இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 25, 2018

1,932 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1,932 ஆசிரியர்களை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்ற விதிமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தணிக்கைத் துறை இயக்குநர், நிதித் துறையிடம் ஆலோசித்து அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம்: 31க்குள் பதிவேற்ற உத்தரவு


தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்ய தமிழக அரசின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதள ("எமிஸ்') பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய அலுவலர்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் எமிஸ் மூலம் எடுக்க இருப்பதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.

பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

அரசு பள்ளிகளில் 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விரைவில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆதாரில் முகப்பதிவு அடையாளம் இனி... கட்டாயம்!  செப்., 15ல் இருந்து அமலுக்கு வருகிறது


ஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, செப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. 'இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறுவது, தண்டனைக்குரிய குற்றம்' என, அரசு அறிவித்துள்ளது.யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை ஆணையம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கங்கள் உடைய, 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கி வருகிறது.

குற்றச்சாட்டுகள்

வங்கி கணக்குகள், பான் அட்டை, ஓய்வூதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், மொபைல் போன் சேவைகள், சமையல் காஸ் மானியம் உட்பட, பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த சேவைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட ஆதார் அட்டையின் உண்மை தன்மையை அறிய, அட்டை வைத்திருப்பவரின் விரல் ரேகை அல்லது கண்ணின் கருவிழிப் படலம் பரிசோதிக்கப்படுகிறது.இதில் உள்ள பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆதார் அட்டை பயனாளரின் முகத்தை, புகைப்படம் மூலம் பதிவு செய்து சரி பார்க்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை பயன்படுத்தும்போது, ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகையுடன் அவர்களது விரல் ரேகை, ஒத்துப்போவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.வயோதிகம் காரணமாகவும், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரின் கைரேகைகளில் மாற்றம் ஏற்படுவதன் மூலமும், இந்த தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.இது போன்ற நேரங்களில், சம்பந்தப்பட்டோர் முகப்பதிவு அடையாளத்தை சரி பார்ப்பதன் மூலம், தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும்.

உத்தரவு

இந்த முகப்பதிவு அடையாளத்தை, முதல்கட்டமாக, மொபைல் போன், 'சிம்' கார்டுகள் வாங்குவோரிடம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும், செப்., 15 முதல், புதிய சிம் கார்டுகள் வாங்க வருவோரிடம், கை ரேகை, கரு விழிப்படலம் பதிவு செய்யப்படுவதோடு, அவரது முகமும் பதிவு செய்து கொள்ளப்படும். பின், மூன்று தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, சிம் கார்டுகள் வழங்கப்படும்.ஒரு மாதத்தில் வழங்கப்படும் சிம் கார்டுகளில், குறைந்தபட்சம், 10 சதவீத சிம் கார்டுகள், முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதலில், 10 சதவீதத்தில் தொடங்கி, குறைகள் சரி செய்யப்பட்ட பின், படிப்படியாக அதிகரிக்கப்படும். பின், மற்ற சேவைகளிலும் இந்த முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு நடைமுறைபடுத்தப்படும்.இதை கடைபிடிக்க தவறுவது, தண்டனைக்குரிய குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், ஏற்கனவே ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்திடம் உள்ளது. எனவே, அவர்களின் முக அடையாளத்தை ஒப்பிட்டு சரி பார்ப்பது, சுலபமாக இருக்கும்.மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களில், புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால், சேவை நிறுவனங்களுக்கு புதிதாக உபகரணங்கள் வாங்கி தரவேண்டிய அவசியமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெங்கு பயன்படும்?

* புதிய சிம் கார்டுகள் வாங்க, வங்கி, ரேஷன் கடை, அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் வருகை பதிவேடு பணிகள்* பல்வேறு சேவைகளுக்காக, ஆதார் அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், முகப்பதிவு அடையாளம் சோதிக்கப்படும்* ஆதார் அட்டை வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், பின், தாடி வளர்த்திருந்தாலோ, முடி நரைத்திருந்தாலோ, வழுக்கை விழுந்திருந்தாலோ கூட, சம்பந்தப்பட்ட நபரை, சரியாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதளத்தில் ஆசிரியர்களின் விவரம் பதிவு செய்ய அரசு உத்தரவு


பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முழுத் தகவல்களை சேகரித்து 'எமிஸ்' எனும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய முழுத் தகவல்களை அறிய, 'எமிஸ்', (எஜூகேஷனல் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) எனும் திட்டம் சிலஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஆசிரியர், மாணவர் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது.

பள்ளி திறக்கப்பட்ட நாள், மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, வகுப்பறைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் பெயர், வயது, பிறந்த தேதி, தந்தையின் பெயர், பள்ளியில் சேர்ந்த ஆண்டு விவரங்களை சேகரித்து பதிவு செய்ய அறிவுறுத்தியது. அதே போல், ஆசிரியர்களின் பெயர், பணியில் சேர்ந்த ஆண்டு, முகவரியை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதுவரை மாணவர்களின் விவரங்களை மட்டுமே பள்ளிகள் பதிவு செய்துள்ளன. சில பள்ளிகளே ஒரு சில ஆசிரியர்களின் விவரங்களை மட்டும் பதிந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் உடனே புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் பயன்பாட்டாளர் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதை பயன்படுத்தி அந்தந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்யவும், தேவைப்படும்போது மாணவர், ஆசிரியர் குறித்த விபரங்களை உடனே பெறவும் முடியும்.ஒவ்வொரு பள்ளி வாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவில், மாவட்ட அளவில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இதனை எளிமைப்படுத்த விரைவில் அலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

G.O 636- PUBLIC ( SPECIAL -B) DEPARTMENT DATED-25.08.2018- ONE DAY's SALARY TO KERALA FLOODS


Thursday, August 23, 2018

ஆசிரியர்கள் நியமன தேர்வு பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


தற்போது நீட் தேர்வு தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து விரைவில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே போட்டித்தேர்வு வர உள்ளது. போட்டித்தேர்வை எழுதுபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

morning prayer 24-8-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 24-08-2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

பழமொழி :

As is the king, so are subjects

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

பொன்மொழி:

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

-நபிகள் நாயகம்.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்

2.ராகங்கள் மொத்தம் எத்தனை?
16

நீதிக்கதை :

மூளை இல்லாத கழுதை

(The Donkey Without Brain - Panchatantra Stories)

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.

சிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது? சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே?”, என்று யோசித்தது.

யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.

உடனே சிங்கம் நரியை வரவழைத்தது.

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.

“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.

நரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.

சிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?” என்று கழுதை கேட்டது.

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும்? ஆளை விடு” என்றது கழுதை.

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.

அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.

நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.

கழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?” என்று சிங்கத்திடம் நரி கூறியது.

சிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

குளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது? உள்ளே ஒன்றுமே இல்லையே
என்று சிங்கம் கேட்டது.

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.

சிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.

இன்றைய செய்தி துளிகள்:

1.பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்!

2.ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி வசீப்தர் தலைமையில் குழு நியமனம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

3.சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ஒம் பிரகாஷ் ராவத்

4.பெரியார், அண்ணா, ஜெயலலிதா-வுக்கு பாரத ரத்னா வழங்க கோரி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

5.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு எட்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பதினைந்து வயது வீரர் ஷர்துல் விஹான் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றில் பங்கேற்றார். அதில் முதல் இடத்தை ஒரு புள்ளியில் தவற விட்ட அவர், வெள்ளி வென்றிருக்கிறார்

Wednesday, August 22, 2018

Morning prayer 23-8-18

23-8-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

உரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

பழமொழி :

Art is long and life is short

கல்வி கரையில் கற்பவர் நாள் சில

பொன்மொழி:

பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.

-வைரமுத்து

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?
என்.கோபாலசாமி ஐயங்கார்

2.இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
டாக்டர். வேணுகோபால்

நீதிக்கதை :

ராஜாவும் முட்டாள் குரங்கும்

(The Foolish Monkey And The King - Panchatantra Story in Tamil)

வேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த அரசரின் மீது மிகவும் பாசமாக இருந்தது.

ஒரு நாள் ராஜா வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவப் போகும் பொழுது குரங்கையும் கூடவே அழைத்துச் சென்றார்.

செல்லும் வழியில் ஒரு முட்புதர்க்கு நடுவில் பாம்பு ஒன்று இருப்பதை குரங்கு கவனித்தது. உடனே அந்த குரங்கு தாவி குதிச்சு பாம்பு இருப்பதை ராஜாவிடம் காண்பித்தது. அந்த பாம்பு ராஜாவை கடிக்கும் முன்பு குரங்கு பாம்பிடம் சண்டையிட்டு பாம்பைக் கொன்றது.

சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பித்தார். குரங்கின் எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா மிகவும் நெகிழ்ந்தார்.

உடனே, அந்தக் குரங்கையே தன்னோட பாதுகாவலரா நியமிக்க முடிவு செய்தார். அவரோட இந்த முடிவைக் கேட்ட மந்திரிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.

அவர்கள் ராஜாவிடம், ‘ராஜா என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்குதானே! அதுக்கு மனிதர்கள் மாதிரி பகுத்தறிவோ, முடிவெடுக்கும் திறமையோ இருக்காதே! உங்களோட இந்த விபரீத எண்ணத்தை மாத்திக்கங்க'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.

ராஜா கேட்கறதா இல்லை.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு அந்தரங்கப் பாதுகாவலனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி பாசமும், விசவாசமும்தான்! அது என் குரங்குகிட்ட நிறையவே இருக்கு! அதனால என் பாதுகாவலுக்கு மனிதர்கள் வேண்டாம். குரங்கே போதும்'னு தீர்மானமா சொல்லிட்டாரு.

அன்று முதல் குரங்கு, ராஜாவை விட்டு ஒரு நிமிஷம்கூட விலகாம அவர் எங்கு போனாலும் கூடவே போறதும் வர்றதுமா இருந்தது.

ஒரு நாள் ராஜா குரங்கிடம் ‘எனக்கு தூக்கம் வருகின்றது. நான் கொஞ்ச நேரம் நல்லா தூங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்க’ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பித்தார்.

குரங்கும் ரொம்ப அக்கறையா, படுக்கைக்குப் பக்கத்துலேயே இருந்து காவல் காத்தது. அந்த சமயம் பார்த்து அங்க ஒரு ஈ வந்தது. அது ராஜா காது கிட்ட வந்து ‘ஸொய் ஸொய்'ன்னு கத்தி ராஜாவை தொந்தரவு செய்தது. குரங்கு ‘சூசூ'ன்னு துரத்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி, அந்த ஈ திரும்பவும் அங்கேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தது. குரங்குக்கு கோபம் தாங்கல. ஈக்குத் தகுந்த பாடம் புகட்டணும்னு தீர்மானிச்சிடுச்சு. அது ராஜாவோட வாளை கையில் எடுத்தது. இந்த முறை ஈ வந்தா அதை ஒரே போடு போட்டு ரெண்டு துண்டாக்கிட வேண்டியதுதான்னு முடிவு செய்தது.

நடப்பது எதுவும் தெரியாத ராஜாவோ பாவம் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தாரு. ஈ திரும்பவும் வந்தது. இந்தத் தடவை அது ராஜாவோட கழுத்துக்கு மேல பறந்தது.

தயாராக இருந்த அந்த குரங்கும் ஈயை ஒரே வெட்டா வெட்டிடுச்சி. ஐயோ! என்ன பரிதாபம்! ஈ பறந்து தப்பிச்சிடிச்சு. ராஜா தலை துண்டாகிப் போச்சு. இப்படியாக, ராஜா தன்னோட சொந்த பாதுகாவலனாலயே கொல்லப்பட்டுட்டாரு.

ராஜா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த நாட்டு மக்களும் மந்திரிகளும் சோகத்துல மூழ்கிட்டாங்க. அவங்க 'புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான தோழன்தான் ரொம்ப ஆபத்தானவன்'னு ராஜாவுக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று புலம்பினார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கான வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுப்பு

2.ஆதார் எண் என்பது வெளிப்படையாக பகிரக் கூடியது அல்ல : ஆதார் நிறுவனம் எச்சரிக்கை

3.தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் விரைவில் மூட வாய்ப்பு : அண்ணா பல்கலை அதிர்ச்சி தகவல்

4.சென்னைக்கு கொண்டுவரப்பட்டது வாஜ்பாய் அஸ்தி

5.இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் வெற்றி கேரள மக்களுக்கு சமர்ப்பணம் : கோலி உருக்கம்