இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 22, 2015

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய தரவரிசைப் பட்டியல்: அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது


பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளுக்கு வெளியிடப்பட உள்ளதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் (ரேங்க்) 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட உள்ளது.

மத்திய அரசு அமைக்க உள்ள தனி வாரியம் இந்தத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி, ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் "தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிமுகம் செய்தது. இதன்படி, பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது கலை, அறிவியல் கல்லூரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலும் தனித் தனியாக வெளியிடப்பட உள்ளது. இதற்கான தர அளவீடுகளை யுஜிசி வகுத்து, தேசிய உயர்கல்வி தரவரிசைத் திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இந்த அளவீடுகள் தரவரிசைத் திட்டத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ண்ழ்ச்ண்ய்க்ண்ஹ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அடுத்த வாரம் வெளியிடப்பட்டுவிடும். இதற்காக நாடு முழுவதும் உள்ள கலை - அறிவியல் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இணைப்புப் பெற்றுள்ள கல்லூரிகளை தரவரிசைக்கான விவரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தரவரிசை வருகிற 2016-17ஆம் கல்வியாண்டு முதல் வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். தரவரிசைப்படுத்துவது எப்படி?: ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி, வெளிமாநில, வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட உள்ளன. தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் "ஏ' பிரிவின் கீழ் வரிசைப் படுத்தப்படும். பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் -பி- பிரிவின் கீழ் வரிசைப்படுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குத் தடை: வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகள் சார்பில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களும், அந்தந்தக் கல்லூரி இணையதளங்களில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க அறிவுறுத்தப்படும்.

இந்தத் தகவல்கள் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை அல்லது போலியானவை என்பது கண்டறியப்பட்டால், அந்தக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் நடைமுறையில் பங்கேற்பதிலிருந்து 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். அதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரியின் முறைகேடு குறித்த விவரமும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி


மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இதுபோன்ற பேரிடர் காலங்களில், மாணவர்களையும், தங்களையும் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, சென்னையில், லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், இன்று பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி துவங்குகிறது;28 வரை நடக்கிறது

'மார்க்கர்' பேனா பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டம்


தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, ஆட்காட்டி விரலில், பிரஷால் அழியாத மை வைப்பதற்கு பதில், 'மார்க்கர்' பேனாவை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, பாட்டிலில் நிரப்பப்பட்ட அழியாத மையை, பிரஷில் எடுத்து, ஓட்டு போட்ட நபரின் ஆட்காட்டி விரலில் அடையாளம் பதிப்பது, 1962 முதல், நடைமுறையில் உள்ளது. ஆனால், 'பிரஷ் மூலம், கைவிரலில் மை வைப்பது, நேர்த்தியாக இல்லை' என, இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், தேர்தல் சமயங்களில், இங்க் பாட்டில் மற்றும் பிரஷ்களை எடுத்து செல்வதை காட்டிலும், மார்க்கர் பேனாக்களை எடுத்துச் செல்வது எளிதென, தேர்தல் கமிஷன் கருதியது. இதையடுத்து, தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 'மைசூர் பெயின்ட்ஸ்' நிறுவனம் சப்ளை செய்த, மார்க்கர் பேனாவை பயன்படுத்தி, அதன் அழியாத தன்மை சோதிக்கப்பட்டு வருகிறது.

'மார்க்கர் பேனா மீதான சோதனை அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை மார்க்கர் பேனாக்கள், ஆப்கானிஸ் தான் நாட்டில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் தயாரிக்கும் அழியாத இங்க், வேறு சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Saturday, November 21, 2015

7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி


ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு, ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஊதியக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும். பரிந்துரை: அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி மாத்துார் தலைமையில், 2014ல், ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீதம்; ஓய்வூதியர்களுக்கு 24 சதவீத ஊதிய உயர்வு வழங்க, பரிந்துரை செய்துள்ளது. குழு அறிக்கை, மத்திய அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்றுக் கொள்கிறதா அல்லது மறுஆய்வு செய்ய குழு அமைக்குமா என்பது, இனிமேல் தான் தெரியும். மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அதை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய, மாநில அரசுகள் தனி குழு அமைக்கும்.

அந்தக்குழு பரிந்துரை செய்யும், ஊதிய உயர்வை, மாநில அரசுகள் அமல்படுத்தும். பொதுவாக, மத்திய அரசு குழு அறிக்கையை தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் வழக்கம். எனவே, தமிழக அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது. போதாது: இதுகுறித்து, தமிழக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை செய்த ஊதிய உயர்வையே, தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை.ஆறாவது ஊதியக்குழு, அலுவலக உதவி யாளர்களுக்கு, அடிப்படை சம்பளமாக, 5,500 ரூபாய் நிர்ணயம் செய்தது. ஆனால், தமிழக அரசு, 4,800 ரூபாய் வழங்குகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளபடி, அரசு ஊழியர்களுக்கு, 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தால், அரசுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும். அரசு ஊழியர் சம்பள உயர்வு மூலம், 965 கோடி ரூபாய்; ஓய்வூதியர்களுக்கான ஊதிய உயர்வு மூலம், 450 கோடி ரூபாய் செலவாகும். மத்திய அரசு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றுக் கொண்டால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.அதன் பிறகே மாநில அரசு, ஊதிய உயர்வு குறித்து ஆலோசிக்கும். ஆனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளதால், புதிதாக வரும் அரசே, ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்கும். நம்பிக்கை: ஏனெனில், நடப்பாண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு வழங்க, கூடுதல் நிதி தேவைப்படுவதால், அதற்கேற்ப வருமானத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, புதிதாக ஆட்சிக்கு வரும் அந்த கட்சி, எவ்வளவு ஊதிய உயர்வுக்கு சம்மதிக்கும் என்பதை பொறுத்தே, ஊழியர்களின் ஊதிய உயர்வு அமையும். எனினும், சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை, ஊதியக்குழு பரிந்துரை ஏற்படுத்தி உள்ளது. எப்படிஇருப்பினும், வரும் ஜனவரி முதல் புதிய ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு கடைசியில் அரசு முடிவு எடுத்தாலும், அரசு ஊழியர்களுக்கு, முன் தேதியிட்டு ஊதிய உயர்வும், நிலுவை தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Friday, November 20, 2015

8ம் வகுப்பு சான்றிதழ்: 23க்குள் பெறலாம்


கடந்த மே மாதம் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு சான்றிதழ்கள் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் தேர்வர்களுக்கு நேரடியாக அனுப்பப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அன்றைய தேதிக்குள் சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அந்தந்த மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களின் தொலைபேசி எண்களின் விவரம்:
திருநெல்வேலி- 0462-2320361, மதுரை- 0452- 2530013, கோயம்புத்தூர்- 0422- 2434856, திருச்சி- 0431- 2410005, வேலூர்- 0416- 2295443, கடலூர்- 04142- 230231, சென்னை- 044- 28277926.

மத்திய அரசின் புதிய பாடத்திட்டம் : ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

மத்திய அரசின் 'ஒரே கல்வித்திட்டம்' குறித்த கருத்துக் கேட்பில் கல்வியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதால், பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்தில் 'ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம்' அறிமுகப்படுத்த உள்ளது.இதற்கான திட்டம் வகுத்து, மாநிலங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் 21 லட்சம் இடங்களில் சிறப்பு கருத்துக்கேட்பு முகாம்கள் நடந்து வருகின்றன. மதுரை, கோவை, சென்னையில் மட்டுமே கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்தன. கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாநில அரசு அதிகாரிகளை வைத்தே மத்திய அரசு நடத்தி விட்டது. தமிழக, கேரள மாநிலங்களில் இக்கூட்டங்களில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இது ஒருபுறம் இருக்க புதிய திட்டத்தில், குற்றம் புரியும் ஆசிரியர்களை பள்ளிகள் அமைந்துள்ள கிராம மக்களே, 'தண்டிக்கலாமா? அல்லது 'டிஸ்மிஸ்' பண்ணலாமா?' என்பதை மக்களே தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் உள்ளது.
ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் சொந்த மாவட்டம் சார்ந்த வரலாறு இடம் பெறாமல் போவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இதுமாதிரியான 13 அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது, எனக்கூறி, தமிழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மோசஸ் கூறியதாவது:

தவறுகள் இழைக்கும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே சமயம் தண்டிக்கும் அதிகாரத்தை கிராம நிர்வாகத்தின் கைகளில் திணிப்பது ஏற்புடையது அல்ல. ஆரம்பக் கல்வியில் மாவட்டத்தின் வரலாறே இல்லாத வகையில் பாடத்திட்டம் அமைய இருப்பது, அடிப்படை கல்வியே ஆட்டம் காண வைப்பதாகும். இதற்கு எதிராக டிச., 8ல் இந்திய பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழக கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி, கலெக்டர்களிடம் கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம் என்றார்.

IGNOU term end exam hall ticket

Click below

https://avserver.ignou.ac.in/HallTicket/Hall_1215/Hall1215.asp

Thursday, November 19, 2015

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–


*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்

.*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்

.*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம்

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும். நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்

.*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்


வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம் அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என, இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது கட்டமாக, விண்ணப்பங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவற்றை கொண்டு, கள ஆய்வுக்கான விண்ணப்பம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் விவரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

ஒரு சில மாவட்டங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், கள ஆய்வை துவக்கி உள்ளனர்.பெரும்பாலான மாவட்டங்களில், நாளை முதல் கள ஆய்வை துவக்க உள்ளனர். ஆய்வின் போது விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால், ஓட்டுச்சாவடி அலுவலர், தனக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில், 'சரி' என குறிப்பிடுவார்.

தவறு இருந்தால், 'மொபைல் ஆப்ஸ்' மூலம், உடனடியாக திருத்தம் மேற்கொள்வார். கள ஆய்வு விவரமும், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணி டிச., 5க்குள் முடிக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று சிறப்பு முகாம்கள் தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பரில் துவங்கி, அக்., 24ல் முடிந்தது.

மூன்று நாள் சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, 17 லட்சம்; நீக்க, 1.76 லட்சம்; பெயர் திருத்தம் செய்ய, 2.69 லட்சம்; முகவரி மாற்ற, 1.76 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். முதல் கட்டமாக, விண்ணப்பத்தில் இருந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

7th pay commission

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 23.55 சதம் உயர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் அளித்தது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வதியர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைக்க, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய பரிந்துரைக் குழுவை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது.

இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் சமர்பித்தது.

பரிந்துரைகள் விவரம்

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் 23.55 சதமாக உயர்த்தப்படும்

இந்த ஊதிய உயர்வுகள் ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும்

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 18,000 ஆக இருக்கும், அதிகபட்ச ஊதியமாக ரூ. 2.25 லட்சமாக இருக்கும்

ஆண்டுதோறும் 3 சத ஊதிய உயர்வு வழங்கப்படும்

ஓய்வூதியர்களுக்கு 24 சத உயர்வு வழங்கப்படும்

பாதுகாப்புத் துறையை தொடர்ந்து அனைத்து மத்திய அரசு பணியாளர்களுக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும்.

பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், பஞ்சபடி 50 சதத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படும்போது, இந்த உச்சவரம்பு மேலும், 25 சதம் உயர்த்தப்படும்.

தற்போது மாதத்திற்கு ரூ. 90 ஆயிரம் ஊதியம் பெறும் அமைச்சரவை செயலர் இனி ரூ. 2.25 லட்சம் பெறுவார்.

இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு ரூ. 73,650 கோடியும், ரயில்வேக்கு ரூ. 28,450 கோடியும் கூடுதல் செலவாகும்.

நடப்பில் உள்ள 52 படிகள் வழங்கும் முறை 36 ஆக குறைக்கப்படும்

இந்த பரிந்துரை மூலம் 47 லட்சம் ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.

7th pay commission report

Click below

https://app.box.com/s/5w6sqfa2g17dq1p5rha438bs25ovfwwy

Tuesday, November 17, 2015

புதிய தலைமை தேர்தல் அதிகாரிவிரைவில் அறிவிப்பு வெளியீடு


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளார். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, 2014 அக்., 30ல், சந்தீப் சக்சேனா பொறுப்பேற்றார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கள்ள ஓட்டுகள் அதிகம் பதிவானதாக புகார் எழுந்தது. ஆளும்கட்சிக்கு சாதகமாக அவர் செயல் படுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.எனினும், அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க, தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதன் மூலம், தேர்தல் கமிஷனர்களின் பாராட்டை பெற்றார். தேர்தல் கமிஷனில், மூன்று துணை தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக இருந்தன.

எனவே, சந்தீப் சக்சேனாவை துணை கமிஷனராக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்ய, மூன்று பேரின் பெயர்களை, தமிழக அரசு, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது. மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்வதற்கான, ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. தற்போது, தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலராக உள்ள ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,

'தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ள அதிகாரியின் பெயரை, தமிழக அரசுக்கு அனுப்பும். தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, அவரை விடுவிக்கும். இப்பணி, ஓரிரு நாளில் நடைபெறும்' என்றனர்.

7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.