அண்ணா பல்கலை இணையதளத்திலும், tnea.ac.in என்ற, கவுன்சிலிங் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 2235 9901 - 20 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 22, 2018

புத்தக தினம்

💥உலக புத்தக தினம்💥
🌹மணிகண்டபிரபு🌹

"ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னல் திறக்கிறது" என்றார் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.மனித குல வரலாற்றில் மனிதனை மேம்படுத்தியதும், மனிதனை சிந்திக்கச் செய்து சமுதாய மாற்றத்துக்கு காரணமாய் அமைந்தவையும் புத்தகங்களே!

புத்தகம் எனும் பொக்கிஷம்

சிறகு விரிந்தால் பறக்கலாம்;புத்தகம் விரித்தால் படிக்கலாம்.சிந்தனை வானில் சுயமாய் நம்மை செதுக்கலாம். கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்பதை சொல்லித் தந்த புத்தகங்களை நாம்
1995 ஏப்ரல் 23ல் துவங்கி புத்தக தினத்தின் 22வது ஆண்டாக கொண்டாடுகிறோம்.

புத்தகங்களுக்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை நினைக்கும் வகையில் இந்நாள் இருக்கிறது.ஏ.கே செட்டியாரின் பயண அனுபவங்களும்,சி.சு செல்லப்பாவின் வாடிவாசலும்,புதுமைப்பித்தன் கதைகளும்,
ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கை வரையும் இன்றும் இளைஞர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் புத்தகங்களாக இருக்கின்றன.

துவக்க நிலையில் வாசிக்க துவங்கும்போது மனதின் முரட்டுத்தனம் பக்குவப்படாமல் புரிந்து கொள்ள சிரமப்பட்டு படிப்பதை கடினமாக்குவோம்.பின் மனதும் மூளையும் பக்குவப்பட்டு சமரசம் அடையும்.கேட்டு தெரிந்து கொள்வதை விட படித்து புரிந்து கொள்ளும் போது எழுத்தின் அழகியலும்,அதன் பின்னால் உள்ள அனுபவமும் வாசிப்பின் ருசியை பருக தூண்டும்.

காகிதம்

நான் தூய்மையானவனாக படைக்கப்பட்டேன்.அப்படியேதான் இருப்பேன்.மையினால் கரைபடுவதை விட எரிந்து சாம்பலாவதே சிறந்தது என்றது வெள்ளை காகிதம்.

மைகுப்பி ஒன்று அதை கேட்டு தன்னுடைய கருத்த மனதிற்குள் சிரித்துக் கொண்டது.அதன்பின் காகிதத்தின் பக்கம் திரும்பவேயில்லை.வண்ண எழுதுகோல்களும் செல்லவில்லை.அந்த வெள்ளை காகிதம் தூய்மையாக புனிதமாக காலமெல்லாம் கற்போடு இருந்தது வெறுமையாக..என்பார் கலீல் ஜிப்ரான்.

மனிதர்களும் வீம்பாக புத்தகம் படிப்பது நேர விரயம்.பணத்திற்கு செலவு என்பார்கள்.அவர்களுக்கு தெரியவில்லை புத்தகம் என்பது அறிவுக்கான முதலீடு என்று.வாசிப்பின் இன்பத்தை உணராதவர்க்கு மேற்சொன்ன ஜிப்ரானின் கதையே போதும்.

புதியதொரு உலகத்தில் பயணிக்க வரும் நிழலாக,தான் அனுபவித்த செய்திகளை நமக்கு அறிமுகம் செய்யும் ஆசானாக விளங்குகிறது.

வாசிப்பு ஒரு தவம்

புத்தகம் படிக்கும் முன் புத்தக வாசனை நுகர்ந்து பார்ப்பது ஒரு warm up.
அதற்கு ஈடு இணை கிடையாது.

வாயில்லா பிராணியின் கண்பார்வை பேசும் பேச்சை அறிவாளியின் ஆத்மா முழுமையாய் உணர்ந்து கொள்ளும் என்ற வரிகளுக்கு சால பொருந்துவது புத்தகங்களே.கண்ணை மட்டுமே பார்த்து பேசும் கண்ணியம் உண்டு.

நேருவின் வாசிப்பு அலாதியானது.கடந்த ஆண்டுகளில் புத்தகம் படிக்க குறைவான நேரமே எனக்கு கிடைத்தது.ஆசைபடும் அளவிற்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை.இன்றைய வாழ்க்கை முறை பற்றிய எனது அதிருப்திகளில் ஒன்று என நேரு பதிவு செய்திருப்பார்.மேலும் அந்நாளிலேயே 'டிரிப்யூன்,'ல யூரோப்" போன்ற பல்வேறு வெளிநாட்டு இதழ்களின் சந்தாதாரராக இருந்தார்.அவரின் "உலக வரலாறு" "இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்" போன்றவை புகழ்மிக்கவை.

பாரதியை பிடிக்க முயன்ற ஆங்கிலேய அரசு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஐரிஷ் நாட்டினர் நடத்திய பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தியுள்ளார் என்ற காரணம் காட்டி அவரை கைது செய்ய துணிந்ததிலிருந்து புத்தக வாசிப்புக்கு அந்நாளைய அரசாங்கம் தடை விதித்ததை காணலாம்.

காமிக்ஸ் புத்தகம்,ராஜேஸ்குமார் பாக்கெட் நாவல்களில் ஆரம்பித்து அப்துல்கலாம்,சுயமுன்னேற்ற நூல்களை படிப்போம்.அந்த கட்டத்தை கடந்தால் காண்பவை எல்லாம் அழகாய்த் தெரியும் கவிதையில் பய்ணிப்போம்.கல்லூரியில் சேர்ந்தவுடன் வரலாற்று நாவல்களில் குதிரையில் பறப்போம்.கல்கியையும் சாண்டில்யனையும் இரு கண்களாய் பார்த்து பூரிப்போம்.அதில் கொஞ்சம் தெளிவு பிறந்தவுடன் சுஜாதா எனும் பன்முக ஆளுமைக்கு வருவோம்.

சிறுகதைகள் சிறிது சிறிதாக புலப்பட ஆரம்பிக்கும்.வலிமை வாய்ந்த வல்லூறு போல் கொத்தி, ஜெயகாந்தன் நம்மை வாசிப்பு வானில் சமூக சிந்தனையுடனும்,யதார்த்த தத்துவத்துடனும் அவர் காட்டிய அனுபவ உயரத்தை அளக்க ஐம்புலன்கள் போதாது.

அடிப்படையான புத்தகங்களை படித்த பின் அடுத்த கட்ட நகர்வில் பல்வேறு மொழி பெயர்ப்பு புத்தகங்களும், நாவல்களை,கதைகளை,கவிதைகளை,கட்டுரைகளை ஆய்வு நோக்கில் அணுகும் மனப்பாங்கு வருகிறது.அது வாசித்தலில் நுனி வரை செல்லும் அனுபவம்.

நூலகம்

எளியோர்களின் போதி மரம் நூலகம் தான்.பல்வேறு மேதைகளை உருவாக்கும் பட்டறை.முந்தைய கால புத்தகங்களும்,அரிய பல பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்.
முதல் பதிப்போடு நின்று போன புத்தகங்களும்,பழுப்படைந்த பக்கங்களும் எழுதிய காலத்துக்கே நம்மை அழைத்து செல்லும். நூலகம் தான் புத்தகங்களை குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்கவும், புத்தகங்களை தேர்ந்தெடுக்கவும் பயிற்சி அளிக்கிறது.

ஏழைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,தமிழ்நாட்டின் நூலக தந்தை எனப் போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன், 1931ல் அக்டோபர் 21ல் மன்னார்குடி அருகில் மேலவாசலில் நடமாடும் நூலக வண்டிப்பயணம் தொடங்கப்பட்டது.அங்கு 72 கிராமங்ககில் 275 பயணங்கள் இந்த வண்டியில் புத்தகம் சென்றுள்ளது.ஏறத்தாழ இதில் 3782 புத்தகங்கள் 20000 தடவைக்கு மேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பெறப்பட்டதை நினைத்தால் புத்தகங்கள் மீது அவருக்கு இருந்த அன்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சிந்தனை மாற்றம்

புத்தக வாசிப்பில் புலமைபெற்ற பின் பேச்சிலேயே புதிய சொற்கள் பயன்படுத்துவதை காணலாம்.சிந்திக்க தூண்டும் கதைகள் கருத்தை கவரும்.

'அகிலன் எழுதிய காசுமரம்' கதையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தை காசினை விழுங்கிவிடும்.வயிற்றில் இருந்து காசுமரம் முளைக்கும் என மற்றவர் சொல்லிக் கேட்டிருக்க காசினை தொடர்ந்து விழுங்க குழந்தைஇறந்துவிடும். படிக்கும்போதே அகச்சூழலில் கற்பனை ஓடும் நிகழ்வுதான் வாசிப்பின் வெற்றி.குழந்தையின் அறியாமையையும் வாழ்வினையும் நம் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

"சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு" என்பர்.

"சிந்திப்பீர்!சிந்திப்பதில் கெடுதியில்லை.சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாக மாட்டீர்கள்.சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தின் அஸ்திவாரம்,ஆணி வேர் எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் புரியும் என்றார் பெரியார்!

உலக அனுபவங்களை அறியும் பெரு முயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது புத்தகமே.படிப்பதன் வாயிலாக அது தனது உலகை உருவாக்கிக் கொள்கிறது.படிப்பதால் கிடைக்கும் ஆனந்தத்தில் தான் வாசிப்பு இன்னும் திகட்டாமல் இருக்கிறது.இனியொரு முறை புத்தகம் வாங்கிச் செல்வோரை ஆசையாய்ப் பாருங்கள்.அவர் கேரி பேக்கில் வாங்கிச் செல்வது புத்தகத்தை அல்ல உலகை"!

-ப.மணிகண்டபிரபு
திருப்பூர்

பள்ளித் தேர்வுகள் நிறைவுபெற்றதால் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்


தமிழகத்தில் பள்ளிகளின் பொது தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக துணை மின் நிலையத்தில் இருந்து பீடர் என்ற வழித்தடம், டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மின் விநியோக பெட்டி உள்ளிட்டவை வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அதிக வெப்பத்துடன் இருக்கும்.

இதனால் அந்த சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த பணிகள் நடக்கும் இடங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதால் மின் சாதனங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பிப்ரவரி மாத இறுதியில் இருந்து மின் வாரியம் தடை விதித்தது.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:

தேர்வு நேரங்களில் மின் சாதனங்கள் பராமரிப்புக்காக மின் தடை செய்தால், மாணவர்கள் படிக்க சிரமப்படுவர் என்பதால், இரு மாதங்கள், மின் சாதனங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கவில்லை. அவசியம் இருந்த சில பகுதிகளில் மட்டும் உயரதிகாரிகள் ஒப்புதலுடன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், வழக்கம்போல் மீண்டும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் அனுமதித்துள்ளது. இதனால் பராமரிப்பு நடைபெறும் பகுதிகளில் பகல் வேளையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் கடும் வெயிலால் மின் தேவை அதிகரித்து வருவதால் பல இடங்களில் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஓரிரு தினங்களில் துணை மின் நிலையம் மற்றும் மின் சாதனங்களில் மீண்டும் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மின் தடை ஏற்படுவது தவிர்க்கப்படும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணைய வழியில் மின் கட்டண வசதி ரத்து: தமிழகத்தில் மின் கட்டணத்தை, மின்சார வாரிய கட்டண மையங்கள், இணையதளம், செல்லிடப்பேசி செயலி (செல்போன் ஆப்) வாயிலாகவும், அரசு இ - சேவை மையங்கள், தபால் நிலையங்களில் மூலமாகவும் செலுத்தலாம்.

Saturday, April 21, 2018

ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?


ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.

-மகுடேசுவரன்