இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 15, 2018

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி


வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.

Wednesday, February 14, 2018

சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு


காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் பொதுத்தேர்வும், அதை தொடர்ந்து, பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

வரும், 2018 - 19ம் கல்வியாண்டுக்கு நான்கு மாதங்களே உள்ளதால், கல்வித் துறை அதற்கேற்ப தயாராகி வருகிறது. தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக் குனர் (பணியாளர் தொகுதி) அலுவலகம், முன்னேற் பாடுகளை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மே, 31 ம் தேதி ஓய்வு பெற உள்ள உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டி யல் தயாரிப்பது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், (2016 மற்றும் 2017) ஆண்டுகளில் ஓய்வு பெற்றோர்; நடப்பு ஆண்டு ஓய்வு பெறுவோர், அதனால் பள்ளியில் ஏற்படும் காலி பணியிடம் குறித்த விபரங்களை, தனித்தனியே சேக ரித்து வருகின்றனர். இவ்விபரம், மாவட்ட அளவில் இருந்து, வரும், 16ம் தேதிக்குள் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், விரைவில் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள் ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, February 13, 2018

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விபத்து காப்பீடு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 37 ஆயிரத்து 201 அரசுப் பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவர்களும், 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவியர்களும் பயின்று வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகள் அனைவரும் விபத்து காப்பீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். எந்தெந்த சூழல்கள்: பள்ளி மாணவ-மாணவியர்கள் தங்களது பள்ளிக் கல்வி வாழ்க்கையில் பல்வேறு விபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது ஏற்படும் விபத்து, கல்விச் சுற்றுலா செல்லும் போது ஏற்படும் விபத்து, நாட்டு நலப் பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாரத சாரண-சாரணியர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் முகாம், பேரணிகளில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் விபத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்து, மின்கசிவு மற்றும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து, விஷ ஜந்துகளால் நிகழும் விபத்து, விடுமுறை நாள்களில் வெளியே செல்லும் போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து போன்றவற்றை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த விபத்துகளைச் சந்தித்து மரணமடையும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைவோருக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணத் தொகை அளிக்கப்படும். இந்தத் தொகையானது மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

10 வகுப்பு: நாளை முதல் 'ஹால் டிக்கெட்'


தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, தத்கல் உட்பட, ஆன்லைனில் விண்ணப்பித்த, தனித்தேர்வர்களுக்கு, நாளை, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வு குறித்த விபரத்தை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டம் அச்சிடும் பணி


புதிய பாடத்திட்டப்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணி, ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகவும், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளை கடந்தும், பாடத்திட்டம் மாறாமல் உள்ளது.

அதை மாற்ற, கல்வியாளர்கள் அறிவுறுத்தியதால், தமிழக அரசு, புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி, பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை கவனித்து வருகிறார். அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு, பாடத்திட்டத்தை வடிவமைத்து உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, பாட புத்தகம் எழுதும் பணி முடிந்துள்ளது.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்களுக்கு, மறு ஆய்வு பணிகள் துவங்கியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில், புதிய பாடபுத்தகங்கள் அச்சிடும் பணியை துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பாடத்திட்டம் நிறைவு பெற்றதும், அதற்கான ஒப்புதலை, தமிழக அரசு வழங்க வேண்டும். இதற்காக, புதிய பாடத்திட்ட அறிக்கை, முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த, 2011ல், தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஒப்புதல் கிடைக்காததால், அது, கடைசி வரை அமலுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய புதிய பாடத்திட்டத்திற்கு, முதல்வர் ஒப்புதலை பெற, அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

Monday, February 12, 2018

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் சீருடை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சீருடைகளை வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இது குறித்து அவர், சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு (2018-2019) முதல் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை; 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை; 9,10 வகுப்புகள்; பிளஸ் 1, பிளஸ் 2 என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையான வடிவமைப்பு, நிறங்களில் சீருடைகள் இருக்கும். ஒன்று முதல் 8 -ஆம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டு முதல் 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீருடையை வெளியில் வாங்கிக் கொள்ளலாம்.

சீருடைக்காக பெற்றோருக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு, சீருடைகளை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்க அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த ஆசிரியர்களை வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

Saturday, February 10, 2018

கல்விக்கடன் விண்ணப்பம்


மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கல்விக்கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் இல்லாத சூழலும், திறன்மிகு வகையில் செயல்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இதற்காக "வித்யாலட்சுமி"எனும் போர்ட்டலை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அந்த போர்டெல் மூலமே மாணவர்கள் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வித்யா லட்சுமி போர்டெல் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மட்டுமின்றி, கல்விக்கடன் தொகை குறித்தும் நிர்வகிக்கும்.

இந்த போர்டல் மூலம் இதுவரை 36 வங்கிகள் 13 ஆயிரத்து 190 மாணவர்களுக்கு கல்விக் கடனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வித்யா லட்சுமி போர்டலை நிர்வகிக்கும், என்எஸ்டிஎல் இ நிர்வாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ககன் ராய் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவை அமைப்பு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பத்தை நேரடியாக பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மாற்றாக, வித்யா லட்சுமி எனும் போர்டல் மூலமே கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற வேண்டும். அதன் மூலமே கல்விக்கடன் தொடர்பான பணிகள், ஒதுக்கீடு அனைத்தும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மாணவர்கள் வித்யா லட்சுமி போர்டலுக்கு வந்து பதிவு செய்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம், கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் போலியானவர்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கல்விக்கடன் வழங்குவது எளிதாகும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடட்டில் கல்விக்கடன் வழங்குவதில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த போர்ட்டலை தொடங்க உத்தரவிட்டது.

Thursday, February 08, 2018

மே 6-இல் நீட் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான "நீட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் "நீட்' தகுதித் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஆண்டு தடையின்றித் தேர்வு நடந்தது. இதனால், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இத்தேர்வுக்குத் தயார் செய்வதற்காக, தமிழக அரசு இலவசப் பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சியளித்து வருகிறது.

முதல் கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எப்போது?: இந்தச்சூழலில் 2018-ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 6-இல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தத் தேர்வில் பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கொள்குறி தேர்வு முறை (நான்கு விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது) அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதி: தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களாக இருந்தால் இந்த மூன்று பாடங்களிலும் 40 சதவீத மதிப்பெண்களுடனும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 25. ஆதார் கட்டாயம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டவர்களாக இருந்தால் கடவுச் சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எவ்வளவு?: தேர்வுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கான கட்டணம் ரூ. 750. இதர பிரிவு மாணவர்களுக்கு கட்டணம் ரூ. 1,400. ஆன்-லைன் விண்ணப்பம்: நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., இணையதளத்தின் (www.cbseneet.nic.in) வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்வு மையங்கள் அமைப்பது, முறைகேடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 32 மாவட்ட முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவர்கள் 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து பொதுத்தேர்வு எழுதி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இப்போது 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொத்தம் 27.29 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இதற்காக கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க கண்காணிப்புக் கேமரா அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். நீதிபோதனை புத்தகம்: பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் வருத்தமளிக்கிறது. மன அழுத்தம் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிதல், மரியாதை செலுத்துதல் உள்ளிட்ட நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நீதிபோதனைகள் குறித்த புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

ஒழுக்கத்துடன் நல்ல பழக்கங்களை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம். 48 மணி நேரத்துக்குள்...தமிழக மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு 48 மணி நேரத்தில் காப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று


அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது; பொது தேர்வுகளில், தரவரிசை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது; ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, கனவு ஆசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நற்சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியிலும், தினமும் குறைந்த பட்சம், 10 சதவீதம் பேர் விடுப்பு எடுப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை ஆய்வில், 15 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே, மிக குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு, வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 'இந்த நற்சான்றிதழ் வழங்குவதால், மற்ற, 4.35 லட்சம் ஆசிரியர்களும், அடுத்த ஆண்டில் நற்சான்றிதழ் பெறுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்த முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, February 07, 2018

நீட்' தேர்வுக்கு புதிய விதிகள் அறிவிப்பு; தனித்தேர்வர், தொலைநிலை படித்தவருக்கு தடை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு விதிகள் திருத்தப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள், தொலைநிலை படித்தவர்கள், நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகள், மீண்டும் திருத்தப்பட்டுள்ளன. அவற்றில், நீட் தேர்வு குறித்த, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இவை, இளநிலை மருத்துவ படிப்புக்கான ஒழுங்குமுறைகள் - 2017 என்ற பெயரில் அழைக்கப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிகள், நீட் தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, தேர்வை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிகள் வருமாறு:

● பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்ட விதிகளின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

● இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேரும் ஆண்டின், டிச., 31ல், 17 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு நடக்கும் நாளில், 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க கூடாது. இதில், பொது பிரிவு தவிர, மற்ற இனத்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, அதிகபட்ச வயதில், ஐந்து ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்படும்

● பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1, பிளஸ் 2 என, பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் தொலைநிலை கல்வியான, திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்லாத தனித்தேர்வர்கள், நீட் தேர்வு எழுதஅனுமதிக்கப்பட மாட்டார்கள்

● இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' பாடப்பிரிவுகளில் படித்திருத்த வேண்டும். பிளஸ் 2வில் வேறு பிரிவுகளில் படித்து, உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகளை கூடுதலாக எடுத்திருந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது

● பொது பிரிவு மாணவர்கள், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களில், பிளஸ் 2 தேர்வில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். மாற்று திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இடங்கள் தனியாக ஒதுக்கப்படும்.இவ்வாறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.