இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 27, 2015

மாநிலத்தில் அனைத்து தேர்வு கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம்

பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரையிலும், 10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 10 வரையும் நடைபெறுகின்றன. பிளஸ் 2 தேர்வை 8.43 லட்சம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அரசு அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அண்மையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா, மின்சார வாரியத் தலைவர் சாய்குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் பிரபாகர ராவ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் அமைந்துள்ள தேர்வுக் கூடங்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை அளிக்க வேண்டும் எனவும், மின்சாரம் அடிக்கடி தடைபடும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள தேர்வுக் கூடங்களுக்கு மின்னாக்கிகளை (ஜெனரேட்டர்கள்) போதுமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகளை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அறிவுறுத்தினார்.

மேலும், கிராமப் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு எளிதில் சென்று வர வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறையை கேட்டுக் கொண்டார். மாணவ, மாணவிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தேர்வுகளை எழுதுவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தேர்வுக்கான வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கவும் அறிவுறுத்தினார். மேலும், விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா.பரிசீலிக்க அரசு உத்தரவு

அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: பள்ளிகளிலும், இதரக் கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள், ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாலியல் தொந்தரவு உள்ளிட்ட தீமைகள் நீடித்தால், மாணவர் சமுதாயம் அவர்களது ஒழுக்க நெறிகளிலிருந்து தவறி, இந்த சமுதாயம் மிகவும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வளாகம், வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக கேமரா பொருத்த வேண்டும்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தக் கோரிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Thursday, February 26, 2015

பிரிட்டிஷ் கவுன்சில் புதிய திட்டம்

பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் சென்று படிப் பதற்காக எழுதப்படும் IELTS, TOEFL என்ற ஆங்கில தேர்வு களைப் போன்று பள்ளிப் பருவத் திலேயே மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மதிப்பீடு செய்துகொள்ள இந்த தேர்வு உதவும்.

ஏப்டிஸ் தேர்வில் மாணவர் களின் பேசுதல், எழுதுதல், கேட்டல், வாசித்தல் திறன் சோதிக்கப்படும். கூடுதலாக ஆங்கில இலக்கணமும் சோதிக்கப்படுகிறது. இந்த தேர்வு நேற்று முன் தினம் (புதன்) டெல்லி யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை யில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னையில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்களுக்கு இந்த தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியின் மாணவி ஆர்த்தி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் ஏப்டிஸ் தேர்வை அறிமுகப்படுத்தி பேசிய பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் மீ குவி பார்கர் (Mei Kwei Barker) கூறும்போது, “இந்த தேர்வு 13 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. அந்த பருவத்தில் உள்ள மாணவர்கள் என்னென்ன சூழ்நிலைகளை எதிர் கொள்வார்களோ அதிலிருந்து தான் கேள்விகளும் கேட்கப்படு கின்றன. விருப்பமுள்ள பள்ளிகள் பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இந்த தேர்வுக்கான பாடதிட் டத்தை பெற்றுக் கொள்ளலாம். பள்ளிகளில் இதனைப் பயன் படுத்தி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மதிப்பீடு செய்து கொள்ளலாம்” என்றார்.

சோதனை முறையில் இந்த தேர்வை எழுதிய மாணவி ஷைலஜா கூறும்போது, “பள்ளி யில் எழுதும் ஆங்கில தேர்வுகளை விட இது வித்தியாசமாக இருந்தது. மற்றவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், எனது ஆங்கில திறன் எந்த அளவில் உள்ளது என்பதை நானே அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது” என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய தேர்வுகள் துறைத் தலைவர் டி.விஜயலக்‌ஷ்மி, தேர்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ப்ளஸ் 2 விடைத்தாள் கையாள்வதில் புதிய நடைமுறை

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும். அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.

இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுத வேண்டும். விடைத்தாளில் வேறு எந்த குறியீடும் எழுத கூடாது என மாணவர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் விடைத்தாளை முழுமையாக சரிபார்த்த பின்பே மாணவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாலாமணிமேகலை, ஷெர்மித்ரிச்சர்ட்சிறாப் மற்றும் தலைமைஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ரயில்வே பட்ஜெட்டில் மக்களை கவரும் அம்சம்

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய வசதிகள் - திட்டங்களின் விவரம்:

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு

பயணிகள் இனி 60 நாட்களுக்கு பதிலாக, 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தூய்மைக்கு தனித் துறை

* தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித் துறை ஒன்று ஏற்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் உள்ள கழிப்பறைகளின் வசதிகளின் நிலை மேம்படுத்தப்படும். 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* ரயில் பெட்டிகளில், சுற்றுசூழலுக்கு உகந்த கழிப்பறைகள் பொருத்தப்படும்.

* இந்த ஆண்டு இன்னும் 17,000 கழிப்பறைகள் மாற்றி அமைக்கப்படும். ஆறு மாதங்களுக்குள் நவீன தொழில்நுட்ப ரீதியான வாக்யூம் கழிப்பறைகளை கொண்டுவருமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர வடிவமைப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

* படுக்கை விரிப்புகளுடன் கழிவுகளை சேகரிக்க ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பையை வழங்குவதற்கான சாத்தியகூறும் கண்டறியப்படும்.

* குளிர்சாதன வசதி இல்லாத ரயில் பெட்டிகளிலும் குப்பை தொட்டி வசதி விரிவாக்கப்படும்.

* ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

ஹெல்ப்லைன்கள்:

* 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் '138' எண் ஹெல்ப்லைன் வசதி.

* பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி.

5 நிமிடத்தில் பயணச் சீட்டு

* பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கு 'ஆபரேஷன் 5 மினிட்ஸ்' என்ற புதிய வசதி.

* சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணிணிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல்.

* ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல்.

* ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் அறிமுகம்.

* விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணிணிவழி வசதியை ஏற்படுத்துதல். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும்.

* பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும்.

* 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.

* ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில், சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பொதுப் பெட்டிகளிலும் மொபைல் 'சார்ஜ்' வசதி

* சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* மொபைல் போன்களை 'சார்ஜ்' செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

வை-ஃபை வசதி

* பி-பிரிவு ரயில் நிலையங்களில் 'வை-ஃபை' சேவை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் 'லாக்கர்' வசதி ஏற்படுத்தப்படும்.

* குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும்.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்குமாறு தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு...

* மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும்.

* மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

* பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும்.

* நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் 'பிரய்லி' வசதி ஏற்படுத்தப்படும்

Wednesday, February 25, 2015

சுற்றுலா செல்வது குறித்து செயல்முறைகள்

ரயில்வே பட்ஜெட்

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

*  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்

*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .

* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.

* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.

* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை

* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.

* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.

* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

பசுமை கழிவறைகள்

* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.

* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.

* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.

*  நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138

* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 1,700-க்கும் அதிகமானோர் அடங்கிய தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன. போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்தால் அதிகபட்சமாக 4 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு அதிகமாக பணி அனுபவம் இருந்தால் அதிகபட்சமாக 3 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதில் உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி

மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 2015-16-ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின்னர் டெக் விஸார்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பால் வின்ஸ்டன் கூறியதாவது: வளர்ந்து வரும் ரோபாடிக்ஸ் துறையில் இந்திய இளைஞர்களும் சிறந்த விளங்கும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 தலைப்புகள் வீதம் 6 ஆண்டுகள் படிக்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஏற்றதாக இது இருக்கும். இந்தப் பயிற்சியில் முதல் 4 ஆண்டுகள் முடிவில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இளநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 6 ஆண்டுகள் முடிவில் பயிற்சியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிக்கும் ஊக்கம் அளிக்கப்படும். இந்தத் திட்டம் மாணவர்களிடையே தொழில்நுட்ப அறிவைத் தூண்டுவதோடு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவதாக அமையும் என்றார்.

ஜாக்டோ ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு

பள்ளி ஆசிரியர்களின், 15 ஆண்டுகால கோரிக்கை குறித்து, பேச்சு நடத்த அழைக்கப்பட்ட, 'ஜாக்டோ' ஆசிரியர் குழு, முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான்கு மணி நேரம் காத்திருந்த ஆசிரியர் குழுவினர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

15 கோரிக்கைகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, ஆறாவது சம்பளக் கமிஷன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் வழங்குதல்; தன் பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 கோரிக்கைகள், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன. இதற்காக, 28 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில் மார்ச், 8ம் தேதி மாவட்டங்களில் பேரணி, தொடர் போராட்டத்துக்கு முடிவானது. இதையறிந்து, முதல்வருடன் பேச்சு நடத்த வருமாறு, 'ஜாக்டோ' குழுவுக்கு அரசு அழைப்பு விடுத்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு முதல்வரை சந்திக்க, 'ஜாக்டோ' குழுவினர் தலைமைச் செயலகம் வந்தனர்.

முதலில், போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. பின், தனித்தனியாக பெயர் மற்றும் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து, தலைமைச் செயலகத்திற்குள் அனுமதித்தனர். முதல்வர் அறைக்கு அருகில், 15 பேர் கொண்ட குழு காத்து நின்றது. அவர்களின் மொபைல் போன்கள் தனியாக வாங்கி வைக்கப்பட்டன. ஆனாலும், நீண்ட நேரமாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு அழைப்பு வரவில்லை; அமர இருக்கைகளும் இல்லை.

தகவல் இல்லை: ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருந்தது. அதில், மூத்த நிர்வாகி மட்டும் காத்திருந்தார்; மற்றவர்கள் நின்றனர். மூன்று மணி நேரம் கடந்த பின்னும், முதல்வர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வராததால், ஆசிரியர் சங்கத்தினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர், 'ஜாக்டோ' குழுவினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். அரசே அழைத்துவிட்டு, நீண்ட காத்திருப்புக்குப் பின், திருப்பி அனுப்பியது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் திட்டமிட்டபடி தொடரவும், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக பேரணி நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் சத்தியமூர்த்தி, மாநிலப் பொதுச் செயலர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அரசு அழைப்பு விடுத்தது. ஆனால், பேச்சு நடக்கவில்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். மீண்டும், அரசு அழைத்தால் பேச்சு நடத்த வருவோம்.