இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 27, 2018

கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்


தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இதுதவிர, தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டு முதல், கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும், தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில், தலா, ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, டிச., 26ல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் குழு அமைத்து, தோராய பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டு உள்ளனர். மாவட்ட பட்டியலில் இருந்து, தகுதியானவர்களை மாநில தேர்வு குழுவினர் தேர்வு செய்வர்.

இந்த உத்தரவுகளை மாவட்ட அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பாமலும், சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு வந்த தகவல்களை, ஆசிரியர்களுக்கு தெரிவிக்காமலும் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மேலும், கனவு ஆசிரியர் விருதுக்கு, வரும், 2ம் தேதிக்குள் மாவட்ட அளவில், தோராய பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்களிடம் பொதுவான தகவல் அளிக்காமல், அதிகாரிகள், தாங்களாகவே பட்டியலை தயாரிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.

அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் சிபாரிசு பெற்ற வர்களுக்கு மட்டும், மாவட்ட பட்டியல் தயாரிப்பதாகவும்... மாணவர்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக செயல்படும், ஆசிரியர்களின் விபரங்கள் பட்டியலில் இல்லை என்றும், ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்னையால், கனவு ஆசிரியர் விருது வழங்கும் விவகாரத்தில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது

ஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முடியும் வரை ரத்து


பொதுத் தேர்வு முடியும் வரை ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக் கான பொதுத் தேர்வு, பிளஸ் 2வுக்கு, மார்ச் 1; பிளஸ் 1க்கு, மார்ச் 7ல் துவங்குகிறது; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16ல் துவங்க உள்ளது.பொதுத் தேர்வுகளுக்கு, இன்னும் ஒரு மாதமே உள்ளதால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தினமும் காலையில், ஒரு மணி நேரம், சிறு தேர்வும் நடத்தப்படுகிறது.இந்நிலையில், தேர்வு முடியும் வரை, ஆசிரியர்கள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர்.

'பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுக்கானமுன் தயாரிப்பு இருப்பதால், மாணவர்கள், சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் பள்ளிக்கு வந்து, ஒத்துழைப்பு தர வேண்டும்; இதற்கு, பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்' என, பள்ளி முதல்வர்கள் உத்தரவிட்டு உள்ளனர்

திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Friday, January 26, 2018

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்


நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டு நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது. தமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரி இறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.

கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை ("எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.

இதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களையும் வகையில் அண்ணா பல்கலை. தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் வலைதளம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட மாணவர்களுக்கு புதிய பதிவு எண் உருவாக்க கடந்த 17-ஆம் தேதி முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். "எமிஸ்' வலைதளம் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில மாணவர்களின் விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், " எமிஸ்' தொகுப்பில் வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயரும் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்; ஏதேனும் மாணவர்கள் பள்ளியில் பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றிருப்பின் அவர்களது பெயர்களை "எமிஸ்' தொகுப்பிலிருந்து நீக்க வேண்டும்.

விடுபட்ட மாணவர்களின் பெயரை பதிவேற்றம் செய்தல், வருகைப் பதிவேட்டில் இல்லாத மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்புடைய தலைமையாசிரியர், வட்டார வளமையப் பயிற்றுநர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பணிகள் தலைமையாசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்தப் பணியை ஜன.29-க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு


பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில், பொது தேர்வு துவங்குகிறது; ஏப்ரலில் தேர்வு முடிகிறது. தேர்வுக்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத்துறை தீவிர மாக ஈடுபட்டுள்ளது.

தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை, மாலையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிளஸ் 2வுக்கு, முதலாம் திருப்புதல் தேர்வும், மாநில அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினசரி சிறப்பு பயிற்சியுடன், காலை அல்லது மாலை நேரங்களில், மாதிரி தேர்வுகளையும் நடத்த வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தினசரி தேர்வு நடத்தி, அன்றே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும். எந்த பாடத்தில் மாணவர்கள் திறன் குறைந்து உள்ளனரோ, அதில், கூடுதல் முயற்சி எடுத்து படிக்க மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்த வேண்டும் என, ஆலோசனை வழங்கி உள்ளனர்

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்


புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்பு பணி நடந்துவருகிறது

வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம், கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார்.

பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. ''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.

*பிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்


Thursday, January 25, 2018

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்


தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும்.

ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும். 'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் செலுத்த உத்தரவு


பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிகிறது. இத்தேர்வில், எட்டு லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.

தேர்வு கட்டணமாக, செய்முறை பாடங்கள் அடங்கிய மாணவர்களுக்கு, 225 ரூபாய்; செய்முறை அல்லாத பாட மாணவர்களுக்கு, 175 ரூபாய்; மதிப்பெண் பட்டியலுக்கு, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை, 29க்குள் வசூலித்து, தாமதமின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டு உள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் வழி அல்லாத மாணவர்களில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கட்டண விலக்கு உண்டு. பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் மாணவர்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பெறுவோர் மட்டும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் அனைவரும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

69வது குடியரசு தின விழா-கொடி ஏற்றுதலுக்கான செயல்முறைகள்

Tuesday, January 23, 2018

தமிழகம் முழுவதும் பிளஸ்2 செய்முறை தேர்வை பிப்.13க்குள் நடத்த உத்தரவு


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை வருகிற பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து செய்முறை தேர்வுகளை வரும் பிப்ரவரி 1 முதல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

மேலும் 14ம் தேதி மதிப்பெண் அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆலோசனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது.

இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 980 இடங்கள் காலியாக உள்ளன. விழுப்புரம், 878; திருவண்ணாமலை, 856; கோவை, 815 இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில், 424 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 115 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக விரைவில், பணி நியமன பணிகள் துவங்க உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்


தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ௧ - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 14 ஆண்டுகளாகவும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை.

எனவே, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. அதன்பின், சில மாற்றங்கள் செய்து, இறுதி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது. எனவே, முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு அமலாகும் வகுப்புகளுக்கான புத்தக தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதத்துக்குள், புத்தக பணிகளை முடித்து, தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம், புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Inspire award 2017-18

Click below

https://app.box.com/s/ovnoolvfczpnggrjqiwx89cgwa7b458o

Monday, January 22, 2018

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாத இறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்


அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும். இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம். பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம். ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களை அரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில் விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.