Pages

Saturday, March 31, 2018

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை


கோடை விடுமுறையின்போது தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த பிறகு மதிப்பெண்கள் அடிப்படையில் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் தனிப் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் எந்தத் தேர்வையும் சந்திக்கும் துணிவைப் பெறுவார்கள். பிளஸ் 2 முடித்த பிறகு எந்தப் பாடம் படிக்கலாம் என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. மாணவர்கள் மேல்நிலைத் தேர்வுக்குப் பிறகு 286 வகையான பாடங்களில் மேற்படிப்பு படிக்கலாம்.

இது குறித்து விழிப்புணர்வு பெறுவதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். மருத்துவம், பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட மேற்படிப்புகள் மட்டுமின்றி அனைத்து வகையான படிப்புகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

இலவச பயண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதில் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் ஏதும் வந்தால் அது குறித்து உடனடியாகப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment