Pages

Tuesday, December 09, 2014

50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார். தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும், ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பணி நிரவல் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்புகள் தொடக்கப் பள்ளியாக நிலையிறக்கம் செய்யப்படுவதால், அந்தப் பள்ளிகளுக்கு ஒரு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை:

காஞ்சிபுரம் - 4, திருவள்ளூர்-2, விழுப்புரம்-2, கடலூர் -1, வேலூர் - 7, திருவண்ணாமலை - 2, தருமபுரி - 2, கிருஷ்ணகிரி -1, சேலம் -1, நாமக்கல்-1, ஈரோடு-2, திருப்பூர்-1, கோவை -1, திருச்சி-3, பெரம்பலூர் -1, அரியலூர்-1, கரூர்-1, புதுக்கோட்டை-2, தஞ்சாவூர்-2, திருவாரூர்-2, நாகப்பட்டினம்-1, மதுரை -1, திண்டுக்கல் -2, தேனி -1, சிவகங்கை -1, ராமநாதபுரம் -1, விருதுநகர் -3, திருநெல்வேலி -1.

No comments:

Post a Comment