இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 05, 2015

புதிய கல்விக் கொள்கையை அனைவரும் எதிர்க்க வேண்டும்: பேராசிரியர் ராமானுஜம்


மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று, கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், கல்வியாளருமான ஆர்.ராமானுஜம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஆகிய அமைப்புகளின் சார்பில் "உயர் கல்வி எதிர்கொண்டுள்ள சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய கல்விக் கொள்கை குறித்து கணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஆர்.ராமானுஜம் பேசியது: புதிய கல்விக் கொள்கைக்கான விவாதப் பொருள்களிலிருந்து அந்தக் கொள்கை எப்படியிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கை கல்வி தொடர்பான பிரச்னைகளை முழுக்க, முழுக்க நிர்வாக ரீதியான பிரச்னையாகவே பார்க்கிறது.

கல்வியின் ஆன்மாவை இது தொடவில்லை. இந்த விவாதப் பொருள்களில் ஆசிரியர்கள் மிகவும் தரக்குறைவானவர்களாகப் பார்க்கப்படுவதை அறிந்துகொள்ளலாம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் கல்வி பெறுவதில்லை, உயர் கல்வி நிறுவனங்களுக்குள் அவர்களால் இன்னமும் வர முடியவில்லை என்பதுதான் நமது மிகப்பெரிய பிரச்னை. ஆனால், இந்தியாவில் உருவாக்குவோம் என்கிற திட்டத்துக்காக பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்களிலிருந்து தொழிலாளர்களை உருவாக்குவதாகவே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளையும், வேறுபாடுகளையும் நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. சமூக அவலங்களைப் போக்கும் கருவியாக கல்வியை இந்தப் புதிய கொள்கை பார்க்கவேயில்லை. மிக முக்கியமாக கலாசார ஒருமுகத்தன்மையையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. தொழில் நிறுவனங்களின் நலன்கள், மதவாதக் கொள்கைகள் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக் கொள்கையாக தரப்பட உள்ளது.

எல்லோருக்கும் வேலை தரப்போகிறோம் என்கிற புதிய கொள்கையை எதிர்ப்பது சுலபமல்ல. ஆனால், கல்வி பற்றிய அக்கறை கொண்ட அனைவரும் எதிர்க்க வேண்டியதுதான் இந்தப் புதிய கொள்கை. உயர் கல்வியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. ஆனால், இந்த மாற்றங்கள் தேவையில்லை என்றார் அவர். சந்தைப் பொருளாக மாற்றக் கூடாது: அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் சத்கோபால்:

உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா திறந்துவிட உள்ளது. நைரோபியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லை என்றால், அதை எப்போதும் திரும்பப் பெற முடியாது. கல்வி என்ற நிலையில் இருந்து சந்தையில் விற்கப்படும் பொருளாக அது மாற்றப்பட உள்ளது. மாணவர்கள் நுகர்வோர்களாகவே பார்க்கப்படுவர். உயர் கல்வியை பணம் கொடுத்து மட்டுமே கற்க முடியும் என்ற நிலை உருவாகும். எனவே, இதை அனைவரும் எதிர்க்க வேண்டும். இப்போதைய உயர் கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. ஆனால், அதை சந்தைக்குத் திறந்துவிடுவது தீர்வாகாது என்றார் அவர். மனோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி: மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஒரேயொரு கல்வியாளரைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிகாரிகள்தான்.

உலக வர்த்தக அமைப்பின் -காட்ஸ்- ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதன் மூலம் உயர்கல்வி முழுக்க, முழுக்க சந்தைப் பொருளாக மாறும். இந்த ஒப்பந்தம் உயர் கல்வியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுகிறது. இதற்கான விருப்பத்தை இந்தியா திரும்பப் பெறவில்லையென்றால் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது. இப்போது நமது கல்விக்கும், ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுடனை இணைந்து மிகப்பெரிய போர்க்குரல் எழுப்பினால் மட்டுமே மீட்சி உண்டு என்றார் அவர். புதிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் ஜி.முனுசாமி பெற்றுக்கொண்டார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டோமினிக் ராய்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கே.செந்தமிழ்ச்செல்வன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.ரத்னசபாபதி, பேராசிரியர் மணி, பேராசிரியர் எஸ்.மோகனா உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Wednesday, November 04, 2015

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு


தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும். இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'


மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன. 2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.

தமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன் பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை, என்றார்

லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு


தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் லேப் - டாப் பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில், மீதியுள்ள லேப் - டாப்களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, லேப் - டாப்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.-

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்


பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது

.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-

Tuesday, November 03, 2015

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்


பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர். தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை உண்டா?


'தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது.

அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Monday, November 02, 2015

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு


பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறி மறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது,

''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால், சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.

பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், 'புளூ பிரின்ட்'டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும். புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.

எனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும். இந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்? பல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற அம்சங்களை விட்டு விடுகின்றனர்.

அதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. எனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, November 01, 2015

தமிழ் மொழி


உயிர் எழுத்துக்கள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் நாக்கின் உதவி இன்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அன்னத்தில் படாமல் வெறும் காற்றின் உதவியால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மெய் எழுத்துக்கள்
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துக்கள் நாக்கின் உதவிக் கொண்டு உருவாகும் எழுத்துக்கள் ஆகும். அதாவது, இந்த எழுத்துக்கள் உருவாகும் போது நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இந்த ஒலிகள் உருவாகும் போது காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, உடலின் பங்கு அதிகம் என்பதால் இவை மெய் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்
தமிழ் எழுத்துக்கள் நமது மார்பு, கழுத்து, தலை, மூக்கு போன்ற நான்கு இடங்களில் பிறக்கின்றன. இவை ஒலியாக வெளிப்பட உதடு, நாக்கு, பல், அண்பல் (மேல் பல் வரிசையின் அடிப்பகுதி), அண்ணம் (வாயி

தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் இவை இரண்டின் கலப்பில் பிறந்த உயிர்மெய் எழுத்து மற்றும் "ஃ" எனும் ஆயுத எழுத்தையும் சேர்த்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் பிறந்துள்ளன.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1 (ஃ)
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

பாவாணர் கருத்து
உலக மாந்தர் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ (தன்னிலை) மற்றும் உ (முன்னிலை) என்பது பாவாணரரின் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை தான் த், ம், ழ் என்பவை ஆகும்.

தமிழ் பெயர் பிறந்த விதம்
த், ம், ழ் எனும் இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ = ‘த' வாகவும், ம்+இ = ‘மி' யாகவும், ழ்+உ = "ழு" வாகவும் என்று "தமிழு" என்று ஆக்கினர்

உகரத்தை நீக்குதல்
பிறகு கடைசி எழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி "தமிழு" என்பதை "தமிழ்" என்று அழைத்தனர். இது தான் நம் தாய் மொழிக்கு "தமிழ்" என்று பெயர் வந்ததன் காரணமாம்.