இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 24, 2018

இனி 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த முடியாது


புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் பாடம் நடத்த முடியாது.

சமீபத்தில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் அந்த புத்தகங்களில் 'க்யூ.ஆர்., கோடு' என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை 'ஸ்மார்ட்போன்' மூலம் 'ஸ்கேன்' செய்தால் அந்த புத்தகத்தை மின் நுாலாக படிக்கலாம்.

அனைத்து பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

'க்யூ.ஆர்.,கோடு' பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும் போது கண்டிப்பாக 'ஸ்மார்ட்போன்' வைத்திருக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறந்ததும் 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்,' என்றார்.

பாடநூல் விற்பனை துவக்கம்


தமிழகத்தில், புதிய பாடத்திட்டப்படி தயார் செய்யப்பட்ட, மூன்று வகுப்புகளுக்கான, பாடநுால்களின் விற்பனை நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கேற்ற வகையில், புதிய பாடநுால்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.

இந்த பாடநுால்கள், பள்ளிகள் திறக்கும் அன்றே, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதற்கு வசதியாக, அனைத்து மாவட்டங்களுக்கும், பாடநுால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கான, பாடநுால்கள் விற்பனை, நேற்று துவக்கப்பட்டது. 'பிளஸ் 1 பாடநுால்கள் விற்பனை மட்டும், ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கும்' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 23, 2018

890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு


அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன. மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகின்ற நிலை அரசுக்கு இல்லை. அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர், பொது மக்களின் கருத்தை கேட்ட பின்னர் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கும்.

துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' ஆர்ப்பாட்டம்


துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன் கூறியதாவது:

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் அறவழி போராட்டம் நடத்தி வந்தனர். நுாறு நாட்கள் ஆகியும் அரசு கண்டு கொள்ளாததால் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார், தமிழக அரசை கண்டிக்கிறோம்.போராடியவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாமல், அதிகாரத்தால் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு இதுபோன்று செயல்படுகிறது.

இதே போன்ற நடவடிக்கையை ஜல்லிக்கட்டு, ஜாக்டோ - ஜியோ போராட்டங்களின் போதும் எடுத்தது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும்.

இறந்தவர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் முதற்கட்டமாக இன்று (மே 24) மாலை 5:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு நாளை மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம்


Tuesday, May 22, 2018

SSLC result -2018


https://drive.google.com/file/d/1agr2iFl0wFoFiDqAwqe9laIoSi12G_rt/view?usp=drivesdk

புதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர். இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு மறுகூட்டலுக்கு 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.

www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார்.

10ம் வகுப்புக்கு இன்று, 'ரிசல்ட்' : வரும், 28ல் தற்காலிக சான்றிதழ்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்., 20ல் முடிந்தது.

இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவு வரும். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும்.

தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் தேவைப்படுவோர், நாளை முதல், 26ம் தேதி, மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான, உடனடி துணை பொதுத்தேர்வு, ஜூன், 28ல் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து, புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்? தேர்தல் கமிஷன் திட்டம்!


பல்வேறு பணிகள் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என்ற, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன.

இந்த பதவிகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடக்கவிருந்த நிலையில், உயர் நீதிமன்ற தடையால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இறுதி செய்யப்படும். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.இதுதொடர்பாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய வார்டுகள் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, வார்டுகள் மறு வரையறை ஆணையம்உத்தரவிட்டுள்ளது.இதனால், புதிய வார்டுகள் பட்டியல், இம்மாத இறுதிக்குள், மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு வந்து விடும். பின், பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைதொடர்ந்து, பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு, வார்டுகள் பட்டியல் இறுதி செய்யப்படும். பின், உள்ளாட்சி தேர்தலை நடத்த, புதிய வார்டுகள் அடிப்படையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இதுபோன்ற நிலுவையில் உள்ள பணிகள் முடிவதற்கு செப்., மாதமாகி விடும். எனவே, உள்ளாட்சி தேர்தலை, அக்டோபரில் நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Monday, May 21, 2018

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு.

பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லூரிகள்:
1. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை - 600 007
2. நாமக்கல் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 637 002
3. கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358
4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
5. உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரி, கொடுவல்லி, சென்னை - 600 052
6. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர் - 635 110

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 360 இடங்கள் உள்ளன. 

துறைவாரியான சேர்க்கைக்கான இடங்கள்:
1. BVSc & AH 5½ Years (4½ Years +1 Year Internship - as per MSVE Regulation 2016) - 306
2. BTech (Food Technology) 4 years  - 40
3. BTech (Poultry Technology) 4 years  - 40
4. Technology) 4 years  - 20

மேற்கண்ட படிப்புகளில் சேர இன்று திங்கள்கிழமை (மே 21) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன் 6) தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பம் சமர்ப்பித்து கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ் நகல்களை சேர்க்கைக்குழு தலைவரின் அஞ்சல் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞசல் முகவரி: "The Chairman, Admission Committee (UG),Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai-600 051"

மேலும் முழுமையான விவரங்களை http://www2.tanuvas.ac.in/UGAdmission/Instructions/Prospectus.pdf என்ற லிங்கில் சென்று படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை


தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல் படுத்தி வருகிறது.

எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார் கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக் கப்பள்ளி, 4 நகராட்சி தொடக் கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ- மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக் கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

அப்படியே அந்த மாணவர் கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் சீருடை : பெற்றோர் குழப்பம்


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் மீண்டும் துவங்க உள்ளன. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சீருடைகள் வண்ணமும், அமைப்பும் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் 1முதல் 8 வரை படிக்கும் மாணவர்களின் சீருடை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் அவர்களின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'சீருடை வண்ணம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு முறையான தகவல் இல்லாததால் எங்களிடம் தெளிவாக கூற முடியவில்லை. புதிய சீருடை வாங்குவதில் குழப்பம் நீடிக்கிறது,' என்றனர்

Sunday, May 20, 2018

ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.

அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள்.

மேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள். கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. பொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும். தலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.

தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி, புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள்.

தொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.