Pages

Tuesday, December 20, 2016

பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்


வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'தானே' புயல், கடலுாரை கசக்கி விட்டு சென்றது போல, வங்கக்கடலில் உருவான, 'வர்தா' புயல், சென்னையை சின்னா பின்னமாக்கி விட்டது.

இப்புயல் கரையை கடந்த போது, 140 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசியதால், பல ஆண்டு பழமையான மரங்கள் உட்பட, ஏராளமான மரங்கள் சாய்ந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வர்தா பாதிப்பால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அதனால், பசுமையாக காட்சிஅளித்த பகுதிகள், பாலைவனம் போல மாறிவிட்டன. மரங்கள் முறிவால், பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், எதிர்காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, நோய்கள் பாதிக்கலாம் என, ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், புதிதாக மரங்களை வளர்க்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி கள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், விழுந்த மரங்களை கணக்கிட்டு, மூன்று மடங்கு அதிகமாக மரக்கன்றுகள் நட்டு, மாணவர்கள் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment