இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 20, 2018

Morning prayer 21-12-18

21-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

உரை:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

பழமொழி:

Fact is stronger than fiction

கற்பனையை விட உண்மை விசித்திரமானது

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்.

 - பெர்னார்ட்ஷா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தஸ்

2) கல்லணையைக் கட்டியவர் யார்?
கரிகால சோழன்

நீதிக்கதை :

பறக்கும் போட்டி

அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.

அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

‘வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.

இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

இன்றைய செய்தி துளிகள் : 

1) அரையாண்டு தேர்வு விடுமுறையில் நீட் பயிற்சி நடைபெறும் - பள்ளி கல்வித்துறை

2) ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

3) நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலைய பட்டியல் வெளியீடு: 8-வதாக பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு

4) ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

5) ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க ஷூ விருதை, பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 5வது முறையாக வென்றுள்ளார்.

Wednesday, December 19, 2018

Morning prayer 20-12-18

20-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 108

குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

 பழமொழி:

Experience is the best teacher

அனுபவமே சிறந்த ஆசான்

பொன்மொழி:

துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.

-பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?
2011

2) உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?
சீனா

நீதிக்கதை :

தோட்டக்காரனும் குரங்கும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர்  ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊத்துங்க. சிறிய வேரா இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

இன்றைய செய்தி துளிகள் : 

1) கற்றலில் ஆர்வம் ஏற்பட அரசுப்பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவர்களுக்கு ‘ஸ்கோப்’ திட்டம்

2) மெல்ல கற்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளின் பட்டியல் வழங்க உத்தரவு

3) இந்திய ராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள், ரோபோக்களை புகுத்த திட்டம்..!

4) GSLV- F11 ராக்கெட் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSAT-7A

5) ஐபிஎல் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Monday, December 17, 2018

மாணவர் எண்ணிக்கை குறைவாய் இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு

ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை: குறைவாக இருந்தால் வேறு பள்ளியில் சேர்க்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி கணக்கெடுக்கப்படும். அதேபோல் இந்தாண்டும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே அந்த எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒவ்வொரு 30 மாணவருக்கும் ஓர் ஆசிரியரை அனுமதிக்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என நிர்ணயம் செய்யலாம். 60 மாணவர்களுக்கு கூடுதலாக இருந்தால் 2 பிரிவாகப் பிரித்து ஆசிரியர் நிர்ணயிக்கலாம்.
மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு இணையாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் பொழுது தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்வது போலவே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தனித்தனியாக ஆசிரியர் நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால், அந்த வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் செயல்படும் ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறைக்கு டிச.29-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Sunday, December 16, 2018

பயோமெட்ரிக்' வருகை பதிவு


அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Morning prayer 17-12-18

17-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பழமொழி:

Every man is mad on some point

சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே

பொன்மொழி:

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ரஷ்யா

2) கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
டென்மார்க்

நீதிக்கதை :

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2.பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

3.கஜா புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் எவை? அதிகாரப்பூர்வ பட்டியலை அரசு வெளியிட்டது

4.பெய்ட்டி புயல்: ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

5.உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Thursday, December 13, 2018

2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்


தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில்  2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9,  பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்தனர்.  க்யூ.ஆர். குறியீடு,  பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள்,  பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி  2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.  

இதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது:  தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  

இவற்றில் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.  

இதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம்,  ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.  

176 பாடங்கள் வடிவமைப்பு:   இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும்.  ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும்.  தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.  இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.  

வரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

ரத்தாகுது 3,500 ஆசிரியர் பணியிடம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக கணக்கிடப்பட்டுள்ள 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ரத்தாகின்றன. ஆக., 1ல் மாணவர்கள் வருகைப்படி, ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கபடுகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை உபரியாக கணக்கிட்டு, வேறு பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப் படுவர். கடந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்ய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பணி நிரவல் நிறுத்தப்பட்டது.

தற்போது 2017 ஆக., 1 ன் படி உபரியாக கணக்கிட்டு 3,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை பள்ளிகல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இதனால் அப்பணியிடங்கள் அனைத்தும் ரத்தாகின்றன. பணியிடங்கள் குறைவதால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் ஆசிரியராவதில் சிக்கல் ஏற்பட்டது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உபரி பணியிடங்களில் ஆசிரியர்கள் இருந்தால், அப்படியே இருக்கலாம். ஓய்வு, இறப்பு மூலம் காலியான உபரி பணியிடங்களே ரத்தாகின்றன. அவற்றை அடுத்த கலந்தாய்வில் காலியிடங்களாக காட்ட முடியாது. பணியிடங்கள் குறைவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது, என்றார்.