இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, April 04, 2014

கல்வி துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து 61 மதிப்பெண்களுக்கு 17 கேள்விகள் கேட்பு

  படிப்பில் பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், பள்ளிக்கல்வித் துறை, இந்த ஆண்டு, சிறப்பு வினா வங்கி புத்தகத்தை தயாரித்து வழங்கி இருந்தது. நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிதத் தேர்வில், இந்த புத்தகத்தில் இருந்து, 61 மதிப்பெண்களுக்கான, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தைப் பார்த்து தயாரான மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்; குறிப்பாக, தோல்வியின் விளிம்பில் உள்ள மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, பள்ளிக்கல்வி இயக்ககம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு என, சிறப்பு வினா வங்கி அடங்கிய புத்தகத்தை தயாரித்தது.

இந்த புத்தகங்கள், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு, விடை அளிக்கும் முறை குறித்து, மாணவர்களுக்கு, ஆசிரியர் விளக்கினர். இதிலிருந்து, பிளஸ் 2 தேர்வில் அதிகளவு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதத் தேர்விலும், 61 மதிப்பெண்களுக்கு, 17 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஒன்றின் கணித ஆசிரியர் கூறியதாவது: இரு மதிப்பெண் பகுதியில், எட்டு கேள்விகளும், ஐந்து மதிப்பெண் பகுதியில், ஒன்பது கேள்விகளும், கல்வித் துறை வழங்கிய புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகத்தை பார்த்து தயாரான, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர், சுளையாக, 61 மதிப்பெண் பெறுவர்.

எனினும், எப்போதும் கேட்கப்படும், 'இயற்கணிதம்' என்ற பாடத்தில் இருந்து, 'காரணிபடுத்துக' மற்றும் 'வர்க்கமூலம் காண்க' என்ற கேள்விகள், இந்த முறை கேட்கவில்லை. இது, மாணவர்களுக்கு, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த ஆசிரியர் கூறினார். 'நேற்று நடந்த கணிதத் தேர்வு, பெரிய அளவிற்கு கடினம் இல்லை' என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். எனினும், 'ஐந்து மதிப்பெண் பகுதியில், 41வது கேள்விக்கான விடை, பல அடுக்குகள் போட்டும், இறுதியில் விடை வரவில்லை' என, பல மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு


   மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது. 'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு, சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து, இலவச பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம் தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்று உள்ளனர். போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களிலும், 40 மையங்களில், சிறப்பு தேர்வு நடக்கிறது.

மே 15ம் தேதி வரை தபால் ஓட்டு


தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால் ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க, சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முகாமில், ஓட்டுச் சீட்டு வழங்கப்படும். அங்கே ஓட்டுப் பெட்டி வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், அங்கேயே ஓட்டு போட்டு, பெட்டியில் போடலாம். அன்று ஓட்டு போட முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக அறை முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுப் பெட்டியில், மே 15ம் தேதி மாலை வரை, ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடும் அனைவரும், மே 15ம் தேதி வரை, ஓட்டு போடலாம்.

கிராஜுவிட்டி என்றால் என்ன?


      கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று. கிராஜுவிட்டி பெறுவதற்கான தகுதி வருமான வரிச் சட்டத்தின் படி, ஊழியர் ஒருவர் நிறுவனம் ஒன்றில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்ந்து முழுநேரப் பணியில் இருந்திருப்பாரானால், அவருக்கு கிராஜுவிட்டி வழங்கப்பட வேண்டும்

. கிராஜுவிட்டி தொகை எப்போது வழங்கப்படும்?

கிராஜுவிட்டி தொகை வழங்குவதற்கென சில விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர் பட்டியலில் குறைந்த பட்சம் 10 நபர்களாவது இருக்க வேண்டும். இப்பட்டியலில் இடம்பெறுவோர் தற்காலிக பணியாளர்களாக இருக்கக்கூடாது; அனைவரும் மாதாந்திர சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 5 வருடங்கள் குறிப்பிட்ட அந்நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். எனினும், பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், இந்த ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும். எனவே, அவ்வூழியரின் பணிக்காலம் 1 வருடம் என்ற அளவில் குறைவாகவே இருந்தாலும் கூட, முதலாவதாகக் கூறப்பட்ட விதிமுறை நிறைவேறும் பட்சத்தில் அவ்வூழியர் கிராஜுவிட்டி பெறும் தகுதியைப் பெறுவார்.

கிராஜுவிட்டிக்கு வரிக்கு உட்பட்டதா??

ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டித் தொகை, ஊதியத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாக, வருமான வரி ரிட்டர்ன்களை தாக்கல் செய்யும் போது "சம்பளத்திலிருந்து கிடைக்கும் வருவாய்" என்ற பிரிவின் கீழ் வரி விதிப்புக்குட்படுத்தப்படுகிறது. அரசுப் பணியாளர் இதுவே அவ்வூழியர் அரசுப் பணியில் இருந்திருப்பாராயின், வருமான வரிச் சட்டத்தின் செக்க்ஷன் 10 (10) என்ற சட்டப்பிரிவின் கீழ், கிராஜுவிட்டியாக அவருக்கு வழங்கப்படும் தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அரசு ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளே! கிராஜுவிட்டியாக வழங்கப்படக்கூடிய தொகை கிராஜுவிட்டி தொகையானது, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது (இங்கு ஊதியம் என்பது கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் என்பதாகக் கொள்ளப்படுகிறது).

Thursday, April 03, 2014

G.O no.96 TN govt hike 10% D.A

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது


    மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ்–2 தேர்வு முடிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மே மாதம் 9–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அரசு தேர்வுத்துறை அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வருடம் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் 4–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை வழங்கப்பட்டது. மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை ஜூலை 31–ந்தேதிக்குள் முடிக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மே முதல் வாரத்தில் வினியோகம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் கொடுக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 383 இடங்கள் ஆகும். இந்த இடங்கள் போக மீதம் உள்ள 2 ஆயிரத்து 172 இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும். பல் மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மட்டும்தான். இந்த கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேர 100 இடங்கள் மட்டுமே உள்ளன.

அதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 இடங்கள். இந்த இடங்கள் தவிர 85 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம். அதுவும் கடந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. கலந்தாய்வு மருத்துவ கவுன்சிலிங் முடிந்ததும் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்த வருடம் விண்ணப்பங்கள் குறைவாக வந்திருந்தன. அதாவது 2012–ம் ஆண்டை விட 700 விண்ணப்பங்கள் குறைவாக இருந்தன.

Wednesday, April 02, 2014

CHECK LIST for PRESIDING OFFICERS General Elections 2014

வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, பொருள்கள் சரிபார்த்தலுக்கான குறிப்பேடுகள், முகவருக்கான கையேடு

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்

   குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 2012 நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் நேர்காணல் இல்லாத மீதம் உள்ள பதவிகளுக்குஉரியவர்களை தேர்வு செய்வதற்காக 2ம் கட்ட கவுன்சலிங் நடக்க உள்ளது.

இதற்கான தெரிவுப்பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சலிங் 7ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கிறது. இதுதொடர்பான அழைப்பு கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மேலும், அழைப்பு கடிதங்களை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் 256 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் விண்ணப்பத்தில் குறித்துள்ள விவரங்கள் தவறாக இருந்தால் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. கவுன்சலிங் காலை 8.30 மணிக்கு தொடங்கும். பங்கேற்க தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை போன்ற சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள், நிரப்பப்படாத பணியிடங்கள் இருந்தால் அவற்றை நிரப்புவதற்கான கவுன்சலிங் பின்னர் நடக்கும்.

என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம் கவுன்சிலிங் ஜூன் 3-வது வாரத்தில் தொடங்குகிறது

  
   என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே மாதம் முதல் வாரத்தில் வினியோகிக்கப்படும் என்றும் ஜூன் 3-வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். மே முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் பிளஸ்-2 தேர்வு கடந்த 25-ந்தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதுபோல இந்த வருடமும் மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது விற்கப்படும் என்று கேட்டதற்கு அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அளித்த பதில் வருமாறு:- கடந்த வருடம் போல இந்த வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் என்ஜினீயரிங் விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 59 இடங்களில் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் இணையதளத்தில் அரசு தேர்வுத்துறை வெளியிடும் பிளஸ்-2 மதிப்பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து அனுப்ப வேண்டும். கலந்தாய்வு தொடக்கம் பின்னர் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

கலந்தாய்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும். பொது கலந்தாய்வு எப்படியும் ஒரு மாதத்திற்கு அதிகமாக நடைபெறும். ஜூலை 31-ந்தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பி.இ. முதலாம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.

பிழையான பிளஸ் 2 கணித வினாக்களுக்கு மதிப்பெண்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவ

  
    பிளஸ் 2 கணிதப் பாடத்தில் எழுத்துப் பிழையுடன் இருந்த 2 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மதிப்பெண் வினாவில் 4, 16-ஆவது கேள்விகள் எழுத்துப் பிழையுடன் அச்சாகியிருந்தன. 16-வது கேள்வியில் குவியங்களுக்கு இடையே என்பதற்குப் பதிலாக குவியல்களுக்கு இடையே என பிழையுடன் இருந்தது. இந்த இரண்டு வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 16-வது கேள்வி ஆங்கிலத்தில் சரியாக இருந்ததால், ஆங்கில வழி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாது.

பிளஸ் 2 முக்கியப் பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் புதன்கிழமை (ஏப்ரல் 2) முதல் தொடங்க உள்ளன. இதையடுத்து, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கணிதப் பாடத்தில் 47-வது கேள்வியில் 6 மதிப்பெண் வினாவும் எழுத்துப் பிழையுடன் அச்சாகியிருந்தது. எனவே, இந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படாது என்றும், குறிப்பிட்ட அந்த வினாவுக்கு விடையளிக்க முயன்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

+2 results

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, April 01, 2014

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் நடவடிக்கை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு


தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏழை மாணவர்கள் உள்ளிட்ட நலிவடைந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் சேர்க்கப்படவேண்டும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளிலும் 2014–2015– ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்த மாதம் மற்றும் அடுத்த மாதமான மே மாதம் நடத்த வேண்டும்.

ஆனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஏப்ரல் மாதம்தான் மாணவர் சேர்க்கைக்கான பணியை தொடங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. அதை மீறி சில பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளையும் மெட்ரிகுலேஷன் ஆய்வர்கள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு அனுப்பவேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்காக 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் (சிறுபான்மை இன பள்ளிகள் நீங்கலாக) நடைமுறைப்படுத்தவேண்டும்.

விண்ணப்ப படிவம் மே மாதம் 3–ந்தேதி முதல் 9–ந்தேதிக்குள் கொடுக்கப்படவேண்டும். மே மாதம் 9–ந்தேதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள். மே 11–ந்தேதி மாணவர்சேர்க்கை பற்றிய இறுதி முடிவை வெளியிடவேண்டும். 5 பிரிவுகள் மட்டுமே மேலும் சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்.

வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்


    ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு, இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான வரும், 15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வாணையம் எதிர்பார்க்கிறது. தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் போட்டி: இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 4: கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் குரூப் - 4 தேர்வு நடந்தத

ு. இதன் முடிவு, சமீபத்தில் வெளியானது. இளநிலை உதவியாளர், 3,704, தட்டச்சர், 1,843, சுருக்கெழுத்து தட்டச்சர், 308 என, 5,855 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம் 24 முதல், கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 348 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு


    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது.

முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத் துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.