Pages

Sunday, February 05, 2017

இன்று முதல் ரூபல்லா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப். 6) முதல் ரூபல்லா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பால்வாடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.

பிறந்த 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளில் இருந்து 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் மொத்தம் 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை பெருவிரலில் அடையாளத்துக்காக மை வைக்கப்படும்.

முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பின்பு வழக்கமான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இது சேர்க்கப்படும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் என 12 ஆயிரம் பேர் தடுப்பூசி வழங்க உள்ளனர்.

ரூபல்லா தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்குப் பின்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். வழக்கமாக தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகள் தான் இவை. இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். முதன்முறையாக இந்தத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால், இது குறித்த தகவல் குறிப்பேடு பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment