இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 09, 2016

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பில்லை: அரசு அலுவலர் ஒன்றியம் உள்பட 5 சங்கங்கள் அறிவிப்பு


சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்பட 5 சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.பழனியப்பன், தலைமை செயலர் கே.ஞானதேசிகன், நிதித்துறை செயலர் சண்முகம், பணியாளர் சீர்திருத்தத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஒன்றரை மணி வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 1.50 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 8-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அதற்கான அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் மூத்த அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றார்

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை: அரசுடனான பேச்சில் உடன்பாடு


தமிழக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஆறாவது ஊதியக் குழுவின் அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உள்பட 5-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அறிவிப்புகள் இல்லாவிட்டால் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதேர்வுக்கு முன்பு ஜாதி, இருப்பிட சான்று


ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்காக வேறு பள்ளியில் சேர வேண்டியநிலை உள்ளது. இதனால் அவர்கள் சான்றிதழ்கள் வாங்க தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து 8 ம் வகுப்பு மாணவர்களுக்காவது தேர்வுக்கு முன்பு சான்றிதழ் வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுதலின்றி அனைத்து மாணவர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று வருவாய்த்துறையிடம் மொத்தமாக ஒப்படைக்க வேண்டும். பின் ஜாதி, இருப்பிடச் சான்றுகளை பெற்று மாணவர்களிடம் வினியோகிக்க வேண்டும். இதற்காக மாணவர்களை தாலுகா அலுவலகங்களுக்கு அலையவிட கூடாது எனவும், தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களிடம்'ஸ்டிரைக்' குறித்து வாக்கெடுப்பு


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் ஏப்., 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டு போராட்ட குழு, ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், 'ஏப்., 11 முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது, மார்ச், 11ல் அதற்கான நோட்டீஸ் கொடுப்பது' என, முடிவு செய்யப்பட்டது.

அதேசமயம், வேலை நிறுத்தம் தொடர்பாக ஊழியர்களின் கருத்தை அறிய, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளனர். நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்களிடம் நாளை (பிப்.,11) முதல் முதல், 13ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடக்கிறது. கோரிக்கைகள் என்ன விலைவாசி அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு ஊக்கத்தொகை, ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு பதவி உயர்வுக்கும், இரண்டு ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பிரிவு சூப்பர்வைசர்களுக்கும், 5,400 ரூபாய், 'கிரேடு' சம்பளத்திற்கு இணையான புதிய சம்பளம் வழங்க வேண்டும்.

Monday, February 08, 2016

விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்களுக்கு கல்விசாரா பணி:TNPTF தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி


மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட கல்விசாரா பணிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சி.பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் கூடுதல் பணிதான் ஆதார் எண் இணைக்கும் பணி. இரண்டும் வேறு வேறு பணி அல்ல. இது அலுவல் பணி மட்டுமே, பொதுமக்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேரிடர் கால உதவி, தேர்தல் பணிகளில் ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம் எனச் சட்டம் உள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், இது அலுவலகப் பணி போன்றதல்ல. ஆசிரியர்கள் வேலை நேரங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் ஆதார் எண் குறித்த தகவல்களைச் சேகரித்து பணிகளை முடிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது என்றார். பின்னர், அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், பள்ளிப் பணி நேரங்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தவில்லை.

இது கூடுதல் பணியாகவே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் விடுமுறை நாள்களில் மட்டும் இதுபோன்ற பணிகளுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Sunday, February 07, 2016

கல்வி வணிக பொருள் அல்ல அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்


கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவில்பட்டியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு பிப்.5 ல் துவங்கியது. 3 நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர்.மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சம்மேளன மாநிலத்தலைவர் முத்துசுந்தரம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய அரசு ஆசிரியர்கள் இணையான ஊதியம் இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்த வேண்டும்.

இலவச கல்வி உரிமையை பாதுகாக்க அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை பாதுகாக்க, ஆங்கில சுய நிதிப்பள்ளிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். கல்வி,சுகாதாரம், வேளாண் திட்டங்களுக்கு மானியங்களை குறைக்க கூடாது, மத்திய அரசு கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று மாலை ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலமும், சவுந்திரராஜன் எம்.எல்.ஏ., பங்கேற்ற பொதுக்கூட்டமும் நடந்தது.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: தொடக்கக்கல்விஇயக்குநரின் செயல்முறைகள்.028577/ஜே2/.2.16: Inspire Award அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

Friday, February 05, 2016

29 மாவட்டங்களுக்கு புதிய டிஇஓ நியமனம்


கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்ைன பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.

7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு

புதுடெல்லி, பிப். 5–மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது.இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார்.7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்.

Thursday, February 04, 2016

10ம் வகுப்பு தேர்வு'ஹால் டிக்கெட்' தயார்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், ஹால் டிக்கெட்டைwww.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலின்போது, 65,616 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதலாக, 2,580 ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், வரும் சட்டசபை தேர்தலின்போது, 68,196 ஓட்டுச் சாவடிகளில், வாக்குபதிவு நடைபெறும்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி, 99.5 சதவீத ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, சரி பார்க்கும் பணி, சென்னையில், 8ம் தேதி துவங்குகிறது.

Tuesday, February 02, 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!


ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு


தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் விவரம்:

*பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 11ல் தேர்வு துவங்கி மார்ச், 31ல் முடிகிறது

* 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு, ஏப்., 5ல் துவங்கி, ஏப்., 21ல் முடிகிறது

* 9ம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வை, மார்ச், 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

*பிளஸ் 2வுக்கு, செய்முறை தேர்வை, பிப்., 5ல் துவங்கி, 25க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது

*10ம் வகுப்புக்கும், பிப்., இறுதிக்குள் செய்முறை தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தர அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்., 13ல் முடிகிறது.

Monday, February 01, 2016

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்கள் பாதிப்பு


ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' நடத்திய போராட்டத்தால், நேற்று வகுப்புகள் நடைபெறாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, ஜாக்டோ நடத்திய போராட்டம், மூன்றாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால், போராட்டத்தால் பாதிப்பில்லை. ஆனால், நேற்று வேலை நாள் என்பதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் ஆசிரியர்கள் மறியலில் கைதாகினர்.

சில இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதில், தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், சத்துணவு மட்டுமே வழங்கப்பட்டது; பாடம் நடத்தப்படவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் மூலம், மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கணக்கெடுப்பு: மறியல் போராட்டம் காரணமாக, பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை, போலீசாரும், கல்வித் துறையினரும் தனித்தனியாக சேகரித்துள்ளனர். ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும், உளவுத்துறை மற்றும் உள்ளூர் போலீசார், 'மப்டி'யில் சென்று, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்களின் பெயர் விவரங்களை சேகரித்துள்ளனர்.ஆசிரியர் பணி பதிவேட்டில், போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான குறிப்புகள் இடம் பெறலாம் என்பதால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.