இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 04, 2016

சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு


'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது, எவ்வகை படிப்பு என்பது குறிப்பிடப்படுவது இல்லை. மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழில் மட்டுமே, நேரடி படிப்பு அல்லது தொலைநிலை கல்வி என, குறிப்பிடப்படுகிறது.

பட்ட சான்றிதழில் இக்குறிப்புகள் இருக்காது. இந்நிலையில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழ் வழங்கும் போது, மாணவரின் படிப்பு முறை, நேரடி வகுப்பா அல்லது தொலைநிலை கல்வியா என்பதை குறிப்பிட வேண்டும்' என, தெரிவித்து உள்ளது.

தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு

'அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய முன்னாள் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான, மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவ., 11, தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைகள், கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'தேசிய கல்வி நாளையொட்டி, நவ., 11ல், கல்வி தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது

மாணவர்கள் அறிவியல் கற்பது இனி, எளிது!


அறிவியல் பாட வரையறைகளை, எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மாதிரிகள் தயாரித்து வகுப்பு நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய கற்பித்தல் செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி, கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துதல் எனும் திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எளிமையாக அறிவியல் பாடத்தை கற்க, புதிய செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்கும் வளங்களை கொண்டு, மாணவர்களின் புரிதல் திறனுக்கு ஏற்ப, மாதிரிகள் தயாரித்து, கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை, மாணவர்களுக்கு கற்பிக்க, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி கோவை, ராஜவீதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இவர்களின் உதவியுடன், அந்தந்த வட்டாரத்தில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு, செயலாக்க திட்டத்தை விளக்கி, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,

”நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட செயலாக்க திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், காற்றின் விசை, அழுத்தம் மற்றும் வேகத்தை, பலுான், ரப்பர் பாட்டில்கள் கொண்டு விளக்கி புரிய வைக்கலாம்.

மேலும், விலங்குகளின் உடலமைப்பு, தாவரங்களின் அமைப்பு ஆகியவற்றை, செய்முறை வாயிலாக விளக்க பயிற்சி அளித்துள்ளோம். விரைவில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, உள்வாங்கும் திறன் குறித்து, பரிசோதித்து அறியப்படும்,” என்றார்.

Thursday, November 03, 2016

புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ரிசர்வ் வங்கி புதிய ரூ.1 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விட உள்ளது. புதிய நோட்டில் H சின்னத்துடன் உட்பொதிந்த L எழுத்துடன் இருக்கும். புதிய ரூ.1 நோட்டின் நிறம் பெருவாரியாக முன்புறம் ரோஜா நிறத்துடன் இணைந்த பச்சையிலும் பின்புறம் மற்ற நிற கலவையிலும் இருக்கும்.

இது 9.7x 6.3 செ.மீ. அளவிலான இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India என்ற வார்த்தைகளுக்கு மேல் இருக்கும்.

இந்த நோட்டில் நிதித்துறை செயலர் ரத்தன் பி வட்டலின் இரு மொழி கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும். 2016 – ம் ஆண்டு வெளியிடப்பட்ட சத்தியமேவே ஜெயதே – ன் வரிசை எண்கள் பகுதியில் பெரிய எழுத்தில் உட்பொதிந்த L என்ற ஆங்கில எழுத்தும் இருக்கும். நோட்டின் வலது கீழ்ப்புறம் எண்கள் கருப்பு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

புதிய நோட்டின் பின்புறத்தில் பாரத் சர்க்கார் என்ற வார்த்தைகள் Government of India உடன் 2016 என்ற வார்த்தைக்கு மேல் இருக்கும். ரூபாய் நாணத்தின் வடிவத்தை பிரதிபலிக்கும் வகையில் H. குறியீட்டுடன் பூக்களுடன் கூடிய வடிவமைப்பு இருக்கும். அதைச் சுற்றி எண்ணெய்த் துரப்பண ஆராய்ச்சி மேடை வடிவமான சாகர் சாம்ராட்டின் படமும் இருக்கும். இவற்றோடு ரூபாயின் மதிப்பானது 15 இந்திய மொழிகளில், மொழிகளுக்கான முகப்பில் காட்டப்பட்டிருக்கும். மேலும் மையப்பகுதியின் கீழ்ப்புறம் சர்வதேச எண்ணில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய நோட்டு புழக்கத்திற்கு வந்த பின்னரும் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 02, 2016

வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீட்டுக்கடனுக்கு ஒப்புதல் கிடைப்பவர்களுக்கு மட்டும்


வீட்டுக்கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த முறை 6.25 சதவீதமாக குறைத்தது. இவ்வாறு பல முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டபோதும், வங்கிகள் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. சராசரியாக 0.6 சதவீதம் மட்டுமே பலன் வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து சில வங்கிகள் வட்டி குறைப்பை அறிவித்தன. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மேலும் 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது. அதாவது 75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் சலுகையாக 9.1 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் மட்டுமின்றி வேறு வங்கியில் இருந்து வீட்டுக்கடனை பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றுபவர்களும் தங்களது இஎம்ஐ தவணை கட்டணத்தை குறைக்கலாம் என இந்த வங்கி தெரிவித்துள்ளது.

எந்த வசதியும் இன்றி எப்படி தரமான கல்வி தரமுடியும்? பள்ளிகளில் கழிப்பறை கூட இல்லை கற்காலத்தில் இருக்கிறீர்களா?


அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கூட இல்லை. கற்காலத்தில் இருக்கிறீர்களா என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் 2014ல் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள தகவல்படி 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை. 15.45 சதவீத அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. 2,080 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர்கள் குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தஞ்சை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட கிராமப்பகுதிகளிலுள்ள 34 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் வசதி இல்லை. துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை. பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் செலுத்தும் நிலை உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் கிடைப்பதில்லை. தரமான நாப்கின்கள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கு பலர் பயன்படுத்துகின்றனர். பள்ளி பொருட்கள் திருடு போகும் நிலை உள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘பொதுவாக குறைந்தபட்ச கூலியாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளருக்கு மாதம் ரூ.1,200 கொடுத்தால் எப்படி வேலைக்கு வருவார்கள். இன்னும் கற்காலத்திலேயே உள்ளீர்கள். நாடு சுதந்திரம் அடைந்து 70வது ஆண்டில் இருக்கிறோம். ஆனால் இன்னும் கழிப்பறை வசதி கூட கிடைக்கவில்லை. 3 மாவட்டங்களிலேயே இந்த நிலை என்றால், தமிழகம் முழுவதும் இப்படித்தானே இருக்கும்? கட்டிடத்தை கட்டினால் மட்டும் போதுமா, யார் பராமரிப்பது? இதற்கென ஆட்கள் வேண்டாமா? தண்ணீர் வசதி செய்து தரக்கூடாதா? உள்ளாட்சி அமைப்பிலிருந்து தண்ணீர் வசதி பெறலாமே. அரசு பள்ளிகளில் மின்சார பயன்பாடு மிகவும் குறைவுதான். மின்விசிறி, ஏசி போன்ற வசதிகள் இல்லை. ஆய்வகம் மற்றும் மின் மோட்டார் உள்ள பள்ளிகளில் மட்டுமே குறைந்தளவு மின்சாரம் பயன்படுகிறது. ஏன் அரசு பள்ளிகளுக்கு அரசின் சார்பில் இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. எந்த வசதியும் இல்லாமல் எப்படி தரமான கல்வி வழங்க முடியும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஏன் பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராகி விளக்கமளிக்க கூடாது என சரமாரி கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து விளக்கம் கேட்டு தெரிவிக்கப்படும்’ என்றார். இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு காலத்தில் பணிகள் நிறைவேற்றப்படும். உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிகல்வித்துறை செயலரின் சார்பில் திட்டவட்டமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 8க்கு தள்ளி வைத்தனர்.

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்


அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்டோபர் முதல், மாநில அரசு ஏற்றுள்ளது.

அதனால், செப்டம்பர் வரை, ஆதார் பதிவு பணிகளை மேற்கொண்ட, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் விலகியது. இதனால், அரசுப் பள்ளிகளில் நடந்து வந்த மாணவ, மாணவியருக்கான, ஆதார் பதிவு பணிகள் நின்று போயின. அப்பணிகளை மீண்டும் தொடரும்படி, பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, ஆதார் விபரம் பதிவு செய்யாத மற்றும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

தற்போது, பல சிக்கல்களுக்கு பின், பொது மக்களுக்கான ஆதார் பதிவு பணிகளை, முழு வீச்சில் துவங்கி விட்டோம். பள்ளிகளில், ஆதார் பணிகளை, நவ., 15ல் துவங்கவுள்ளோம்; பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்; இப்பணியில், 500 பேர் ஈடுபடுவர். பொதுவாக, அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளுக்காக, மனு செய்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, ஆதார் பதிவு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tuesday, November 01, 2016

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில் அறிவிப்பு

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில்

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

4 பேருக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுகளில் வயதில் மூத்த பெண்மணி இனி குடும்ப தலைவர்


தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 4 பேருக்கும் மேல் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்ப தலைவர் என்றும், இதுதொடர்பான விபரங்களை விற்பனையாளர்கள் அந்தந்த ரேஷன்கார்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன்கார்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உணவு பொருள் வழங்கல் ஆணையர் மாவட்டம் தோறும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன் விபரம்:

தமிழகத்தில் 1.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 4 நபர்கள் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்குதலில் எவ்வித மாற்றமும் இல்லை. தகுதியுள்ள ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும். 4 நபர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில் 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி வழங்கப்படும். 6 பேர் இருந்தால் 30 கிலோ வழங்கப்படும். 15 பேர் ஒரே ரேஷன் கார்டில் இருந்தால் அவர்களுக்கு 75 கிலோ அரிசி வழங்கப்படும்.

இதுதொடர்பாக ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டுள்ள ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் அதிகபட்ச அரிசி அளவை சரிபார்த்து அரிசி விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக பாயின்ட் ஆப் சேல் கருவிகளை விற்பனையாளர்கள் ‘வெர்ஷன் அப்டேட்’ செய்துகொள்ள வேண்டும். 4 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட பிஎச்எச் -பிரியாரிட்டி ஹவுஸ் ஹோல்டு எனப்படும் முன்னுரிமை பெற்றவர் ரேஷன்கார்டு விபரம் பாயின்ட் ஆப் சேல் கருவியில் வரும். அதனை ரேஷன்கார்டின் முன்பக்கம் அல்லது பின்பக்கம் ‘பிஎச்எச்’ என்று ரேஷன்கார்டில் எழுதி வட்டமிட்டு குறிப்பிட வேண்டும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இவ்வாறு 4 குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டு முன்னுரிமை பெற்ற ரேஷன்கார்டு என்று பட்டியலிடப்படுகிறது. அவ்வாறு உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்ப தலைவர் ஆவார். குடும்ப தலைவர் விபரம் அந்தந்த ரேஷன்கார்டு வாரியாக பாயின்ட் ஆப் சேல் கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை அந்தந்த ரேஷன்கார்டிலும் முன்புறம் விற்பனையாளர்களால் எழுதப்பட வேண்டும்.ஆண்கள் மட்டுமே அல்லது 18 வயது நிரம்பாத பெண் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டுக்கு வயதில் மூத்த ஆண் உறுப்பினர் குடும்ப தலைவர் ஆவார். ஏற்கனவே உள்ளது போன்ற முறைப்படி அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும். இதில் கூடுதல் அரிசி ஏதும் வழங்கப்படாது. அனைத்து அரிசி பெறும் முதியோர் உதவித்தொகை ரேஷன்கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

அடுத்துவரும் வேலை நாட்களில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ரேஷன்கடை விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்திற்கு!

வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவராக நீங்கள், ஒரு நிமிடம் இந்த செய்திக்காக செலவு செய்யவும். உங்களுடைய கல்வி கடனுக்காக மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் கல்வி கடனுக்கு செலுத்தும் வட்டி தொகையை மானியமாக வங்கிக்கு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வி கடன் தொகை மட்டும் திரும்பி செலுத்தினால் போதும்.
இந்த மானியத்தை பெற நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியினை அணுகி உங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா என்பதை விசாரிக்கவும். ஒரு வேளை உங்களுக்கான கடன் தொகையுடன் வட்டி தொகையும் சேர்ந்து இருந்தால் உடனே நீங்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று, உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற வருமான சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம் சான்று பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து, வங்கியில் உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், உங்களுடைய கல்வி கடனை மட்டும் திரும்பி செலுத்தினால் போதுமானது.
இது குறித்து வங்கி அதிகாரியிடம் பேசிய போது “பொதுவாக கல்வி கடன் வழங்கும் போதே வங்கியில் வருமான சான்றிதழை சமர்பித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையிலும் மானியம் வழங்கப்படுவது உண்டு. சில நேரங்களில் நீங்கள் கல்வி கடன் பெற்று நான்கு ஆண்டுகளில் குடும்ப வருமானம் மாறி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்காக மானியத்தை பயன்படுத்துவதற்கு, புதிய படிவத்துடன் புதியதாக வருமான சான்றிதழை பெற்று தர வேண்டி இருக்கும்.

இது வங்கிக்கு வங்கி மாறும் என்பதால் நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியின் மேலாளரை சந்தித்து விளக்கம் பெற்ற பின்பு தாசில்தாரிடம் சான்று பெற்று தருவது நல்லது. இவ்வாறு பெற்று தரும் போது உங்களுக்கான கல்வி கடனுக்கான வட்டியினை மத்திய அரசின் மானியமாக வழங்கும்” என்றார். 

பெரும்பாலும் கல்வி கடன் வாங்கும் போது வங்கிக்கு சென்றிருப்போம். அதன் பின்பு வங்கிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு குறைந்து இருக்கும். கல்வி கடன் பெற்றவர்களுக்கு இன்னொரு முறை வங்கிக்காக என்று யோசிக்க தோன்றும். கூடவே, தாசில்தார் அலுவலகத்தில் எளிதாக கையெழுத்து வாங்க முடியுமா என்ற யோசனையும் உங்களை தாமதப்படுத்தும். ஆனால், முயன்றால் உங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் கல்வி கடன் பெறாதவராக இருந்தால் கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு இந்த தகவலைத் தெரியப்படுத்தவும்.

- ஞா. சக்திவேல் முருகன்