இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 28, 2016

மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்


மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான "ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான "ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன.

குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் "ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள்.

எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர்.

272 விரிவுரையாளர் நியமனம் : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு


பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளர் பணிக்கு, 272 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு, செப்., 17ல் நடக்க உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தமிழக ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்ற, 272 விரிவுரையாளர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். மூத்த விரிவுரையாளர், 38; விரிவுரையாளர், 166; இளநிலை விரிவுரையாளர், 68 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள், ஜூலை, 15ம் தேதி முதல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும். ஜூலை, 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., அலுவலகங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.

நேரிலோ, தபாலிலோ டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது. விண்ணப்பங்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தில் எந்த வகுப்பின ருக்கும் சலுகை இல்லை. ஜூலை, 31ம் தேதி, 57 வயதை தாண்டுவோர் விண்ணப்பிக்க முடியாது. அனைத்து வகுப்பினருக்குமான, 69 சதவீத இடஒதுக்கீடு, தமிழில் முதுகலையுடன் எம்.எட்., படித்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகை உண்டு. எழுத்துத்தேர்வில், மூன்று தாள்களில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் இருக்கும்.

முக்கிய பாடம் மற்றும் ஆசிரியர் பயிற்று முறை பாடங்களுக்கு, தலா, 70 மதிப்பெண்; பொது அறிவுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு தொடர்பான பாடத்திட்டம் மற்றும் விரிவான தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Sunday, June 26, 2016

தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை


தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு அளித்த நிதி உதவியும், அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என, மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை தமிழக பள்ளிக்கல்வி செயலரிடம் பெற்றுள்ளது. இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான திட்டங்களையும், அதற்கான நிதியையும் அறிக்கையாக அளித்து, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி உதவி கேட்டுள்ளது.

இதை பரிசீலித்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட பிரிவு, தமிழகத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நிபந்தனைகள் என்ன?

தமிழக அரசு அனுமதி கேட்ட திட்டங்களும், நிதியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால், மாநில அரசின் திட்ட பங்கீடு சரியாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், பெற்றோர், கல்வியாளர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு கண்டிப்பாக அமைத்து, அவர்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அந்த கணக்கில் பள்ளியின் வளர்ச்சி நிதி வழங்கப்படும்.

கடந்த கல்வி ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் நிறைவு சான்றிதழை அளித்த பிறகே, முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்படும். இரண்டாவது தவணை நிதியானது, மாநில அரசின் பங்கு தொகை ஒதுக்கிய பிறகே, மத்திய அரசிடமிருந்து வழங்கப்படும்.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Saturday, June 25, 2016

காரைக்குடியில் நடக்கிறது பி.இ. 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கை ஜூன் 29ல் கவுன்சலிங் தொடக்கம்


தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி ஜூலை 9 வரை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வரும், சேர்க்கை செயலாளருமான ராஜ்குமார் கூறியதாவது: பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 14 ஆயிரத்து 785 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், தகுதியான அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கவுன்சலிங் வரும் மாணவர்களுக்கு, காரைக்குடி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் இணையதளம் ஷ்ஷ்ஷ்.ணீநீநீமீtறீமீணீ.நீஷீனீ-ல் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிசனல் அல்லது டிப்ளமோ சான்று, பி.எஸ்.சி பட்டதாரிகள் தங்களது டிகிரி சான்று, சாதி சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும். படிவங்களோடு டி.டி அனுப்பாதவர்கள் கவுன்சலிங் வரும்போது கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு


பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 690 கல்லுாரிகளில், 70 ஆயிரம் பி.எட்., மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் முறை குறித்து, கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு, 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'தியரி' என்ற கருத்தியல் தேர்வுகளுக்கு, 900 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டுகளில், மொத்த மதிப்பெண்களில், 50 சதவீதம் செய்முறை தேர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

செய்முறை தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால், செய்முறை பயிற்சிகள் எடுக்காமலேயே, 50 சதவீத தேர்ச்சி மதிப்பெண்ணான, 100 மதிப்பெண்களை பெற முடியும். அதனால், பல மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு செல்லாமல், ஓ.பி., அடிக்க வாய்ப்புள்ளது என, கல்லூரி பேராசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மாணவர்கள், முதலாம் ஆண்டில், 40 நாட்கள் பள்ளிகளுக்கு சென்று பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து பாடம் எடுப்பர். அப்போது கிடைக்கும் அனுபவங்களை, வகுப்பில் பாடம் எடுத்தல்; மாணவர்களின் நடத்தை பற்றி எழுதுதல்; மாணவர்களின் உணர்வை புரிந்து கொள்ளுதல். யோகா பயிற்சி எடுத்து அதை பற்றி எழுதுதல்; பாடங்களில் படித்தது தொடர்பான காட்சிகளை, மனிதர்களை நேரில் சென்று பார்த்தல்; வகுப்புகளில் பாடம் நடத்த தேவையான கருவிகளை உருவாக்குதல் என, 15 வகை செய்முறை தேர்வுகளை பி.எட்., மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த தேர்வுக்கு, மதிப்பெண் குறைவாக தரப்படுவதால், வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுக்கும் செயல்முறை பயிற்சிகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விட வாய்ப்பு உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது


ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Friday, June 24, 2016

கல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎஸ் முறையில் இனி ஸ்காலர்ஷிப்


தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

ஐடிஐ, நர்சிங் உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர்களுக்கு ரூ.1,250, மாணவிகளுக்கு ரூ.1,750, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கு ரூ.1,450, மாணவிகளுக்கு ரூ.1,950, பொறியியல் படிப்பிற்கு ரூ.2,250, மற்றும் ரூ.2,750, விடுதிகளில் தங்கினால் மாணவர்களுக்கு ரூ.4,250, மாணவிகளுக்கு ரூ.4,750 வழங்கப்படுகிறது. இவை தவிர டிகிரி படிப்பவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விஏஓ, ஆர்ஐ, ஆகியோரிடம் கையொப்பம் பெற்று சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாரிடம் கொடுத்தால் நேரடியாக பணம் கொடுக்கப்படும்.

இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப், ஆதார் எண் இணைக்கப்பட்டு, குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திலும் இந்த முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சமுக பாதுகாப்புத் திட்டத்தில் இனிமேல் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம். இதனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்றவைகளை ஒப்படைக்க வேண்டும். இனிமேல் இசிஎஸ் மூலமே ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்’ என்றனர்.

பள்ளிகளை 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு செய்துக் கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலர் வி.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வி துறை இணை இயக்குநர் டி.ராஜேந்திரன் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ்.ஜெயசந்திரன், நவமணி ஆபிரகாம் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "டி.ராஜேந்திரன் ஓய்வுப் பெற்று விட்டார். அதனால் ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து, அனைத்து பள்ளிகளிலும் 2 மாதங்களுக்குள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டனர். இதையடுத்து, வழக்கை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Thursday, June 23, 2016

தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்


தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம், ஜூன் 27ம் தேதி, www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும், அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட மையங்களான, 'டயட்' அலுவலகங்களில் நடக்கும்.

ஆங்கிலம், தெலுங்கு, உருது, சிறப்பு பிரிவினருக்கு, ஜூலை 4; தொழிற்பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும், ஜூலை 5; தொழிற்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 7; கலைப்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 8; அறிவியல் பிரிவு மாணவியருக்கு, ஜூலை 9ம் தேதியில் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.18 ல் நடக்கிறது


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்.,18ல் நடக்கிறது. ஜூலை 18 வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோர் கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும். ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிய முதல் தாளையும், ஆறு முதல் 8 ம் வகுப்புக்கு 2ம் தாளையும் எழுத வேண்டும்.

ஒருவரே இரு தாள்களையும் எழுதலாம். முதல்தாள் எழுத பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டயப்படிப்பு அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.600, இரு தாள்களை எழுத ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி.,- மாற்றுத்திறனாளிகள் ஒரு தாளுக்கு ரூ.300, இரு தாள்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். விபரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

செப்., 18 காலை 9:30 முதல் பகல் 12 மணி வரை 2 ம் தாள், பகல் 2 முதல் மாலை 4:30 மணி வரை முதல் தாளுக்கான தேர்வு நடக்கும். தகுதித் தேர்வுக்கு 'ஆன்லை-னில்' நேற்று முன்தினம் (ஜூன் 22) முதல் ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஜூலை 19 க்குள் செலுத்த வேண்டும். ஆக., 17ல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம், என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு குட்டு


தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த, இரு ஆண்டுகளில் மட்டும், 1,700 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டப்படி, மாநில அரசின் செயல் பாடுகளை ஆய்வு செய்து, அதன்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்ததால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அவருடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும்
விவரங்களை கடிதமாகவும், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கவலையளிக்கும் கல்வித்தரம்:
* தமிழகத்தில், 10 சதவீத பகுதி களில், மக்கள் குடியிருப்பு பகுதி களில், 5 கி.மீ., சுற்றளவில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்
* 2015ல், கல்வித் துறையில் தேசிய இலக்கு கணக்கெடுப்பின் படி, உயர்நிலை கல்வி தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில் இதுவரை, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்விபாடத் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை. அதற்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்:

* மொத்தம், 1,096 புதிய பள்ளிகளில், வெறும், 200 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டடப் பணிகள் முடிந்துள்ளன. 845 பள்ளிகளுக்கு விரைவில் முடிக்க வேண்டும்
* 2010 - 11ம் ஆண்டில், 878 பள்ளிகள்; 2011 - 12ல், 1,153 பள்ளிகளின் கட்டடங்களை வலுவாக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் கழிப்பறையைத் தவிர மற்ற பணிகளில், ஒரு பள்ளியில் கூட கட்டடப் பணியை, இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் துவங்கவில்லை.
தற்போது, கச்சா பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இனி இந்த பணிகளை துவங்கினால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதியில், பணிகளை முடிக்க முடியாது. அதே நேரம், இந்த திட்டங்களை திரும்ப
ஒப்படைப்பதாக, மத்திய அரசிடம் தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது
* 2010 - 11ம் ஆண்டில், 735 பள்ளிகளில் கணினி அறைகள்; 860 பள்ளிகளில், கைவினை வகுப்பறை கட்டடங்கள்; 837 பள்ளிகளில் நுாலகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல், 2011 - 12ல், 1,795 பள்ளிகளில் கைவினை அறைகள்; 919 பள்ளிகளில்அறிவியல் ஆய்வகங்கள்; 768 பள்ளிகளில், கணினி அறைகள்; 1,036 நுாலக அறைகள்; 170 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றையும் தற்போது திருப்பி அளிப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது
* இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் தமிழக அரசு புதிதாக அனுமதி கேட்கவில்லை; ஒப்புதல் கேட்டால் அளிக்க தயாராக உள்ளோம்
* தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். எனவே, தமிழக பள்ளிகளில் இடைநிலை கல்வியில் அதிக அளவில் இடைநிற்றல் உள்ளது.
இந்த இடைநிற்றலில், கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34 சதவீதம்; காஞ்சிபுரம் - 58.57
சதவீதம் என, முன்னணியில் உள்ளன.
மேலும், பொதுவாக பள்ளிப் படிப்பு இடைநிற்றல் அளவு, 2014 - 15ல் 3.98 சதவீதமாக இருந்து, அடுத்த கல்வி ஆண்டில், 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது
* மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனர். விடுதியில் மாணவர்களின்
எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010, 2011ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் இதுவரை, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்களை துவக்கவே இல்லை. இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் எந்த பயனுமின்றி உள்ளது
* அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை. 'ஆதார்' பதிவிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.