Pages

Saturday, July 08, 2017

மேல்நிலைப் பள்ளிகளில் ஐ.டி., பிரிவு அறிமுகம் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம்


தமிழக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி, இந்த கல்வியாண்டில் அறிவியல் பாடத்தில் ஒரு பிரிவாக 'ஐ.டி.' கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஐ.டி., கல்வி என்பதில் கணினி வரலாறு முதல் ஆன்ட்ராய்டு செயலி வரை அனைத்து பகுதிகளும் இடம் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.

இதையடுத்து கணினி பாடங்களுக்கு பயிற்றுனர்களை நியமிக்க அரசு செயலர் உதயச்சந்திரன் ெவளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பள்ளி கல்வித் துறையில் 2007-- 2016ம் கல்வியாண்டு வரை தரம் உயர்த்திய 525 மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப கணினி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். தற்போது 240 பள்ளிகளில் கணினி பாடப்பிரிவுகள் இல்லை. பயிற்றுனர் பணியிடம் கணினி பாடப் பிரிவுகள் செயல்படும் பள்ளிகளில், பயிற்றுனர் பணியிடம் தேவையாக உள்ளது. கணினி பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட ஊதிய விகிதங்கள் ஒன்றே. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது.

இந்த நிலையில் காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி பயிற்றுனர்களாக மாற்றி ஒப்படைக்க, பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரினார். இதனை அரசு பரிசீலித்தது. கணினி பிரிவு செயல்படும் பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடம் ஏற்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனர் தொகுப்பில் உள்ள, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதே ஊதியத்தில் கணினி பயிற்றுனர் பணியிடங்களாக மாற்றவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment