இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 06, 2018

தேர்வுத்துறையிலும் வந்தது மாற்றம்


தமிழகத்தில் கல்வித்துறைக்கு உட்பட்ட மண்டல தேர்வுத்துறை அலுவலகங்களுக்கு பதில், மாவட்டம் வாரியாக தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, அனைத்து வகை பள்ளிகளும் பள்ளி கல்வி இயக்குனரின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து தேர்வுத்துறை நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, கடலுார், சேலம், வேலுார் மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அந்தஸ்தில் துணை இயக்குனர்கள் கீழ், மண்டல தேர்வுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.பொதுத் தேர்வுகள் நடத்துவது, வினாத்தாள் வழங்குவது, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இவ்வலுவலக பணியாளர்கள் மேற்கொள்வர். இந்நிலையில், மண்டல அலுவலகங்களுக்கு பதில் மாவட்டம் தோறும் டி.இ.ஓ.,க்கள் தலைமையில், தேர்வுத்துறை அலுவலகம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வுத்துறை மாவட்ட அலுவலகங்கள் அமைக்க கருத்துரு கேட்கப்பட்டுள்ளது. இதன்படி டி.இ.ஓ., வின் கீழ் ஒரு கண்காணிப்பாளர், ஐந்து பணியாளர் கொண்ட அலுவலகம் அமைக்க அடிப்படை வசதியுடன் கூடிய கட்டடம் தேர்வு செய்து, அதன் விவரம் தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது," என்றார். 'ஆடிட்' அலுவலகமும் இணைகிறது கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை) செயல்படுகின்றன.

ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் தலா 17 கண்காணிப்பாளர் உள்ளனர்.இவற்றையும் மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பிரித்து அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் விரைவில் மாற்றம்


சட்டசபையில், நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டி, தி.மு.க.,வினர் கொண்டு வந்த, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகத்தில், லட்சக்கணக்கான பட்டதாரிகள், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 2014க்கு பின், பட்ட தாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2013ல், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 43 ஆயிரத்து, 112 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 11 ஆயிரத்து, 369 பேருக்குமட்டும், வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, இன்னமும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, அவர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியில் சேர முடியாத நிலை உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை கைவிட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: சான்றிதழ் வழங்கும் பணி, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. 2013ல், இடைநிலை ஆசிரியர்கள், 42 ஆயிரத்து, 724 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 13 ஆயிரத்து, 781 பேர், ஆசிரியர் பணியிடங்கள் பெற்றனர். மீதம் உள்ளவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் அவகாசம் உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை பொறுத்தவரை, 52 ஆயிரத்து, 646 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களில், 20 ஆயிரத்து, 275 பேர், பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதம் இருப்பவர்களுக்கு, தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அனைவருக்கும் வேலை அளிப்பது, அரசு கடமையல்ல.சிறப்பாசிரியர்களுக்கு, தேர்வு முடிவுகளை வெளியிட, அரசு தயாராக உள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, அரசு ஆய்வில் உள்ளது. விரைவில், நல்ல முடிவு மேற்கொள்ளப்படும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிற நிலையில், அவர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் இல்லாமல், மீண்டும் தேர்வு எழுதுவது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Tuesday, June 05, 2018

பி.இ.: 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் வெளியீடு: ஜூன் 17-க்குப் பிறகு தரவரிசைப் பட்டியல் - ஜூலை 6-இல் கலந்தாய்வு தொடக்கம்


பொறியியல் படிப்பில் சேர ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த 1.59 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதன் முறையாக இந்த ஆண்டு ஆன்-லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,59,631 பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிடக் கூடுதலாகும்.

சம வாய்ப்பு எண் வெளியீடு: இந்த நிலையில், ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர், செயலர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், துணைவேந்தர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு மூல (சீட்) எண்கள் பெறப்பட்டு, அதிலிருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்குமான சம வாய்ப்பு எண் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

செல்லிடப்பேசி எண்ணுக்கும்...: இந்த சம வாய்ப்பு எண் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு, மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இதில், சம வாய்ப்பு எண்ணுடன், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம், தேதி, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதை மாணவர்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.

சம வாய்ப்பு எண் எதற்கு?: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளோரில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருக்கும்போது, இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த பாட மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த ஆண்டில் 27 மாணவர்களுக்கு...: கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு 27 மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது. எனவே, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்போது நிகழ் கல்வியாண்டில் எத்தனை மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வரும்.

ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடத்தப்படும்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும். அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியல் எப்போது?: சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.

இடங்கள் எவ்வளவு? : 2018-19-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று துறைகளில் 9,110 இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 1,020 இடங்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 4,960 இடங்கள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 1,362 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,679 இடங்கள் என மொத்தம் 1,78,131 பி.இ., பி.டெக். இடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும்.

கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வில் 1,82,214 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றிருந்தன என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
கலந்தாய்வு எப்போது?: பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வைப் பொருத்தவரை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். முதல் கலந்தாய்வுக்குப் பின்னரே இந்த தேதி இறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

26 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்
வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கை, ஊதியக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்தும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டு 26 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.

இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 2018-19-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறுவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கும் 26 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை. அதன்படி, இந்த 26 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்காது என்றார் அமைச்சர் அன்பழகன்.

2017-18 TPF Account Slip Released

http://www.agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx

Sunday, June 03, 2018

பணிநிரவல் கலந்தாய்வு ஆசிரியர்கள் அதிருப்தி


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் முடியும் முன்பே, பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, ஜூன், 11ம் தேதியும், உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்களுக்கு, 12ம் தேதியும், பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குகிறது.

பதவி உயர்வு, பணி மாறுதல் உட்பட, அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும், ஜூன், 21ம் தேதி வரை நடக்கிறது.பணி நிரவலை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவுள்ளது. தொடக்க கல்வித்துறையில், ௨,௦௦௦க்கும் மேற்பட்டோர், பணிநிரவல் பட்டியலில் உள்ளனர். மாணவர் சேர்க்கை, ஆக., வரை நடப்பதால், இதற்கு பின், பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுமென்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர், அருளானந்தம் கூறுகையில், ''கடந்த கல்வியாண்டில், செப்., மாதம் நடத்தப்பட வேண்டிய, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டுக்கும், இம்மாதமே கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஆக., மாதம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. இச்சேர்க்கைக்கு பின் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, பணிநிரவல் செய்யப்பட வேண்டும்,'' என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன.இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Saturday, June 02, 2018

பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். கடந்த 2017-இல் 1,40,633 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

ஜூன் 8-ஆம் தேதி முதல்...விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காகவும், அனைத்து மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.52 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு: பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 14-ஆம் தேதி வரை... பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.

நாளை முதல்...அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
சம வாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் எப்போது? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்ட ஓரிரு நாள்களில், விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டு விடும்.
சம வாய்ப்பு எண் எதற்கு? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடக்ககல்வி கலந்தாய்வு -2018


Friday, June 01, 2018

2,448 அரசுப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி


அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:

பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமைப் பண்பினை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியும், ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் மேற்கொள்ளப்படும்

மாதிரிப் பள்ளிகள்: மாவட்டத்துக்கு ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகச் செயல்படும் வகையில், ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

திறன் அட்டை திட்டம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை வழங்கும் திட்டம் ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள், ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

குரூப் 1 தேர்வு: வயது உச்சவரம்பு 37-ஆக உயர்வு


குரூப் 1 தேர்வினை எழுவதற்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதுகுறித்து, பேரவை விதி 110-இன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கான வயது உச்சவரம்பை உயர்த்திட பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினைப் போன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 1ஏ, 1பி பணியிடங்களுக்கு தேர்வு எழுவதற்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.

அதன்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவினருக்கான இப்போதுள்ள வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம்


புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பஸ் பாசில் மாணவர்கள் பயணிக்கலாம்; அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், பெரும்பாலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

தனியார் பள்ளிகள், 4ம் தேதி திறக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ், மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. சீருடை அணிந்து வரும் மாணவர்கள், பழைய பஸ் பாசை காட்டி, இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

'பழைய பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்; அவர்களிடம், கட்டணம் வசூலிக்கக்கூடாது என, நடத்துனர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'மாணவர்கள் புகார் அளித்தால், பழைய பஸ் பாசை ஏற்க மறுக்கும் நடத்துனர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்

FIRST TERM syllabus


https://drive.google.com/file/d/1Ty2L6IFXj_DsJZx-ehcCbz2PQw84del3/view?usp=drivesdk