இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 24, 2019

தேர்தலுக்கு பின் ஆசிரியர் பணி தேர்வு


ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.'தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில், 148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.தேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் தள்ளி போகும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Tuesday, February 19, 2019

பள்ளி கல்வி 'டிவி' சேனல்


தமிழக பள்ளி கல்வியின் சார்பில், கல்வி தகவல்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, கல்வி சேனல் துவக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு தளம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், கல்வி சேனலுக்கு படப்பிடிப்பு நடத்துவதை ஒருங்கிணைக்க, மாவட்ட வாரியாக, குறைந்த பட்சம், இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, தலா, இரண்டு ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Monday, February 18, 2019

Morning prayer 19-2-19

19-2-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

உரை:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

பழமொழி:

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்

பொன்மொழி:

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.

- புத்தர்

இரண்டொழுக்க பண்பாடு :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.

2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொது அறிவு :

1) காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
தேனிரும்பு

2) இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
உத்திரபிரதேசம்

நீதிக்கதை :

சொர்க்கத்தீவு

சொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று
பலருக்கும் ஆசை...
ஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும்கூட...

தீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன்,  சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது  புறப்பட்டது...

பயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..!

இனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்... அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது...


நாட்கள் சென்றது... அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும்  அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது...
யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது.  களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக  கவ்விக்கொண்டது.
கடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது...

மறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது...

ஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்! கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..!
கேக்கும்திறன் குறைந்துவிட்ட  அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரித்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை.  அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று...
உயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று...
எதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.
அதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது... அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது...

படகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது.  கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது!
படகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.

அவர்கள், இவர்களை 
தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..
இயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின்  அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது...

கடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும்  அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது...

இறுதியாக அவர்களையும்  உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல்  பேரிரைச்சலோடு எக்காலமிட்டது...

இன்றைய செய்தி துளிகள் :

1) உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்

2) நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை

3) வரும் கல்வியாண்டு முதல், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் - அமைச்சர் செங்கோட்டையன்

4) ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை..... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

5) புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு

Sunday, February 17, 2019

நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இந்தநிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என்ற தகவல் கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. இதையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் இந்தப் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து தமிழகத்தில் கட்டாயத் தேர்வு முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இருப்பினும் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்படவுள்ள தேர்வு மையங்கள், பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பள்ளியில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் இருந்தால் அங்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்.

பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே படித்து வருவதால் தேர்வு மையங்களையும் அதற்கேற்றவாறு அருகில் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த முடிவு கல்வியாண்டின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயிற்சி, விழிப்புணர்வு என அனைத்து விஷயங்களையும் கொண்டு செல்வதற்கு போதுமான அவகாசம் இல்லையென்பதால் எளிதான வினாக்கள், நெருக்கடியில்லாத மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு


அரசு பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி கட்டாயமாகும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 1998ல், அறிமுகம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியல் படிப்புக்கு, முதலில், கம்ப்யூட்டர் டிப்ளமா முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.பின், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.அதேநேரத்தில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள், 'டெட்' தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை.

இதை எதிர்த்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணையை, தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, ஆசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.அரசு பள்ளிகளில், 2,689 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில், 814 இடங்கள் காலியாக உள்ளன.அவை, புதிய கல்வித்தகுதி அடிப்படையில், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு - 1' என்ற பதவியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.

தற்போது பணியாற்றுவோர், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு - 2' என, அழைக்கப்படுவர்.கிரேடு - 2 பதவியில் உள்ளவர்கள், குறைந்த பட்சம், எட்டு ஆண்டுகள் அனுபவத்துடன், முதுநிலை கல்வித்தகுதி பெற்றிருந்தால், எதிர்காலத்தில், கிரேடு -1 நிலைக்கு பதவி உயர்வு பெறுவர். அதேபோல, கிரேடு - 2ல் பணியாற்றுவோரின் பணியிடங்கள், ஓய்வு, மரணம் உள்ளிட்ட, காரணங்களால் காலியானால், அந்த இடம், கிரேடு - 1 ஆக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

MORNING prayer 18-2-19

18-2-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

உரை:

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

பழமொழி:

If you give an inch he will take all

இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்

பொன்மொழி:

வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

- பிராய்டு

இரண்டொழுக்க பண்பாடு :

1) எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.

2) பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.

பொது அறிவு :

1) மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
ஈரல்

2) மலேசியாவின் கரன்சி எது ?
ரிங்கிட்

நீதிக்கதை :

கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா

இன்றைய செய்தி துளிகள் :

1) ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2) நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாடமத்திய மனிதவளத்துறை அமைச் சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

3) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு

4) புல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - பிரதமர்

5) தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நெஹ்வால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Friday, February 15, 2019

தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவு

பள்ளிகள், கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், ஆங்கிலம் பொது மொழியாகவும், பல மாநிலங்களில் ஹிந்தியும், சில மாநிலங்களில் மாநில மொழியும், அலுவல் மொழியாக உள்ளன. மாநில மொழிகள் மற்றும் அவரவர் தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், தாய்மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அறிவித்த, பிப்., 21ல், தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அறிவித்துள்ளபடி, வரும், 21ல், தாய்மொழி தினத்தை, மாணவர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும். அன்றைய தினம், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில், பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம், இசை உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.மாநில மற்றும், உள்ளூர் மொழி பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது