இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, October 07, 2013

10-ஆம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற ஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 113 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (அக்.8) வழங்கப்படுகிறது.

இதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பகுதி வாரியாக இந்தப் பயிற்சி வழங்கப்படும். பள்ளியை எப்படி நிர்வகிப்பது, கற்பித்தலை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய பயிற்சிகளின் மூலம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர் கூறினார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடம் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி செய்யப்பட்ட சரியான விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஓரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை மொத்தம் 1.59 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான "பி' வரிசை கேள்வித்தாளில் நிறைய அச்சுப்பிழைகள் இருந்தன. எனவே, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் அல்லது கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்ப் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே, தமிழ்ப் பாடத்தைத் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.  

இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.  

காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.  தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.  இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.  ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாற்காலிக அடிப்படையில் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவு

   தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்திலும், பட்டதாரி ஆசிரியர்களை ரூ. 4 ஆயிரம் தொகுப்பூதியத்திலும் தாற்காலிகமாக நியமித்துக்கொள்ளவும் அவர் அனுமதி வழங்கியுள்ளார்

. இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளி அளவிலேயே தலைமையாசிரியர்கள் நிரப்பலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் கூறினார். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், உயிரியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு, நகராட்சிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிடவும், சான்றிதழ்களை சரிபார்க்கவும், பணி நியமனம் செய்யவும் ஓரிரு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்கவும், அரசுப் பள்ளி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யவும் இந்த காலிப் பணியிடங்களை பள்ளி அளவில் தாற்காலிகமாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  ராமேஸ்வரமுருகன்தெரிவித்துள்ளார்.

PG Results release

3, 4 மற்றும் 5வகுப்பு மாணவர்களுக்கான “தேசிய அளவிலான நிலத்தடி நீர் சேகரிப்பு” சார்பான ஓவிய போட்டி - பள்ளி அளவில் மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து அனுப்ப - தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

தொடரும் இரட்டைப்பட்டம் வழக்கு

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல் 12.45க்கு  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமி அவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள்.  மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும். தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும்.

NHIS Forms detail

Saturday, October 05, 2013

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா?

கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு ஆய்வு கூட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான, சிறப்பு ஆய்வு கூட்டம், சென்னையில் அக்.,17,18, தேதிகளில் நடக்கிறது. பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பள்ளி கல்வித் துறையில், மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன. இதையடுத்து, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, புத்தகங்களை மாணவர்களின் வயதுக்கு ஏற்ப, பிரித்து அடுக்கி வைக்க வேண்டும். எளிதில் எடுக்கும்படி, இருக்க வேண்டும். தினமும் புத்தகங்கள் படிப்பதற்கு, நேரம் ஒதுக்க வேண்டும். திங்கள்கிழமைகளில் நடக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 04, 2013

குருப்2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம் : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

   குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115 இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்' பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில், இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அக்டோபர் 7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது !

பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையல், பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு அக்., 7 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

Thursday, October 03, 2013

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

குரூப் - 2 தேர்வு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்

    குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். துணை வணிக வரி அலுவலர், சார் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், 1,064 பணியிடங்களை நிரப்ப, குரூப் -2 தேர்வு அறிவிப்பை, செப்., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. செப்., 5ம் தேதி முதல், தேர்வாணைய இணையதளம் வழியாக, பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, 8ம் தேதிக்குள், செலுத்த வேண்டும். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 2 முதல் நிலைத்தேர்வு, டிசம்பர், 1ம் தேதி நடக்கிறது.

சமூக விழிப்புணர்வு பல்லூடக பாதுகாப்பு பயிற்சி


Wednesday, October 02, 2013

ஆன்-லைனின் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள அறிக்கை: அரசின் புது திட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது.

கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது.

முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள் இன்று திறப்பு

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. கடந்த மாதம், 21ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடந்தன. இதன்பின், 12 நாட்கள், தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று, வழக்கம்போல், அனைத்துப் பள்ளிகளும் துவங்குகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, 2.5 கோடி புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோட்டு புத்தகம், சைக்கிள், பை, காலணி, அறிவியல் உபகரணம், லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, இப்பொருட்கள் சி.இ.ஓ.,- டி.இ.ஓ., க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

இதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. இலவச பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான, இலவச பொருட்களை, பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி, தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. "இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tuesday, October 01, 2013

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள், அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர் , தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால், தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்,'' என்றார்.

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

  சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கு உதவித் தொகை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுவரை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்காத தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு www.momascholarship.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tamil Nadu Open University B.ed entrance result

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாட போட்டித் தேர்வு ரத்து செய்யப்பட்டு, விரைவில் மறுத்தேர்வு நடத்த  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.