இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 06, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: எமிஸ் விவரங்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய (எமிஸ்) விவரங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளைச் சிறப்பாக தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் கணினி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன. வட்டார வள மைய கணினி விவரப் பதிவாளர்களும் ஆதார் பதிவு செய்யும் கருவியை இயக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைச் சேகரித்து, விவரங்களை ஆதார் கருவி மூலம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

கட்டணம் பெறக் கூடாது: ஆதார் எண் சம்பந்தப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி செய்யப்பட வேண்டும். மேலும், ஆதார் எண் பதிவு செய்த பின்பு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பதிவு செய்யப்பட்டமைக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும். ஆதார் பதிவு, பள்ளி வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். புதிய ஆதார் எண் பதிவுக்கு மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் பெறக்கூடாது. மாணவர்களின் ஆதார் எண் பதிவில் மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், மாற்றம் செய்து ரூ.50 கட்டணமாக வசூல் செய்யலாம்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது. பிற பொதுமக்களுக்கு இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது.

குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு புறம்பாகவோ பதிவுகள் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகள் ஏதேனும் செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் சரிபார்த்தபடி மாணவர்களை ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து வந்து ஆதார் எண் பதிவு செய்திட வேண்டும். ஆதார் பதிவுப் பணிகளை துரிதமாக செய்யும் வகையில் மாவட்ட அளவில் ஆதார் பதிவு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தவும், அந்த குழுவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, August 03, 2019

மக்கள் தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசிதழில் கடந்த 31-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபற்றி மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அசாம் தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரைவு பட்டியல் வெளியானது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதாக பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்த தேசிய கணக்கெடுப்பில் சுமார் 31 லட்சம் பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று தகவல் சேகரிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பார்கள். இந்திய பதிவாளர் ஜெனரல் தேவைக்கு ஏற்ப மின்னணு வடிவில் விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு அதில் தகவல்களை பதிவு செய்வார்கள்.

இந்த பணி மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். சுமார் 45 ஆயிரம் கிராமங்களில் இணையதள வசதி இல்லை. அதுபற்றிய தகவலும் தனியாக சேகரிக்கப்படும். சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டும்.

கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் மக்கள் தொகை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் வெளியிடப்படும். இது இந்திய குடிமக்கள் தேசிய பட்டியல் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த பணிகளும் மின்னணு அடிப்படையில் நடத்தப்பட்டு, தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மக்கள் தொகை பட்டியல் 2024-2025-ம் ஆண்டில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

Thursday, August 01, 2019

கரும்பலகையில் 3 செ.மீ., குறையாத அளவில் எழுதவேண்டும்:பள்ளிக்கல்வி அறிவுறுத்தல்


கரும்பலகையில், 3 செ.மீ.,க்கு குறையாத அளவில் எழுத வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைன் அறிவுரைப்படி, மாணவர்களின் கண் நலனை பாதுகாக்கும் பல்வேறு நெறிமுறைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கை:

ஆசிரியர்கள், வகுப்பறையில் உள்ள, கருப்பலகையில் எழுதும்போது, 3 செ.மீ., அல்லது அதற்கு மேல், எழுத்து அளவு இருப்பது அவசியம்.எழுத்து அளவு, எப்போதும், ஒரே அளவில் இருக்க, 'ஸ்டென்சில் மார்க்கிங்' என்ற, எழுத்து அளவு குறியீட்டை பயன்படுத்தலாம்.கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளை, வகுப்பில், முதல் வரிசையில் அமர வைப்பதுடன், வகுப்பறையில், சீரான வெளிச்சம் எப்போதும் இருக்கும்படி, பார்த்துக் கொள்வது அவசியம்.கண் கூசும் அளவுக்கு, கருப்பலகையில், வெளிச்சம் இருக்கக் கூடாது. குழந்தைகள், எந்த சிரமமும் இல்லாமல், கரும்பலகையை பார்க்க வழி செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர்கள், தொடர்ந்து, இந்த நடைமுறையை கண்காணிக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு, பார்வை சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா, ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இந்த விருதை பெற தகுதி உள்ளவர்கள், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அதிகாரி வழியாக, செப்., 15க்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Wednesday, July 31, 2019

புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு


தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பாடநூல்களில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து ஆசிரியர்களிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டு அதனை நீக்குவதற்கு மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் புதிதாக மாற்றி எழுதப்பட்டு நிகழ் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தப் பாடநூல்களில் பல்வேறு எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் உள்ளன என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து தவறுகள் உறுதி செய்யப்பட்டதும்,அவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சரிசெய்து வருகிறது. இந்த நிலையில், பாடநூல்களில் உள்ள அனைத்து தவறுகளையும் களைந்து மாணவர்கள் எளிதில் பாடங்களைப் படிக்கும் வகையில் கடினமான சொற்களை நீக்கவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி வரும் முதுநிலை விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடம் புதிய பாடப் புத்தகத்தில் உள்ள கடினமான பகுதிகள், பிழைகளை எழுதிப் பெற வேண்டும். அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: பாடநூல்கள் குறித்து பாடங்களை நடத்தும் ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்கும்போது பத்தி, தொடர் சொல், எழுத்து, பாட கருத்து ஆகியவற்றில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அவற்றை வகுப்பு பாடம், அலகு பாடப்பகுதி, பாடப்பொருள் என வரிசையாக குறிப்பிட்டு அட்டவணைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையடுத்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பாடநூல்கள் எழுதிய வல்லுநர் குழு, ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டு தேவையான கருத்துக்கள் திருத்தம் செய்யப்படும். இனி வரும் கல்வியாண்டுகளில் பிழையின்றி பாடநூல்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

Monday, July 29, 2019

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகங்கள் கட்டாயம்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 1,000 நூல்கள் கொண்ட நூலகங்களை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அவர்களின் அறிவு வளரும். காலச் சூழ்நிலைக்கேற்ப கல்வி மாற்றமடைகிறது. அதனால் மாணவர்கள் பாடநூல்கள் மட்டுமல்லாது, பாடத்தோடு தொடர்புடைய நூல்களை கற்கும்போது மாணவர்களின் அறிவு பெருகும் என்பதால், பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 1,000 நூல்கள்... பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஒரு அறையினை நூலக அறையாக மாற்றி,  பள்ளி நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு,  அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 1,000 புத்தகங்கள் உள்ள பள்ளி நூலகம் செயல்பட வேண்டும். இந்த நூலகத்துக்கு, தினமும் குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்றை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த நூலகப் பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து, மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத் திறன், எழுத்துத்திறன்,
ஆங்கிலம் பேசும் திறன், வாசிப்புத் திறன் ஆகியவை மேம்படும்.

மிகையாக உள்ள நாற்காலி, மேஜைகளை...:  பள்ளிகளில் பயன்பாட்டுக்கு மிகையாக உள்ள நாற்காலி, மேஜை ஆகியவற்றை பள்ளி நூலகத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. நூலகத்தில் உள்ள நூல்களை படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும்போது பள்ளி நூலக செயல்பாட்டினை பார்வையிட்டு இந்தச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முனைப்புடன் தினமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Sunday, July 28, 2019

அரசு பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு நிதி


எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.

வறட்சியால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முழுமையாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை நிவர்த்தி செய்ய அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, சட்டசபை தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் வீதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பு தேவைப்படும் தலைமை ஆசிரியர்கள் தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ.,க்களும் பாரபட்சமின்றி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, நிதி ஒதுக்கி, பள்ளி வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, July 25, 2019

நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியது


தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து 8,179 நடுநிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தற்போது அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 413 வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு தூதஞ்சல் (கூரியர்) மூலமாக இந்தக் கருவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நிறுவி கணினி இயக்கத் தெரிந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாகப் பயிற்சி பெறுபவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், அது தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து அந்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறையில் தொழிற்கல்வி இணை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணிகளுக்குப் பிறகு 8,179 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ஒரே நாளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்


தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது.

அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் குழந்தைகள் சேர்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோரிடம் ஏற்படுத்தி விழிப்புணர்வு காரணமாக தற்போது பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். எல்கேஜி வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளும், யுகேஜி வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை நாமக்கல், கோவை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கை இலக்கை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்க்கை சற்று குறைவாக உள்ளது. வகுப்பறைச் சூழலில் மாற்றம் தேவை: இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் கூறுகையில், அரசின் சார்பில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

இருப்பினும் சில இடங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மைய சூழலில்தான் செயல்படுகின்றன. வகுப்பறைகளுக்கு போதுமான அளவுக்கு கல்வி உபகரணங்கள், இருக்கைகள் வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: எல்கேஜி- யுகேஜி வகுப்புகள் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். மழலையர் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி செலவில்லாமல் அளிக்கப்படவுள்ளது.

பெற்றோர் முன்வர வேண்டும்: அதே நேரத்தில், அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன. ஏழை பெற்றோரின் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வரும் செப்.30-ஆம் தேதி வரை குழந்தைகள் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, விஜயதசமி தினத்திலும் குழந்தைகளைச் சேர்க்கலாம். அனைத்து மையங்களிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும். எனவே பெற்றோர் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

Saturday, July 20, 2019

ஆசிரியர்கள் அதிருப்தி: தரமற்ற கல்வி உபகரணங்கள்


ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்' பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் 23 ஆயிரத்து 522 ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 651 நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை சிறப்பு நிதியாக பள்ளி வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும். தலைமையாசிரியர்கள் கல்வி உபகரணங்களை மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கி வந்தனர்.அரசே கொள்முதல்நடுநிலை பள்ளி நுாலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.10 ஆயிரம், விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.6 ஆயிரம், ஆரம்ப பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.4 ஆயிரம், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில உபகரண பெட்டி வாங்க ரூ.6 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் அரசே சில தனியார் நிறுவனங்களை தேர்வு செய்து பள்ளிகளுக்கு தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்களை கொள்முதல் செய்து அனுப்புகிறது. கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் பேட், டென்னிஸ் பந்து, வலை உட்பட 14 வகையான விளையாட்டு, கல்வி உபகரணங்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு அரசு நேரடியாக பணத்தை செலுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கிய தரமற்ற உபகரணங்களால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தரமற்ற பொருள்தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில தலைவர் மோசஸ் கூறியது:

ரூ.4 ஆயிரம் என அரசு அறிவித்துள்ள விளையாட்டு உபகரணங்கள் ரூ.1,500 கூட பெறாது. மாணவர்கள் ஓரிரு முறை பயன்படுத்தியதுமே சேதமடைந்து விட்டது. ரூ.10 ஆயிரத்துக்கு நுாலகங்களுக்கு வாங்கிய புத்தகங்கள் ரூ.4 ஆயிரத்துக்குகூட தேறாது. இதேபோல் ரூ.6 ஆயிரத்துக்கான ஆங்கில உபகரண பெட்டி ரூ.1,000 கூட பெறாது. இதற்கு முன்பு தலைமையாசிரியர்களே மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கும் பொருட்கள் தரமானதாக இருந்தது.அப்போது தலைமையாசிரியர்கள் வாங்கிய பொருட்கள் தரமானதா என அரசு கேள்வி கேட்டது. தற்போது அரசே தரமில்லாத பொருட்களை வாங்கி அனுப்புவது வேதனையாக இருக்கிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. லட்சக்கணக்கில் நிதி இழப்பு செய்யப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.