Pages

Saturday, July 16, 2016

10ம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நாளைதொடக்கம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் 15 நாள்களுக்கு இந்தப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஆண்டுகளைப் போன்று, இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 18) வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் நாளிலிருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு, ஜூலை 18-ஆம் தேதியையே பதிவு மூப்பு தேதியாகக் கொண்டு வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படும்.

மதிப்பெண் சான்று அளிக்கப்படும் பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 3,893 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவுகள் இப்போது மேற்கொள்ளப்பட உள்ளது.

என்ன ஆவணங்கள் தேவை?: மதிப்பெண் சான்று வழங்கப்படும் தினத்தில் மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை எடுத்து வர வேண்டும். மேலும், மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. முறையில் பயின்ற மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (http:tnvelaivaaippu.gov.in) பதிவு செய்யலாம். மேலும் தங்கள் மாவட்டத்துக்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment