இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, March 15, 2017

50 ரூபாயில் சேமிப்புக்கணக்கு- இருக்கவே இருக்கு போஸ்ட் ஆபீஸ்


வெறும் 50 ரூபாயில் சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். 500 ரூபாய் வைப்புத் தொகையாக இருந்தால் செக் புக் வசதி கொடுக்கிறார்கள். வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

• எந்த வித கட்டணம் இல்லாமல் ஏடிஎம் கார்டும் கொடுக்கிறார்கள். ஏடிஎம் கார்டுக்கு ஆண்டுக்கட்டணம் எதுவும் கிடையாது.

• போஸ்ட் ஆபீஸில் உள்ள ஏடிஎம்மில் கட்டணமின்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

• கோயமுத்தூர் நகரில் மட்டும் நான்கு ஏடிஎம்கள் போஸ்ட் ஆபீஸ் வளாகத்தில் இயங்குகின்றன. கோவை மண்டலத்தில் 22 ஏடிஎம்கள் உள்ளன. அது போல் தமிழகம் முழுவதும் பல ஏடிஎம்கள் போஸ்ட் ஆபிஸ் வளாகத்தில் இயங்குகின்றன.

• தவிர எந்த போஸ்ட் ஆபிஸிலும் அடையாள அட்டை காட்டி, பணம் பெற்றுக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ முடியும்.

• உதாரணமாக பெற்றோர் கணக்கில் மகனோ மகளோ சென்னையில் பணம் செலுத்தினால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்து தபால் நிலையத்தில் பெற்றோர்கள் உடனடியாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

• அவசரத்திற்கு எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம்.

• வங்கிகள் இல்லாத ஊர்களிலும் தபால் நிலையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகிறது. 150 வயதாகும் இந்திய தபால் துறைக்கு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் போஸ்ட் ஆபீஸ்கள் உள்ளன.

• போஸ்ட் ஆபிஸ் ஏடிம் இல்லாத ஊரில், அலுவலக நேரத்திற்கு பிறகு பணம் தேவைப்பட்டால் அருகில் உள்ள எந்த வங்கியின் ஏடிஎம்மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வங்கிக்கான குறிப்பிட்ட கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

• தலைமை மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்டெர்நெட் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள அலுவலகங்கள் இன்னும் ஓராண்டுக்குள் இன்டெர் நெட் மூலம் இணைக்கப்பட உள்ளன.

• சேமிப்பு வங்கிக் கணக்கு தவிர இப்போதெல்லாம் மணி ஆர்டரில் ஒரே நாளில் பணம் கிடைக்கும் வசதியும் உள்ளது.

• காலை பத்தரை மணிக்குள் மணி ஆர்டருக்கான பணத்தை செலுத்தி விட்டால், சேர வேண்டிய ஊரின் போஸ்ட்மேன் அன்றே பணத்தை உரியவருக்கு பட்டுவாடா செய்து விடுவார்.

• அலுவலகத்தை விட்டு போஸ்ட் மேன் சென்று விட்டால், பணத்திற்குரியவர் அந்த தபால் நிலையத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

• விரைவில் அனைத்து போஸ்ட்மேன்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகளும் வர இருப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.

• வங்கிகளின் ஏகபோக கெடுபிடிக்களுக்கு மத்தியில், 50 ரூபாய்க்கு ஏடிஎம் கார்டுடன் கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப்பிரசாதம்தானே!

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு


பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும்.

இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்


ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

எழுத்துத் தேர்வுக்கு பின், 'நேர்முகத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பணி ஒதுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், 'எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் சேர்த்து, பணி ஒதுக்கீடு பட்டியல் வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு முடிவை அறிவிக்க, தேர்வுத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தேர்வர்களின் மதிப்பெண்படி, நேர்முகத் தேர்வுக்கான தரவரிசை பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. -

Tuesday, March 14, 2017

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்


ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கோதுமை தேவையில்லையெனக் கருதுவோருக்கு நியாயவிலைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் விலையில்லா அரிசி விநியோகிக்கப்படும். எவ்வித ஆதரவும் இல்லாமல் தனித்து வாழ்வோர் குடும்ப அட்டை பெறுவதில் எவ்விதத் தடையும் இல்லை.

'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன. மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப வினியோகம், 6ல் துவங்கியது. வரும், 22 வரை விண்ணப்பம் பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படி, டெட் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின், அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.அதனால், ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ''டெட் தேர்வே, 2011க்கு பின் தான், தமிழகத்தில் நடத்தப்படுகிறது. 2010 முதல், பணியில் சேர்ந்தவர்கள், எப்படி தேர்வு எழுத முடியும். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை தெளிவான விளக்கம் தர வேண்டும்,'' என்றார்.

Monday, March 13, 2017

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16–ந் தேதி (நாளை மறுநாள்) மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

20 அம்ச கோரிக்கைகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனை இன்றி அரசு தொடர வேண்டும், ஊழியர் அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 16–ந் தேதி (நாளை மறுநாள்) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் நடத்தும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

பேச்சுவார்த்தை
7–வது ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு (2016) வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, சங்க பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை வாக்குறுதிகளை நம்பி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இந்த கமிட்டிகள் அமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் நம்பிக்கை தரும் எந்தவித அறிக்கையும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துபடி உள்ளிட்டவையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.

1¼ லட்சம் பேர் பங்கேற்பு
இதையடுத்து மத்திய அரசுக்கு ஒரு அழுத்தம் தரவேண்டும் என்ற வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க முடிவு எடுத்துள்ளோம். தபால்துறையில் கிராமப்புற ஊழியர்கள் 2½ லட்சம் பேருக்கு கமிட்டி பரிந்துரைகளின் படி பணிஆணை வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனையின்றி அரசு தொடர வேண்டும், அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 16–ந் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதில் தபால் துறையின் அனைத்து சங்கங்கள், வருமான வரித்துறை சங்கங்கள், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள்–ஊழியர்கள், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் ஊழியர்கள் என 105 சங்கங்களின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 1¼ லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் 12½ லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் மே மாதம் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்குமா?


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு கணக்கெடுக்கப்படும் குழந்தைகள், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.

இதற்கான சுற்றறிக்கை மார்ச் மாதத்தில் வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் குழு அமைத்து பணிகளை தொடங்குகின்றனர். நடப்பு ஆண்டுக்கான சுற்றறிக்கை வட்டார வள மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் குழு அமைத்து பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி வரும் மே மாதம் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, `உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் தேர்தல் பணிகள் வழங்குவதால் கணக்கெடுப்பு மே மாதம் தொடங்குமா என்பதுசந்தேகம்.’’ என்றனர்.

கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா?


அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் அறிமுகமானது. அப்போது, கணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ' பட்டம் பெற்றவர்கள், கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

பின், கணினி அறிவியல் படித்த, மற்ற பாட ஆசிரியர்கள், வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. அதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்; அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும், சிறப்புத் தேர்வு நடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணியிடம், 'சார் நிலை பணியாளர்' என, அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளாக, கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. ஆசிரியராக சேரலாம் என, பி.எட்., முடித்த, 40 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மற்ற பாடங்களைப்போல, கணினி அறிவியலுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை பட்டம் முடித்தவர்களை, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏப்., 15 வரை விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், மார்ச் 2ல், பிளஸ் 2; மார்ச் 8ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இரு தேர்வுகளிலும், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்க உள்ளது. ஏப்., 15க்குள் விடை திருத்தங்களை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

பல ஆசிரியர்கள் விடை திருத்தத்தில் இருந்து தப்பிக்க, மருத்துவ விடுப்பு, காது குத்து, கல்யாணம் என, பல சாக்கு போக்குகளை சொல்லி, விடுப்பு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.அதனால், அனைத்து அரசு பள்ளிகளிலும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஏப்., 15 வரை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இதற்கான உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இன்று முதல் கொண்டாடுவோம், 'ஹேப்பி பை டே!'


'பை' என்றால் பொருட்கள் எடுத்துச் செல்லும் பை தான், அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால் கணித நிபுணர்களிடம் கேட்டால், 'பை என்றால் கணிதத்தில் ஒரு முக்கிய எண் (π)' என்று, சரியாக சொல்லி விடுவார்கள்! ''எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் 'π ' என்கிற இந்த முக்கிய எண் தோன்றுகிறது.

இதன் மதிப்பு, 3.14. பெரும்பாலான பொருட்கள், வட்ட வடிவத்தில் காணப்படுவதால், இயற்கையோடு, பை பின்னிப் பிணைந்துள்ளது,'' என்கிறார், கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு. 'கணிதம் இனிக்கும்' எனும், தனது சமீபத்திய புதிய கண்டுபிடிப்பின் வாயிலாக, பரவலாக அறியப்படுபவர் இவர். கணிதத்தில் மிக முக்கிய எண்ணாக, π விளங்குவதாலும், அதன் மதிப்பு தோராயமாக, 3.14 என வருவதாலும், மார்ச் 14 என்ற தேதி வாயிலாக, πயை அமெரிக்கர்கள் நினைவுகூர்கின்றனர். இது குறித்து உமாதாணு கூறியதாவது: கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின், மேற்பரப்பு, கொள்ளளவு ஆகியவற்றை கணக்கிட, பை பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோளத்தின் சுற்றளவை, விட்டத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பே π. இதை கண்டு பிடித்த கிரேக்க கணித மேதை ஆர்க்கிமிடீஸ், அவரது மொழியில், π என அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த அடையாளத்துக்கு தோராயமாக, 3.14 என்ற எண்ணை பயன்படுத்தினார். π-ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம் போன்ற எண்ணற்ற முக்கிய விஷயங்களுக்கு பயன்படுகிறது.

வில்லியம் ஜோன்ஸ் என்ற கணித அறிஞர், 1706-ல் π என்ற எண்ணுக்கு இன்று நாம் பயன்படுத்தும் குறியீட்டை அறிமுகப்படுத்தினார். அன்றாட வாழ்வில் இதன் முக்கியத்துவத்தை, உலகுக்கு உணர்த்த, 1988 முதல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர், பை தினத்தை முதலில் கொண்டாடினார். அமெரிக்காவில் சில மாகாணங்களில், π தினத்தைக் கொண்டாட, விடுமுறையே அளிக்கப்படுகிறது. πக்கு வட்டத்துடன் நேரடிதொடர்புள்ளதால், வட்ட வடிவில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளை தயார் செய்து, விழா நிறைவு பெற்றதும் உண்டு மகிழ்வார்கள்.

இதன் மதிப்பை, பாபிலோனியர்கள் 25/8 என்றும், எகிப்தியர்கள் 256/81 என்றும், டாலமி என்ற அறிஞர் 377/120 என்றும், கிரேக்கக் கணித மேதை ஆர்க்கிமிடிஸ் 22/7 என்றும், சீனர்கள் 355/113 என்றும், இந்தியாவின் ஆர்யபட்டர் 62832/20000 என்றும் பின்பற்றினர். கணினியின் துணை கொண்டு பல அறிஞர்கள் π-ன் மதிப்பை இன்று, 13 டிரில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்டறிந்துள்ளனர். ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்க கணக்கீடுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில், வேலுார் பல்கலை மாணவர் ராஜ்வீர் மீனா, 2015 மார்ச் 21ல், π-ன் உண்மை மதிப்பை, கண்களை மூடிக்கொண்டு சரியாக ஒப்பித்து, புதிய கின்னஸ் சாதனை படைத்தார். கணிதத்தில் மிகவும் முக்கியமான π என்ற எண் குறித்து, நம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பை பிறந்த நாளை, நம் பள்ளிகளிலும் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினால், இது போல் பல புதிய கணித கண்டுபிடிப்புகள், நம் மாணவர்களிடம் இருந்தும் உருவாகலாம். இவ்வாறு, உமாதாணு கூறினார்.

காதலர் தினம் போன்ற பயனற்ற நாட்களை கொண்டாடுவதை விட்டு, விட்டு, இன்று முதல் பள்ளிகள்தோறும், 'பை தினம்' கொண்டாடுவோம். எங்கே சொல்லுங்கள்... ஹேப்பி பை டே!

சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு


தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன.

அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில், தேவை கருதி 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், கல்வித்துறையில் 11 ஆண்டுகளாக இவ்வகை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நடக்கவில்லை.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில் டி.இ.டி., தேர்வுகள் நடத்த முடிவானபோது, சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மாநிலம் முழுவதும், தற்போது 50 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர் படிப்பு முடித்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த அப்போது இருந்த கல்வி அதிகாரிகள், அமைச்சர்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது டி.இ.டி., தேர்வு நடத்தவுள்ள நிலையில், சிறப்பு தகுதி தேர்வும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு இசை ஆசிரியர் கழக மாநில செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர நியமனங்கள் நடக்கவில்லை. சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.டி.இ.டி., தேர்வுடன் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஏப்ரல் 1முதல் அமல்-எஸ்.பி.ஐ


சேமிப்பு கணக்கில் குறைந்தது 5000 ரூபாய் இருக்க வேண்டும் என்ற ஸ்டேட் வங்கியின் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 1000 முதல் 5000 ரூபாய் வரை இருக்க வேண்டும் ஸ்டேட் வங்கி தெரிவித்து இருந்தது. இதற்கு சமானிய பொதுமக்கள் பலர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 5000 ரூபாய் குறைவான சம்பளம் பெரும் ஊழியர்களும் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களால் இந்த தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்பது சிரமம் என்று தெரிவித்தனர். இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசின் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல கணக்குகள் ஸ்டேட் வங்கியிடம் தொடங்கப்பட்டு அதனை கையாள நேரம் அதிகரித்து உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்கள் கணக்குகளில் குறைந்தபட்சம் 5000 ரூபாயும், ஓரளவு குறிப்பிட்ட நகரங்களில் இருப்பவர்கள் 2000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 1000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து பற்றாகுறைவுக்கு ஏற்ப சேவை வரியுடன் சேர்த்து கட்டணம் பிடித்து கொள்ளப்படும்.

இதேப்போன்று மாதம் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ பணம் பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனார். இதற்கு வாடிக்கையாளர்க்ள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.