இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 21, 2018

22-10-18 morning prayer

22-10-18
பள்ளி காலை நேர செயல்பாடு

திருக்குறள்:68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

உரை:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

பழமொழி :

Constant dripping wears away the stone

எறும்பு ஊர கல்லும் தேயும்

பொன்மொழி:

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.

-பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)

2.மால்குடி என்பது?
கற்பனை ஊர்

நீதிக்கதை

முட்டாள் – புத்திசாலி

ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.
அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, “இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?” என்று கேட்பர்.

ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.
“இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,” என்று சொன்ன வீட்டுக்காரன்… அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, “நன்றாகப் பார்… ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,” என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!” என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.
“இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?” என்று சொன்னான் வீட்டுக்காரன்.

நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, “இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,” என்றார் அவர்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.
“இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,” என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.

“ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே… இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,” என்று அறிவுரை சொன்னார் நண்பர்.
“ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.
“நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,” என்றான் முட்டாள்.

இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.

இன்றைய செய்தி துளிகள்:

1.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26-ம் தேதி தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

2.அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

3.ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கிய 1 மாதத்தில் 1 லட்சம் பேர் பயன்: மத்தியமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்

4.ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்

5.இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்

Friday, October 19, 2018

2 மணி நேரம் தூக்கம்: பாடத்திட்டத்தில் அறிவிப்பு


மழலையருக்கான, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் துாங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய, கே.ஜி., வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள, பாட திட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வி துறையும், புதிய பாடத்திட்டம் தயாரித்து உள்ளது.இதற்கான வரைவு பாட திட்டத்தை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ளது.இந்த பாடத்திட்டத்தில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு, என்னென்ன பாடங்கள் கற்று தர வேண்டும்.மாணவ, மாணவியருக்கு, வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்கள் என்ன என்ற, விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், கே.ஜி., குழந்தைகளுக்கு, வகுப்புகள் நடக்கும் நேரம்குறித்தும், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, காலை, 9:30 மணிக்கு வகுப்புகள் துவங்கும்; பகல், 12:30 மணிக்கு, மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும்.அதன்படி பகல், 1:00 மணி முதல், 3:00 மணி வரை, ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., குழந்தைகளுக்கு, துாங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.அதாவது பள்ளியிலேயே, இரண்டு மணி நேரம், குழந்தைகளை துாங்க வைத்து விட்டு, மீண்டும் பாடங்கள் நடத்தி, மாலை, 4:00 மணிக்கு வகுப்பை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தொடக்க கல்வி துறை சார்பில், மழலையர் பள்ளிகளுக்கு, இதேபோன்ற பாட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதை, எந்த பள்ளியும் நடைமுறைபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, October 17, 2018

விஜயதசமி: அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா?


ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி மாணவச் சேர்க்கைகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் விஜயதசமி மாணவச் சேர்க்கை நடைபெறுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது நம்பிக்கை. அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என அனைவரது எண்ணம்.

இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 18-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்காக பல தனியார் பள்ளிகள் புதிய புதிய அறிவிப்புகளை விளம்பரங்களாய் வெளியிட்டு பெற்றோர்களைக் கவர்ந்து தங்களது பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை தனியார் பள்ளிகளைவிட குறைவாக இருப்பது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு காரணம் தற்போது பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வயதை நிர்ணயிக்கும் தேதி 31.07. ஆகும். 31.7. அன்று 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு, இதைக் கண்டிப்பாக அமல்படுத்த கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் மாணவர்கள் விவரங்களைப் பதிவிடும்போது பிறந்த தேதி, சேர்க்கை தேதி ஆகியவற்றை கணக்கிட்டு 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. இல்லையெனில் இணையதளத்தில் ஏற்புகை மறுக்கப்படுகிறது. இந்நிலையில் 18.10.2018 அன்று விஜயதசமி தினத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கு வருவோருக்கு 31.7-இல் 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதி உண்டு. இதனால், 31.7-இல் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் ஜூலை மாதத்திலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிடுவர். விஜயதசமி சேர்க்கைக்கு வரை பெற்றோர்கள் காத்திருப்பதில்லை. இதனாலேயே விஜயதசமி சேர்க்கைக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை அதிக அளவில் உள்ளது. தனியார் பள்ளிகளில் 31.7-இல் 3 வயது பூர்த்தியாகியிருந்தால், அக்குழந்தைகள் எல்.கே.ஜி. எனும் மழலையர் வகுப்புகளில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் 31.7-க்குப் பிறகு 3 வயது நிறைவாகியிருக்கும் குழந்தைகள் எதிர்கால சேர்க்கையை உறுதி செய்யும் விதத்தில் பிரி-கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆக தனியார் பள்ளிகளில் சேர்க்கைகள் 3 வயதிலேயே நிறைவடைகிறது.

எனவே, அங்கு விஜயதசமி சேர்க்கைக்கு ஆர்வம் காட்டப்படுகிறது. அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். தற்போது 31.7. என தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதை 31.12. என மாற்றி நிர்ணயிக்கலாம். அதாவது 31.12-இல் 5 வயதை பூர்த்தியடைந்த மாணவர்களை விஜயதசமி சேர்க்கைகளில் அனுமதிக்கலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை 6 மாதங்களில் இரு பருவப் பாடங்களைப் பயிலும் முதல் வகுப்பு மாணவர் தனது இரண்டாம் வகுப்பில் தொடர் படிப்பில் புரிந்துக் கொள்வது இயல்பானதுதான் என ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 31.12-இல் 5 வயது பூர்த்தியடையும் மாணவர்கள் 10 வகுப்பு செல்லும்போது, பதினான்கரை வயதை ஜூன் மாதத்தில் நெருங்குவர். 14.5 என்பது 15 என நிர்ணயிக்கப்படுகையில், அவர்களை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் ஆலோசனை கூறுகின்றனர்.

மருத்துவ உலகில் 6 மாத வளர்ச்சி ஒரு வருட வளர்ச்சிக்கு சமமாகத்தான் கருதப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தமிழக அரசின் கல்வித் துறையினர் பரிசீலனை செய்யலாம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவச் சேர்க்கை மிகவும் குறைந்து வரும் நிலையில் அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அரசும் விதிகளை தளர்த்தி சேர்க்கைக்கு உதவ வேண்டும். செப்டம்பர் இறுதியில் சேர்க்கைகள் முடிவு எனும் நிலையில் விஜயதசமி சேர்க்கைக்கு பிரத்யேகமாக அனுமதியை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் வழங்கலாம். எனவே இந்த ஆண்டு விஜயதசமி சேர்க்கைக்கு வயது வரம்பை 31.12. என தளர்த்தி உத்தரவிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு பிரத்யேக அனுமதி உத்தரவை வழங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tuesday, October 16, 2018

17-10-18 MORNING PRAYER

17-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

பழமொழி :

Coming events cast their shadow before

ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே

பொன்மொழி:

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

- காண்டேகர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.சீனாவின் அன்றைய பெயர் என்ன?
கத்தே

2.முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
பெனாசீர் புட்டோ

நீதிக்கதை

நண்டு, கொக்கைக் கொன்ற கதை
ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.
“பரவாயில்லை சொல்லுங்களேன்”
“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”
மீனுக்குப் பரபரத்தது.
“சொன்னால்தானே தெரியும்”
“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.
“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”
“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.
சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.
அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.
கொக்குக்கும் கசக்குமா காரியம்?
நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.
அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”
“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.
குளத்துக்கு நேராக வரும்போது
அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

இன்றைய செய்தி துளிகள்:

1.அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

2.சென்னை உள்ளிட்ட 3
மாவட்டங்களில் நேற்று மாலை முதல் குடிநீர் கேன் உற்பத்தி நிறுத்தம்

3.ஆன்லைனில் பட்டாசு விற்க தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

4.நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு

5.டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் 'கிங்'கோஹ்லி

Monday, October 15, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும்


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ("டெட்') எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "டெட்' தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த 15 நாள்களில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டு விடும் என்றார் அவர்.

ஒன்பது வகை தகவல்களுடன், 'ஸ்மார்ட்' அட்டை


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ரத்தப்பிரிவு உட்பட, ஒன்பது வகையான தகவல்களுடன், 12 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் தகவல்களை, கியூ.ஆர்., கோடு வழியாக அறிந்து கொள்ளலாம்.

பள்ளி கல்வி துறையில், டிஜிட்டல் முறையில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், புதிய திட்டமாக, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்குவது நிறைவேற்றப்பட உள்ளன. துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஸ்மார்ட் கார்டுக்கான செயல்முறை அறிக்கையை, பள்ளி கல்வி செயலகத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கான செலவை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று, பள்ளி கல்வி செயலர் பிரதீப் யாதவ், நேற்று அரசாணையாக பிறப்பித்தார். இதன்படி, 12.70 கோடி ரூபாய் செலவில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அட்டை தயாரிப்பு பணிகளை, தமிழ்நாடு பாடநுால் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளில், மாணவ - மாணவியரின் பெயர், அடையாள தகவல், பிறந்த தேதி,
தந்தை பெயர், முழு முகவரி, படிக்கும் பள்ளியின் பெயர், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் ஆண்டு, மாணவரின் புகைப்படம், மாணவரின் ரத்த வகை பிரிவு என, ஒன்பது தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த தகவல்களை, பார் கோடு மற்றும், கியூ.ஆர்.,கோடு வழியாக, கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் தகவல்கள் அனைத்தும், பள்ளிகள் வழியாக சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக, டிஜிட்டல் வழியில் தொகுக்கப்பட்டு, அட்டைகள் வழங்க தயார் நிலை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிர் காக்க உதவும் : மாணவர்களின் தகவல்களை, ஸ்மார்ட் அட்டையில் உள்ள, க்யூ.ஆர்.,கோடு அல்லது, பார் கோடு வாயிலாக, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து விலகும் மாணவர், மீண்டும் எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற, தகவலை இதன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை மாணவர்கள் இடையில் விட்டு விட்டால், அந்த விபரங்களையும் எளிதில் அறியலாம். ரத்தப்பிரிவு சார்ந்த விவரம், 'ஸ்மார்ட்' அட்டையில் இருப்பதால், மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும் போது, மருத்துவ சிகிச்சைக்கு, ஸ்மார்ட் அட்டையின் தகவல்கள் உதவியாக இருக்கும்.

16-10-18 Morning prayer

16-10-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பழமொழி :

Civility costs nothing

குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது

பொன்மொழி:

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

- வில்லியம் பிளேக்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)

2.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா

நீதிக்கதை

மூன்று மீன்களின் கதை!

அதிக மேடோ, பள்ளமோ இல்லாத இடத்தில் நீர் நிறைந்த ஒரு குட்டை இருந்தது, அந்தக் குட்டையில் அதிகமான மீன்கள் இருந்தன.
அவற்றுள் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.

அந்த மூன்று மீன்களுள் ஒன்று முன்னெச்சரிக்கையுள்ள மீன், இன்னொன்று சமயத்திற்கேற்றபடி நடந்து கொள்ளக் கூடியது. மூன்றாவது புத்தி குறைவானது.

ஒருநாள் மீன்பிடிப்பவர்கள் அந்தக் குளத்திற்கு வந்து பார்த்தனர். அந்தக் குட்டையிலிருந்த மீன்களையெல்லாம் பிடித்து விட வேண்டும் என திட்டமிட்டனர்.
அவர்கள் அந்தக் குட்டையின் நான்கு பகுதிகளிலும் வடிகாலை வெட்டி விட்டனர்.

இதனால் அந்தக் குட்டையிலிருந்த தண்ணீர் வடிந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

குட்டையிலிருந்த நீர் குறைந்து கொண்டே செல்வதைப் பார்த்த முன்னெச்சரிக்கையுள்ள மீன், “குட்டையில் நீர் குறைகின்றது. இது ஆபத்து வரப்போவதைக் காட்டுகிறது. அதற்குள் நாம் எப்படியாவது வேறு ஒரு நீர்நிலைக்குப் போய் விடலாம். முன்கூட்டியே வரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியைக் கண்டவன் பின்னர் மகிழ்ச்சியுடன் வாழ்வான்” என்றது.

அந்த மீனின் பேச்சைக் கேட்ட புத்தி மந்தமான மீன், “ஆபத்து வரும் என்று நான் நினைக்கவில்லை. அவசரப்பட்டு, நெடுநாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குட்டையை விட்டு வெளியேற எனக்கு மனமில்லை.” என்றது.

இந்த இரு மீன்களின் பேச்சையும் கேட்ட சமயோசித புத்தியுள்ள மீன், “ஆபத்து வரும் போது அதற்கேற்றபடி ஏதாவது செய்து தப்பித்துக் கொள்ளலாம்” என்றது.

முன்னெச்சரிக்கையுள்ள மீன் வடிகால் மூலம் வெளியேறிக் கொண்டிருந்த நீருடன் போய் வேறொரு நீர் நிலையில் வாழத் தொடங்கியது.

மறுநாள், மீன்பிடிப்பவர்கள் வந்தனர்.
நீர் ஓரளவு வடிந்திருப்பதைப் பார்த்துவிட்டு, குட்டையிலிருந்த மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர்.
மந்தப் புத்தியுள்ள மீன் மாட்டிக் கொண்டது. பிடிபட்ட மீன்கள் அனைத்தையும் கயிற்றினுள் கோர்த்து அருகே இருந்த சிறு பாறையின் மேல் வைத்தனர்.

இதைப் பார்த்த சமயோசித மீன் தானாகவே பிடிக்கப்பட்ட மீன்கள் கோர்க்கப்பட்டிருந்த கயிற்றைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.
குட்டையிலிருந்த மீன்களைப் பிடித்த மகிழ்ச்சியில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் அடுத்திருந்த நீர்நிலையில் தாங்கள் கயிற்றுள் கோர்த்து வைத்திருந்த மீன்களைக் கழுவுவதற்காக நீரில் முக்கி எடுத்தனர்.
அப்போது கயிற்றைக் கவ்விக் கொண்டு தொங்கிய சமயோசித புத்தியுள்ள மீன் அவர்களுக்குத் தெரியாமலேயே தண்ணீருக்குள் போய் தப்பியது.
மந்தப் புத்தியுடைய மீனின் நிலைமை அவ்வளவுதான். முன்னெச்சரிக்கையும், சமயோசிதமாக நடக்கும் புத்தியுள்ள மீன்கள் தப்பின.

வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையும், சமயோசித புத்தியுமுடையவர்கள் சுக வாழ்வடைவார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன்

2.அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!

3.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி விரைவில் அடிக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

4.தாம்பரம் - நெல்லை இடையே 'சுவிதா'சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

5.இளையோர் ஒலிம்பிக் போட்டி பெண்கள் ஹாக்கியில் இந்தியா வெள்ளி பதக்கம்