Click below
https://drive.google.com/file/d/0B69z3JTclPnxM1plX1Vpdnp4Zjg/view?usp=sharing
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத கால நீட்டிப்பு செயய் வேண்டும். இல்லையெனில், தங்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ. நடத்தும் "நெட்' தேர்வுக்கு திங்கள்கிழமை முதல் நவம்பர் 16-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி பெறவும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.
இதன்படி, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 2017 ஜனவரி 22-இல் நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in எனும் இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 17) முதல் நவம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை நவம்பர் 17-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.
முதன் முறையாக யோகா பாடம்: வழக்கமாக, பொருளாதாரம், அரசியல் அறிவியல், தத்துவம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் என 80-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளின் கீழ் நெட் தேர்வு நடத்தப்படும். இந்த முறை 100 பாடப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதில், யோகா பாடமும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. யோகா பாடத் திட்டமும், முக்கிய அம்சங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.நாடு முழுவதும், வரும், 29ல், தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். அதனால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு, பலர் உடல் அளவில் பாதிக்கப்படுகின்றனர்; சில இடங்களில், உயிரிழப்பும் ஏற்படுகிறது.தீ விபத்து இல்லாமல் பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாட, மாணவர்களுக்கு அறிவுறுத்தும்படி, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தீயணைப்பு துறையினர் மூலம், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது
பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு:
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கொடியை பிளாஸ்டிக் தாளில் அரசு விழாக்களில் பயன்படுத்த கூடாது. தேசிய கொடியை பயன்படுத்திய பின்னர் தரையில் போடுவதோ, அல்லது தகாத முறையில் பயன்படுத்துவதோ கூடாது. தேசிய கொடி மற்றும் அரசு சின்னங்களை பயன்படுத்த தகுதி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த தகவலை உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
விரும்பிய இடங்களுக்கே பணியிட மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்ந்தனர். ஆனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் விடுவிப்பு உத்தரவுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த மாவட்ட ஆசிரியர்கள் தங்களுக்குரிய பணியிடங்களில் சேரமுடியாமல் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் விடுவிக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் விடுவிப்பு உத்தரவு வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். ஆனால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் ரத்தாகிவிட்டது.
எனவே, விடுவிப்பு உத்தரவு வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். உதவி தொடக்க கல்வி அதிகாரியோ, மாவட்ட கல்வி அதிகாரியை பாருங்கள் என்று கூறுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியை சந்தித்தால், இயக்குநரை சந்தியுங்கள் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். தொடக்க கல்வி இயக்குநரை கடந்த வாரம் ஆசிரியர்கள் சந்தித்து முறையிட்டனர். அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் 5 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, 'மொபைல் போன் ஆப்' கொண்டு வரப்பட உள்ளது.
ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள், இதை செய்வதில்லை. பதிவேட்டில் மட்டும், 'ஆசிரியர் சிறப்பாக பாடம் நடத்துகிறார்' என, எழுதி விடுகின்றனர்.
அதனால், ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின்
செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர்.
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, 'ஆன்' செய்து, புகைப்படம் எடுக்கலாம்; ஆசிரியர் பாடம்
நடத்துவதை, 'ஆடியோ' பதிவு செய்யலாம்; 'வீடியோ'வும் எடுக்கலாம். அதை அப்படியே,
அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
'ஆப்' எப்படி செயல்படும்?
* ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம்
நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்
* பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்
* ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும்
* கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார்,
எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்
* உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம். தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களின் பணிகளை எளிமைப்படுத்துவதற்காக, சென்னை மாவட்டத்தில், சோதனை அடிப்படையில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக, செப்., 1 முதல், 30 வரை, வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன; இரண்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டதால், ஒரு மாதத்தில், 21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றை சரிபார்க்கும் பணி, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தரப்பட்டு உள்ளது. அவர்கள், உரிய அலுவலகங்களுக்கு சென்று, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். பின், ஓட்டுச்சாவடி பகுதி களில் உள்ள, விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று, கள ஆய்வு செய்து தகவல் அனுப்ப வேண்டும்.
இதற்காக மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு, பல முறை அலைய நேரிடும். இதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், 'புதிய ஆப்' ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்கள் அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு செய்து, தகவல் உண்மையா; தவறானதா என, மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.வாக்காளர் விண்ணப்ப படிவத்தில், திருத்தம் செய்ய விரும்பினால், அதையும் ஓட்டுச்சாவடி அலுவலரின், மொபைல் ஆப் வழியே செய்யலாம்.
சோதனை ரீதியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இது செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 2,750 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, இந்த வசதி ஏற் படுத்தி தரப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இணைய இணைப்பு கிடைக்காத பகுதிகளில், மொபைல் போனில் பதிவுசெய்து, இணைப்பு கிடைக்கும் பகுதிக்கு வந்ததும் அனுப்பலாம். இத்திட்டம் படிப்படியாக, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்
தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, கல்லுாரி உதவி பேராசிரியராகவும், இளநிலை ஆராய்ச்சி மாணவராகவும் சேர, நெட் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வு, நாடு முழுவதும், 90 நகரங்களில், 2017 ஜன., 22ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவு, வரும், 17ல் துவங்குகிறது; நவ., 16ல் முடிகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர, 2017 ஜன., 1ல், 28 வயதை தாண்டியிருக்கக் கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு இல்லை என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கண்டனம்:
கடந்த, 2014ல், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், கல்வி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. பள்ளிப் பாடங்களில் சமஸ்கிருதம் சேர்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், கல்வி, காவி மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டின. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மறுப்பு தெரிவித்து வருகிறது.
நிபுணர் குழு
இதற்கிடையே, 30 ஆண்டுகளுக்கு மேலாக, எவ்வித மாற்றம் இன்றி நீடித்து வரும் கல்விக் கொள்கையில், தற்காலத்துக்கு ஏற்ப அதிரடி மாற்றங்களை புகுத்த, மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்தது. புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான, நிபுணர் குழுவிடம், மே மாதம் ஒப்படைக்கப்பட்டது.
உயர்மட்டக் கூட்டம்
புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறக் கூடிய விஷயங்களின் சாராம்சம், 40 பக்கத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, பார்லி மென்ட் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டுப் பெற, மனித வள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில், கல்விக் கொள்கை, தொடர்புடைய பிரச்னைகள், இதுவரை பெறப்பட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
விவாதம்:
சி.ஏ.பி.இ., எனப்படும், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உயரதிகாரிகளுடன், மற்றொரு ஆலோசனைக் கூட்டம், 25ல் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை, எட்டாம் வகுப்பு வரை, 'பெயில்' ஆக்காமல், தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு
தொடக்க கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆதார் அட்டை பெற இதுவரை பதிவு செய்யாத மாணவர்களை அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆதார் அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி, மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் அட்டை பெற்று 100 சதவீதம் இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வில், அதிக தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு காட்டப்படுகின்றன.
தேர்வெழுதிய முறை குறித்தும், தவறுகள் குறித்தும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது; அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், பள்ளிகளின் காலாண்டு தேர்வு தேர்ச்சி பட்டியலை பெற்று வருகின்றனர்.
பாட வாரியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பின்தங்கிய பள்ளி மற்றும் பாட ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட உள்ளது. 'வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் சார்பில், 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. அதிக செல்வாக்கு : வருவாய் துறை ஊழியர் சங்கங்களைப் போல, ஆசிரியர் சங்கங்களும் வலுவாக உள்ளன. இந்த சங்கங்கள் நினைத்தால், பள்ளிகளை இயக்கவும், மூடவும் முடியும் என்ற நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வில் தலையிடுவது; சாதகமில்லாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அனுப்புவது என, ஒவ்வொரு சங்கமும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன. அதனால், சங்க நிர்வாகிகளுக்கு, கல்வித் துறையில் அதிக செல்வாக்கு உள்ளது.
இடமாறுதல் கவுன்சிலிங்கில், அரசியல் செல்வாக்கு உள்ளோருக்கு சமமாக, சில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும், ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், சங்க நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு, பணிக்கு செல்லாமல், சொந்த பணிகளையும், சங்க பணிகளையும் பார்ப்பதாக கூறப்படுகிறது.
புகார் : சில ஆசிரியர்கள், தங்களுக்கு பதிலாக, வேறு சிலரை, 'உள் சம்பளத்துக்கு' அமர்த்தி, வருகை பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்திட்டு, சம்பளம் பெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைத்து ஆய்வு நடத்த, உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சங்க நிர்வாகிகள் பணியாற்றும் பள்ளிகளின் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது; விரைவில், அதிரடி ஆய்வு நடக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, சில ஆசிரியர்களிடம் விசாரித்த போது, 'பெரும்பாலான சங்க நிர்வாகிகள், பள்ளி விடுமுறை நாட்களிலேயே, சங்க பணிகளை பார்க்கின்றனர்; அதிகாரிகள் செயல்பாட்டை, முதலில் ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.
தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தீபாவளிக்கு போனஸ் கிடையாது. மாறாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட, வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
பண்டிகை முன் பணம் என்றழைக்கப்படும் இந்த தொகையின் மூலம் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு, புதிய ஆடைகள் எடுத்து, பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த தொகையானது, மாதந்தோறும், 500 ரூபாயாக, சம்பளத்தில் பிடிக்கப்படும். பெரும்பாலான ஆசிரியர்கள், வீட்டுக்கடன் பெற்றுள்ளதால், சம்பளத்தில் பெரும்பகுதி கடனுக்கு சென்று விடுகிறது. எனவே, பலர் இந்த பண்டிகை முன் பணத்தையே நம்பி உள்ளனர்.
இந்த ஆண்டு, பண்டிகை முன்பணம் குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. ஆசிரியர்கள், பண்டிகை முன்பணம் கேட்டு, தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்தால், அரசு அறிவிப்பு வரவில்லை என, விண்ணப்பத்தை வாங்க மறுக்கின்றனர். அதனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது