Pages

Sunday, August 07, 2016

தமிழக அரசு அதிரடி உத்தரவு பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்


கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான (பொ) அதுல்ய மிஸ்ரா கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓக்கள்) திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தங்களுக்கென உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். முழுநேர அரசு ஊழியர்கள் என்பதால் வருகைப்பதிவேடு மற்றும் முகாம் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர்கள் இப்பதிவேடுகளை வாரம் ஒருமுறை தணிக்கை செய்து, தாசில்தார் பார்வைக்கு அனுப்ப வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமத்திற்கோ, களப்பணிக்கோ அல்லது பிற அலுவல் நிமித்தமாக அலுவலகத்தை விட்டுச் செல்லும்போது, அலுவலுக்கான காரணம் மற்றும் உத்தேசமாக திரும்பும்நேரம் ஆகியவற்றை, பொதுமக்கள் காணும்வகையில் அறிவிப்புப் பலகையில் குறிப்பிட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ள கிராமத்தில் கட்டாயம் தங்கி பணியாற்றவேண்டும். உயர் அலுவலர்கள் கோரும் தகவல், அறிக்கைகளை நேரில் சென்று அளிப்பதை, இயன்றவரை காலவிரயத்தை கருத்தில்கொண்டு தவிர்க்க வேண்டும். அவற்றை அனுப்ப மின்னஞ்சலை பயன்படுத்தலாம். மேற்கண்ட நெறிமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுறதா என்பது பற்றி மண்டல துணை தாசில்தார், தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர், கிராமங்களில் முகாம் செல்லும் நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.

இதில் எவ்வித விதிமீறல்களுக்கும் இடம் தரக்கூடாது. இந்த நெறிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment