இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 13, 2019

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம்: இணையதளம் மூலமாகவும் பெறலாம்


பள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20- ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளது.

பாடநூல்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

அதன் விவரம்: 40-52 பக்கங்கள் - ரூ.30, 56-72 பக்கங்கள் - ரூ. 40, 76-92 பக்கங்கள் - ரூ.50, 96-116 பக்கங்கள் - ரூ.60, 120-136 பக்கங்கள் - ரூ.70, 352-368 பக்கங்கள் - ரூ.180.

பத்தாம் வகுப்பு பாட நூல்களின் விலை: தமிழ் - ரூ.130, ஆங்கிலம் - ரூ.120, கணக்கு - ரூ.180, அறிவியல் - ரூ.180 பிளஸ் 2 வகுப்பு பாட நூல்களின் விலை: தமிழ் - ரூ.120, சிறப்புத் தமிழ் - ரூ.150, ஆங்கிலம் - ரூ.130, கணக்கு பகுதி-1 - ரூ.170, இயற்பியல் பகுதி-1 - ரூ.180, வேதியியல் பகுதி-1- ரூ.160, தாவரவியல் - ரூ.170, விலங்கியல் - ரூ.170, பொருளியல்- ரூ.170, வணிகவியல் - ரூ.160, கணக்குப் பதிவியல் - ரூ.180 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன. நிகழாண்டில், 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாட நூல்கள் விற்பனை, சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதேபோல, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல்கள் கிடைக்கும். விடுபட்ட வகுப்புகளுக்கான விற்பனை விரைவில் தொடங்கும். வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்: வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorpin என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம். வழக்கம்போல் 60 சதவீத பாடநூல்கள் இலவச விநியோகத்துக்கும், 40 சதவீத பாடநூல்கள் விற்பனைக்காகவும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

1, 6, பிளஸ் 1 புத்தகங்களில் மாற்றம் பாட நூல் கழகத்தில் அரசு நிதி வீண்


தமிழக பள்ளி கல்வித்துறையின், புதிய பாடத் திட்டத்தில், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏராளமாக அச்சிடப்பட்டுள்ள பழைய புத்தகங்களால், அரசின் நிதி வீணாகியுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையின் பாடத் திட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், 2018 - 19ம் கல்வியாண்டில் மாற்றப்பட்டது.

இந்த ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாட திட்டம் அறிமுகமானது.இதையடுத்து, 2019 - 20ல், அதாவது, அடுத்த மாதம் துவங்க உள்ள கல்வி ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட் டம் அமலுக்கு வருகிறது.இதற்கிடையில், 2018 - 19ல் அறிமுகமான பாடப் புத்தகங்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இவற்றை, ஆரம்பத்திலேயே திருத்தம் செய்யாமல், லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டன.ஆனால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், பாடப் புத்தகங்களில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டியதால், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தனியாக குழு அமைத்து, பிழைகளை திருத்த உத்தரவிட்டது.பிழைகள் திருத்தப்பட்டதில், ஒன்று, ஆறு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளின் பாடப் புத்தகங்களில், பல பகுதிகள் மாற்றப்பட்டன.

இந்த புத்தகங்களையே, புதிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால், மாற்றப்பட்ட புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை கழகம் அச்சிட்டு, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதேநேரம், பள்ளி கல்வியின் திருத்தம் நடந்த போதே, பழைய புத்தகங்களை, பாடநுால் கழகம் ஆயிரக்கணக்கில் அச்சிட்டுள்ளது.இந்த புத்தகங்களை, தற்போது பயன்படுத்த முடியாததால், அரசின் நிதி வீணாகியுள்ளது. புத்தகம் அச்சடிப்பு, காகிதம் கொள்முதல், சரக்கு போக்குவரத்து செலவு என, பல லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாடநுால் கழகத்தின் இயக்குனர், பழனிசாமி, மேலாண்மை இயக்குனர், ஜெயந்தி ஆகியோரிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகமான போது, 2011ல், தமிழக பாடநுால் கழகத்தில், இதேபோன்று, பழைய பாடத் திட்டத்தில், ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அவை, பழைய காகித மூட்டைகளாகி, அரசின் நிதி, கோடி கணக்கில் வீணானது.

Sunday, May 12, 2019

கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., பள்ளி விபரமும் சேர்ப்பு


அங்கன்வாடி மையங்களில் இயங்கும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விபரத்தையும் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும், என கல்வித்துறை அறிவுறுத்துகிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி நிர்வாகத்தை இணையதளம் வழியே ஒருங்கிணைக்கும் முயற்சியில் அரசு செயலர் பிரதீப் யாதவ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் வழியே அனைத்து பள்ளிகளின் ஆசிரியர், மாணவர்கள் விபரங்களை சேகரித்து, ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சிலிங், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை இந்த இணையதளம் வழியே உண்மை தன்மையை கண்டறிந்து செயல்படுத்த உள்ளனர்.

ஆசிரியர், கல்வித்துறை அலுவலரின் வருகையும் ஜூன் முதல் பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. தற்சமயம் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க, உயர், மேல்நிலைப்பள்ளிகள் குறித்த விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரைந்து முடிக்கும் விதமாக மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் மே 18 ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் கல்வி தகவல் மேலாண்மை இணையதள பணிகளை ஆய்வு செய்வர்.அங்கன்வாடிக்கும் வருது 'எமிஸ்'கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் அடிப்படை கல்வியான அங்கன்வாடிக்கும் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அரசு பள்ளிகளை போல், அரசு பள்ளிகளுடன் இணைந்து இயங்கும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் நடக்கும் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., பள்ளிகளில் பணிபுரியும் 402 ஆசிரியர்களின் பயோடேட்டா மற்றும் படிக்கும் மாணவர்களின் முழு விபரங்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்துகிறது.

அதன்படி அந்தந்த மாவட்டத்தில் பள்ளிகளுடன் இணைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுஉள்ள எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., பள்ளிகளின் மைய எண், ஆசிரியர் மற்றும் மாணவர் விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Saturday, May 11, 2019

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள்: ஆசிரியர்கள் நியமனத்தில் தொடரும் சிக்கல்


தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினாலும், ஆசிரியர்களை நியமிப்பதில் ஏற்படும் சிக்கலால் வகுப்புகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு தொடங்கும் திட்டம் கல்வியாண்டு 2018-19-இல் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வளாகத்துக்குள் செயல்படும் அங்கன்வாடி மையங்களைக்கொண்ட 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பள்ளிகளில் உள்ள மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளை புதிதாக சேர்ப்பதற்கும், சேர்க்கை விளம்பரங்கள் வைக்கப்பட்டு, சேர்க்கையும் நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கியதால் பெற்றோரும், ஆர்வத்தோடு குழந்தைகளைச் சேர்த்தனர்.

பணியிட மாற்றத்தில் சிக்கல்: மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கென அரசு பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்களுக்கு மழலையர் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், வகுப்புகள் நடப்பதும் தடைபட்டு மையங்களில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகள் மட்டுமே தொடர்ந்தன. பெற்றோரும் ஏமாற்றமடைந்தனர். இந்தநிலையில் வரும் 2019-20-ஆம் கல்வியாண்டிலும் மழலையர் வகுப்புகளுக்கு குழந்தைகளைச் சேர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முழுவதும் சேர்க்கை நடைபெற்றது. மேலும், வரும் கல்வியாண்டில் மழலையர் வகுப்புகளில் விளையாட குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்களும், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பினும், ஆசிரியர்கள் இல்லாமல் மழலையர் வகுப்புகள் நடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்க அரசு ஆலோசனை


தமிழகத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பால் சேர்த்து வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கக்கோரி கடிதம் எழுதியது.

இந்த நிலையில், தமிழக அரசும், அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்கலாமா என்று பரிசீலித்து வருகிறது. பாலில் கால்சியம் மற்றும் புரதச் சத்துகள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. எனவே சத்துணவில் காய்கறிகள், முட்டை இவற்றுடன் தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது காய்கறிகள் மற்றும் முட்டையுடன் சேர்த்து 13 வகையான உணவு வகைகள் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பால் கெட்டுப் போகாமல் சேமிக்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளில் வசதியில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கான வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி தேவை என தெரிவித்துள்ளனர்.

Friday, May 10, 2019

முடிவு

#Breaking : பொதுத்தேர்வுகளில் மீண்டும் வருகிறது மாற்றம் - கல்வித்துறை அதிரடி முடிவு

* 11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் - அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை

மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்கவும் பரிந்துரை

* 10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் - பரிந்துரை..

Thursday, May 09, 2019

தொலைநிலை படிப்புகளை வழங்க கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி: தமிழகத்தில் 8 பல்கலைக்கழகங்களின் படிப்புகள் மட்டுமே செல்லும்


தொலைநிலை படிப்புகளை வழங்க தமிழகத்தில் கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம், தமிழகத்தில் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைநிலை படிப்புகள் மட்டுமே செல்லுபடியாகும். பிற அரசு அல்லது தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொலைநிலை படிப்புகளை வழங்க இயலாது. மாணவர்களின் நலனுக்காக இந்த விவரங்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைநிலை படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதல் (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017), கடந்த 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

எந்தெந்த பல்கலைக்கழகங்கள் நடத்த முடியும்:

இதனால் தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியை பெற்றன. அதன் பின்னர், 2018 டிசம்பர் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23-ஆம் கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை வெளியிட்ட புதிய பட்டியலில் கூடுதலாக ஒரு அரசு பல்கலைக்கழகத்துக்கும், இரண்டு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதாவது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 3 கல்வி நிறுவனங்களுக்கும் இப்போது அனுமதி அளித்துள்ளது. எனவே, 2019-20-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் இந்த 8 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலை படிப்புகளை வழங்க முடியும்.

பள்ளிகளில் காலியிடம் சேகரிப்பு மே, 23 முதல் டிரான்ஸ்பர்


அரசு பள்ளிகளில், மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் காலியிட பட்டியல் சேகரிப்பு துவங்கியுள்ளது. விரைவில், அந்த இடங்களுக்கு, ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில், கவுன்சிலிங் வழியாக இடமாற்றம் செய்யப்படுவர்.இதில், குறைந்த பட்சம், ஒரு கல்வி ஆண்டாவது பணிபுரிந்திருந்தால் மட்டுமே, இடமாற்றம் பெற, பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கும்.முதலில், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். பின், மாநில வாரியான இடமாற்றம் நடைபெறும்.

இந்த ஆண்டு, தேர்தல் வந்ததால், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. அதேபோல, 2018ல் பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதியானவர்களுக்கு, பதவி உயர்வும், இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பதவியில் இருப்பவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு கிடைக்க வில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு லோக்சபா தேர்தல், பல கட்டமாக அறிவிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கான இடமாற்றம் மொத்தமாக முடங்கியது.வரும், 23ம் தேதி,தேர்தல் முடிவுகள் வெளியானதும், நடத்தை விதிகள் விலக்கப்படும். அதன்பின், உடனடியாக ஆசிரியர்கள் இடமாற்றத்தை நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு ஆயத்தமாக, மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் காலியிட பட்டியலை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணி முடிந்ததும், மே, 23க்கு பின், ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக இடமாற்றம் செய்யப்படுவர் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tuesday, May 07, 2019

மே 10க்குப்பின் 'ஆன்லைன் டிசி


தொழில் நுட்ப சிக்கலால் மே 10 க்குப்பின் 'ஆன்லைன்' 'டிசி' வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் உயர் கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு கையால் எழுதி பள்ளிமாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்கினர். மே முதல் 'ஆன்லைன் டிசி 'வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைப்பெற பள்ளிகளுக்கான 11 இலக்க 'யூடிஎஸ்' எண்களை பதிவு செய்தால் பள்ளி இணையதளம் திறக்கும். அதில் மாணவரின் 'எமிஸ்' எண்ணை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் முழுவிபரம் பெறலாம். இதில் ஒரு நகல் மாணவருக்கும், மற்றொன்று பள்ளியில் பாதுகாக்கப்படும். இந்நிலையில் ஆன் லைன் டிசி வழங்குவதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. ஒருமுறை ஆன்லைனில் அதனை டவுன்லோடு செய்தால் அந்த மாணவரின் விபரங்கள் மீண்டும் துறையின் பொது சர்வருக்கு சென்று விடும்.

அதன்பின் மாணவர் விபரம் மீண்டும் பெறுவதிலும் அல்லது அரசின் சலுகை பெற்றதை பதிவு செய்வதோ இயலாது. அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாது. மேலும் இணையதள வேகம் குறைவாக இருப்பதால்ஒரே நாளில் பலருக்கு டிசி வழங்க இயலாத நிலை உள்ளதாக பள்ளிகள் புகார் தெரிவித்தன.

இதன்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்து புது மென்பொருள் உருவாக்கி மே 10 க்குப்பின் ஆன்லைன் டிசி வழங்கப்படும், என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு  நடத்தப்படுகிறது.  இந்நிலையில், மார்ச் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in/ இணையதளங்கள் மூலம் பெறலாம்.

மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தப் பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, தேர்ச்சி அடையாத பாடங்களை மட்டும் சேர்த்து எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, May 02, 2019

டிஜிட்டல் மாற்று சான்றிதழ் பள்ளிகளுக்கு உத்தரவு


அனைத்து பள்ளிகளிலும், 'எமிஸ்' எண்ணுடன் கூடிய, டிஜிட்டல் மாற்று சான்றிதழ் வழங்க, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, பள்ளியை விட்டு செல்லும் மாணவர்களுக்கு, காகிதத்தில் எழுதப்பட்ட மாற்று சான்றிதழ் வழங்கப்படும். இந்த மாற்று சான்றிதழை, நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம். இந்த நிலையை போக்க, பள்ளிகளில் டிஜிட்டல் சான்றிதழ்கள், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டன.

சில பள்ளிகளில், சோதனை முறையில் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதள குறியீட்டு எண்ணுடன் கூடிய, இந்த சான்றிதழை அனைத்து பள்ளிகளும் ஒரே நேரத்தில் கையாளமுடியும்.

ஒவ்வொரு பள்ளி யும், வேறு பள்ளி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால், அந்த மாணவர்களின் எமிஸ் எண் மட்டும் இருந்தால், பள்ளி கல்வியின் ஆன்லைன்தகவல் தொகுப்பில் இருந்து, டிஜிட்டல் மாற்று சான்றிதழ்களை எளிதாக எடுத்து கொள்ள முடியும் என, அதிகாரிகள்தெரிவித்தனர்.

Wednesday, May 01, 2019

7,726 பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: ஜூன் மாதத்துக்குள் செயல்படுத்த உத்தரவு


தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைந்த தொடுவுணர் கருவி (பயோமெட்ரிக்) மூலம் வருகைப்பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

எனினும், முறையான பயிற்சிகள், தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை நீடித்தது. இதை சரிசெய்யும் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாநிலம் முழுவதுமுள்ள 7,726 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்துள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்களை சரிபார்த்து மீண்டும் பதிவேற்ற வேண்டும்.

பயோமெட்ரிக் முறை தொடர்பாக தலைமையாசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்குவதுடன், இதுதொடர்பான பணி விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.