இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 01, 2016

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில் அறிவிப்பு

TNPSC குரூப் 1 தேர்வு விரைவில்

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

4 பேருக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுகளில் வயதில் மூத்த பெண்மணி இனி குடும்ப தலைவர்


தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 4 பேருக்கும் மேல் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்ப தலைவர் என்றும், இதுதொடர்பான விபரங்களை விற்பனையாளர்கள் அந்தந்த ரேஷன்கார்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன்கார்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உணவு பொருள் வழங்கல் ஆணையர் மாவட்டம் தோறும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன் விபரம்:

தமிழகத்தில் 1.11.2016 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 4 நபர்கள் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்குதலில் எவ்வித மாற்றமும் இல்லை. தகுதியுள்ள ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும். 4 நபர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும். அந்த வகையில் 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி வழங்கப்படும். 6 பேர் இருந்தால் 30 கிலோ வழங்கப்படும். 15 பேர் ஒரே ரேஷன் கார்டில் இருந்தால் அவர்களுக்கு 75 கிலோ அரிசி வழங்கப்படும்.

இதுதொடர்பாக ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டுள்ள ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் அதிகபட்ச அரிசி அளவை சரிபார்த்து அரிசி விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக பாயின்ட் ஆப் சேல் கருவிகளை விற்பனையாளர்கள் ‘வெர்ஷன் அப்டேட்’ செய்துகொள்ள வேண்டும். 4 பேருக்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட பிஎச்எச் -பிரியாரிட்டி ஹவுஸ் ஹோல்டு எனப்படும் முன்னுரிமை பெற்றவர் ரேஷன்கார்டு விபரம் பாயின்ட் ஆப் சேல் கருவியில் வரும். அதனை ரேஷன்கார்டின் முன்பக்கம் அல்லது பின்பக்கம் ‘பிஎச்எச்’ என்று ரேஷன்கார்டில் எழுதி வட்டமிட்டு குறிப்பிட வேண்டும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இவ்வாறு 4 குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் உள்ள ரேஷன்கார்டு முன்னுரிமை பெற்ற ரேஷன்கார்டு என்று பட்டியலிடப்படுகிறது. அவ்வாறு உள்ள ரேஷன்கார்டில் வயதில் மூத்த பெண்மணியே இனி குடும்ப தலைவர் ஆவார். குடும்ப தலைவர் விபரம் அந்தந்த ரேஷன்கார்டு வாரியாக பாயின்ட் ஆப் சேல் கருவியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை அந்தந்த ரேஷன்கார்டிலும் முன்புறம் விற்பனையாளர்களால் எழுதப்பட வேண்டும்.ஆண்கள் மட்டுமே அல்லது 18 வயது நிரம்பாத பெண் உறுப்பினர் உள்ள ரேஷன்கார்டுக்கு வயதில் மூத்த ஆண் உறுப்பினர் குடும்ப தலைவர் ஆவார். ஏற்கனவே உள்ளது போன்ற முறைப்படி அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும். இதில் கூடுதல் அரிசி ஏதும் வழங்கப்படாது. அனைத்து அரிசி பெறும் முதியோர் உதவித்தொகை ரேஷன்கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

அடுத்துவரும் வேலை நாட்களில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ரேஷன்கடை விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கியில் கல்விக்கடன் பெற்றவர்களின் கவனத்திற்கு!

வங்கியில் கல்வி கடன் பெற்று கல்லூரி படிப்பை முடித்தவராக நீங்கள், ஒரு நிமிடம் இந்த செய்திக்காக செலவு செய்யவும். உங்களுடைய கல்வி கடனுக்காக மத்திய அரசு மானியம் வழங்குகிறது. நீங்கள் கல்வி கடனுக்கு செலுத்தும் வட்டி தொகையை மானியமாக வங்கிக்கு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மூலம் நீங்கள் பெற்ற கல்வி கடன் தொகை மட்டும் திரும்பி செலுத்தினால் போதும்.
இந்த மானியத்தை பெற நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியினை அணுகி உங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா என்பதை விசாரிக்கவும். ஒரு வேளை உங்களுக்கான கடன் தொகையுடன் வட்டி தொகையும் சேர்ந்து இருந்தால் உடனே நீங்கள் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று, உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு குறைவாக உள்ளது என்ற வருமான சான்றிதழை உங்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடம் சான்று பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து, வங்கியில் உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், உங்களுடைய கல்வி கடனை மட்டும் திரும்பி செலுத்தினால் போதுமானது.
இது குறித்து வங்கி அதிகாரியிடம் பேசிய போது “பொதுவாக கல்வி கடன் வழங்கும் போதே வங்கியில் வருமான சான்றிதழை சமர்பித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையிலும் மானியம் வழங்கப்படுவது உண்டு. சில நேரங்களில் நீங்கள் கல்வி கடன் பெற்று நான்கு ஆண்டுகளில் குடும்ப வருமானம் மாறி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்காக மானியத்தை பயன்படுத்துவதற்கு, புதிய படிவத்துடன் புதியதாக வருமான சான்றிதழை பெற்று தர வேண்டி இருக்கும்.

இது வங்கிக்கு வங்கி மாறும் என்பதால் நீங்கள் கல்வி கடன் பெற்ற வங்கியின் மேலாளரை சந்தித்து விளக்கம் பெற்ற பின்பு தாசில்தாரிடம் சான்று பெற்று தருவது நல்லது. இவ்வாறு பெற்று தரும் போது உங்களுக்கான கல்வி கடனுக்கான வட்டியினை மத்திய அரசின் மானியமாக வழங்கும்” என்றார். 

பெரும்பாலும் கல்வி கடன் வாங்கும் போது வங்கிக்கு சென்றிருப்போம். அதன் பின்பு வங்கிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு குறைந்து இருக்கும். கல்வி கடன் பெற்றவர்களுக்கு இன்னொரு முறை வங்கிக்காக என்று யோசிக்க தோன்றும். கூடவே, தாசில்தார் அலுவலகத்தில் எளிதாக கையெழுத்து வாங்க முடியுமா என்ற யோசனையும் உங்களை தாமதப்படுத்தும். ஆனால், முயன்றால் உங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மிச்சமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நீங்கள் கல்வி கடன் பெறாதவராக இருந்தால் கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு இந்த தகவலைத் தெரியப்படுத்தவும்.

- ஞா. சக்திவேல் முருகன்

Monday, October 31, 2016

அரசு பள்ளிகளில் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய வேண்டும் : பெற்றோர் வலியுறுத்தல்


அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளையில் வகுப்பை, ‘கட்’ அடித்து விட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டால், அவர்கள் அந்த நேரத்தில் பள்ளியில் இருந்தது போன்றே ஆவணம் இருக்கும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் இருப்பதாகவே நினைப்பர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘பள்ளிகளில் ஒவ்வொரு பாடமும் துவங்கும்போது, மாணவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர் யாராவது இடையில் இல்லாவிட்டால், உடனடியாக அந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து போனில் தகவல் சொல்ல வேண்டும். மறுநாள் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்’ என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த திட்டம் ஊர் சுற்றும் மாணவர்களை திருத்துவதுடன், மாணவர்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாமலும், பெற்றோரின் நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் இருக்கும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளையிலும் வருகை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
எனவே, அரசு பள்ளிகளில் பாட இடைவேளையில், ‘கட்’ அடிக்கும் மாணவர்களை கண்காணிக்க, வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், சினிமாவும், டிவியும் பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழடித்து வருகின்றன. பொழுது போக்கு சாதனங்களின் நிகழ்ச்சிகளில் மூழ்கும் சிறுவர்கள், எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். தங்களது எதிர்காலம் என்னாகும் என்பது குறித்த அச்சமின்றி, காதல் வயப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாணவிகளுடன் சிலர் செல்கின்றனர். ‘’பிள்ளையை காணவில்லை’ என பெற்றோர் அளிக்கும் புகாரை அலட்சியப்படுத்த முடியாது என்பதால், அவர்களை தேடி கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம் என்றார்.

'பள்ளி வேன்களில் ஆசிரியை கூடாது'


பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும்.

மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது. இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு எப்போது?


'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன், இரண்டு சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும், அகவிலைப் படியையும் உயர்த்த வேண்டும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, தமிழக அரசு தாமதம் செய்வதாக தெரிகிறது. இந்நிலையில், அகவிலைப் படியை மட்டுமாவது உடனே உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கையெழுத்து ஆசிரியர்களுக்கு கட்டாயம்


ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தங்கள் பெயரையும், முன்னெழுத்தையும், கட்டாயம் தமிழில் எழுத வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வித் துறையில், 1978ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, அனைத்து பணியாளர்களும், அலுவலக ஆவணங்களில், தமிழில் மட்டுமே கையெழுத்திடவேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை, 1998ல் பிறப்பித்த அரசாணைப்படி, 'இன்ஷியல்' என்ற முன்னெழுத்தையும், தமிழில் மட்டுமே எழுத வேண்டும்; இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 66 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கடந்த 2012, 2013 நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மெரிட் பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நியமனம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் (தகுதித்தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் நியமன முறை) இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப் பட்டவர்களின் பட்டியல் பதிவெண், பெயர், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகிய விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)வெளியிடப்பட்டு இருக்கிறது.

Sunday, October 30, 2016

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது. 2011–2012–ம் நிதி ஆண்டில் இருந்து அத்தகைய கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்நிலையில், செயல்படாத பி.எப். கணக்குகளுக்கு 8.8. சதவீத வட்டி அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–
தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டி அளிப்பதை நிறுத்தியது. ஆனால், நாங்கள் அந்த பணத்துக்கு வட்டி அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தொழிலாளர் நல அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை


மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு (2016-17) சென்னை மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 4ம் தேதி சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம், சான்றிதழும் வழங்கப்படும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று வரவேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது


பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன. இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன.

இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Cos calculation sheet


https://www.mediafire.com/download/14oxah6uecch0l5

Friday, October 28, 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.
அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநிலங்கள் நிலை என்ன? :

*கர்நாடகா: பள்ளிக் கல்வியில், அனைத்து மாணவர்களும், எட்டு ஆண்டுகளாவது படிக்கும் படி, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்

* ஆந்திரா: ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதை மாற்றம் செய்தால், 'பெயில்' செய்யப்படும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவர்

* தெலுங்கானா: மாணவர்கள்தேர்வு பயமின்றி பள்ளிக் கல்வியை முடிக்க, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும்; அதில் மாற்றம் கூடாது

* மஹாராஷ்டிரா: மாணவர்கள், சமூகத்தில் சுய மரியாதையுடன் தலை நிமிர, ஆல் பாஸ் திட்டம் தொடர வேண்டும். மாநிலங்கள், தற்போது பின்பற்றும் முறையில் மாற்றம் கூடாது.இவ்வாறு இந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழகம்,கடைசி நேரத்தில் அறிக்கை சமர்ப் பித்ததால்,அதை மத்திய அரசு வெளியிட வில்லை.கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ஆல் பாஸ் திட்டம் தொடர, தமிழக அரசு விருப்பம் தெரிவித்ததாக கூறப் படுகிறது.தென் மாநிலங்களில் கேரளாவும், புதுச்சேரியும், ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தேர்வுத்துறையின், http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.